மண்ணைத் தொட்டு வணங்கிச் செல்லும் ராஜநடை!
சினிமாவில் ஒரு நடிகர், ஒரு கதாபாத்திரம் என்றால், அதில் உணர்வு இருக்கும்; வசனம் இருக்கும்; நடிப்பு இருக்கும். ஆனால், தான் நடந்து வரும் நடையிலேயே அத்தனை உணர்வுகளையும், அத்தனை அர்த்தங்களையும் பொதிந்து வைத்தவர் என்றால், அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது!
வேறெந்த நடிகரின் நடையையும் இத்தனை உன்னிப்பாக, இத்தனை வியப்புடன் நாம் பார்த்திருக்க மாட்டோம். மற்றவர்கள் நடிப்பை மட்டும் காட்டினார்கள்; ஆனால் சிவாஜி, நடிப்பைத் தாண்டி, வெறும் தன் கால்களின் அசைவாலேயே ரசிகர்களின் இதயங்களை அதிரச் செய்தவர்.
அத்தனை நடைகளும் ஒருவருக்கே சொந்தம்!
சிவாஜியின் நடையைப் பற்றிப் பேசத் தொடங்கினால், அது முடிவே இல்லாத ஒரு பயணமாக நீளும். ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு தனி நடையை அவர் கையாண்ட விதம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
கந்தன் கருணையில் வீரபாகுத் தேவன் வரும் நடையை இன்றுவரை நம்மால் மறக்க முடியாது. அந்த கம்பீரமும், நடையில் அவர் காட்டும் வேகமும், "எப்படா இந்தக் காட்சி வரும்?" என்று ரசிகர்களை ஏங்க வைத்த ஒரு மகத்தான தருணம்.
போனால் போகட்டும் போடா பாடலில், அவர் கிலோமீட்டர் கணக்கில் நடந்திருப்பார்! ஆறு, மலை, மேடு, பள்ளம் எனப் பல சூழல்களிலும், பாடல் முழுவதுமே அவரது நடைதான் பிரதானம். அந்த நடையில் ஒருவித தத்துவமும் ஏக்கமும் கலந்திருக்கும்.
திருவிளையாடல் படத்தில் வரும் மீனவன் நடை, பல பட்டிமன்றங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் சிலாகிக்கப்பட்ட ஒன்று. உலகத்திலேயே எந்த நடிகனாலும் அந்த நடையை நடக்க முடியாது என்று விமர்சகர்கள் சொன்னார்கள் என்றால், அது வெறும் புகழ்ச்சி அல்ல; அந்த நடையில் அவர் காட்டிய உயிர்ப்பும், துள்ளலும் அபாரமானது!
உணர்வுகளைச் சுமந்த நடைகள்!
சிவாஜியின் நடை வெறும் உடல் அசைவு அல்ல; அது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் ஆத்மாவையும் வெளிப்படுத்திய ஒரு கலை.
மன்னவன் வந்தானடி பாடலில், பத்மினியின் பிரமாதமான நடனத்திற்கிடையேயும், சிவாஜி திடீரென ஒரு நடை நடந்து வருவார். அந்த ஒரு நடையால், மொத்தத் தியேட்டரையும் அதிர வைப்பார்! அது அழகும், அதிகாரமும் கலந்த ஒரு நடை.
தேவனே என்னைப் பாருங்கள் பாடலில், காட்டின் பின்னணியில் அவர் நடந்து வரும் பக்கவாட்டு நடை (Side Walk), ரசிகர்களின் நெஞ்சை உலுக்கிய ஒன்று. 'தாய் மடியிலே மழலைகள் ஊமையோ' என்ற வரி ஆரம்பிக்கும்போது அவர் கிளப்பும் நடை, சோகத்தின் உச்சத்தையும் தாண்டி, ஒருவித ஆக்ரோஷமான தேடலையும் வெளிப்படுத்தும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக் காட்சி... தூக்குமேடை நோக்கி கட்டபொம்மன் நடந்து வரும் காட்சி. படம் முடியப் போகிறது; ஆனால் பந்துலு அவர்கள் அங்கே வைத்தது ஒரு வெறும் நடைக்காட்சிதான்! வெறுப்பையும், வீரத்தையும் தன் கால் நடையில் வெளிப்படுத்தி, தன் மக்களைப் பார்த்து வெறுப்போடு நடக்கும் அந்த நடையைப் பார்த்து கண்ணீர் வடிக்காதவர்கள் உண்டா? அது ஒரு வரலாற்று நடை!
வேடமேற்ற நடைகள்!
சிவாஜி ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும், அவரின் நடை அநாயசமாக வெளிப்படுத்தியது:
புயல் போல சபையைக் கலக்கி வரும் மனோகரன் நடைக்கு, அன்று கொட்டகைகள் விசில் சத்தத்தால் அதிர்ந்தன! அது ஆவேசத்தின் அடையாளம்.
தில்லானா மோகனாம்பாள் சண்முகசுந்தரத்தின் நாடகக் கலைஞனுக்கே உரிய கலைநடை!
தங்கப் பதக்கம் SP சௌத்ரீயின் கம்பீரமான கடமை நடை!
தேவர்மகன் பெரியதேவரின், வேட்டியைத் தூக்கியபடி வரும் பாசாங்கில்லா நடை, மண் வாசனையின் அடையாளம்!
நவராத்திரியில் வரும் ஒன்பது வேடங்களில், டாக்டர் வேடத்தில் அவர் நடந்து வரும் கருணை நடை!
இதுதான்டா ராஜநடை, இதுதான்டா சிங்கநடை, இதுதான்டா சோகநடை என்று, நடைக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி. இரண்டு கால்களில் நாம் சாதாரணமாக நடந்த நடையை, பல நூறு நடைகளாக மாற்றிக் காட்டிய அந்தப் பெருங்கலைஞனை, நாம் கொண்டாடுவது நியாயமே!
அவரின் நடைகள் முடிவற்றவை... நாம் சொல்லிக்கொண்டே போகலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக