நடிகர்திலகத்தின்
20 வது நினைவுநாளையொட்டி மலேசிய சிவாஜி கலைமன்றம் நடத்திய 'சிவாஜியின் சிறந்த பத்து படங்கள் 'போட்டிக்கு நான் அனுப்பிய பதிவு இது..
முந்நூறை பத்தில் சொல் என்றால் முடிந்து விடும் ஜென்மம்.ஆயினும் முழு மனம் கொள்ளாமல் தான் மீதியை தவிர்த்தேன்.சுருங்கவும் சொல்ல வேண்டுமாம்.நெற்றியை தான் சுருக்க
முடிந்தது.
யோசித்தேன்.குறளுக்கு பத்து அதிகாரம் போல் பத்து அதிகார தலைப்புகளை எடுத்தேன்.
1.வீரம் 2.கடமை.3.பாசம்.4.கலை.5.ஆன்மீகம்.6.காதல்.7.நகைச்சுவை.8.பண்பாடு.9.உழைப்பு 10.தன்னம்பிக்கை.
இந்த பட்டியல் தலைப்புகள் ஒவ்வொன்றுக்கே பத்தை சொல்லலாம் எனினும் ஒன்றை சொல்ல ஒரு மணி யோசித்தேன்.அதுவே இதில்.
1.வீரம்.
நான் மட்டுமல்ல, திலகத்தின் ரசிகர்கள் மட்டுமல்ல ,எவருக்கும் இப்படமே இத் தலைப்புக்கு உதாரணம் சொல்வர்.
வீரபாண்டிய கட்டபொம்மன்.
அரசனிவன் வீரத்தை கூரிய வாளாய் அகத்திலே வைத்திருந்தான்.அதனால் தான் ஆண்டு முந்நூறாகியும் நம் நெஞ்சத்திலே வாழ்கின்றான்.ஒரு மண்கோட்டையிலே வாழ்ந்தவனை நம் மனக் கோட்டையில் வாழ வைத்தவர் நடிகர்திலகம்.வீரத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன்.
2.கடமை.
காக்கி உடைக்குள் கடமையை கண்ணியத்துடன் காத்த அதிகாரி.காவல்துறைக்கு இவர்தான் என்று சொல்ல 50 வருட சிவாஜி ரசிகன் வேண்டியதில்லை.நாளை பிறக்கும் ஒரு பிள்ளை கூட நாற்பது வருடம் கடந்தாலும் சொல்லும்.
அது தங்கப்பதக்கம்.
3.பாசம்.
பாசமலர்.பாசத்தை எல்லோரும் கண்ணில் காட்டுவார்கள்.நெஞ்சில் சுமப்பார்கள்.இவரோ கைத்துப்பாக்கியை வைத்தும் கூட சொன்னார்.பாசமலருக்கு சிந்திய கண்ணீர் துளிகளில் ஒரு சமுத்திரத்தையே உருவாக்கி இருக்கலாம்.
4.கலை.
நடித்தார் திலகம்.நடிக்க வைத்தார் நாதஸ்வரத்தை.ஒரே நேரத்தில் இரு வித்தைகள்.
தில்லானா மோகனாம்பாளை சொல்லாவிட்டால் திகைத்து விடும் கலையுலகம். கலை என்ற பொருளில் தலைப்பு வைத்து விட்டு கதாநாயகனுக்கு பாட்டு இல்லை.ஆனாலும் தில்லானாவுக்கு எதிர்ப்பாட்டு பாட எதுவும் இல்லை.
5.ஆன்மீகம்.
இதற்கு உதாரண படம் சொல்ல ஆத்திக வாதிகள் எதற்கு? .நாத்தி வாய்களே சொல்லுமே! பக்தியில் தழைப்பது ஆன்மீகம்.அதையே புரட்சியில் செய்தது திருவிளையாடல்.
திலகத்தின் திருவிளையாடல்
6.காதல்.
பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும்,பேசாமலும், அதைச் சொல்லாமலும், விழிகளில் இல்லாமலும், முகத்தில் உருகாமலும் காதல் சொல்லிய படைப்பு.
வசந்தமாளிகை.
வசந்த மாளிகை தமிழ் தேசமெல்லாம்,
தமிழர் மனமெல்லாம் வாழும் மாளிகை.
7.நகைச்சுவை.
நகைச்சுவைக்கு உதாரணமாய் ஆயிரம் படங்கள் இருக்கலாம்.
நடிகர்திலகத்தின் மூன்று வேடமும், 13 நாள் நடிப்பும் என்ற இரண்டு விதிகளால் எல்லாப் படங்களுமே எட்டிப் போய் விடும்.
பல நூறு நடிகர்கள் செய்தாலும் நெருங்க முடியாத பலே பாண்டியா!
8.பண்பாடு.
தமிழனின் பண்பாட்டை கலாச்சாரத்தை சொன்னதில் பட்டிக்காடா பட்டணமாவுக்கு ஈடில்லை.
ஆயிரம் கிராமிய படங்கள் இருந்தாலும் பண்பாட்டுக்கோர் பட்டிக்காடா பட்டணமாதான்.
ஏரை மதிப்பவன்
ஊரை காப்பவன்
என்று வாழ்ந்த மூக்கையா சேர்வையை மறக்க முடியுமா?
9.உழைப்பு.
இந்த தலைப்புக்கு உதாரணம் சொல்ல பாபுவை விட்டால் வேறு யார்?
ஒரு கைப்பிடி சோற்றுக்கு செய்த கைம்மாறு என்ன?பாபு கொடுத்தான் தன் வாழ்க்கையையே! அந்த பாபுவை நடமாடும் தெய்வமாய் உலவ விட்டவர் நடிகர்திலகம்.
10.தன்னம்பிக்கை.
பாரிஸ்டர் ரஜினிகாந்த்.
கௌரவம்.
கறுப்பு அங்கி தரித்த வக்கீல்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையை அங்கியாய் அணிந்த வக்கீல் தான் பாரிஸ்டர் ரஜினிகாந்த்.இது போன்ற வேடத்தை நடிகர்திலத்தோடு மறந்து விட வேண்டியதுதான்.
நடிப்பை ஷூக்காலில் (Shoe)ஆரம்பிப்பார்.நெற்றி முடியில் முடித்திருப்பார் இப் படத்தில்.
கங்கையின் சில துளிகளை ஒரு குடத்துக்குள் அடைத்த திருப்தி.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக