ஒரு கணேசனை தானே படைத்தோம்
இந்த மனிதன் என்ன முந்நூறாய் நிற்கின்றானே!
இது பிரம்மனின் ஆச்சரியம்.
கடவுள் நிஜமா என்று கேட்டேன் போட்டோ கடைக்காரனிடம் ..
ஆமாம் என்றான் கடைக்காரன்
அப்படியானால் நிஜ சிவனை கொடு என்றேன்
அவன் சற்றும் அசரவில்லை
திருவிளையாடல் சிவாஜியை
கொடுத்தான்.
நாட்டுக்காக செக்கிழுத்தார் சிதம்பரனார்
சிதம்பரனாருக்காக செக்கிழுத்தார் சிவாஜியார்
சிதம்பரனாரை உதாரணம் காட்ட சிவாஜியை காட்டினார் ஆசிரியார்
செக்கிழுத்த செம்மல் யார் என்ற கேள்விக்கு சிவாஜி என்றார் மாணவனார்
இது சரியா ?தவறா?
இரண்டும்தானே!
ஒரு சூரியன்
இரு துருவம்
மும் மூர்த்திகள்
நான்கு வேதம்
ஐந்து பூதங்கள்
ஆறு சுவைகள்
ஏழு சுரங்கள்
எட்டு வகை சித்திகள்
நவரசங்கள்
இந்த வரிசையில்
சிவாஜி யுகமும்..
நகலெடுக்கும் இயந்திரங்கள் கூட
ஒன்று போல் தான் நகலெடுக்கும்
உன்னை நகலெடுத்தால்
ஓராயிரமாய் வரும்.
பழனிக்குச் சென்றால் பஞ்சாமிர்தம் வாங்குவது கூட
இரண்டாம் பட்சம் தானாம் ஒரு ரசிகருக்கு
சித்தநாதன் கடையில் சிவாஜி படத்தை பார்ப்பதில் தான்
முதல் நாட்டமாம்.
விபூதி வாசனையை விட
சிவாஜி படம் தான் தூக்கலாக இருக்குமாம் ..
தமிழ்நாட்டின் ஒவ்வொரு திரையரங்கமும் ஒவ்வொரு வரலாற்றை கொண்டிருக்கும் .
அதில்
சிவாஜி படங்களை சொல்லாத எந்த திரையரங்கமும் வரலாறு கொண்டதாக இல்லை ..
குளிர், பனி, கோடை, வசந்தம் என்று
ஒரே மாதிரியாய் தான் வருகின்றன காலங்கள்
ஆனால்..
எப்போது பார்த்தாலும்
புதிது புதிதாய் தெரிவது தான்
அய்யன் சிவாஜியின் நடிப்பெனும் பாடங்கள்...
சிவாஜி என்ற யானைக்கு சோளப்பொரி போட்டது தமிழ் சினிமா
அதைப் பார்த்தே மிரண்டு போனது உலக சினிமா ...
ஒவ்வொரு நடிகனையும் கொண்டாட இருக்கத்தான் செய்கிறார்கள் ரசிகர்கள்
நடிப்பை மட்டும் சொல்லும்போது
உன்னைச் சார்ந்தே செல்கிறார்கள் ...
சிம்ம குரல் மனிதனே!
நீ பேசியது என்ன கொஞ்சமா?
தமிழுக்கு உன் நாவுதானே மஞ்சம்
எதுவும் வைக்கவில்லையே மிச்சம்
புதிதாக யோசிக்க தமிழ் கூட பஞ்சம்!
சிவாஜியின் வாய் பேசத்தான் வசனம் எழுத முடிந்தது!
உடல் மொழி பேசியதை எழுத யாரால் முடிந்தது?
கவரிமானில் அந்த ஒரு காட்சி ..
சோரம் போகும் மனைவி
சினந்து பார்க்கும் கணவன்
எந்த ஹீரோ துணிந்து நடிப்பான்?
இங்கே வசனங்கள் வைத்தால் அசிங்கமே
அங்கே
காலால் உதைத்தே கலவரப்படுத்திய நீ சிங்கமே..
இதில் எங்கே வசனங்கள்-உன்
உடல்மொழிதானே சிகரங்கள்..
இத்தனை பக்க வசனங்களா?
என்றால் அவர்கள் நடிக்க வந்தவர்கள்
இத்தனை பக்க வசனம்தானா?
என்று கேட்கும் நீ நடிக்கவே பிறந்தவன்..
உன்னோடு முடிந்து போயிற்று
நடிப்பெனும் சகாப்தம்
அந்த சகாப்தம் தான் சினிமாவுக்கு
கடைசிவரை பிராப்தம்...
கறுப்பு வெள்ளை திரைப்படங்கள்..
கறுப்பு வெள்ளையில் உள்ளது இரண்டு நிறம் மட்டும்!
நீ நடித்த காட்சிகள் மட்டும் எப்படி அத்தனை வண்ணம்?
திருவிளையாடல் புராணப் பாட்டு:
'நான் எழுதிய தமிழ் பாட்டு குற்றமா' ?
சிவன் பாட்டு கூட குற்றம் தான் ..
அந்தக் குற்றப்பாட்டு...
சிவாஜியின் குரல் சொன்னதால்
ஓர் உன்னத பாட்டாகியது
நடிகர் திலகம்
செவாலியே
பத்மஸ்ரீ
பத்மபூஷன்
தாதா சாகேப் பால்கே சிங்கத்தமிழன்
சிம்மக்குரலோன்
என்று எத்தனையோ இருந்தாலும்
முதலாக தெரிந்தது சிவாஜி தான்
என்
பேச்சில்
மூச்சில்
நாவில்
உயிரில்
உணர்வில்
கலந்த
பஞ்சபூத ,பிரபஞ்ச கலவைகளாக இருக்கும்சிவாஜிக்கு...
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக