சிவாஜியின் எந்தெந்த படங்களை டிஜிட்டல் செய்யலாம் ?
தமிழில் வெளியான பழைய திரைப்படங்கள் டிஜிட்டலில் செய்து வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறும் என்பதற்கு அடித்தளமிட்ட படம் கர்ணன். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படம் அமோக வரவேற்பு பெற்றது. பல சாதனைகளைப் புரிந்த கர்ணன் படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் பாசமலர் திருவிளையாடல் வசந்த மாளிகை வீரபாண்டிய கட்டபொம்மன் சிவகாமியின் செல்வன் ராஜா அவன்தான்மனிதன் ராஜபார்ட் ரங்கதுரை வியட்நாம் வீடு முதல் மரியாதை என்று வரிசையாக வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றதுடன் வசூலையும் அள்ளி தந்தது. இவற்றில் கர்ணன் வசந்த மாளிகை சிவகாமியின் செல்வன் ராஜபார்ட் ரங்கதுரை முதல் மரியாதை ஆகிய திரைப்படங்கள் பெரும் சவால்களுக்கு இடையில் 100 நாட்கள் ஓடி எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
நடிகர்திலகத்தின் இந்த இந்த படங்களை டிஜிட்டல் செய்து வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் .
நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தியிலிருந்து தொடங்குகின்றன பெரும்பாலான விருப்பங்கள்.
பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக உத்தமபுத்திரன் நல்ல சாய்ஸாக இருக்கின்றது. அதுவும் உத்தமபுத்திரனை கலரில் எடுத்தால் இன்னும் அமோக வரவேற்பு பெறும் .மொக்கையான சினிமா படங்களை பார்த்து வரும் தற்கால இளைஞர்களுக்கு உத்தமபுத்திரன் போன்ற ஒரு படத்தை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டால் நடிப்பு என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிட்டும். அப்படி கலரில் உத்தமபுத்திரனை எடுத்து வெளியிட்டால் இதுவரை பார்க்காதவர்கள் எல்லாம் மிரண்டு விடுவார்கள்.
அடுத்ததாக புதிய பறவை படத்தை சொல்லலாம். இந்தப் படத்தின் உருவாக்கம் இன்று வரை ஒரு ஆச்சரியத்தை தந்து கொண்டே இருக்கின்றது. படத்தின் திரைக்கதை அமைப்பு பாடல்கள் உடைகள் அதற்கு மேலான நடிப்பு இசை என்று எல்லாவற்றிலும் ரசனையை உயர்த்திக் கொண்டே இருக்கும் படம். இப்போது வரும் காதல் படங்களை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இளைய கூட்டத்திற்கு புதிய பறவை நல்ல ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் ரசனை மேம்பாட்டையும் கொடுக்கும்.
இப்போது இருக்கும் டெக்னாலஜியால் வித விதமான மாஸ்க்குகளை அணிந்து சில நடிகர்கள் நாங்களும் வித்தியாசமாக செய்கிறோம் என்று சில படங்களில் நடித்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் இப்போது உள்ள தொழில்நுட்பம் சுலபமாக கிட்டி விடுகிறது .இதைப் பார்த்து வரும் இன்றைய இளைய சமுதாயக் கூட்டம் சிவாஜியின் நவராத்திரி படத்தை பார்க்க வேண்டும். அதுவும் கலரில் எடுத்து வெளியிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். அவ்வாறு வெளியிட்டால் நவராத்திரி ஒரு புரட்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
தெய்வமகன். நடிகர் திலகத்தின் இந்த படத்தை கண்டிப்பாக டிஜிட்டல் செய்து வெளியிட வேண்டும். பெரும்பாலானோர் இந்த படத்தை கலரில் வெளியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர். 1969 ஆம் ஆண்டு இந்த படத்தை தயாரிக்கும் போது இந்த படத்தை கலரில் எடுக்க வேண்டும் என்று தான் ஐடியா இருந்ததாம். நடிகர் திலகம் தான் இந்தப் படத்தை கருப்பு வெள்ளையில் எடுக்கலாம் என்று ஐடியா கொடுத்தாராம். ஒரு பக்க கோரமான கன்னத்தை கலரில் பார்க்கும் போது அது நெருடலை ஏற்டுத்தலாம் என்ற எண்ணம் தான் காரணம்.ஆனாலும் தெய்வமகன் கறுப்பு வெள்ளை புகைப்படங்களை கலரில் பார்க்கும் போது கலரில் முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.
நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு எல்லாவற்றையும் மறக்கடித்து விடும்.புதிதாக பார்ப்பவர்களை மயக்கிவிடும்.இது தான் எப்போதும் வேற லெவல் படம்.
சவாலே சமாளி செய்யலாம்.
உருப்படியான நல்ல கிராமத்து படங்களை பாத்தே ரொம்ப நாளாச்சு.அப்படி நல்ல ஒருகிராமத்து படத்தை பாக்கணும்னு நினைச்சா சவாலே சமாளி படத்தை ரிலீஸ் பண்ணலாம்.மத்த கிராம படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு .
அதே சமயம் ரொம்ப கமர்ஷியலாகவும் இந்தப் படத்தோட திரைக்கதை அமைந்திருக்கும்.
போலீஸ் படம்னா இதுதான்யா முதல் படம்.இந்த பட காட்சிகளை காப்பியடிச்சு பல போலீஸ் படங்கள் தமிழ் சினிமாவுல ரொம்ப வந்து இருக்கு. ஆனா இந்தப் படத்தோட கிளைமாக்ஸ் காட்சி மாதிரி வேற எந்த சினிமாவிலும் இல்லை. இந்தப் படத்தை கண்டிப்பா இந்த கால இளைஞர்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை டிஜிட்டலில் வெளியிட்டால் இந்தக் கால ஜெனரேஷன் ரொம்பவே அசந்து போவாங்க.
கோர்ட் சீனுகளை மையமாக வைத்து இந்த காலத்துல பல படங்கள் வந்திருக்கு. இந்த படங்களுக்கு எல்லாம் முன்னோடியா அமைந்த படம் தான் கௌரவம். இந்தப் படத்துக்கு ஈடு இணையா வேறு எந்த படத்தையும் சொல்ல முடியாது. இந்தப் படத்தையும் கண்டிப்பா இந்த கால ஜெனரேஷன் பார்க்கணும்.
டிஜிட்டல்ல ரொம்ப ரொம்ப முக்கியமா வெளிவர வேண்டிய படம் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்துக்கு இருக்கிற ரசிகர் கூட்டம் ரொம்ப ஜாஸ்தி .இந்தப் படத்தை டிஜிட்டல் செஞ்சு வெளியிட்டால் எல்லாருமே ரொம்ப ரசிச்சு ரசிச்சு பார்ப்பாங்க. படத்த பல தடவை பார்ப்பாங்க. நல்லாவே வசூல் செய்து சாதனை படைக்கும்.
அந்தக் காலத்தில் வந்த சூப்பரான ஆக்சன் படம் அப்படின்னு சொன்னா சிவந்தமண் படத்தை சொல்லலாம். கதை திரைக்கதை காட்சியமைப்புகள் பாடல் காட்சிகள் என்று சகல அம்சங்களும் நிறைந்த படம். டிஜிட்டல் செஞ்சு படங்க வரணும் அப்படின்னு சொல்றதுக்கு காரணமே இந்த கால இளைஞர்கள் பார்க்க வேண்டும் அப்படிங்கறதுக்காகத்தான். அந்த வகையில் சிவந்தமண் படத்தையும் சேர்த்துக்கலாம் .
ஞான ஒளி பட்டிக்காடா பட்டணமா எங்கள் தங்க ராஜா திரிசூலம் வெள்ளை ரோஜான்னு இன்னும் பல சிவாஜி படங்களை டிஜிட்டல் செஞ்சி வெளியிடலாம்.
இது முதல் சாய்ஸ் படங்களாக சொல்லியுள்ளேன்.இதற்கடுத்து மற்ற படங்களை டிஜிட்டல் செய்யலாம் ...
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக