நடிகர் திலகத்துக்கு ராஜ மரியாதை: ராணி எலிசபெத் உடனான சிவாஜி கணேசனின் சந்திப்பு!
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பரந்த செல்வாக்கைப் பெற்ற ஒரே ஒரு தனித்துவமான கலைஞராவார். அவரது புகழும், நாகரீகமான அணுகுமுறையும், தேசப்பற்றும் எல்லைகளைத் தாண்டி ஒலித்தது. இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாக, 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அவர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு இங்கே இந்தியாவில் சிவாஜி கணேசனுக்கு மட்டுமே கிடைத்தது.
இந்தச் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது? சிவாஜி கணேசன் எப்படி அந்த அரிய VIP பட்டியலில் இடம்பிடித்தார்? பார்ப்போம்.
இங்கிலாந்து தூதரகத்தில் இருந்து அழைப்பு:
1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இங்கிலாந்தின் ஹை கமிஷனர் 'டேனியல் டே' என்பவரிடம் இருந்து சிவாஜி கணேசனின் இல்லமான 'அன்னை இல்லத்திற்கு' ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் சிவாஜியின் தம்பி சண்முகத்தை உடனடியாக வந்து தன்னைச் சந்திக்குமாறு அழைத்தார்.
சரியாகப் பகல் 12 மணிக்கு ஹை கமிஷனர் அலுவலகம் சென்ற சண்முகத்தை, டேனியல் டே வரவேற்றார். சிவாஜி கணேசனின் பண்பான செயல்கள், நாகரீகமான அணுகுமுறை, ஆழமான கற்றல் திறன் மற்றும் தான் கற்றறிந்தவற்றை அடக்கத்துடன் வெளிப்படுத்தும் குணம் எனப் பலவற்றைப் பற்றி டேனியல் டே உயர்வாகப் பேசினார். குறிப்பாக, சிவாஜி அவரிடம் தைரியமாக ஆங்கிலத்தில் பேசியதை வியப்புடன் பாராட்டினார்.
சண்முகத்தின் கல்விப் பின்னணி பற்றி டேனியல் டே விசாரித்தபோது, தான் 'LSE' (London School of Economics)-இல் படித்துவிட்டு வந்து அண்ணனின் பட விஷயங்களைக் கவனித்து வருவதாகக் கூறினார் சண்முகம். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த டேனியல் டே, உடனடியாக எழுந்து சண்முகத்துடன் மீண்டும் கை குலுக்கினார்.
ராணியின் விருந்தினர் பட்டியலில் சிவாஜி:
தொடர்ந்து, டேனியல் டே சண்முகத்திடம் தான் அழைத்ததற்கான முக்கியக் காரணத்தைக் கூறினார்:
"பிப்ரவரி 19 ஆம் தேதி, எங்கள் ராணி எலிசபெத் மற்றும் எடின்பரோ இருவரும் மெட்ராஸ் வருகிறார்கள்."
"அன்று ராஜாஜி ஹாலில் நடைபெறும் இரவு விருந்துக்குச் சில முக்கியமான VIP-கள் மட்டுமே அழைக்கப்படவுள்ளனர்."
"நான் எனது சார்பாக உங்கள் அண்ணன் சிவாஜி கணேசனை அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளேன். மேலும், தமிழ்நாடு அரசின் VIP பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது."
இந்தக் கவுரவம் எளிதாக யாருக்கும் கிடைக்காது என்றும், அன்றைய தினம் வேறு எந்த நிகழ்ச்சியையும் வைத்துக் கொள்ளாமல், விருந்தில் கலந்துகொள்ளத் தயாராக இருக்கும்படியும் சண்முகத்திடம் டேனியல் டே வலியுறுத்தினார். சண்முகம், "என் அண்ணனை எதிலும் முன்னிலைப்படுத்துவதுதான் என் வாழ்வின் லட்சியம்," என்று கூறி, டேனியல் டே விருந்துக்கு வருமாறு விடுத்த அழைப்பைத் தவிர்த்துவிட்டுப் புறப்பட்டார்.
ஜெமினி கணேசனுக்கும் கிடைத்த அழைப்பு:
மாலை சிவாஜியிடம் சண்முகம் இந்தத் தகவலைப் பகிர்ந்தபோது, சிவாஜி உடனே தனது நண்பர் ஜெமினி கணேசனை அழைத்து வரச் சொன்னார். மறுநாள் காலை உணவுக்காக சாவித்திரியுடன் வந்த ஜெமினி கணேசன், ராணியின் விருந்து பற்றிய பெருமையைப் பற்றிப் பேசினார்.
சிவாஜியோ, "அப்படியா மாப்ளே, என் நண்பர் டேனியல் டேவும், நம்ம மாநில அரசாங்கமும் என் பெயரைத் தேர்ந்தெடுத்து இருக்காங்களாம், நீயும் என்னோட வா" என்று தன் நண்பர் ஜெமினி கணேசனையும் அழைத்தார். இது, வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வெள்ளையத் தேவனாக நடித்ததன் மூலம் ஜெமினி மீது சிவாஜிக்கு ஏற்பட்ட பிரியத்தின் வெளிப்பாடாகும். ஜெமினியும் சந்தோசத்துடன் வருவதாகக் கூறி, டிரஸ் கோட் பற்றி விசாரித்தார். சிவாஜியும், "தம்பி மாப்பிள்ளைக்கும் அளவெடுத்து நீயே தயார் பண்ணிடு," என்று சண்முகத்திடம் கூறினார்.
ராஜாஜி ஹாலில் ராஜ கம்பீரம்:
1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோர் விருந்துக்குரிய உடையில் ராஜாஜி ஹாலில் நடந்த இரவு விருந்தில் கலந்துகொண்டனர். அன்றைய முதல்வர் காமராஜர், நிதியமைச்சர் சி. சுப்ரமணியம், தொழில்துறை அமைச்சர் வெங்கட்ராமன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
விருந்தினர்கள் ஒவ்வொருவராக ராணி எலிசபெத்துக்கும், எடின்பரோ பிலிப்புக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். சிவாஜி கணேசன், இங்கிலாந்து ஹை கமிஷனர் டேனியல் டே-யால் இளவரசர் எடின்பரோவுக்குத் தனிப்பட்ட முறையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதன் பின், சிவாஜி தன் நண்பர் ஜெமினி கணேசனையும் பிலிப்புக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அமெரிக்க அதிகாரியிடம் பாராட்டு:
எடின்பரோ பிலிப் சிறிது நேரம் சிவாஜியுடன் பேசிவிட்டு அடுத்த விருந்தினரிடம் சென்றார். அப்போது, சிவாஜியின் தோளைத் தொட்ட ஒரு நபர், அமெரிக்கத் தூதரக அதிகாரியான தாமஸ் சைமன் ஆவார். மிகுந்த மகிழ்ச்சியுடன் சிவாஜி அவருக்குக் கை குலுக்கி ஜெமினியை அறிமுகம் செய்தார்.
அப்போது தாமஸ் சைமன், "ஹலோ மிஸ்டர் சிவாஜி கணேசன், எப்படி இருக்கிறீர்கள்?" என்று ஆங்கிலத்தில் கேட்க, சிவாஜியோ அழகான ஆங்கிலத்தில், "நான் மிகவும் நலமாக இருக்கிறேன். உங்களின் நலம் எப்படி?" என்று பதில் சொன்னார். சிவாஜி சரளமாக ஆங்கிலம் பேசியதைக் கண்டு ஜெமினி கணேசன் வியந்து போனார்.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், தாமஸ் சைமன், "மிஸ்டர் சிவாஜிகணேசன்! இங்கிலாந்து ராணியின் விருந்தினராக வருகை தந்திருக்கும் தாங்கள் விரைவிலேயே எங்கள் அமெரிக்க நாட்டின் அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட இருக்கிறீர்கள்," என்று கூறினார்.
அதற்கு சிவாஜி, "மகிழ்ச்சி! அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்று பதில் சொன்னார்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, முறையான கல்வி இல்லாமலேயே கலைத்தாகத்தால் மட்டுமே வளர்ந்து, சினிமாவில் அடியெடுத்து வைத்த பத்தே ஆண்டுகளில் (1952 முதல் 1961 வரை), உலக வல்லரசுகளின் அரசு விருந்தினராகக் கொண்டாடப்பட்ட ஒரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. அவரது இந்தப் புகழ் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை நினைத்து ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக