தொலைக்காட்சியில் சில தினங்களுக்கு முன்பு சேனலை மாற்றிக் கொண்டே வந்தபோது ஜெயா டிவியில் தெய்வமகன் ஓடிக்கொண்டிருந்தது. ரிமோட்டை அப்படியே நிறுத்தி விட்டேன். அப்போதிருந்தே இதன் காட்சிகள் நெஞ்சை பிசைந்து கொண்டேயிருக்க இந்தபதிவு.
சின்ன மகன் விஜய் அப்பா சிவாஜியிடம் பணம் கேட்டு வரும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
சிவாஜியின் நடிப்பை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும். ஓவர் ஆக்டிங்கா ,அண்டர் ஆக்டிங்கா ,அப்பர் ஆக்டிங்கா லோயர் ஆக்டிங்கா, மிடில் ஆக்டிங்கா
இன்னும் என்னென்ன இருக்கின்றதோ அப்படி எல்லாம் சொல்லிக் கொள்வோர் சொல்லிக் கொள்ளட்டும்.
இந்தக் காட்சி பார்த்தும் விமர்சனம் செய்பவன் எவனாவது இருக்கிறான் என்றால் அவன் சினிமா என்னவென்றே தெரியாதவன். சினிமா பார்க்கவே லாயக்கு இல்லாதவன் .
கிருஷ்ணா நடித்து தெலுங்கில் எடுக்கப்பட்ட தெய்வமகன் ரீமேக்கின் இதே காட்சியைத் தான் சென்ற வாரம் ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டு இருந்தார். தெய்வமகன் படத்தில் இடம்பெற்ற அதே காட்சி தான் தெலுங்கு ரீமேக்கிலும் படம் ஆக்கப்பட்டு இருந்தது.ரசிப்பதற்கு பதில் இகழ்ச்சியை தந்த காட்சி அது .தெய்வமகன் பார்த்தவர்களுக்கு அது காண சகிக்காத காட்சியாகும். இப்படித்தான் அந்த வீடியோ பதிவிற்கு ஏராளமானோர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
நடிகர் திலகம் செய்ததில் பத்தில் அல்ல , நூறில் அல்ல, ஆயிரத்தில் ஒரு சதவீதம் கூட
அந்த காட்சியை யாராலும் செய்ய முடியாது என்பதற்கான உதாரணம் தான் அது.
சிவாஜியின் நடிப்பை ஒப்பீடு செய்வதற்கல்ல இந்த கருத்து.ஒரு ஆறுதலுக்காவது ரசிக்க வைத்திருக்கலாமே !
தெய்வமகன் காட்சியில் நடிகர் திலகம் நடிப்பை அக்கு வேறு ஆணிவேராக கிழித்து தொங்க விட்டிருந்தார் ஒவ்வொரு பிரேமிலும்.
ஒரு வங்காளத்து எழுத்தாளரின் கதை தான் இது.
அது வங்காளத்தில் இருந்து தாவி வந்து தமிழ் மண்ணில் தவழ்ந்தோட என்ன காரணம் ?
சில விஷயங்கள் இப்படித்தான் நடைபெற வேண்டும் என்ற விதியை தவிர என்ன சொல்ல?
நடிகர்திலகத்திற்காகவே உருவாக்கப்பட்ட படைப்பு இது
என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். ?
கலை கடவுள் சிவாஜியை உருவாக்கி அவருக்கு தந்த வரமா நடிப்பு .
நடிப்பின் தேவதைக்கு சிவாஜி செய்த சமர்ப்பணம் இது.
உலகில் எந்த உச்ச நடிகன் வேண்டுமானாலும் இந்த காட்சியை பார்க்கட்டும்.
நான் உச்சம் என்ற எண்ணம் அவன் மனதில் இருந்தால் இந்தக் காட்சி அவனை குறுகுறுக்க வைக்கும்.
ஒரு பெரிய பணக்காரர், பெரிய தொழிலதிபர் என்கிற தோரணையை ,அவர் சம்பந்தப்பட்ட எந்த வியாபாரம் ,தொழிலையும் படத்தில் காண்பிக்காமல்
அவர் உருவத்தைக் காட்டியே நம்மை உணர வைத்திருப்பார் நடிகர்திலகம்.
ரொம்ப ரொம்ப ஹை கிளாஸ் நடிப்பு. நடை உடை பாவனை ஸ்டைல் என்று யாரும் செய்ய அஞ்சும் நடிப்பை தந்திருப்பார் சிவாஜி.காட்பாதர் மார்லன் பிராண்டோ பார்த்திருந்தால் மிரண்டு இருக்கலாம் .
இனி அந்த காட்சியின் அதிரூப சகலகலா மெஸ்மரிச நடிப்பை பார்க்கலாம் .
இளைய மகன் விஜய் அம்மா பண்டரிபாயை பணத்துக்காக தந்தை சிவாஜியிடம் அனுப்புகிறார் .
அந்தக் காட்சி ஆரம்பிக்கும் போது பண்டரிபாயிடம் சிவாஜி பேசும் வசனம்:
என்ன ராஜாவுக்கு ராணி ரோஜா வச்சு தாஜா பண்றாங்க ...
சிவாஜி இப்படி கேட்பார்.
அதற்கு பண்டரிபாய் சொல்வார்..
இல்லை பூஜை பண்ணறேன் ..
உன் மகன் பணம் கேக்கறதுக்காக உன்னை தாஜா பண்ணி அனுப்பிச்சுருப்பான் என்று தந்தை சிவாஜி பண்டரிபாயிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது மகன் விஜய் ஜாடை செய்வதை கண்ணாடியில் பார்த்து விடுவார்.
தந்தை சிவாஜி நல்ல உயரமாக ,திடமாக மிடுக்காக தெரிவார் அந்த காட்சியில் .ஆனால் அந்த சிவாஜிக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் மகன் சிவாஜி இருப்பார்.நாம பாக்குறது மேஜிக்கா இல்ல சிவாஜி செஞ்சது மேஜிக்கா என்று அந்த சீனை பார்க்கும்போது இந்த எண்ணம் தான் தோன்றியது.
சிறந்த மனிதர்களின் சில அரிய செயல்களை பார்த்து இனி ஒருவன் பிறந்து தான் வர வேண்டும் என்று அவரை சொல்லும்போது இதை சொல்வார்கள். ஆனால் சிவாஜிக்கு இது பொருந்தாது.
அவர் ஒருவரே.
வாசலில் வந்து நிற்கும் மகனை 'வாடா' என்று அழைப்பார் தந்தை. விஜய் நடந்து வருவார்.
சிவாஜியே எந்தப் படத்திலும் நடக்காத நடை அது.
சிவாஜினாலே ராஜநடை தான் .
இந்த கேரக்டருக்கு மட்டும் அவர் எப்படி நடந்து இருப்பார் பாருங்கள்.மனிதர் அலட்டிக் கொள்ளாமல் அசத்தியிருப்பார்.
மகனின் மேனரிசங்களை தந்தை சிவாஜி கண்ணாலேயே அளப்பார் பாருங்கள் .நம்ம பையனா இருக்கிறவன் ஒரு கெத்தா, கம்பீரமா ,ஒரு இதா நடக்க வேண்டாமா ?.இன்னும் குழந்தைத்தனமாவே சின்ன பையனாவே இருக்கானே ..
இப்படி ஒரு வசனம் அந்த காட்சியில கிடையாது .
இதை எல்லாம் நாம் அவரோட பார்வையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்
இந்த காட்சிகள் எல்லாமே ஒரு வினாடி இரண்டு வினாடி தான் .
வினாடிக்கு வினாடி சரமாரியாக வந்துவிழும் பாவனைகள்.
என்னடா பணம் கேட்டியா ? அப்படிம்பாரு அப்பா. 'Yes dad '
அப்படின்னு ஒரு ஸ்டைலிசா சொல்லுவாரு, மகன்.நான்
உங்க கிட்டே தான் பணம் கேட்கலாம்னு இருந்தேன் ,அம்மாதான் நீ கேட்காதே ,டாடி கடிக்கும் ,நான் தாஜா பண்ணி வாங்கித்தாரேன்
அப்படின்னு அம்மாதான் சொல்லுச்சு என்பார் மகன்.இந்த இடத்தில் மகனின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வருபவர் கடிக்கும் என்ற வார்த்தையை கேட்டவுடன்
டக்கென்று நிமிர்வார் அப்பா.உடனே மகன் பண்டரிபாய்க்கு பின்னால் ஓடிப் போய் நின்று கொள்வார்.மகன் சிவாஜி அப்போதும் தன் மேனரிசங்களை அனிச்சை செயலாக செய்து கொண்டேதானிருப்பார்.
'உன் மகனோட ஆட்டங்களுக்கு எல்லாம் நீ என்னை தட்ட வேண்டியது. நான் அதுக்கெல்லாம் தலையை ஆட்டிகிட்டே இருக்கணும் அப்படித்தானே' ,என்று பண்டரிபாயை கேட்பார் சிவாஜி.உடனே சிவாஜி எழுந்து டேபிளை சுற்றி நடப்பார்.அந்த நடையில் வலது தோளை அசைத்து ஒரு சின்ன ஜெர்க் செய்து,அவர்களின்சிரிப்புக்கு தானும் ஆளாகி சின்ன புன் முறுவலுடன் அதை அவர்களுக்கு காட்டாமல் பின் உடம்பை அவர்கள் பக்கம் திருப்பி , எவ்வளவுடா பணம் வேணும் என்பார்.இந்த மாதிரி சின்ன அசைவுகளில் கூட நம்மை அதிசயமாய் பார்க்க வைக்க நடிகர்திலகத்தால் மட்டுமே முடியும்.இல்லாத கோபத்தை இருப்பதுபோல காட்டும் நடிப்பு.
பண்டரிபாய் இளைய மகன் இருவரும் தந்தை சிவாஜியின் கேள்விக்கு சிரிக்க ,Shutup என்பார் சிவாஜி.
காட்சி என்று பார்த்தால் அது ஒருசாதாரணமான இயல்பான ஒரு காட்சிதான்.பணத்தின் அருமை தெரியாமல் வளரும் பணக்கார வாலிபன் செல்வந்த தகப்பனிடம் பணம் கேட்கிறான் . ஒரே நடிகர் தந்தையும் மகனும் ஆக செய்த இரட்டை வேட காட்சி. அவ்வளவுதான்.ஆனால் அந்த காட்சியை நாம் பார்க்கும் போது நம்மால் சாதாரணமாக அப்படி பார்க்க முடிகிறதா ?
இல்லையே ? ஏன் ?
நடிப்பு நடிப்பு நடிப்பு நடிப்பு ...
சுழலுக்குள் ஒரு பொருள் சிக்கிக் கொண்டால் அது மேலே வராது சுழன்று கொண்டே இருக்குமே .அந்த சுழல் தான் சிவாஜியின் நடிப்பு.பொருள் நம்முடைய மனம்.
வசூல் கணக்கு, திரைப்பட சாதனைகள் ,ஓடிய நாட்கள் என்று எத்தனை தான் சினிமாவை பேசி தீர்த்தாலும் ஒரு ரசிகனால் அதிகமாக பார்க்கப்பட்ட சினிமா காட்சிகள் எந்த நடிகருடையது என்ற கேள்வி வரும்போது தான் சிவாஜியின் செல்வாக்கு புரியும் .ஒவ்வொரு ரசிகனாலும் அதிகம் பார்த்த சினிமா காட்சிகளில் இதுவும் ஒன்று.
மகன் பணம் கேட்டதும் உடனே தூக்கி கொடுத்து விடக்கூடாது. அவனிடம் கண்டிப்பும் காட்ட வேண்டும். அவர்களுக்கு முன்னால் சிறிது கோபத்தையும் காட்ட வேண்டும். மகனின் மீதுள்ள பாசத்தை மனதுக்குள்ளே வைத்து, கோபத்தை வார்த்தைகளில் வைத்தும் இரண்டையும் வைத்து நமக்கும் அந்த நடிப்பை புரிய வைக்க வேண்டும். தேவுடா ! ஒரு மனிதனால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா. வேறு யாருமே இல்லாத போது இதைத்தானே சொல்ல தோன்றுகிறது !
சிவாஜி நிஜத்திலேயே மூன்றாவது கூட படிக்காதவர் .
இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த காட்சியை பாருங்கள் .தந்தை சிவாஜி எவ்வளவு பணம் வேண்டும் என்பார் .மகன் சிவாஜி தொகையைச் சொல்வார்.மகன் சிவாஜி கான்வென்ட் இங்கிலீசிலும், தந்தை சிவாஜியின் ஆங்கிலமோ உயர்தர படித்த மேதாவி போலும் இருக்கும்.இரண்டு பேர் உச்சரிக்கும் உச்சரிப்பு இருக்கின்றதே அதுதான்...அந்த மாடுலேசன் தான் ...ரெண்டு சிவாஜியும் ஒண்ணா ...என்று யோசிக்க வைப்பது இதுதான்..
நின்றாலும் சரி, பேசினாலும் சரி, நடந்து கொண்டே இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் அசைவுகளை செய்து கொண்டே இருக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டர் தெய்வமகன் விஜய். இந்த கேரக்டரில் சிறிது தப்பினாலும் அந்த கேரக்டர் கேலிக் கூத்தாகி விடும் .பொதுவாக இந்த மேனரிசத்தை மூளை வளர்ச்சி இல்லாத கேரக்டர்களுக்கு தான் பயன்படுத்துவார்கள் .ஆனால் விஜய் கேரக்டரோ படித்த ,பணக்கார ,கஷ்ட நஷ்டங்கள் தெரியாத இயல்பான குணத்திலே அந்த மேனரிசங்கள் கலந்த ஒரு வாலிபன் வேடம்.சிவாஜியோ சிங்கத்தமிழன், சிம்ம குரலோன்.எப்படி பொருந்தி போனார் சிவாஜி .தன்னால் ஒரு வேடத்தை எப்படியும் மாற்றிக் காட்ட முடியும் என்ற தைரியம் இருந்ததால் ..அதுதான் சிவாஜியால் மட்டுமே முடிந்த சாதனை ..
சரி பணம் தருகிறேன் ,ஆடாமல் அசையாமல் ஒழுங்காக நில் என்று சொல்வார் தந்தை சிவாஜி .இந்த இடத்தில் மகன் சிவாஜி செய்து காட்டிய அந்த மேனரிசங்கள் கலந்த நடிப்பை
என்னவென்று எழுதுவது ?
ஒரு தாழ் வகை மனித குணாதிசயங்களை ஒரு உயர் மட்ட பார்வையில் பார்த்து ரசிக்க சிவாஜி செய்த சொல்லொண்ணா நடிப்பு பாணி இது.
தமிழ்சினிமா தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கும் அது தன்னை மாற்றிக் கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கின்றது.தொழில் நுட்பங்கள் அசுர வளர்ச்சியடைந்து விட்டன.இப்போது பிரமிப்பே சினிமாவின் தொழில் நுட்பம் தான்.சினிமா எப்படி வளர்ச்சி அடைந்தாலும் நடிகர்திலகத்தின் இது போன்ற நடிப்பு தரும் வியப்புக்கு ஈடு இணை எதுவுமில்லை.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக