ஒரு டைரக்டர் கதை சொல்றாரு ஹீரோகிட்ட..
ஓபன் பண்ணுனா கொஞ்சம் சீன் பரபரப்பா இருக்கும். என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஜனங்களுக்கு புரிய கூடாது. கொலை கொள்ளை தீவிரவாதம்னு சீனு கொஞ்சம் ஓடும்.
அந்த டயத்துலதான் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார். கொஞ்சம் லைட்டான வெளிச்சத்தில் கொஞ்சம் டார்க்கா ஹீரோ துப்பாக்கிய புடிச்சுட்டு வர்றார். அப்போ அங்க நிறைய அடி ஆளுங்க. ஹீரோ என்ட்ரிய ஸ்லோ மோஷன்ல வச்சுக்கலாம். ட்ரிக்கரை அழுத்தறாரு ஹீரோ. புல்லட் பாஞ்சு வருது. சடார்ன்னு ஒரு அடியாளு தலை சிதறி விழுகிறான். அப்ப ஆரம்பிக்குது ஹீரோவோட வேட்டை. அந்த சின்ன சைஸ் துப்பாக்கில இருந்து தோட்டா பாஞ்சி பாஞ்சி வருது .அடியாட்கள் அங்க போய் இங்க போய் விழறாங்க .ஸ்கிரீன் பூரா ரத்தம் தெளிக்குது.
ஹீரோவுக்கு ஒண்ணும் ஆகாது. எல்லா அடியாளுகளும் விழுந்த பின்னால துப்பாக்கில இருந்து வர்ற புகைய வாயால ஊதுவாரு ஹீரோ !இதுதான் சார் ஹீரோ என்ட்ரி. படத்தில் இது மாதிரி ரொம்ப சீனு இருக்கு சார்.
இது போன்ற காட்சி அமைப்புகள் ஒரு படத்திலோ இரண்டு படத்திலோ அல்ல.பெரும்பான்மையான ஹீரோயிச படங்கள் அனைத்தும் இப்படித்தான். அந்த துப்பாக்கி சத்தம் பார்க்கிற மக்களுக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு
டைரக்டர்கள் நினைச்சுக்கிறாங்களோ என்னவோ பெரும்பாலான படங்கள் இப்படித்தான் வருது இப்போ. இப்ப வர்ற படத்துல ரொம்ப பெருசு பெருசா துப்பாக்கி எல்லாம் எடுத்து சுட்டு தள்ளறாங்க.
படம் பார்த்துட்டு வெளியே வந்தாலும் அந்த துப்பாக்கி சத்தம் தான் மண்டைய கொடையுது.
தேவையில்லாத ஆர்ப்பாட்டங்களும் சம்பந்தம் இல்லாத துப்பாக்கி காட்சிகளும் எரிச்சலை தான் தருகின்றன.
சிவாஜி கணேசனும் துப்பாக்கி தூக்கினார் தன் படங்களில்.
அந்த துப்பாக்கி அவர் படங்களில் எப்படி எல்லாம் கையாளப்பட்டது என்பதை பார்க்க வேண்டும்.
இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக மிஷின் கன்னையே 1969 ஆம் ஆண்டு வெளிவந்த சிவந்தமண் திரைப்படத்தில் கையாண்டிருப்பார் நடிகர் திலகம். அந்தக் காட்சியை பாருங்கள் .எவ்வளவு டச்சிங்காக இருக்கும் .
அந்த காட்சி அந்த திரைப்படத்திற்கு எவ்வளவு பொருத்தமாக இருந்தது.அவர் துப்பாக்கி வைத்திருக்கும் ஸ்டைலை பார்க்க வேண்டுமே !மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய காட்சி அது.
அதாவது ஆக்ஷன்படம்.பாசமலர் குடும்ப படமல்லவா? அதிலும் கூட அந்த துப்பாக்கி காட்சியை பார்த்து மிரண்டு விட்டோமே? வசதியானவர்கள் ,
பணக்காரரர்கள் ,தொழில் அதிபர்கள் துப்பாக்கி வைத்திருப்பார்கள். அரசிடம் லைசென்ஸ் வாங்கி .பாதுகாப்புக்காக.
நிஜத்திலும் கூட சிவாஜியவர்கள் துப்பாக்கி லைசென்சுடன் வைத்திருந்தார்.
இது நிஜம் தானே!
இது ஏற்றுக் கொள்ளும் உண்மை என்பதால் தான் தொழிலதிபர் பாசமலர் ராஜசேகருக்கும் கதையில் பொருத்தியிருப்பார்கள்.
பாசமலரில் துப்பாக்கி வெடிக்காது.ஆனால் சிவாஜி நடிப்பில் அதை காட்டுவார்.கண்ணில் வரும் அந்த ஒரு துளி பாசக் கண்ணீரை துப்பாக்கி முனையால் துடைத்தெறிவார்.எத்தனை துப்பாக்கி வெடிக்கும் காட்சிகள் இருந்தாலும் இந்த காட்சிக்கு ஈடாகுமா?
தங்கப்பதக்கம் எஸ் பி சௌத்ரிக்கு துப்பாக்கி இல்லா விட்டால் எப்படி?
மாடியில் நின்று கொண்டு ரவை வைக்கும் இடத்தை பார்வையால் அளந்து துப்பாக்கியை லோட் செய்து இடுப்புறையில் வைக்கும் அந்த ஸ்டைலை பாருங்களய்யா? படத்தின் இறுதி கட்ட காட்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காட்சி ? அதில் கூட அவசரப்பட்டு துப்பாக்கி எடுக்க மாட்டார்
எஸ்பி சௌத்ரி .முதலில் எச்சரிப்பார்.ஜெகன் கேட்க மாட்டார்.இனியும் விட்டால் ஆகாது என்று தூக்குவார் துப்பாக்கியை.
அப்பவும் ஒரு ஷாட் அடிப்பார்.ஆகாயத்தை பார்த்து.அவசரப்பட்டு ஜெகன் சௌத்ரியை சுட்டுவிட, ரத்தம் தெறிக்க கட்டுப்பாடான கோபத்துடன் அப்போதுதான் சௌத்ரி சுடுவார்.சும்மா சரமாரியாக எல்லாம் சுட மாட்டார்.அது தான் அதிகாரியின் பயிற்சி.அதை கச்சிதமாக செய்திருப்பார் நடிகர்திலகம்.
துப்பாக்கியை எப்படி கையாள வேண்டும் என்பதை சிவாஜி படங்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் இயக்குனர்கள்.
தீபம் படத்தில் தாதா போன்ற கேரக்டர்தான் சிவாஜிக்கு.இந்த தாதா படத்திலும் கூட இரண்டே இரண்டு காட்சிகளில் தான் துப்பாக்கி எடுத்திருப்பார். கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மேஜர், சிவாஜியை சுற்றி வளைக்கும் போலீஸிடம் இருந்து தப்பிக்கும் போது,போலீஸ் சுடும் போது பதிலுக்கு சிவாஜி இரண்டு ஷாட் அடிப்பார் .இடது கையால் துப்பாக்கியை கையாளுவார். அது ஒரு விதமான ஸ்டைல்.அடுத்த துப்பாக்கி எடுக்கும் காட்சி, விஜயகுமாரை சுட..
துப்பாக்கியை மேஜை அறையில் இருந்து எடுப்பதும்,மாடிப்படிகளில் துப்பாக்கியை வைத்து இறங்குவது போலவும், விஜயகுமார் வீட்டில் திரைச்சீலைகளை விலக்கி வருவதும் பின் சுட போகும் போது சடாரென்று துப்பாக்கியை விலக்குவார் பாருங்கள் .எப்படி அட்டகாசமாக இருக்கும் அந்த ஒரு ஷாட் .
அசத்தலாக இருக்கும்.
ஷுட் செய்து எகிற வைப்பதை விட அந்த காட்சி எகிற வைக்கும்.காட்சிக்கு தேவையான அளவே அந்த துப்பாக்கி காட்சிகள் இருக்கும்.
அந்தநாள் .இதில் துப்பாக்கி தான் படத்தை ஆரம்பித்து வைக்கும்.துப்பாக்கியும் ஒரு கேரக்டர்.துப்பாக்கியும் நடித்த படம் என்று சொல்லலாம்.கதைக்கு பொருத்தமான துப்பாக்கி காட்சிகள் மட்டுமே படத்தில் இருக்கும்.
படித்தால் மட்டும் போதுமா ?
நீண்ட குழல் துப்பாக்கியை வைத்து காட்டில் சுட்டு தள்ளுவார்.
படத்தில் அவர் வேட்டைக்காரராக காண்பிக்கப்படுவதால் ,
கிளைமேக்ஸ் காட்சியில் அவர் கொள்ளும் ஆவேசத்திற்கு அது ஒரு சரியான பொருத்தமான காட்சியாக அமைந்திருக்கும்.
அட்டகாசமான துப்பாக்கி வெடிக்கும் காட்சிகளில் பழைய படங்களில் தெய்வமகன் ஓர் அசத்தல் என்றே சொல்லலாம்.க்ளைமாக்ஸ் காட்சி துப்பாக்கி குண்டுகளால் அதிறும்.
இரண்டு துப்பாக்கிகளை இரண்டு கோட் பாக்கெட்டுகளில் செருகும் ஸ்டைலே அட்டகாசமாக இருக்கும். ஒரு வில்லன் கோஷ்டிக்கும், தனியாளாக சிவாஜிக்கும் நடைபெறும் அந்த க்ளைமாக்ஸ் துப்பாக்கிச் சண்டை எல்லாம்
வேற லெவலுக்கும் மேலே..
சிவாஜியின் அந்த உருவமும், உடைகளும், அந்த துப்பாக்கி தூக்கல்,
தூக்கலோ தூக்கல் தான்.
மிரட்டியெடுப்பார் மனிதர்.
சிவாஜியின் ஸ்டைல்களை பார்க்க வேண்டுமே அந்த முழு சண்டைக் காட்சியிலும்..
தங்கச்சுரங்கம்.இதில் அப்பா +வில்லன் ரோலில் வரும் OAK தேவர் க்ளைமாக்சில் ,
தான் தப்பிக்க மகனையே சுடும் காட்சி.அவரும் கூட ஒவ்வொரு புல்லட்டாய் தான் சிவாஜியின் கால், கை என்று சுடுவார்.தேவையில்லாமல் புல்லட்டை வீணாக்க மாட்டார்.
நவராத்திரி படத்திலும் ஒன்பது சிவாஜிகளில் இரண்டு சிவாஜிகள் துப்பாக்கி எடுத்து இருப்பார்கள் .ஒருவர் போலீஸ் ,ஒருவர் முரடன். இரண்டு பேரும் கையாள்வது நீண்ட குழல் துப்பாக்கி தான். ஒருவர் ஆட்களை சுடுவார்.ஒருவர் புலியை சுடுவார் .இந்த துப்பாக்கி தூக்கும் காட்சிகளில் எந்தவித உறுத்தலும் நமக்கு தெரியாது. மாறாக ரசிக்கத்தான் வைத்தன.
ரத்த திலகம் படத்தில் நாட்டுக்காக துப்பாக்கி எடுப்பார்.
திருடன் படத்தில் துப்பாக்கி வெடிப்பதை பல ஸ்டைல்களாக செய்து காட்டுவார்.
இரு துருவம் படத்திற்கு கண்டிப்பாக துப்பாக்கி தேவை. கதைக்குத் தேவையான இடங்களில் பொருத்தமாக காட்சிகளை அமைத்து இருப்பார்கள் .
ஞான ஒளி ஆண்டனி சொல்லவே வேண்டாம். பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் மேஜரின் துப்பாக்கியில் இருந்து ரவைகளை உருவுவதும் அதை பத்திரப்படுத்தும் காட்சிகள் எல்லாம் மிரட்டலாக இருக்கும்.நம்பும்படியான காட்சி அமைப்புகள் இருக்கும்.
அட! வசந்த மாளிகை காதல் படத்தில் கூட துப்பாக்கி எடுப்பாரே ! அந்த காட்சிக்கு மேலாகவா துப்பாக்கியை வெடிக்க வைக்க வேண்டும் .
அப்படியெல்லாம் டைரக்டர் செய்திருக்க மாட்டார் அதில்.
பதிபக்தி,ராஜா,வைரநெஞ்சம், என்மகன்,தர்மம் எங்கே, அண்ணன் ஒரு கோவில்,நாம் பிறந்த மண்,புண்ணிய பூமி, என்னைப்போல் ஒருவன், ஜெனரல் சக்கரவர்த்தி, தியாகம் என்று இன்னும் ஏகப்பட்ட நடிகர் திலகத்தின் படங்களில் துப்பாக்கி வரும் ..
சிவாஜியின் இத்தனை படங்களிலா துப்பாக்கி வருகின்றது? என்ற ஒரு ஆச்சரியமும் வருகின்றது.
எதனால் என்றால் நடிகர் திலகத்தின் படங்களில் அனாவசியமான துப்பாக்கிச் சத்தங்கள் இருக்காது. கதையின் தேவைக்கு ஏற்ப காட்சிகளை அமைத்திருப்பார்கள்.
சந்திப்பு படத்திலும் தாதா தான். ஆனால் துப்பாக்கி வைத்துக் கொள்ளாத தாதா. அவருக்கு அவருடைய வார்த்தைகளே தோட்டா.
வம்ச விளக்கு படத்தில் வெறும் பொம்மை துப்பாக்கி வைத்தே நம்பியாரை கலாய்க்கும் காட்சியும் நல்ல சுவாராஸ்யம் தான்.
இப்போதைய ஹீரோயிச படங்களை போல் அப்போது வெளியான திருப்பம் படத்திலும் மிஷன் கன் காட்சி இருக்கும்.இதை வேண்டுமானால் சற்று உறுத்துவதாக கொள்ளலாம்.
கடைசியாக பூப்பறிக்க வருகிறோம் படத்திலும் சிவாஜியின் அலட்டல் இல்லாத துப்பாக்கி ஸ்டைல் இருக்கும்.
இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். சிவாஜியும் துப்பாக்கியும் சம்பந்தப்பட்ட காட்சிகளை.
இந்தப் பதிவை எழுதியதன் தாக்கமே இப்போது வரும் படங்களின் துப்பாக்கிச் சண்டைகளும்,அந்த நினைவுகளில் எழுந்த சிவந்தமண் ஹெலிகாப்டர், மெஷின் கன், சிவாஜி பிடித்திருந்த அந்த மிஷன் கன் ஸ்டைல்கள்தான். எல்லோருக்கும் முன்னோடியாக மிஷின் கன்னை தூக்கிய பெருமை சிவந்தமண் பாரத்துக்கே சேரும். தேவையில்லாமல் மிஷின்கன்னை புகுத்தி இருக்க மாட்டார் இயக்குனர். ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக பறந்து வந்து சிவாஜியின் தலையை உரசுவது போல் வந்து செல்லும் காட்சி படப்பிடிப்பின் போதே நிஜத்திலேயே ஒரு அபாயகரமான காட்சியாக படம் பிடிக்கப்பட்ட காட்சியாகும்.
ஹெலிகாப்டரில் இருந்து புரட்சி செய்யும் மக்களை ராணுவ அதிகாரி சுட்டு தள்ளுவார். அதிகாரி சுடும் போது தவறி விழும் மிஷின் கன்னை எடுப்பார்.யோசிப்பார்.குண்டு போடும் ஹெலிகாப்டரில் இருந்து ,புரட்சி வீரர்களை காப்பதற்காக பின் ட்ரிக்கரை அழுத்துவார் .படம் பார்க்கும் போது நமக்கு கூட துப்பாக்கியை வைத்து சுட வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும்
அந்த காட்சி.
அதைத்தான் இயக்குனர் செய்திருந்தார். அந்தக் காட்சியும் அதிரடியாகவும் அட்டகாசமாகவும் இருந்தது.
தேவையில்லாமல் எந்த படத்திலும் சிவாஜி துப்பாக்கியை பயன்படுத்த மாட்டார் .ஒரு துப்பாக்கியை எப்படி எடுக்க வேண்டும், அதை எப்படி கையாள வேண்டும் ,அதை எப்படி ஸ்டைலாக பிடிப்பது என்று சிவாஜி படங்களை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
செந்தில் வேல் சிவராஜ் ..
கருத்துகள்
கருத்துரையிடுக