நடிகர்திலகம் நடிச்ச சில படங்களோட காட்சிகள் வேற வேறயா இருந்தாலும் கதையமைப்பை பாத்தா கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்திருக்கு.
இதுக்கு உதாரணமா பல படங்களை சொல்லலாம்.
அந்தமான் காதலி படத்துலே சுஜாதாவை காதலிப்பார்.சுஜாதா கர்ப்பமா இருக்கற சமயத்துலே சிவாஜி அவரை விட்டுட்டு போற சூழ்நிலை அமைஞ்சுரும்.பல வருஷம் கழிச்சு சுஜாதாவை பாக்க வருவார்.சுஜாதாவுக்கு ஒரு மகன்.அவர் அப்பாவை வெறுக்கற மனநிலையிலே இருப்பார்.சிவாஜிதான் தன்னோட அப்பா அப்டிங்கறதை கடைசியிலே தெரிஞ்சுக்குவார்.இது சுருக்கமான கதை.
இதே கதையமைப்பிலே வசந்தத்தில் ஒரு நாள் படமும் இருக்கு.இதுலே ஸ்ரீப்ரியாவை காதலிப்பார்.ஸ்ரீபிரியாவை விட்டுட்டு போயிடுவார்.பல வருஷம் கழிச்சு ஸ்ரீப்ரியாவை தேடி வருவார்.ஸ்ரீப்ரியாவோட மகளை பார்ப்பார்.அந்த ரோலும் ஸ்ரீபிரியாதான்.தன்னோட மகள் கிட்டே ,தான்தான் அப்பான்னு சிவாஜி சொல்ல முடியாத சூழ்நிலையிலே ஸ்ரீபிரியாவோட நடத்தை இருக்கும் .
கடைசியிலே சிவாஜிதான் தன்னோட அப்பா அப்படின்னு ஸ்ரீபிரியா தெரிஞ்சுக்கற மாதிரி கதையமைப்பு இருக்கும் இந்த படத்துலே.
அந்தமான் காதலியிலே மகன்.வசந்தத்தில் ஓர் நாள் படத்துலே மகள்.
ரெண்டு படமும் எடுக்கப்பட்டது வேற வேற நாடுகளில்.
அந்தமான் காதலி அந்தமான் தீவுலேயும்,வசந்தத்தில் ஒரு நாள் மலேசியாவிலேயும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.
இரண்டு படத்திலேயும் பிரிஞ்ச மனைவியை சிவாஜி பல வருஷம் கழிச்சு தேடி வர்ற கதையமைப்பை கொண்ட படங்கள்.
அந்தமான் காதலி சிவாஜி ஆரம்பத்துலே நடிச்ச பரதேசி தெலுங்கு பட கதையமைப்பை கொண்ட படமும் கூட..
அந்தமான் காதலி படத்துலே காதலர்களா வர்ற சிவாஜி சுஜாதாவுக்கு சூப்பர்ஹிட்டா அமைஞ்ச பாடல் அந்தமானை பாருங்கள் அழகு. அதே மாதிரி வசந்தத்தில் ஓர் நாள் படத்துலே சூப்பர்ஹிட்டான பாடல் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு பாடல்.ரெண்டு பாட்டும் ஒரு சிச்சுவேஷனுக்கு அமைஞ்ச பாட்டா இருந்தாலும் ,ரெண்டு பாட்டுக்கும் பிரமாதமா மியூசிக் பண்ணி இருப்பாரு எம் எஸ் விஸ்வநாதன்.
இதே போலே...
பாட்டும் பரதமும் படத்துலே காதலியா வர்ற ஜெயலலிதாவை சிவாஜி சந்தேகப்பட்டுடுவார்.தன்னோட நேர்மையிலே சிவாஜி சந்தேகப்பட்டுட்டாரேன்னு ஜெயலலிதா சிவாஜியை விட்டு பிரிஞ்சு போயிடுவார்.ஜெயலிதா கர்ப்பமா இருப்பார் அப்போ .அவருக்கு பிறக்கிற மகன் கேரக்டர்லேயும் சிவாஜிதான்.இந்த வகையிலே சிவாஜிக்கு ஜெயலலிதா அம்மாவா நடிச்ச படம்னு இந்த படத்தை சொல்லலாம்.சினிமா பார்முலா படி கடைசியிலே குடும்பம் ஒண்ணு சேரும் .
இது போலத்தான் ரிஷிமூலம் படத்திலேயும்.இதுலே கே ஆர் விஜயா சிவாஜி மேலே படற கோபத்தாலே பிரிஞ்சு போயிடுவார்.தேவையில்லாத ஒரு ஈகோ விஷயந்தான் சிவாஜி கே ஆர் விஜயா பிரிய காரணம் ஆயிடுது.அது எவ்வளவு பெரிய தப்புன்னு காலம் சொல்லற மாதிரி இறுதி முடிவு இருக்கும்.
திரிசூலம் சந்திப்பு இந்த ரெண்டு படத்தோட ஆரம்ப கதையமைப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்.திரிசூலம் படத்துலே மனைவியை பிரிய மாதிரி காட்சி.சந்திப்பு படத்துலே குடும்பத்த பிரிய மாதிரி காட்சி.
திரிசூலம் சந்திப்பு இந்த ரெண்டு படத்திலேயும் மனைவி ஒரு பக்கம் மகன்கள் ஒரு பக்கம்னு வெவ்வேறு இடத்துலே பிரிஞ்சு வாழற மாதிரி இருப்பாங்க.எல்லாரும் ஒண்ணு சேர்றமாதிரி படத்தோட இறுதி காட்சியமைப்புகள் இருக்கும்.
இரு துருவம் புண்ணியபூமி படங்கள்லே ,குதிரையிலே வந்து கொள்ளையடிக்கிற வட இந்திய கொள்ளைக்காரர்கள் பாணியிலே படத்தோட பிற்பாதி கதையமைப்பு ரெண்டு படத்துலேயும் ஒரே மாதிரி இருக்கும்.ரெண்டு படமும் இந்தி பட ரீமேக்தான்.இரு துருவம் கங்கா ஜமுனா இந்தி பட ரீமேக்.புண்ணிய பூமி மதர் இண்டியா ரீமேக்.
இருதுருவம் படத்துலே க்ளைமேக்ஸ் காட்சியா சிவாஜியோட தம்பியா போலீஸ் கேரக்டர்லே வர்ற முத்துராமன் சிவாஜியை சுட்டுக் கொல்வார்.
புண்ணியபூமியிலே இதை செய்யறது அம்மாவா வர்ற வாணிஸ்ரீ..ரெண்டு படத்துலேயும் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை நினைவு படுத்தற மாதிரி குதிரை சவாரி ,கொள்ளையடிப்பு காட்சிகள் இருக்கும்.
இப்ப நான் சொல்லப்போற ஒரு விஷயம் ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்.இந்த படத்துக்கும் அந்த படத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையேங்கற எண்ணம் தான் எல்லார் கிட்டயும் இருந்திருக்கும்.ஆனா அந்த ரெண்டு படங்களோட ஒரு வரி கதை என்ன ?
கெட்டுப் போன மகன் தன்னோட அப்பாவை எதிர்த்து ஒரு சவால் விடுகிறான்.கடைசியிலே சவால்லே யாரு ஜெயிக்கறாங்க அப்படிங்கறது தான் முடிவு.இப்போ நீங்க யூகிச்சிருக்கலாம்.ஒரு படத்தை எல்லோரும் ஈசியா சொல்லிருவீங்க.
தங்கப்பதக்கம் ஒண்ணு.
இன்னொன்னு கல்தூண்.கதையோட அடி நாதம் மேட்ச் ஆகுதில்லே.என்ன கல்தூண் கிராமப் படம் அப்படிங்கறதாலே அந்த கண்ணோட்டத்திலே பார்க்க வெச்சிருக்காது.
தங்கப்பதக்கத்திலே மகனை துப்பாக்கிலே சுட்டுக் கொல்வார் அப்பா.கல்தூண்லே சூலாயுதத்தாலே மகனை குத்தப் போயிருவாரு.கடைசி நிமிஷத்துலே மகன் திருந்த ,வேலாலே தன்னைக் குத்திக்குவாரு அப்பா.ரெண்டு படத்துலேயும் மகன் அப்பாவை தலை குனிய வைக்க சில காரியங்கள் செய்யற மாதிரி காட்சிகள் இருக்கும்.
கதையமைப்பு சாயல்னு இந்த படங்கள் சில ஒற்றுமைகளை கொண்டிருந்தாலும் அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ரொம்ப வித்தியாசம் காட்டி நடிச்சிருப்பார் நடிகர்திலகம்.
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக