ஆறு மனமே ஆறு பாடல் ஆய்வு...
ஆண்டவனை நினைத்து சரணாகதி அடையும் பாடல்களில் ஒரு ரசிகனுக்கு மட்டுமல்ல ,தமிழ் தெரிந்த அனைவருக்குமே பெரும்
உள்ளக்கிளர்ச்சியையும் ,ஆன்மீக பற்றுதலையும் இப்பாடல் அளிக்கிறது.
நல்ல சிந்தனைகளையும் நன்னடைத்தையையுமே சிறந்த ஒழுக்கப் பண்புகளாக கொண்டு வாழ்ந்து வரும் ஒரு பேராசரியரியரின் வாழ்வுத் தடத்தில் இடறிய கல்லாக வந்த காதலால் ஏற்பட்ட நிகழ்வுகளால் தன் நிலையறிந்த நிலையில் பாடுவதாக அமையப் பெற்ற ஆறு மனமே ஆறு பாடல் ஆண்டவன் கட்டளை படத்திற்கு மட்டுமன்றி ஆன்மீக உலகிற்கும் கிடைக்கப் பெற்ற சிறப்பு பாடல்.
படம் ஆரம்பத்தில் இருந்து பயணிக்க தொடங்கிய காட்சிகளில் இருந்து இது ஒரு வித்தியாசமான களமாக மாறி இப்படியோரு ரசிப்பை நமக்கு கொடுக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாதது தான்.
இது வழக்கமான சிறந்தபாடல் என்ற
வரிசையை தாண்டி தமிழுலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும் பாடலாக அமைந்து விட்டது.
பாடல் படமாக்கப்பட உதித்த யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் பார்க்கும் போதெல்லாம் கிடைத்துக் கொண்டேதானிருக்கும்.எத்தனை நடைகள். நடிகர்திலகத்தின் அந்த விதவிதமான நடைகள் பாடலை பார்க்க பார்க்க சலிப்பதில்லையே.ஆறுபடை வீடுகள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நடை.
உடை ,மேக்கப் என்று அதிக சிரத்தை கொள்ளாமலேயே அது அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும்.
மகான்களின் தோற்றத்தை எளிய உடை பாவனைகளிலியே நடிகர்திலகம் அவர்களை கண்முன் நிறுத்தியிருப்பார்.
மகான்களின் மொத்த சரித்திரமும் மூன்று சரணங்களில் முழுமையானது போல் பிரதிபலிக்க வைத்திருப்பார்.
பல்லவி தொடங்குவதற்கு முன் ஆரம்பத்தில் வரும் இசையில் ஆற்றகரையோரம் நடிகர்திலகம் நடந்து வரும் நடை ,இது ஒரு விதம்...அந்த நடையே பட்ட மனிதனின் துன்பத்தை அனுபவிப்பதாக சொல்வதாக இருக்கும்.
அதன்பின் ,பட்ட பின்னால் ஒரு மனிதனுக்கு வரும் ஞானமும் ,அதன் தொடர்ச்சியாய் வரும் தெய்வ சிந்தனையை நினைக்க வைப்பதாயும் சொல்லப்பட்டிருக்கும்.
ஆறுமனமேஆறு
அந்தஆண்டவன் கட்டளை ஆறு
தேடும் மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு.
இந்த வரிகள் முடிந்ததும் அடுத்த காட்சியாய் கடற்கரையில் சில் ஹவுட்டாய் நடிகர்திலகம் காட்சி தருவார்.காட்சியின் தொடர்ச்சியாய் வரும் அந்த கடற்கரை மணலில் நடிகர்திலகம் நடந்து வரும் நடை, இது ஒரு விதம்.சாய்பாபா தோற்றத்துடன் அவருடைய உடையலங்காரம் வெகுவாக கவரும்.எளிய
மகானாய் வாழ்ந்த சாய்பாபாவின் வாழ்க்கையை எளிய முறையிலேயே காட்சிப்படுத்தியிருந்தாலும் அது வியக்க வைக்கும் முறையிலே ,எப்போது பார்த்தாலும் நம்மை ஆட் கொள்கிறது.
மாட மாளிகைகளும் வண்ண வண்ண ஜொலிக்கும் விளக்குககளும் விதவிதமான உடையலங்காரங்களும் பார்க்கும் போது கண்களுக்கு கவர்ச்சியே ஒழிய மனதில் காலங்காலமாய் நிலைக்க வைப்பது என்னமோ இது போன்ற நடிப்புகளே.ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் இதன் ரசிப்பும் கூடிக் கொண்டே தான் இருக்கவும் செய்கிறது.
சாய்பாபாவின் தோற்றத்திலே நடிகர்திலகத்தை பார்க்கும் போது,
அடடா! இந்த மகானின் வரலாற்றை நடிகர்திலகத்தின் நடிப்பில் உருவாக்காமல் விட்ட குறையும் மனதில் எழுகிறது.
ஒரு நிமிடம் ஒன்பது விநாடிகள் மட்டும் அந்த காட்சிகள் வரும்.இதில் ஷீரடி சாய்பாபாவை திருச்செந்தூரில் தரிசிக்க வைக்கும் பாக்கியத்தை செய்துவிட்டார் நடிகர்திலகம்.
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி
மேற்கண்ட வரிகள் வரும்போது நடிகர்திலகத்தின் முகம் காட்டும் பாவனைகள் ஆத்மார்த்தமான உணர்வை மனதில் ஏற்படுத்துகின்றன.மகுடிக்கு மயங்கும் நாகம் போல் மனம் மயங்க வைக்கும்.தெய்வ நம்பிக்கை கொண்டவர்க்கு பரவசத்தையும், அது இல்லாதோர் கூட வியந்து பாராட்டும்படியும் படியான நடிப்பு இது.
எத்தனையோ அனுபவங்களுக்கு பின்னும்,
துன்ப சுழட்சிகள், பின் ஞானம் என்ற நிலைகளில் மகான்களாக மாறுவதை நடிகர்திலகம் தன் சில நிமிட நடிப்பாலேயே நிலை நிறுத்தி விடுகிறார் என்றால் அவருடைய நடிப்பும் எத்தனை நிலைகளில் கற்று கடந்து வந்திருக்கும்.
கடல் மணலில் அந்த சாய்பாபா தோற்றத்தில் நடிகர்திலகம் நடையழகு பார்த்து மயங்கித்தான் புட்டபர்த்தி சாய்பாபா நடிகர்திலகத்தை நேரில் பார்த்து போது நடக்கச் சொல்லி ரசித்தாரோ?
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
இந்த பாடலுக்கு அந்த தோற்றத்தில் வந்து நின்றாலே அதற்கான சிறப்பு கிடைத்து விடுமே.ஆனாலும் விடுவாரா நடிகர்திலகம்? இசையமைப்பாளர் பாடலாசிரியர் அளித்த பங்களிப்பை தன் பக்கம் மொத்தமாக ஈர்த்து விடும் வல்லமை அவருக்கு உண்டு.இந்த வரிகளை எங்கே கேட்டாலும் நடிகர்திலகத்தின் முகமல்லவா மாயப்பிம்பமாக வந்து நிற்கிறது!
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
என்று பாடும் போது நடிகர்திலகத்தின் அந்த தலையசைவும் ,நடையும், கையசைவும், உடல் மொழியும் ஒன்றாக
கலந்த நடிப்பை எப்படி வெளிப்படுத்துவார்.
ஆகா! பரவசமே!!
அந்த இடங்களை கூட அப்போதே சென்று பார்க்க துடிக்கத்தான் வைக்கிறது.
இந்த காட்சி திருப்பரங்குன்றத்தின் ,
மேலும் ஒரு பெருமை சொல்லும் சிறப்பாக அமைந்து விட்டது.
இப்படியொரு பரவசத்தில் இருந்து விடுபடாத நிலையில், அடுத்து வரும் விவேகானந்தர் தோற்றம் அதை அதிகமாக்கும்.
இப்போது ஒரு வித நடை.
இது பழமுதிர்ச்சோலை.
கோவிலில் இருந்து நடிகர்திலகம் வெளியே வரும்போது ஆச்சர்யமாக இந்த காட்சி அமைந்திருக்கும்.நின்று கொண்டிருக்கும் யானை நடிகர்திலகம் பக்கம் வரும் போது தும்பிக்கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும்.
இந்தகாட்சியானது எதார்த்தமாக நடைபெற்றது போலிருக்கும்.
பின் ,
இந்த இடத்தில் கோவிலில் யானை துதிக்கை உயர்த்தி வாழ்த்திக் கொண்டே வருவது போல் நடந்து வருவதும் , நடிகர்திலகம் விவேகானந்தர் தோற்றத்தில் நடந்து வருவதும்
அருமையான அழகான பதிவுக் காட்சிகள்.
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.
'பணிவு கொண்டால்' என்ற வார்த்தைகளுக்கு நடிகர்திலகம் தலை குனிந்து வணங்குவது, அந்த வார்த்தைகளுக்கு உண்டான நடிப்பை வெளிப்படுத்துவது போல் இருப்பதும், அதே சமயம் பின்னால் துதிக்கையை உயர்த்தி ஆசி வழங்குவது போல் நடந்து வரும் யானையின் அன்புக்கு வணக்கம் கூறி பதில் மரியாதை செய்வது போலும் இருக்கும்.
ஒப்பனைகள் ஏதுமின்றி,
அந்த தலைப்பாகை கட்டை மாற்றி கட்டியே
சாய்பாபாவில் இருந்து விவேகானந்தராய் மாறுவாரே! அதை என்னவென்று சொல்ல!
தமிழ் திரையுலகம் செய்ய மறந்த விவேகானந்தர் சரிதத்தை நடிகர்திலகம் அந்த ஒரு நிமிடத்தில் செய்து வெகுவாகவே திருப்திபடுத்தியிருப்பார்.
இது மிகைப்படுத்தி சொல்லப்படுவதல்ல ,
உண்மையாகவே விவேகானந்தர் இக் காட்சியை பார்த்திருந்திருந்தால் தன் உடலை கிள்ளி உண்மை ருசு கண்டறிய முயற்சித்திருப்பார்.இந்தப் பாடல்செய்யும் கிளர்ச்சி உண்மையிலேயே அதிகம்தான்.பார்க்க பார்க்க ஏதோ ஒரு ஆளுமை சக்தியில் நாம் கரைந்து கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது.
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்.
'இந்த நான்கு கட்டளை' எனும் போது ,
ஆண்டவன் கட்டளை திரைப்படம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்னும் எண்ணமே தொலைந்து போயிருக்கும்.
அடுத்த வரிகளில் அந்த சாந்தமான முக பாவனைகள்,
பக்திப் பரவசமாக்கும்
ஊன் உருகும்
உயிர் உருகும் .
பழனி மலையை பிண்ணனியாகக் கொண்டு நடிகர்திலகம் நடந்து வரும்
காட்சியை பார்க்கும் போது அந்த மலை உச்சியிலே இருந்து உதித்து வந்த மகானோ! என்னும் படியாக அக் காட்சி இருக்கும்.
பழனி மலை கோயிலில் இருந்து இப்போது வெளியில் வருவது போல் காட்சி.மேலங்கி மாறி ஒரு சால்வை போல் நெஞ்சில் ஒரு ஆடை .வேட்டி கூட ஒரு முக்கால் காலுக்கே.
இது ஒரு நடை.
ஆரம்பத்தில் பார்த்த சாய்பாபா போய் விட்டார்.அதன் பின் முன் பார்த்த விவேகானந்தரும் இல்லை.
இவர் ராமகிருஷ்ண பரம ஹம்சர்.
அட என்னய்யா இது! மாய விளையாட்டு போல் உள்ளதே! லேசான தாடி, கன்னத்தில் ஒரு சொறிவு. அப்படியே மாறிவிடும் அங்க அசைவுகள்!
மூன்றே நிமிடங்களில் மூன்று மகான்களை தரிசிக்க வைத்து விட்டாரே!முந்நூறு நாட்கள் மெனக் கெட்டாலும் இது போல் யாராவது படைத்தளிக்க முடியுமா?
இயற்கை ஒன்றுதான் தீடீர் மாற்றங்களை கொண்டு வருவது.மேகக் கூட்டங்கள் பறப்பதும் விலகுவதும், கடலலைகள் சீறுவதும் தணிவதும், காற்று வீசுவதும் அடங்குவதும் இயற்கை தானே! நடிகர்திலகத்தின் ஒப்புயர்வற்ற நடிப்பை நாம் போற்றுவோமானால் அதையும் இயற்கையாகவே கருதுங்கள்.
ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
எளிமையாகத்தான் உள்ளது அவர் செய்வது.ஆனால் வலிமையாக நாம் உணர்கிறோம்.அதனால் தான் இந்தக் கருத்து சொல்லப்படுகிறது. நடிகர்திலகத்துக்கு முன் எந்த பிரமாண்டங்களும் தேவையில்லை.
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
ராமகிருஷ்ண பரமஹம்சரின் கண்கள் விவேகானந்தரைப் போல் பெரிதாக இருக்காது.ராமகிருஷ்ணருக்கு இமைகள் சுருங்கியது போல் இருக்கும்.அதையும் கூட மனதில் வைத்து இந்த ஒரு நிமிட காட்சியில் நடித்திருப்பார்.
இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
மகான்களின் தோற்றத்தில் தெய்வீக சிந்தனைகளை மனித ஒழுக்கங்களை சொல்வதாக அமைந்த பாடலிது.இந்த ஒழுக்கங்களை ஒருவன் கடைபிடித்து வாழ்ந்தால் அவன் மகானாகலாம் என்பதை சொல்வது போல் இப்பாடல் அமைந்துள்ளது.
இனி சுவாமிமலை .
இப்போது நடக்கும் நடை இது வேறு விதம்.
தலையாட்டிக் கொண்டே வரும் நடிகர்திலகத்தின் பாவனைகள்!
ஆகா! என்ன சொல்ல!
தெய்வகுணமும் பிள்ளைமனமும் கொண்டதாய் இருக்கும்.
எத்தனையோ ராஜ நடைகள் நடந்து காட்டிய கால்களாஅது?
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்.
சுவாமிமலை கோயில் படிக்கட்டுகளில் இறங்கி வரும் காட்சியானது லாங்ஷாட்டில் படம் பிடிக்கப்பட்டிருக்கும்.ஆனாலும் கூட அந்த கையசைவு உடலசைவை செய்து கொண்டே தான் இறங்கி வருவார்.
கடைசியாக திருத்தணி.
பாடல் வரிகளும் முடிந்தாயிற்று.
பிண்ணனி இசையின் முடிவுப்பகுதி மட்டுமே இனி.இவ்வளவு செய்தாயிற்று.
இதற்கு மேலும் இந்தப் பாடலில் என்ன இருக்கப் போகிறது? அப்படித்தான் நினைப்பு வரும். ஏனெனில் இது வரை அவர் நடித்த நடிப்புத்தான் என்ன?அதை நாம் ரசித்த விதம் தான் என்ன? அது கொடுத்த வியப்பில் இருந்தே மீளவில்லையே? என்று எவரையும் நினைக்கவும்வைத்திருக்கலாம்.
ஆனாலும் கடைசி பதினெட்டு விநாடிகளில் அவர் நடித்த நடிப்பை வியந்து ஏராளமானோர் குறிப்பிட்டு சொல்லும் காட்சியாகவும் விளங்கியது உண்மைதானே!
அது,
கடலை கொறித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக ஒரு சந்நியாசி போல் நடந்து வரும் நடையழகும் பாவனைகளுமே!
இப்பாடலை பார்த்த பின் ,
அறுபடை வீடுகள் என்ற பெயர் எப்பொழுதெல்லாம் உச்சரிக்கப்படுமோ அப்பொழுதெல்லாம் இந்த
ஆண்டவன் கட்டளையும் நினைவுக்கு வந்தால் அவன் நல்ல ரசிகன்.
கருத்துகள்
கருத்துரையிடுக