சிவாஜியின் மீசை
7 வயதில் இருந்து நடிகர்திலகத்தின் படங்களை பார்த்த நினைவுகள் இன்று வரை நன்றாகவே ஞாபகம் உள்ளது.எங்களூர் பெரியவர்களின் பெரிய மீசைகளை பார்க்கும் போது ஏன் இவ்வளவு பெரிதாய்? என்று யோசிப்பதுண்டு.சிலரிடம் மீசை பற்றி பேசினால் கட்டபொம்மன் மீசையை சிலாகிப்பார்கள்.பலர் சொல்லி சொல்லி அந்த மீசை மேல் பெரும்
ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது.
மீசை என்றாலே கட்டபொம்மன்தான் என்ற எண்ணமே பல காலங்களாக என் மனதில் நிலைத்து விட்டது.
இந்த எண்ணத்தில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது காவல்தெய்வம் சாமுண்டியின் போஸ்டரைப் பார்த்த பின்புதான்.சாமுண்டியின் மேல் நோக்கி முறுக்கிய மீசை பெரும் கம்பீரத்தை எனக்குள் எற்படுத்தியது.அது அச்சமூட்டுவதாகவும் இருந்ததும் ஒரு காரணமோ? அப்போதிருந்து சாமுண்டியின் மீசைபோல் யாராவது வைத்திருந்தால் அதை உற்று நோக்கியே பார்த்துக் கொண்டிருப்பேன்.முகம் பார்க்காமல் மீசை மட்டுமே கண் முன்னால் வந்து நிற்கும் .
அடர்கறுத்த மீசைகள் தான் பெரும் கம்பீரம் என்ற என் எண்ணத்தை உடைத்தது எங்க ஊர் ராஜா விஜயரகுநாத சேதுபதிதான்.எங்களூரிலேயே அடர்ந்த வெண் மீசை வைத்திருந்தோர் பல பேர்.அதெல்லாம் என் கண்ணுக்கு தெரிந்தது
சேதுபதியை பார்த்த பின்புதான் .விஜயரகுநாத சேதுபதியின் வெண்ணிற மீசையின் கம்பீரம் அளித்த தாக்கம் மிக அதிகம்.
இதே காலத்தில் நான் பார்த்த ஞான ஒளி, மீசைகளின் மேல் நான் கொண்ட ஆவலை அதிகப்படுத்தியது.
பெரும் அடர்த்தியான மீசைகள் கம்பீரம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்
நான் பார்த்த உத்தமபுத்திரனின் அழகு அரும்பு போன்ற மீசை வெகுவாக கவர்ந்தது.பின் பார்த்த பார்த்தால் பசி தீரும், லட்சுமி கல்யாணம், இல்லற ஜோதி, அந்தநாள், பெண்ணின் பெருமை, கர்ணன் மீசைகளும் ரசிக்க வைத்தன.
பின் பல நாள் கழித்து பார்த்த சௌத்ரீயின் மீசை அட்டகாசம் தான்.
எண்பதுகளில் வந்த ஹிட்லர் உமாநாத் (அது வரை ஹிட்டலரின் மீசை சிரிக்கத்தான் வைத்தது) மீசையும் கம்பீரத்தை காட்ட வைத்தது என்றால் அது நடிகர்திலகம் கொடுத்த கௌரவம்.
தடித்த மீசை. குச்சி மீசை, முறுக்கு மீசை, கொத்து மீசை என்று பல வகையான மீசைகளுக்கும் கௌரவம் கொடுத்தவர் நடிகர்திலகமே.மீசை மோகத்தை தகர்த்தது சிக்கல் சண்முகசுந்தரம் .
நெடுநாள் கழித்து வந்த தேவர்மகன் மீசை வாய் பிளக்க வைத்தது.அது பழைய நினைவுகளை கொண்டாடியது.
பெரும் மீசைகள் என்று உலகில் மனிதர்களை தேடினால் அந்த மீசைக்குள்ளிருக்கும் முகங்கள் பெரும்பாலானவை மீசைக்கும், முகத்திற்கும் பொருத்தம் இல்லாதது போல் தான் தோன்றுகிறது.
தொன்னூறுகளில் எனக்கு நண்பன் ஒருவன் கொடுத்த படம் எப்போது பார்த்தாலும் மெய்மறக்க செய்கிறது.அது மீசையில்லாத அய்யனின் படம் . அது மீசைமேல் நான் கொண்ட மோகத்தை அதிகமாக்கியது என்றே சொல்லலாம்.அய்யனின் முகவெட்டுதான் மீசைகளுக்கு அழகு.
கருத்துகள்
கருத்துரையிடுக