வெள்ளை தலைகளின் காலம்
களம் ஒன்று...
'வெடி போடணும்டா '
தமிழன் யாருன்னு அந்த வெள்ளை பறங்கிகளுக்கு காட்டணும்.எது செஞ்சாலும் அடக்கு முறைன்றாங்க,லத்தில வெளுக்ககறான் .நம்ம மண்ணுல இருந்துட்டே நம்மை வெரட்டறான் .
அடி அடின்னு அடிச்சுகிட்டே இருப்பானுக ,நாம முதுக காமிச்சுகிட்டே நிக்க வேண்டியதுதான்.எத்தன நாளக்கு இந்த பொழப்பு.
நாம யாருன்னு காட்டணும்.
அவர்கள் உறுமினார்கள் .
அவர்கள் வெடித்தார்கள்.
ஏதோ செய்ய துடித்தார்கள்.
சத்தங்கள் இல்லாத அந்த இரவு.
வெள்ளைமார்களின் நடமாட்டம் குறைவான அந்த நேரம்.
மனித வாசனை வராத அந்த நொறுங்கியிருந்த கட்டிடங்களின் ஒரு பகுதியில்...
அந்த கூட்டம் கூடிற்று..
கூட்டத்திலே தலைவன் போல் இருந்தவர் பேசினார்.
நாம மறைமுகமாக நம்ம எதிர்ப்பை வெள்ளைத் தலையனுகளுக்கு எதிராக செஞ்சிட்டு வந்தோம்.எதும் பெரிசா செஞ்சுப்புடலே. பெரிசாவும் எதும் இல்லே.இப்படியே பொறுத்துக்க முடியாது.வேற பெரிசா என்ன செய்யலாம், உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க. எது நல்லா இருக்குன்னு எல்லோரும் ஏத்துக்கற முடிவை செய்யலாம்.
பாதி இருட்டில் பனி இரவில் அந்த உருவங்கள் ஒவ்வொன்றும் ஒன்று சொல்லின .
'வெடி வைப்போம் '
இது அனைவராலும் ஏற்கப்பட்டது.
எப்படி? எங்கு?
ஆலோசனைகள் தீவிரமாயின.
பின் ,யார் செய்வது?
கேள்வி எழுந்தது.
நான் செய்கிறேன் .
பல குரல்கள் தெறித்தன.
இல்லை இது சரியில்லை .தலை சொன்னது.எப்போதும் போலவே
சீட்டெழுதி போடலாம் .யார் பெயர் வருகின்றதோ அவர் முன்னே செல்லட்டும் நாம் பின்னே போவோம்.அந்த கூட்டத்திற்கு இது ஏற்புடையதாக இருந்தது.
சீட்டில் பெயர்கள் எழுதப்பட்டன.
தரையில் உருட்டப்பட்டன.
ஒரு கை எடுத்தது.
பெயர் வாசிக்கப்பட்டது.
"சின்னையா "
நீர் அதிர்ஷ்டக்காரனய்யா!
கூட்டம் வரவேற்றது..
இப்போது பேச்சு..
எப்படிச் செய்யலாம்?
எங்கு?
பாலத்திற்கு வைக்கலாமா?
இல்லை கட்டிடடத்திற்கு?
அதுவும் வேண்டாம், வெள்ளைத்தலைகள் வரும் ரயில் வண்டிக்கு.
இது சரியென ஏற்கப்பட்டது.
நாள் குறிக்கப்பட்டது.
காத்திருந்தார்கள்...
இது வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சி முடிவுக்கு வந்த கடைசி இருபது வருடங்களுக்கு முந்தைய காலம். ஊர் ஊராய் தெரு தெருவாய் புரட்சியை சிலர் பகிரங்கப்படுத்தியும் சிலர் மறைமுகமாகவும் தமிழ் மறவர்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தனர்.
இவர்கள் அது வரை மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.இடை இடையே அறப் போராட்டம் , சிறை என்பதும் இருந்தது.இது வெளிப்பாடாக...
சின்னையா செய்ய வந்தது யோசிக்க வேண்டிய விஷயம்.எந்த ஏகாதிபத்திய அரசை எதிர்க்க நினைத்தாரோ அந்த அரசில் பணி புரிந்த ரயில்வே தொழிலாளி.
சின்னையாவிற்கு குடும்பம் இருந்தது.மனைவி மற்றும் மூன்று மகன்கள்.
அவர்களைப் பற்றி கவலை பட ஏது நேரம் அவருக்கு ? எல்லா நேரமும் தேசம்தான் அவர் சிந்தனையில் ..வெள்ளைப் பறங்கிகளுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி ரத்தத்தோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது எந்நேரமும் ..
ரயில்வே பணி செய்து கொண்டிருப்பார் ..
கோஷம் போட்டு ஊர்வலம் வரும். ஓடி விடுவார்.
அறப்போர் போராட்டம் நடக்கும். ஓடிப்போய் அதில் கலப்பார்.
இப்படித்தான் அவர் வாழ்வு அன்று.
குத்தீட்டி பாயட்டும்
கொலைவாள் ஓங்கட்டும்
துப்பாக்கி முழங்கட்டும்.
எது வரினும் என் தேசத்திற்காக ஓடுவேன்.
இந்தச் சூழலில் தான் அந்த திருவுளசீட்டு .
அதில் சின்னையா பெயர் .
குடும்பம் மறந்தார்.
மனைவியை மறந்தார்
மகன்களை மறந்தார்.
எல்லாம் மறந்தார். அந்த நாளுக்காக காத்திருந்தார் ..
அந்த நாள்..
வெள்ளைத் தலைகளுடன் அந்த ரயில் ஊர்ந்து வந்து கொண்டு இருந்தது .சின்னையாவின் கூட்டம் பரபரத்தது. குண்டு சின்னையா கையில்.திரி பிரித்தார்.தண்டவாளத்தில் வைத்தார்.அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ரயிலுக்கு காத்திருந்தார்கள் ..
அப்போது தூரத்தே பரபரப்பாய் ஒரு கூட்டம் ஓடி வந்தது. அந்தக் கூட்டம் வர வர இவர்களின் மனது சலசலத்தது.நிழல் உருவங்கள் முன்னே வர வர அது வெள்ளைத் தலைகள். பாதி இருட்டு அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. ஏதும் தெரியாததாலேயே குழப்பத்தில் இருந்தார்கள். வெள்ளைத் தலைகள் கையில் துப்பாக்கிகளுடன் ..ஓடினால் சுட்டு விடுவார்கள். மாட்டிக் கொண்டால் இன்னும் வினைகள் .
சின்னையா ஓட எத்தனித்தார் .பத்தடி ஓடுவதற்குள் பாய்ந்து வந்தது ஒரு துப்பாக்கி குண்டு .தடுக்கி விழுந்தார். எழுந்து ஓடுவதற்குள் அந்த வெள்ளை தலையன் பக்கம் வந்து விட்டான்.சின்னையா ஓடுவதற்கு முயற்சி செய்ய அந்த வெள்ளைத் தலையன் துப்பாக்கியின் பின்புறத்தை வைத்து தலையின் பின்புறத்தில் ஓங்கி அடித்தான்.ஒருதலை பத்து தலையாக சிதறி விட்டதோ என்னும் அளவுக்கு அந்த அடி விழுந்தது .சின்னையாவுக்கு சுற்று சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை .அப்போதுதான் உணர்ந்தார் அவரின் காது மந்தமாகிவிட்டது என்று.
அந்த வெள்ளையர்களின் நீதிமன்றம் பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. இப்போது சின்னையாவுக்கு தீர்ப்பு வழங்கியது. சிறை தண்டனை அளித்து உறுதி செய்தது .
சின்னையாவின் மனைவி அப்போது நிறைமாத கர்ப்பிணி. சிறைக்குள் இருந்த போது செய்தி வந்தது அவருக்கு. பிள்ளை பிறந்திருக்கிறான் என்று ..
கணேசன் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம் ...
அப்போதும் சின்னையாவின் மனதில் ஓர் சிந்தனை ..அன்று அந்த திட்டத்தை நாம் சரியானபடி செய்ய முடியவில்லையே! என்று..
சின்னையாவோ சிறைக்குள்.
ஏற்கனவே மூன்று மகன்கள். இப்போது நான்காவதாய் ஒரு மகன் .வறுமை வேறு..குடும்பத்தை ஓட்ட என்ன செய்வது ? மாடு வாங்கினார்.
பால் கறந்தார்.
விற்றார் ..
அதில் சிறிது பணம் கிடைத்தது .
நான்காவதாக இவன் பிறந்திருக்கின்றானே, இனிமேலாவது நம் காலம் நன்றாக இருக்குமா?
இவனைப் படிக்க வைக்க முடியுமா? எப்படி வளர்வான்? எதிர்காலம் எப்படியோ ?
தாயின் மனம் யோசித்தது ..
அந்த தாய் கொண்ட பெயர்
ராஜா மணி ..
களம் விரியும்....
கருத்துகள்
கருத்துரையிடுக