பள்ளி படிப்புடன்
சிவாஜியின் நடிப்பும்...
மலை போல குவிஞ்சிருக்கய்யா
வீட்டுக்குள்ளே போட்டோ
மலைபோல குவிஞ்சிருந்த போட்டோவெல்லாம் அண்ணனுக்குத்தான் சொந்தம்
மனசெல்லாம் நிறஞ்ச போட்டோவா
எனக்கு புடிச்ச போட்டோ
வைரமோதிரம் போட்டிருந்த சிவாஜி போட்டோ
அந்த அண்ணன் அப்பால போகயிலே
நான் எடுத்து ஒளிச்சு வச்சேன்
அஞ்சாங்கிளாஸ் தமிழ் புக்குலே
ஆசை ஆசையாய் எடுத்து வச்ச போட்டோவ
அஞ்சாங்கிளாசெல்லாம் புடுங்கி புடுங்கி
பாத்தாங்க!
அப்புறமா மூணு நாளும் பத்திரமாதான்
இருந்துச்சு
அடுத்த நாளு தமிழ் புக்கே தொலஞ்சு போச்சு!
பாவிப்பய யாருன்னு தெரியாம இன்ன வரைக்கும் திட்டிட்டே இருக்கேன்.
ஆறாங்கிளாசு வேற ஸ்கூலு
அறிவு கொஞ்சம் ஏறிடுச்சு போல அப்பிடின்னுதான்
நினைச்சுகிட்டு இருந்தேன்.
இப்ப நான் எடுத்துகிட்டு போனது
நெறைய படம் போட்ட சிவாஜி புத்தகம்
ஒவ்வொருத்தனுக்கும் நானே புரட்டி புரட்டி
காமிச்சேன்
பாத்தவங்க வாயெல்லாம் பல்லு
ஒருத்தன் கண்ணுல மட்டும் முள்ளு!
எவன்டா எடுப்பான் என் புக்க!
கண் கொத்தி பாம்பா நான் இருக்க ,
மறுநாளே காணாமப் போச்சே ஆச வச்ச புக்க!
கண்ணுல முள்ளுன்னு சொன்னேனே
அந்தப்பயல தப்புச் சொல்ல முடியல!
ஏன்னா! அவன் அன்னைக்கு லீவு!
இப்ப நான் ஏழாங்கிளாஸ்.
அய்யா படிக்கிறதெல்லாம்
சிவாஜியோட பாட்டுகதான்
பண்டல் பண்டலா பைண்ட் செஞ்ச
பாட்டு புத்தகங்கதான்
இந்த தடவ எல்லாப் பயலுகளுக்கும் குடுத்தேன்
அவனவன் பாடிட்டு திரியறான் சிவாஜி பாட்டு
பத்து நாளும் இப்படித்தான் போச்சு...
அடுத்த நாளு...
மூணாம் பீரியட் ...
வாத்தி இல்லேன்னு
சத்தம் போட்டு பாட்டுபடிச்சான்
நோஞ்சாம் பய ஒருத்தன்
திரும்பி நின்னு பாடுனவன் முதுகில விழுந்தது தாளம்
அடுத்த கிளாஸ் வாத்தி நிக்க
அவரு கையிலே ஆறு சாணுல கம்பு
ஆரெல்லாம் சிரிச்சாங்களோ அவிக மேலே அவனுக்குகோபம் வரலே
ஆனா ,
அரை சிரிப்பா இருந்த என்ன வெச்சு
கதையெழுதிட்டான்
இப்ப அந்த பாட்டுபுத்தகத்தை கொண்டு போனது அடுத்த கிளாஸ் வாத்தி!
இன்னக்கி வரைக்கும் ஒரே சந்தோசம் அடுத்த அடி நான் வாங்கலே!
எட்டாங்கிளாசும் வந்தாச்சு!
வீட்டுக்கெதுக்கா கோட்டைச் சுவரொண்ணு இருக்கு
டூரிங்தியேட்டர் வால்போஸ்டரெல்லாம்
அங்கனதான் ஒட்டுவாங்க
எப்பல்லாம் சிவாஜி போஸ்டர் புதுசா ஒட்டியிருக்குமோ
அன்னைக்கெல்லாம் அந்த நெனப்புத்தான்
அன்னிக்கு சாயங்கால படத்தை அன்னிக்கு பாக்காட்டி அவ்வளவுதான் மனசு
எப்பிடியோ வீட்டுல மல்லுக்கட்டி
விடாப்பிடியா பாத்துருவோம் சிவாஜி படத்த!
முதநாள் படம் பாக்க அலையற மனசு
அடுத்த நாள் அதப் பாத்த பேச்சுத்தான்
நாள்பூராவும்!
நல்லா படிக்காத பையனொருத்தன்
நம்மகூட தான் சுத்திகிட்டிருப்பான்
ஒரு நாள் சாயந்திரம் புதையல் பாத்தோம்
அடுத்தநாள் கணக்குப்பாடம் ..
அவஞ் செய்யல
ஏண்டா பாடம் செய்யலேன்னு வாத்தியாரு
கேட்டாரு.
அய்யா நல்லா ஜூரம்யா!
படுத்துகிடந்தேன்! முடியல அய்யா!
ஓஹோ! ஜுரத்துலதான் தியேட்டர் மணலெடுத்து அள்ளி அள்ளி குவிச்சீங்களோ!
பிரம்பொன்னு உடைஞ்சதுதான் மிச்சம்!
..அன்னிக்கு அப்பிடி அடி வாங்குன பையன்
இன்னிக்கும் சொல்லி சொல்லி சிரிக்கிறான்!
ஒன்பதாவது கிளாஸ் படிக்கிறப்போ நாமெல்லாம் உசந்துட்டமடா!
அப்பிடீங்கற நினைப்புதான்.
ஆனாலும் ஆப் டிராயர்தான் .
அது கொஞ்சம் சங்கடம்தான் .
ரெண்டும் கெட்டான் வயசு வேற..
நம்மள நிமிந்து நிக்க வைக்கறது சிவாஜி நடிப்பை பத்தி பேசறப்போதான்...
உத்தமன்லே நடந்து வருவாரு பாரு!
மனோகராவுல பொளந்து கட்டியிருப்பாரு!
கௌரவத்துல கலக்கியிருப்பாரு!
கட்டபொம்மனாவல்லாம் நடிக்க எவனிருக்கான்?
அவனவன் அவனிஷ்டத்துக்கு அள்ளி விடுவானுக! இதுல பேச்சு வாக்குல ஒருத்தன் சௌத்ரீயா ஸ்டைல் காட்டுவான் .இன்னொருத்தன் நக்கீரனா
வசனம் பேசுவான்.இன்னொருத்தன் ஜிஞ்சுனுக்கா சின்னக்கிளின்னு பல்டி அடிப்பான்.இப்பிடியே போயிருச்சு இந்த ஒன்பதாங் கிளாசு.
அடேய்! நீ இப்போ பத்தாங் கிளாசு!
பப்ளிக் எக்ஸாமுடா!படிக்கிறத தவிர வேறெதையும் நினைக்க கூடாது. ஒன்பதாங் கிளாசு பாசுன்னு தெரிஞ்சவுடனே ஆரம்பிச்சிடுவாங்க!
யாரை பாத்தாலும் கருத்து கந்தசாமிங்களா இருப்பாங்க!
இவிங்க தொல்லை தாங்காமயே அவிக முன்னாடி பேசறத கொறச்சுகிட்டோம்.
ஆனாலும் விடுவமோ!
அது வரைக்கும் பாக்காத படமான வணங்காமுடியை பத்து கிலோ மீட்டர் தாண்டி இருந்த தியேட்டர்ல பப்ளிக் எக்ஸாமுக்கு ஒரு நாள் முந்தி பாத்துகிட்டு வந்தோமே!
பத்தாவதுல ,நம்ம குரூப்புல எவனும் பெயில் இல்ல அப்பு!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள்
கருத்துரையிடுக