எழுச்சியும், வசனப் புரட்சியும்....
இவ்வளவு பெரிய வசனமா? என்னாலே முடியுமா? நான் என்ன சிவாஜியா? இப்படி ஒரு நடிகர் கேட்டாராம்.
நடிகர்திலகம்..
அது கொட்டும் மாமழையப்பா!
இடையில் தங்காது.
நேரே பூமியை நனைக்கும்.
'மாப்ள மாதிரி இருக்கேன்னா'
மூணே சின்னவார்த்தை.பலே பாண்டியாவில் ராதாவிடம் சொல்லும் அழகே தனி.உடம்பை கூனி நாணி அந்த அங்க அசைவுக்குத் தகுந்த மாதிரி அந்த உச்சரிப்பு வரும்.
பெரிய பெரிய வசனங்களை எல்லாம் சொல்ல வேண்டியதில்லை.ஒத்த வார்த்தை பேசினாலும் அழுத்தந் திருத்தமாக இருக்கும்.
இங்க பாருங்க சார்! இங்க நின்னு இதைப்
பேசறீங்க! அப்பிடியே நடந்து கொஞ்சம் லெப்ட்ல திரும்பி இதை பேசறீங்க! பின்ன முன்னுக்கு வந்து குளோசப்ல உத்துப் பாத்து இதைப் பேசுங்க! நீங்க தூரத்துல நிக்கறீங்க பாருங்க! அங்க தா நாலு பக்க டயலாக் இருக்கு! குளோசப்ல ரெண்டே வரிதான்.
சூட்டிங் நடக்கையிலே அந்த பிரபல நடிகர் நாலு பக்க டயலாக்குக்கு அவசர அவசரமா பேசிட்டு, குளோசப் ஷாட்டுக்கு மட்டும் பத்து டேக் வாங்கினாராம்.அந்த நாலுபக்க
டயலாக்குக்கு சரியான பாவனையும் இல்லே.எல்லாம் வாயசைப்புத்தான்.எல்லாம் டப்பிங்ல பாத்துக்கலாம்னு கிளம்பிட்டாராம்.அவரு பிரபல நடிகராம்.
சிவந்தமண் படத்தில் அரண்மனைக்கு எதிரில் 'திவான் 'என்று ஓங்கி சத்தமிடுவார்.பெரிய அலறல் அது.தூரத்தில் இருந்து பார்த்தாலும் அந்த அசைவின் தாக்கத்திற்கு ஏற்ப உடல்மொழி இருக்கும்.அந்த குரல் சத்ததிற்கு ஏற்ப உடல்மொழியும் இருக்கும்.
'அர்ஜுனா! நீ அழிந்தாயடா! '
கர்ணனில் அவர் முழங்கியதின் தாக்கம்
ஒரு முறை நண்பர்கள் குழாமில் விவாதிக்கப்பட்டது.ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு கத்தி கத்தி பேசி தங்களுக்கு தாங்களே திருப்தி பட்டுக் கொண்டனர்.அதில் ஒரு நண்பன் மிக உச்சஸ்தாயில் இருபது முறை விடாமல் கத்தி இரண்டு நாட்களுக்கு அவன் தொண்டை கட்டி திணறியது நினைவுக்கு வருகிறது.
தமிழாசிரியர் ஒருவர் அடிக்கடி நடிகர்திலகத்தை பற்றி பேசுவார்.ஒரு நாள் சாக்ரடீஸ் வசனத்தை முழுதும் பேசிக் காட்டினார்.அந்த வயதில் நாங்கள் வியந்தோம்.அவர் சொன்னார்.நான் இந்த வசனத்தை நூறு முறை பேசியிருப்பேன். நடிகர்திலகம் பேசிய அந்த லயம் , தொனி,
உச்சரிப்பை யாராலும் செய்ய இயலாது.ஆண்டவனின் கொடை என்றாலும் அவருடைய உழைப்பும் அதிகம் தான்.என் தமிழுக்கு நான் அவரை வணங்குவேன், என்றார்.
தங்கப்பதக்கம்...
ஸ்ரீகாந்தை அரெஸ்ட் செய்யும் காட்சி நெகடிவ்வில் காண்பிக்கப்படும். அவர் பேசும் வசனமும் பிண்ணனி இசையும் அந்த காட்சியில் எத்ததனை விநாடி என்று பார்த்ததில்லை.
ஆனால் ஒரு யுத்தம் நடப்பது போன்றே இருக்கும்.
கருவூர்த் தேவரை ஒரு நாவலில் விவரிக்கும் போது ,ஒரு இடத்தில் அது புயலடா! எப்போது வரும்! எப்போது போகும் என்று தெரியாது என்று குறிப்பிடுவார் ஆசிரியர்.அதைப் படிக்கையில் கட்டபொம்மன் வசனங்கள் தான் நினைவுக்கு வரும்.மந்திரிக்கு அறிவுரை சொல்லும் காட்சியில் ,சாரை சாரையாக வசனங்களை பேசுவதும், பார்ப்பதும்...பின் மந்திரியை சிறை செய்யும் காவலனை, 'ஓலை தாங்கியே என்ன இரும்பு இதயமடா உனக்கு ' என்று தொடரும் போதும் ...புயலே...புயலே..
என்ற உணர்வே நமக்கு.
நடிகர்திலகத்தின் வசன ரிக்கார்டுகளும்,
வசனப் புத்தகங்களும் செய்யாத சாதனைகளா? இவையெல்லாம் நீண்ட கால பெரும் வியாபார சந்தையாக அல்லவா நடை பெற்றுக் கொண்டு இருந்தது.
எத்தனை பேருக்கு பணத்தை அள்ளித் தந்த தொழில்களாக இருந்தன .ஒரு மனிதன் வாயசைத்த வார்த்தைகளுக்கு எவ்வளவு பெரிய மார்க்கெட் தமிழகத்தில் பரவிக் கிடந்தது.
தமிழகத்தின் ஒரு தெருவில் கூட ஒலிக்காத இந்த வசனங்கள் உண்டா?
கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா?
இதுவும் அவரே...
கிஸ்தி திரை வட்டி
இதுவும் அவரே...
ஓடினாள் ஓடினாள்
இதுவும் அவரே...
அழைத்து வரவில்லை! இழுத்து வர செய்திருக்கிறீர்கள்!
இதுவும் அவரே ...
...எவையெல்லாம் சிறப்போ ,
அவையே நான்...
கீதையில் கண்ணன்.
திரைக்கலையின் சிறப்பிலே
சொல்லியாக வேண்டியதில்லை.
மாற்று முகாம் ரசிகர்கள் கூட அச்சு பிறளாமல் நடிகர்திலகத்தின் வசனம் பேசுகிறார்கள்.அது தான் உண்மையான ஆளுமை.
படங்களில் நடிக்க ஆசைப்படுகிறாயா? அப்படியானால் நடிகர்திலகம் பேசிய இந்த வசனங்களை பேசிக்காட்டு. வாய்ப்பு தருகிறேன்.இயக்குனர்களின் ஒரு தேர்வு முறை அன்று இது.நடிகர்திலகத்தின் வசனங்களை பேசிக் காட்டினாலே படங்களில் நடிக்கலாம் என்ற எழுதப்படாத விதியெல்லாம் திரையுலகில் இருந்திருக்கிறது.
வேதங்களில் சாமவேதம்
ஆயுதங்களில் வஜ்ராயுதம்
பசுக்களில் காமதேனு
பாம்புகளில் வாசுகி.
நடிப்புக்கலைக்கும்
வசன உச்சரிப்புகளுக்கும்
நானிலம் யார் என்று கூறுமே!
ஆனா! விதை நான் போட்டது.இரண்டரை மணி நேரப் படத்தில் அவர் பேசிய இந்த வசனம் தான் இன்றைய மீம்ஸ் உலகின் டாப் மீம்ஸ்களில் ஒன்றாக உள்ளது.
எத்தனை கோடி குரல்கள் உலகில்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்! ஒன்று போல் மற்றொன்று இல்லை.சில இரட்டை பிறப்பில் உருவம் ஒத்து இருந்தாலும்
குரலில் தான் எத்தனை வேறுபாடு.
ஆண்டவனின் இந்த அற்புத படைப்பில் கோடி பிறப்புக்களில் தனித்து நிற்பது என்பது என்ன சாதாரண விஷயமா?
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக