மெழுகுவர்த்தி வெளிச்சம் உலகின் இருள் போக்கிடுமா?
சிவாஜி இல்லாத திரையுலகத்தை மறைக்க முடியுமா?
நெருப்பென்றால் வெந்திடுமா நாக்கு?
சிவாஜியை சொல்லாமல் ஏது நடிப்பு
காற்றில்லாமல் உயிர் வாழும் ஜெகமேது?
கலைவேந்தன் பேர் சொல்லாத நாவேது !
வான்மழை பொழியாத வையகம் செழிக்குமா ?
சிவாஜி இல்லாத திரையுலகம்
சிறக்குமா !
தங்கத்தின் நிறத்தை மாற்ற முடியுமா ?
தவப்புதல்வனின்புகழைத்தான் மறைக்க முடியுமா !
இயற்கையை தான் மாற்ற முடியுமா
சிவாஜியை தான் மீற முடியுமா?
எல்லாவற்றிலும் உச்சம் ஒன்றுண்டு
சிவாஜியை மிஞ்ச எவருண்டு
அனல் பறந்தால் வெந்து தணியும் காடு
சிவாஜி பேசினால் அதிர்ந்து போகும் தேகக்கூடு
இடியோசை கேட்டால் அஞ்சுமாம் நாகங்கள்
சிவாஜி கர்ஜித்தால்
அதிருமே திரைகள்
எழுத எழுத தீர்ந்து போக தமிழுக்கு என்ன பஞ்சமா?
சிம்மக்குரலில் வசனம் கேட்க கேட்க மனம்தான் கூசுமா !
பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் பெயர் பெறுவான் வள்ளலாவான்
நாட்டுக்கு ஈதல் நல் புரிந்தான்
நானிலத்து கலைஞன் கணேசனாவான்
அறுந்துபோன வில் அம்பெய்ய உதவுமா?
சிவாஜி பேசாத வசனம் இனிக்குமா?
மடை திறந்தால் பாசனம் செழிக்கும்
இவன்வாய் திறந்தால் வார்த்தைகள் இனிக்கும்
நாவறுந்த வாயில் சொல்லம்புகள் தொடுக்க முடியுமா?
இடறும் சொற்கள் கூட இவன் நாக்கில் தடுமாறுமா!
உரசினால்தான் தங்கத்தின் தரம் தெரியும்
இவன் பேசினால்தான் தமிழின் அருமை புரியும்
கட்டை விரல்தான் களிமண் கலைக்கு பிடிமானம்
சிவாஜிதான் நடிப்புக் கலைக்கு
உவமானம்
சூரியன் முன் ஜொலிக்காது நட்சத்திரங்கள்
சிவாஜிக்கு முன் எடுபடுமா மற்றவர்களின் ஜோடனைகள்
நீலகண்டனின் தொண்டையோடு நின்று போனது ஆலகால விஷம்
சிம்மக்குரலோனோடு முற்றுப் பெற்றது நடிப்பபெனும் ரசம்
பிடிபட பிடிபட கலைகள் வளர்ந்துதான் போனது
பொடிபட பொடிபட நடிப்பானது சிவாஜியால் உடைந்து போனது
இதற்கு மேலும் நடிப்பா என்று!
கலைமன்னன் போனவழி யாரும் போகாத வழி
இவன் போன பின் அது எல்லோருக்குமான பொதுவழி
அசர அசர அடித்த நடிப்பாயுதம்
வியக்க வியக்க வைத்த சொல்லாயுதம்
ஜால ஜாலமாய் காட்டிய விரலாயுதம்
திகைக்க திகைக்க பார்க்க வைத்த விழியாயுதம்
எத்தனை ஆயுதம் அவன் எண் சாண் உடம்பில்
துடிக்குது புஜம்
நடிப்பது நிஜம்
மெய்சிலிர்க்குது மனம்
அது சிவாஜி நடிப்பின் குணம்
இதை மறுக்குமோ இந்த ஜெகம்
அஞ்சும் விழியோன்
கொஞ்சும் முகத்தோன்
தஞ்சமென வந்தால்
பஞ்சம் போக்கிடுவான்
வஞ்சமில்லா ஞானக் கலைஞன்
மின்னலென வரும் நடிப்பு
இடியோசை போன்ற குரலோசை
துடிக்க துடிக்க வரும் பாவனைகள்
வெடிக்க வெடிக்க மாறும் உடல்மொழி
இது நடிகர்திலகம் என்பார்
ஓர் நொடியில்
செந்தில்வேல் சிவராஜ்..
கருத்துகள்
கருத்துரையிடுக