என் ஒரு நாள்..
ஒரு தமிழனின் வாழ்வில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எப்படி எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவரின் படங்களை அவரின் நடிப்பை ரசித்து ருசித்து பழக்கப்பட்ட ஒரு ரசிகனின் வாழ்வு இப்படித்தான் இருக்கின்றது ...
காலை 6 மணி..
விழிக்கின்றேன்.காலைக் கடன் கழித்து நடைப்பயிற்சி.நடையில் வேகமெடுத்த தருணம், நினைவினில் உயர்ந்த மனிதன் வந்து உட்கார்ந்து விடுகிறார்.அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே பாடலில் நடப்பாரே! அந்த நடையை நினைத்து என் பாதங்கள் நகர்கின்றன.
7 மணி..
தேநீர் நேரம்..
காலையில் ஒரு டீ.மாலையில் ஒரு டீ.இது வீட்டில்.அந்த டீக்கே அரைமணி பொறுக்க வேண்டும்.அவர் அந்தப் படத்தில் 20 கப் டீ குடிப்பாரே. டீ..டீ..டீ..
டீ குடிக்கும் போதெல்லாம் பைலட் வந்து நிற்பார்.டீ வந்து ,குடிக்கும் போது அவர் படங்களில் டீ குடிக்கும் ஸ்டைலில் மனம் லயிக்கும்.
8 மணி ..
நாளிதழ் வாசிப்பு.
சமுக குற்றங்கள் இல்லாத செய்தியைத்தான் பார்க்க முடிகிறதா? ஏதேனும் பார்க்கையில்,
'Advovate Rangapashyam appointed as high court judge '..
கௌரவத்தில் செய்தி படிப்பாரே! அந்த வாசிப்பு நெஞ்சில் அமரும்.அதற்கு பின் செய்தி வாசிப்பு மனம் மேலோட்டமாகத்தான்.
9 மணி..
காலை சிற்றுண்டி..
அவசர கதியில் இயங்கும் வாழ்க்கை.வேலைக்கு செல்லும் அவசரம்.சாப்பிட உட்காரும் போதெல்லாம்
இந்த ஒரு வேளை சாப்பிடாமல் சென்றால் உயிரா போய்விடும் என்ற எஸ்.பி.சௌத்ரீயின் வார்த்தைகள் காதில் ரீங்காரமிடும்.அப்போதும் அவர் நினைப்பு தான்.
10 மணி..
ஆபீஸ் பரபரப்பில்..
ஆபீஸ் சின்சியாரிட்டிக்கு பல நடிகர்திலகம் மாறி மாறி வருவார்.
11மணி..
கூடுதல் வேலைகள் அவசரமூட்டும்.பாபுவைப் போல் ரிக்ஷா இழுக்கும் வேலைகள் இல்லா விட்டாலும் அந்த உழைப்பு கண்ணில் ஒளிரும்.
ரிக்ஷாக்கார பாபுவின் முகமும், வாழ்க்கை ராஜசேகரும், என்று நிறைய சிவாஜிகள் மாறி மாறி வருவார்.
12மணி..
சொந்தம் பந்தம் எல்லாம் மறந்து தொழிலில் சிரத்தையாக வேலை செய்ய
உமாநாத்தும் ரிஷிமூலம் சந்தோசும் ,
பிரெஸ்டீஜ் பத்மநாபரும் தொழில் அர்ப்பணிப்பை சொல்வார்கள்.பங்சுவாலிட்டி ,டைம் கீப்பப் எல்லாம் சொல்லி அடிக்கடி நினைவூட்டுவார்.
1மணி..
குடும்ப உறவுகள் பிரச்சினைகள் என்று மனதிலோடும்.வாடிக்கையாளர்களும் வருவர்.மூன்று தெய்வங்களில் அய்யனின் வியாபார உத்தி ஞாபகம் வரும்.உற்சாகம் கூட்டும்.
2 மணி..
மதிய உணவு..
மனைவி பரிமாற உணவின் ருசியுடன் அய்யன் பல படங்களில் சாப்பிடும் அழகு நினைத்து கவளங்கள் உள்ளே செல்லும்.
3மணி..
சிறிது ஓய்வு...
அவர் நடித்துக் காட்டிய. வாழ்க்கை பாடங்கள் நிழலுருவமாய் நெஞ்சிலோட
அரைக் கிறக்கத்தில் அண்ணன் ஒருகோயில் குலமா குணமா பாசமலரென்று மூடிற்கு ஏற்றவாறு காட்சிகள் நினைவுக்கு வரும்.
4மணி..
விடாமல் மூன்று ஷிப்டிங்கில் வேலை செய்தேன்.உனக்கு என்ன இன்னும் ஓய்வு?
வேலைக்கு புறப்படு என்று அவசரப்படுத்துவார்.
5மணி...
தொழிலில் மும்முரமாய் வேலை. பச்சை விளக்கில் ,ஒளி மயமான எதிர்காலம் பாடல் வரும்.எங்களுக்கும் காலம் வரும் பாடல் வரும்.இன்னும் நிறைய.அந்தந்த நாளின் சூழ்நிழைகளுக்கேற்ப...
மாலை 6 மணி..
பல வேஷம் போட்ட ரங்கதுரையும், திருவிளையாடல் வேஷங்களும் நவராத்திரி பாத்திரங்களும் நினைப்பில் வரும்.கடமைகள் அது போக்கில் நடைபெறும்.அதனூடே அதை செம்மைப்படுத்த இவர் நினைப்பும் வரவே செய்கிறது.
7மணி..
வீடு..
அம்மா மனைவி மகள் என்று எல்லோரும் சந்தோசித்திருக்க ,
நடிகர்திலகத்தின்
எங்கள் குடும்பம் ஒரு சோலைவனம்,
அம்மா நீ வாழ்க! ,
பாசமலரே,
என்று நிறையவே நினைப்புக்கு வரும்.
8மணி...
தென்றலாய் சாந்தமாய் அவர் நடித்த பாடல்களை வாய் முணுமுணுக்கும்.இந்த நேரத்தில் வீட்டிலிருக்கும் தனிமை நேரத்தில் அவர் பாடல்களை நினையாத நாளிருக்காது..
9மணி...
குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் நேரம்.அதில் ஒரு நிறைவு, சந்தோசம் .
இப்படித்தானே அய்யன் அன்னை இல்லத்தை வளர்த்தார்.பாசம் பொங்கும் இதயம் எனது, என்ற டைப் பாடல்களில் மனம் பரவசமாகும்.
10மணி...
உறங்க செல்லும் நேரம்.
அமைதியான நதியினிலே ஓடம்
ஆறு மனமே ஆறு
மலர்களைப் போல் ...
எத்தனை பாடல்கள்
தூக்கம் வரும் வரை பாடல்களை முணுமுணுத்தவாறே அந்த நேரம் செல்லும்...
காலை 6 மணி...
விழிக்கின்றேன்..
அய்யன் இருந்த வரை அவரின் திரைப்படங்கள் ஏதாவது மாறி மாறி என்னுள்ளே ரசனையை வளர்த்துக் கொண்டே இருந்தன.2001 ஜுலைக்குப் பின் என் தினசரி நடவடிக்கைககளில் அவரின் தாக்கம் ஏதாவது ஒரு வழியில்
சிந்தனையில் வந்து நின்று விடுகிறது.
அய்யனின் அபிமானிகளே!
உங்களுக்கு எப்படி?
கருத்துகள்
கருத்துரையிடுக