சிவாஜி படங்களுக்கு புதுமையான வித்தியாசமாக செய்யப்பட்ட விளம்பரங்கள்.
1957 ஆம் ஆண்டு வணங்காமுடி திரைப்பட வெளியீட்டின் போது புதுமையான அதற்கு முன்பு யாரும் செய்யாத வகையில் விளம்பரம் செய்ய தீர்மானித்தார்கள்.அதற்காக 80 அடி கட் அவுட் ஒன்றை தயார் செய்து சென்னையில் சித்ரா திரையரங்கில் வைத்தார்கள் .
இப்படி ஒரு உயரமான கட் அவுட் அதற்கு முன் வெளியான எந்த தமிழ் திரைப்படத்திற்கும் வைக்கப்படவில்லை.அந்த கட் அவுட்டை பார்ப்பதற்காகவே வெளியூரில் இருந்தெல்லாம் மக்கள் வந்து பார்த்தார்கள்.
கூட்டம் அதிகமாகி டிராபிக் ஜாமே ஏற்பட்டது.அதற்காக போலீஸ் பந்தோபதஸ்தும் போட்டார்கள்.
60 வருசத்துக்கு முன்னாடியே சிவாஜி படத்துக்காக சென்னையில் நடந்த பிரம்மாண்ட ப்ரோமஷன்..
பொதுவாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் அதனை மக்களிடையே அதிகம் கொண்டு போய் சேர்ப்பதற்கு புது விதமான ப்ரோமோஷன்களை செய்வார்கள்.
அப்படி இருக்கையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக ,
சிவாஜி கணேசனின் படத்திற்காக படக்குழு செய்த ப்ரோமோஷன் ஒரு வியத்தகு விஷயம். பாவமன்னிப்பு. கடந்த 1961 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தை மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக்க மிகவும் பிரமாண்டமான அதே வேளையில் புதுமையான ஐடியா ஒன்றை கையில் எடுத்திருந்தது பாவ மன்னிப்பு படக்குழு.
ஜப்பானில் இருந்து பெரிய பலூன் ஒன்று வாங்கி வரப்பட்டு, சென்னை சாந்தி தியேட்டர் அருகே உயரத்தில் பறக்க விடப்பட்டிருந்தது. அந்த பலூனின் மீது ஏவிஎம் நிறுவனத்தின் பெயர் இடம்பெற, அதன் வால் போல் நீளமாக பாவமன்னிப்பு என படத்தின் பெயரின் எழுத்துக்களும் இடம்பெற்றிருந்தது. இதன் காரணமாக, சென்னை மவுண்ட் ரோடு வழி போகும் அனைவருமே இந்த படத்தின் ப்ரோமோஷனை வியந்தபடியே அண்ணாந்து பார்த்து சென்றனர்.
கர்ணன் திரைப்படத்திற்காக கர்ணனாக நடித்த சிவாஜியின் உருவத்தை தேரோட்டி வருவது போல கட்அவுட்டில் நிஜ தேர் ஒன்றையே தயாரித்து தியேட்டர் முன்பு வைத்திருந்தார்கள்.இதை பார்க்கவும் மக்கள் ஆவலோடு வந்தார்கள்.
பொன்னூஞ்சல் திரைப்படத்திற்காக நிஜமாகவே ஒரு ஊஞ்சலை தயார் செய்து ,அந்த ஊஞ்சலில் சிவாஜியும் உஷா நந்தினியும் அமர்ந்திருப்பது போலே வடிவமைத்து தியேட்டரின் மேல் இருந்து கீழே தொங்க விட்டார்கள்.ஊஞ்சல் சங்கிலியில் மலர் சரங்களை கோர்த்து அமைத்தார்கள்.காற்று வீசும் போது அந்த ஊஞ்சல்
கட் அவுட்டும் ஆட பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது.இந்த கட் அவுட் அமைக்கப்பட்டது தமிழ்நாட்டில் அல்ல. இலங்கையில்.
இலங்கையில் நீதி திரைப்படத்திற்கு சிவாஜி முழங்கால் மடக்கி உட்கார்ந்து இருக்கும் போஸில் கட் அவுட் செய்து தியேட்டர் முன் வைத்திருந்தார்கள்.இது சாதாரண சைஸ் கட் அவுட் அல்ல.ராட்சத சைஸில் உருவாக்கப்பட்ட கட் அவுட்.தியேட்டரின் உயரத்தையும் தாண்டி அமைக்கப்பட்டிருந்தது.
சுழலும் மேடைகளை பற்றித்தான் நீங்கள் அறிந்திருப்பீர்கள். சுழலும் கட்அவுட்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ....?
எழுபதுகளில் யாழ் நகரில் சிவாஜியின் 'ராஜா' படம் திரையிடப்பட்டபோது தியேட்டர் முகப்பிலே ஒரு 'சுழலும் கட் அவுட்'டையே அமைத்து சுழல வைத்து (AUTOMATIC) அழகு பார்த்தனர் அரங்க நிர்வாகிகள் .பூமியைப் போல வடிவில்
,த்ரீ-டி ,(3டி )அமைப்புடன் செய்யப்பட்ட இந்த கட்அவுட் ஒரு சுழற்சிக்கு நான்கு சீன்களை காட்டும் .போவோர் வருவோர் கண்களையெல்லாம் சுழல வைத்த இந்த கட்அவுட் மூலம் அதன் ஓவியர் ஒரு இந்திர லோகத்தை அல்லவா இறக்கி கொண்டு வந்து அங்கே நிறுத்தி இருந்தார் .
இந்த 'ராஜா 'திரையிடப்பட்டது யாழ் 'ராணி' திரையரங்கில் .
ரோஜாவின் ராஜா திரைப்பட வெளியீட்டு சமயத்தில் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஹெலிகாப்படரில் இருந்து விளம்பர நோட்டீஸ்களையும் பூக்களையும் படம் ரிலீசான தியேட்டரில் வீசினார்கள்.இது தமிழ்நாட்டில்தான்.இதற்கு முன்பு எந்த தமிழ் படத்திற்கும் செய்யாத விளம்பர உத்தி இது.
ஜெனரல் சக்கரவர்த்தி படம் வெளியான போது வெளியான எல்லா தியேட்டர்களிலும் 60 கட் அவுட் வைக்கப்பட்டது.பெரிய ஸ்டார் நடிகர்களுக்கு மட்டுமே முக்கியமான பெரிய நகரங்களில் மட்டுமே வைக்கப்பட்ட கட்அவுட் இந்த திரைப்படத்திற்கு தாலாகா போன்ற சிறு நகரங்களிலும் வைக்கப்பட்டன.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக