சிலிர்க்க வைக்கும் சிம்மக்குரலோனின் சில பாடல்கள் ..
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?
என்று பெண் பெருமையை பேசுவதாகத்தான் பாடல் அமைந்திருக்கும்.அந்த பாடலில் அவர் வேட்டி கட்டி நடந்து வருவதை திரையில் பார்த்தவர்களுக்கு பாவாடை தாவணி மறைந்து வேட்டி கட்டிய நடிகர்திலகத்தின் அழகு தான் கண் முன் நிற்கும்.எதை மையப்படுத்தி காட்சிகளை நகர்த்திக் கொண்டு போனாலும் அதை தன்னை நோக்கி ஈர்த்து விடும் ஆற்றல் பெற்றவர் நடிகர்திலகம்.அது இயல்பாகவே அமையப் பெறுவது தான் அவரின் ஒரு சிறப்பு என்றால் மிகையில்லை.
இது பற்றி சில விஷயங்களை நாம் நடிகர்கள், நடிகைகள் பேட்டிகள், கட்டுரைகள் மூலம் கேள்விப்பட்டிருக்கலாம்.
நடிகர்திலகம் ஊக்குவித்து தாங்கள் நடித்தோம், எங்களின் சிறப்பளிப்புக்கு அதுவும் முக்கிய காரணம் என்று பலர் சொல்லி கேட்டிருக்கலாம்.
ஆனால் இது போன்ற விஷயங்களையே அவருக்கு எதிராக திருப்பும் கையாலாகதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இந்தக் காட்சியில் அவரை மிஞ்சி விட்டார் என்றெல்லாம் சில அரைவேக்காட்டு விவாதங்கள்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்
தாங்கள் வாலியின் முன் நிற்கிறோம் என்று!
இது ஏக்கம் தீர்க்கும் தனிமை -என்ன
இன்பம் அம்மா உன் இளமை,
இந்த வரிகளுக்கு அவரின் நடை தான் என்ன அழகு.
சின்ன ஜெர்க் கூட இல்லாமல் நடக்கும் நடையில் கலங்கடிக்க வைத்திருப்பார்.
சிறிய தோளசைவில்,
சிறிய கழுத்தசைவில்
சிறிய விரலசைவில்
அசைவுகளை அருமையாக காட்டுவார்.
சிறு நடிகர்கள் இந்த அசைவுகளை கூர்ந்து கவனித்து கிரகித்துக் கொண்டாலே சிறந்த நடிகர்களாக முடியும்.நடிப்புக் கல்லூரிகள் எல்லாம் வீண்.
அது பாசமன்றோ
இது வேசமன்றோ ..
காமிராவின் பார்வை தள்ளி இருந்தாலும் முக பாவனை மாறாது..அடுத்து வரும் குளோசப் ஷாட் அதை காட்டும்போது தான் தெரியும் தொடர்ந்த அந்த சோகத்தின் வலிமை.பாட்டும் இசையும் தான் நன்றாகஉள்ளதே பின் ஏன் மெனக் கெடல் என்று நடிப்பவர்களின் பிரபல்யம் காட்சி முடிந்ததும் காலாவதியாகி விடும்.ஒரு புள்ளியாக காண்பித்தாலும் உருக்குவார் நடிகர்திலகம்.
"யாருக்கு இந்தக் கதை தெரியும்?
சாமிக்கு மட்டும் இது புரியும் "...
இந்த வரி முடிஞ்சதும் ஒரு போஸ் கொடுப்பார் பாருங்கள்
முகத்தில் சோகத்தை வைத்து
உடம்பில் கெத்தை வைத்து...
சோகப் பாடல்கள் கூட "ஒன்ஸ்மோர் "
அதிகமாக கேட்கப்பட்டவை இவருடையதானிருக்கும்.காமிராவை மட்டும் நகர்த்திக் கொண்டிருந்தால் போதும் நல்ல நல்ல ரசனையை அனுபவிக்கலாம்.எந்தவித பிரமாண்டமும் தேவையில்லாத, நடிப்பை கொண்டே பிரமாண்டப்படுத்திய ஒரே கலைஞன் நடிகர்திலகமே!
பரகாயப் பிரவேசம் அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாம்.அதை நடிப்புக் கலையில் செய்தவர்.சிம்மக்குரலை, கம்பீர தோற்றத்தை கொண்ட கலைஞனை பபூன் வேடத்தில் பார்க்கும் போது இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.
பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?
வயிற்றுக் குலுக்கி செய்யும் நடிப்புக்கள்
சர்க்கஸ் பபூன்களுக்கே பாடம் தான்.
பாடகர் குரலை மறக்கடிக்கும் வல்லமை நிறைந்தவர். ராக ஆலாபனைகளில் இவர் காட்டும் முகபாவனைகளும் , உதட்டசைவும்
பெரும் சுவை.ஏனையோர்க்கு பாடகர் குரல் பெருமையென்றால், பாடகர்க்கெல்லாம் பெருமை இவராலே.
இந்திரவில் நீயே
சந்திர வில் நீயே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே ..
சாரங்கதாராவின் இப்பாடலில் நடிகர்திலகத்தின் அற்புத உடல்மொழி, வாயசைப்புக்கும் மயங்காத தமிழர் மனமேது?
நம் தாத்தா காந்தியும் மாமா நேருவும்
தேடிய செல்வங்கள்
பள்ளி சாலை தந்த ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள் ..
காந்தியை குறிக்க உடலைக் குறுக்கியும்,
நேருவுவை குறிக்க ஒரு மிடுக்கும்,
கர்மவீரரை காட்ட ஒரு தோரணையும்
என்று மூன்று தலைவர்களை மூன்று விநாடிகளில் காட்டுவார்.
சின்ன முள்
பெரிய மீன்
என்பது போல் சின்ன ஐடியாக்கள் தான். ஆனால் எவ்வளவு அழகான பதிவுகள்.
ஒரு ம்ம்ம்ம்ம்ம்ம் க்குக் கூட
ரசிகர் கூட்டத்தை உருவாக்க முடிந்ததும்,
அதற்காகவே கரவொலிகள் கிளம்புவதும்,
பாடலை மீறிய ஈர்ப்பை ஏற்படுத்தியதும்
பாட்டென்றால் வெளி செல்லுவோரை அந்த ம்ம்ம்ம்ம்ம் க்காகவே உட்கார்த்தி வைத்ததும் ஒரு பாடல் என்றால்,
நான் பேச வைப்பதெல்லாம் பாடலே.
உதட்டசைவுகளிலிலே தான் சிலிர்க்க வைக்கிறாரென்றால், இப்பாடலுக்கோ உதட்டை பிரிக்காமலேயே சிலிர்க்க வைப்பார்.
கருத்துகள்
கருத்துரையிடுக