சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

சிவாஜி செய்த தான தர்மங்கள்

பொன் கொடுத்தார்
நிலம் கொடுத்தார்
யானை கொடுத்தார்
சிலை கொடுத்தார்
பணம் கொடுத்தார்.
சிவாஜியின் வள்ளல் குணம்.
மேற் கூறிய 5 வகை கொடைதன்மை செய்தவர் சிவாஜி.
பொன் கொடுக்க மனம் வேண்டும்.
அந்த மனம் சிவாஜிக்கு இருந்ததால் தான் கிருபானந்த வாரியார்
 'மென்மன செம்மல் சிவாஜி' என்று புகழாரம் செய்தார்.

கஜ  தானம். (யானை)
இதை செய்ய முடிந்தவர்களும் தகுதி படைத்தவர்களும் மன்னர்களே! ஆனால் இந்த 20 ஆம் நூற்றாண்டில் அதிக யானைகள் தானம் வழங்கிய ஒரு தனிப்பட்ட மனிதராய் ஒரே ஒரு நடிகராய் சிவாஜி அவர்கள் மட்டுமே இருக்கிறார். 
'கஜதானம் செய்த கலையுல சாம்ராட் சிவாஜி '
என்று சொல்லலாம்.

மற்றும் நில தானம்,
சிலை தானம் அல்லது கொடை,
பண தானம் 
எல்லாம் நிறைவாக கொடுத்த சிவாஜியின் கொடைகளை சொல்லத்தான் வேண்டும்.
இந்த பதிவில் சிவாஜியின் ஐவகை தானங்கள் என்னென்ன என்பது பற்றியும் அது பற்றிய செய்திகளையும் பார்க்கலாம்.

1.பொன்தானம்..
1965 ல் இந்தியா மீது போர் தொடுத்தது பாகிஸ்தான்.பாரத அரசாங்கம் இந்த போருக்காக பெரும் செலவுகள் செய்தது.மேலும் நிதித் தேவைகளுக்காக பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யலாம் என்றும் முடிவெடுத்தது.போர் காலங்களில் இது வழக்கம்தான்.இப்படி நிதி வசூலிப்பதன் மூலம் நிதி தேவையையும்  சமாளிக்கலாம்.மக்கள்  போர் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
பாரத அரசாங்கம் போர் நிதி வசூல் செய்வதை அறிந்த சிவாஜி ஒரு காரியம் செய்தார்.தன் மனைவி கமலா அம்மாவிடம் நாம் ஒரு விழாவுக்கு செல்ல போகிறோம் அதனால் உன்னால் முடிந்த நகைகளை அணிந்து கொள் என்று மட்டும் சொன்னர்.கமலா அம்மாவுக்கு எங்கு போகிறோம் எதற்கு போகிறோம் என்று தெரியவில்லை. அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. அவருடைய தலைமையில் கலைஞர்கள் சார்பில் ஒரு நிதி திரட்டும் விழா நடைபெற்றது .
அந்த நிதி திரட்டும் விழாவுக்கு தான் கமலா அம்மாவை அழைத்துச் சென்றார். கமலா அம்மா அப்போது 400 பவுன் நகைகளுக்கு மேல் அணிந்திருந்தார். அந்த நகைகளை அப்படியே கழற்றி பிரதமரிடம் ஒப்படைக்க சொன்னார். எந்த ஒரு மனைவியாக இருந்தாலும் இப்போது அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ?
ஆனால் கமலா அம்மா நடிகர் திலகம் சொன்னவுடன் அப்படியே கழற்றி கொடுத்துவிட்டார்.மேலும் ,
நடிகர் திலகத்தின் கலை சேவையை பாராட்டி பெங்களூர் ரசிகர்கள் 100 பவுன் தங்கப் பேனாவை பரிசளித்திருந்தார்கள் .அந்த தங்கப் பேனாவையும்  யுத்த நிதியாக லால்பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்துவிட்டார் நடிகர் திலகம் .
சிவாஜி அவர்கள் 500 பவுன் யுத்த நிதியாக  கொடுத்த இந்த தங்கத்தின் விலை இன்று என்ன? என்பதை இதைப் பார்ப்பவர்கள் கணக்கீடு செய்து கொள்ளலாம்.
இந்த பொன் தானம் பற்றிய பதிவில் மிகப்பெரிய அளவிலான இந்த தானத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் .
இது நடிகர் திலகத்தின் பொன்தானம் ..

2.கஜதானம் 
யானைகளை கொடையாக கொடுக்க அரசர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு. அதை இந்த காலத்தில் செய்தவர் 
சிவாஜியவர்கள். 
சிவாஜி செய்த கஜதானம்  என்ன என்று சொல்வதற்கு முன் இரண்டு முக்கியமான சம்பவங்களை பார்க்கலாம் ..

ஒரு சமயம் காஞ்சிப்பெரியவரை சந்தித்த சிவாஜியிடம் ,
காஞ்சி பெரியவர் ,
திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்காவல்  கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள் ,ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.காஞ்சிப் பெரியவரின் இந்தப் பாராட்டு எந்த நடிகருக்காவது கிடைத்திருக்கிறதா ? இதைவிட வேறு என்ன வேண்டும் சிவாஜி அவர்களுக்கு !

இன்னொரு சம்பவம் :

திருச்சி அருகே  திருவானைக்காவல் கோவிலில் உள்ள  யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது. 

அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம் திரு.சிவாஜியிடம் எங்கள் கோவில் வருமானத்தில் யானைக்குத் தீனி போடமுடியவில்லை. வேறு கோவிலுக்கு யானையை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்களாம். 

அதற்கு நடிகர் திலகம் நாளை வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கூறினாராம். ஒரு வாரம் வரை பதில் வராத காரணத்தால் கோவில் நிர்வாகம் மீண்டும் நடிகர் திலகத்தைக் காணச் சென்றபோது அவர் சொன்ன பதில் நிர்வாகத்திற்கு அதிர்ச்சிஅளித்தது. என்ன நடந்தது என்றால், கோவிலுக்கு அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும். அந்த விளை நிலத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில் கோவிலுக்கும் யானைக்கும் ,யானை பாகனுக்கும். விவசாயிக்கும் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும். யானை பாகனுக்கும், விவசாயிக்கும்,வீடு ஒன்று அமைத்து தருவதாகவும்  கூறி  அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் நடிகர் திலகம். 
இன்று வரை அது நடந்து கொண்டிருக்கிறது. அந்த யானை இறந்த பிறகு மீண்டும் ஒரு யானையை வாங்கி கொடுத்துள்ளார்  வாரிசு இளைய திலகம் பிரபு அவர்கள் . இதைச்  சொன்னவர் யானைப்பாகன்.கஜதானம் (யானைதானம்) செய்வது நாடு செழிப்புடன் எந்தவிதப் பஞ்சமும் இல்லாமல் மக்களை வாழச் செய்யும் தானம். இதுபோல் தஞ்சை திருச்சி சமயபுரம் திருவானைக்காவல் உள்ளிட்ட ஆறு கோவில்களுக்கு  ஆறு யானை வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிட தக்கது.தன்னை அழைத்து கௌரவம் செய்த அமெரிக்க அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அமெரிக்க மிருக காட்சி சாலைக்கும் ஒரு குட்டி யானை பரிசளித்துள்ளார் நடிகர் திலகம் .


3.நில தானம்..
1971ல் கயத்தாறு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை
( 47 சென்ட்) விலை  கொடுத்து வாங்கி அங்கு கட்டபொம்மன் சிலை நிறுவி விழாவும்  எடுத்தார்.பல வருடங்கள் கழித்து அந்த இடத்தை அரசாங்கத்திடமே ஒப்படைத்து விட்டார் .

சொந்த வீடு இல்லாமல் ஏழ்மை நிலைமையில் இருந்த பல நடிகர் நடிகைகளுக்கு கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமாக இருந்த இடத்தை அவர்கள் வீடு கட்டிக் கொள்ள இலவசமாக கொடுத்து உதவினார். அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு என்ன என்பதை இதை பார்ப்பவர்களே கணக்கீடு செய்து கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டம் கீழ ஊரணி பகுதியில் சிவாஜி காலனி என்று ஆதி திராவிடர்களுக்கு சொந்தமான ஒரு இடம் உள்ளது. இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் 1965 ஆம் ஆண்டு காமராஜரை சந்தித்து தங்களுக்கு வீடு வசதி இல்லை என்று சொல்ல, காமராஜர் சிவாஜியை பார்த்து அவர்களுக்கு ஏதாவது செய்யுமாறு சொல்ல, சிவாஜி அவர்கள் தேன்கூடு என்ற நாடகத்தில் நடித்து, அதில் வசூலான ரூபாயை வைத்து ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் மூலமாக 2.55 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தார் .
இங்கு குறிப்பிட்டவை சில மட்டுமே ...

4.சிலை கொடுத்த வள்ளல்.
தியாகிகளையும் ,
உத்தமர்களையும் மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை ஞாபகப்படுத்த சிலை வைப்பது வழக்கம். நடிகர் திலகம் யார் யாருக்கு எல்லாம் சிலை வைத்தார் ?
1964 பம்பாயில் வீரசிவாஜி சிலை,
1968 இல் சென்னையில் திருவள்ளுவர் சிலை,
1971 கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கட்டபொம்மனுக்கு சிலை ,
1972ல் ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை,
அம்பேத்கருக்கு சிலை, பாரதியாருக்கு சிலை,
குமரி மாவட்டத்தில் நேசமணிக்கு சிலை,இந்திரா காந்திக்கு சிலை ,
என்று இன்னும் நிறைய உள்ளன.
தமிழ்நாட்டில் காமராஜருக்கு அமைந்துள்ள சிலைகள் பெரும்பாலும் சிவாஜியின் பங்களிப்புகளால் உருவானவை. சிவாஜி அளவுக்கு சிலைகள் வைக்க யாருமே உதவி செய்ததில்லை. இப்படி சிலை வைத்ததால் என்னவோ தான் சிவாஜியின் சிலைக்கு சிக்கல் வந்ததோ? 
சிலை கொடுத்ததிலும் முதலிடம் ..
சிலை பிரச்சனையிலும் முதலிடம் ...

5.பண உதவிகள்...
இதில் நிறைய செய்திகள் வரும் என்பதால் சில முக்கியமான பண உதவிகளை மட்டுமே சொல்கிறேன்.

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா சீனா போரின் போது பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவை சந்தித்து 40 ஆயிரம் கொடுத்த முதல் இந்தியர் சிவாஜி .

சிவாஜி பிலிம்ஸ் ஹிந்தியில் தயாரித்த படம் ராக்கி. அந்த திரைப்படத்தின் இந்தியா முழுவதுமான ஒரு நாள் வசூலை யுத்த நிதியாக கொடுத்தார் சிவாஜி.

1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17, 18 தேதிகளில் நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன்  நாடகங்கள் நடத்தி அதில் வசூலான ஒரு லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல்வர் பக்தவச்சலத்திடம் கொடுத்தார் .

1958 ஆம் ஆண்டு முதல் 1961 வரை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடித்து ( 112 முறை) அதன் மூலம் வசூலான தொகையில்  நாடகச் செலவு உறுப்பினர்கள் சம்பளம் போக ரூபாய் 32 லட்சத்தை பல கல்லூரிகளுக்கும் நூலகங்களுக்கும் நன்கொடையாக கொடுத்தார் .கட்டபொம்மனின் எந்த நாடகத்திற்கும் சிவாஜி சம்பளம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் கட்டிட நிதிக்காக 40,000 அளித்தார் .

1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வியட்நாம் வீடு நாடகம் நடத்தி நிதியாக கொடுத்தார் .

1959 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நேருவிடம் மதிய  உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தார் .இந்த செயலின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் சிவாஜி.

1960இல் தமிழகம் பெரும் புயல் வெள்ளத்தால் தாக்கப்பட்ட பொழுது தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் மேற்பார்வையில்  சிவாஜியவர்கள் தனி மனிதனாக ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்களையும் 800 மூட்டை அரிசியையும் தானமாக கொடுத்தார் .நடிகர் திலகத்தின் இந்த செயலை பாராட்டி ஆனந்த விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டது அப்போது.

1957-ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்வி செலவிற்கு ரூபாய் 5 லட்சம் நிதி கொடுத்தார்.

1964 மகாராஷ்டிராவில் கொய்னா பூகம்ப நிதியாக அந்த மாநில முதல்வர் ஒய்பி சவான் அவர்களிடம் ஒரு லட்சம் கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.

1975 ஆம் வருடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்ட பொழுது நிதி உதவியாக ஒரு லட்சம் கொடுத்தார்  .

பீகார் வெள்ள  நிவாரண நிதியாக ஒரு இலட்சத்தை  1975 ஆம் ஆண்டு  பெருந்தலைவர் காமராஜரிடம் கொடுத்தார். 

1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம்  லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்தார் .

1972 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்காசிம் அவர்களிடம் அந்த மாநில தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி நிதிக்காக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார் .

1961 பாரத் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் டிபி ஹாஸ்பிடல் கட்டுவதற்கு ஒரு லட்சம் கொடுத்தார்.

1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரிடம் ஒரு லட்சம் கொடுத்தார்.


பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம் அளித்தார்.

மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.

தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.

பெங்களூர் நாடக அரங்கம் கட்ட கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

பெங்களூர் மக்கள் நலனுக்காக
 ரூ 15 லட்சம் நிதியினை வழங்கினார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.

வேலூர் பென்லென்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.

1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி
 ரூ 12 ஆயிரம்  வசூலித்துக் கொடுத்தார்

1977ல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபொழுது கொடி நாளுக்காக 1.2 கோடியை வசூலித்து கொடுத்தார்.
சிவாஜி  அவர்கள் செய்த பண நன்கொடைகள் நிறைய இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அந்தக் காலத்தில் செய்யப்பட்ட இந்த நன்கொடைகளின் மதிப்பே இன்றைய  மதிப்பீட்டின்படி எவ்வளவு கோடிகளோ? மேலே குறிப்பிட்டவை எல்லாம் நாட்டுக்கும் தியாகிகளுக்கும் தலைவர்களுக்கும் செய்ததை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. தன்னுடன்  பழகிய நண்பர்களுக்கு ,கட்சியில் இருந்தவர்களுக்கு, காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் நடிகைகளுக்கு, ரசிகர்களுக்கு என்று நிறைய செய்திருக்கிறார் சிவாஜி.சிவாஜி கொடுத்ததை சொல்ல விரும்ப மாட்டார், யாருக்கும் தெரியாமல் தான் கொடுப்பார் என்று அவர் கொள்கை வைத்திருந்ததாலேயே நிறைய பண உதவிகள் நிதி உதவிகள் நன்கொடைகள் என்று எந்த விஷயமும் வெளியில் தெரியவில்லை.ஒரு மலைக்க வைக்கும் செய்தி :
கடைசி காலத்தில் நடிகர் திலகம் தன் சுயசரிதையில் ,தான் நடிக்க வந்த எட்டு வருடங்களில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேலான நிதி உதவி அளித்து இருப்பதாக கூறியிருந்தார். 
மேலே ஐவகை தானங்கள் என்று சொல்லப்பட்டிருந்தாலும் சொல்லாத தானங்கள் :
கோவில் கட்டுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் கொடுக்கப்பட்ட  நிதிகள், பள்ளி கட்டிடங்கள் கட்ட அதன் வளர்ச்சிக்கும், மருத்துவமனைகள் கட்ட அதன் வளர்ச்சிக்கும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு, என்று எத்தனையோ நிதி உதவிகளை செய்திருக்கிறார் நடிகர் திலகம்.
இவற்றிற்கும் சில உதாரணங்கள் :
நாகை வேளாங்கண்ணி கோயில் மணி சிவாஜி அவர்கள் கொடுத்தது தான். 
பம்பாய் பாரதி கலா மன்ற நூல் நிலைய வளர்ச்சி கட்டட நிதிக்காக நாடகம் மூலம் 9 லட்சம் கொடுத்திருக்கிறார். 
வேலூர் 'வென்லென்ட்'
ஆஸ்பத்திரி கட்டிடம் கட்ட வியட்நாம் வீடு நாடகம் நடத்தி இரண்டு லட்சம் கொடுத்தார்.
உலகத் தமிழ் மாநாட்டுக்காக கோவையில் நாடகம் நடத்தி ரூபாய் 5 லட்சம் கொடுத்தார். 
வங்காள கல்லூரி நிதிக்காக ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கொடுத்தார். மேலும் ஆந்திரா வெள்ள நிவாரண நிதி சென்னை தீ விபத்துக்கான நிதி ,பீகார் வறட்சி நிவாரண நிதி ,டெல்லி வெள்ள நிவாரண நிதி என்று இந்தப் பட்டியலில் நிறைய உள்ளது. மேலும் கடல் தாண்டியும் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அங்குள்ள தமிழர்கள் வாழும் பகுதிக்கு நன்கொடைகள் கொடுத்துள்ளார் ...
இந்த செய்திகளை எல்லாம் பார்க்கும் போது இவையெல்லாம் ஒரு தனிப்பட்ட நபரின் நன்கொடைகளா? என்று வியக்கத்தான் வைக்கின்றது .

செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற