சிவாஜியை ஏன் அவதரிக்க வைத்தான் இறைவன்?
அதுவும் தமிழகத்தில் ..
ஏன் ஏன் ஏன் ?
தமிழகம் சித்தர்கள் விளையாடிய பூமி.
அதிகமான மகான்கள் அவதரித்த பூமி ..
ஏராளமான அடியார்கள் நடமாடிய பூமி ..
வீரத்தோடு தியாகத்தையும் கொண்ட மன்னர்கள் ஆண்ட பூமி ...
பிற தேசத்து மக்களும் சுதந்திரமாக உலாவிய பூமி ...
குன்றாத இயற்கை வளங்களும்,
வற்றாத ஜீவ நதிகளும்,
செல்வத்தைக் கொட்டும் நில தனங்களும் ,
பொய்க்காத பூ மழையும் ,
கொண்டது தான் தமிழக பூமி ..
நிறைவர குறைவற்ற அமைந்த தமிழக பூமிக்கு, அதில் வாழும் மக்களுக்கு அதில் ஒரு குறை வைக்கலாமோ?
அதற்காகவே படைக்கப்பட்டவன் தான் நெற்றி பொட்டாய் வந்த திலகமான சிவாஜி ...
கடவுளர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஓவியங்களாய் பார்த்ததுண்டு உணர்வுகளால் தெரிந்தது உண்டு ..
சிலைகளாய் கண்டதுண்டு ..
சிறுமதியில் பரவசமாய் அறிந்ததுண்டு..
ஓர் உயிர் அசைவாய், கண் பார்க்க ஓர் உருவ அசைவாய் கண் பார்க்க முடியுமா கடவுளின் நிஜத்தை?
என ஏங்காத மனிதர் உண்டோ ?
எப்படித்தான் காண முடியுமோ கடவுளின் சுய ரூபத்தை?
சிவனென்ன? திருமால் என்ன? முருகனென்ன?
எத்தனை கடவுள்கள்? எப்படித்தான் இருப்பானோ இறைவனவன்!
ஓர் அசைவாய் உருவமாய் எப்படி நிஜமாய் காண்பது?
இதற்காகவே வந்தாரோ சிவாஜி?
சிவனை நினைத்ததற்கு சிவனை காட்டினான் ..
பெருமாளுக்காக ஏங்கியவர்களுக்கு பெருமாளை காட்டினான் ..
கலை இல்லாத தேசம் ..
அது.. பாலை நிலம் ..
கலை ஒன்று இல்லையென்றால் நல்லது நிலைக்காது ..
அதற்காகத்தான் கலைகள் பிறந்தன...
அந்தக் கலையைச் சொல்லத்தான் கலைஞர்கள் ..
எல்லாவற்றிலும் உயர்வானது ஒன்று இருக்கும் ..
கலைஞர்களிலேயே உயர்வானவன் சிவாஜி ..
கலைஞர்களில் சிலர் கடவுளர்களாக நடித்திருக்கலாம் ..
உருவமாய் தோன்றுவது என்னவோ சிவாஜி தானே!
தோன்றிய மனிதப் பிறப்பும், பிறப்பினால் உருவான குடும்பங்களும் ,குடும்பங்களை கட்டி அணைத்த பாச வேர்களும் கூடி அமைந்தது தான் சமூகம்.
எப்போது மனிதன் பிறப்பை பார்த்தானோ , அப்போதே பாசமும் வந்திருக்கும். அவரவர் எண்ணங்கள் ,அவரவர் பாசங்கள்.
பிள்ளையிடம் எப்படி பாசத்தை காட்டுவது, சகோதரியிடம் பாசத்தை எப்படி காட்டுவது ?தோழனிடம் எப்படி பாசத்தை காட்டுவது ? தந்தையிடம் எப்படி பாசத்தைக் காட்டுவது ?இப்படி குடும்ப உறவுகள் எத்தனை உண்டோ அத்தனைக்கும் இப்படியும் பாசத்தை காட்டலாம்
என்று தன் கலையாலே சொன்னவர் நடிகர் திலகம் ..
நடிகர் திலகத்தின் படத்தை பார்த்தவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அமைந்திருக்கலாம். அவர்கள் காட்டும் பாசத்தில் ஒரு துளியேனும் சிவாஜி இருப்பார்.
தீய எண்ணங்கள் தோன்றாமல் இருக்க வேண்டுமானால் நல்ல கலைகள் அவசியம்.அதைத்தான் சிவாஜி படங்கள் போதித்தன ..
உலகம் வளர வளர பழையன கழியும் , புதியன புகும்...
ஆனால் கழியக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன .மகான்களின் மகத்துவமும், தியாகிகளின் தியாகமும், தேச பக்தர்களின் அர்ப்பணிப்பும் மறக்கக்கூடாது, மறைய கூடாது .உலகம் உள்ளவரை நினைக்க வேண்டும்.
நல்ல கலைஞர்களால் அவை சொல்லப்பட்ட வேண்டும். அந்த வகையிலே தான் நம் நடிகர் திலகம் இதை செய்திருக்கிறார். நல்ல கலைஞர்களின் பணி அதுவே! கட்டபொம்மனின் கப்பலோட்டிய தமிழனின் வீரமும் தீரமும் நமக்குத் தெரிந்திருக்கலாம். அவர்கள் எப்படி எல்லாம் இருந்திருப்பார்கள் என்று சொல்லவும் ஒரு கலைஞன் தேவையல்லவா! அதைத்தான் நடிகர்திலகம் செய்தார்! நடிகர் திலகமும் உயர்ந்தார். நடிகர் திலகத்தால் அவர்களின் புகழும் உயர்ந்தது!
இவையெல்லாம் பெருமைக்காக அல்ல! சமூக செம்மைக்காக!
இதற்காகவெல்லாம் தான் நடிகர் திலகம் அவதரித்தார்!
வாழ்க கலையும் அவர்தம் புகழும்!
செந்தில் வேல் சிவராஜ்!
கருத்துகள்
கருத்துரையிடுக