ஜூலை 21..
அந்தநாள் ...
ஆண்டாண்டு தோறும்
வெஞ்சினமாய்
நெஞ்சிலோர் அக்கினியாய்
எரியுதய்யா!
இந்தநாள்
நீ
படைத்ததெல்லாம்
வரிசையாய்
வந்து போகுதய்யா!
நீ
கொடுத்தது நடிப்பா
இல்லை நெருப்பா?
பழஞ்சோறு தின்று களித்த மனிதருக்கு
அறுஞ்சுவையில் விருந்தளித்த
கலை காமதேனுவே!
பூமியை தோண்டினால் தான்
பொக்கிஷங்கள்
ஆனால்
எமக்கோ
உம் நினைவுகளே
பொக்கிஷங்கள்!
நீ
ஊதித்தள்ளிய நடிப்புச் சூறாவளியில்
ஓடி மறைந்தது எத்தனை அபத்தங்கள்
கர்ஜனையில் மிரண்டது
எத்தனை நெஞ்சங்கள்
உன்
தொண்டைக்கு மட்டும் ஆண்டவன்
ராஜபேரிகை வைத்து படைத்தானா?
உன்
குரலோசைக்கு பின்தானே
வசனங்கள் எல்லாம் தங்கமுலாம் பூசியது
உனக்கெழுத பேனாக்கள்
வார்த்தைப் பஞ்சங்களால் தடுமாறியது
அஷ்டமா சித்திகளில்
பிரகாமியமும் ஒன்று..
உன் நடிப்பால்
அதை நாங்களும் கண்டோமே!
முன்னால் சொல்லப்பட்ட
நடிப்பிலக்கணம்
உன் வருகைக்கு பின் தானே
புதுப்பிக்கப்பட்டது!
அவ்விலக்கணம் உன்னோடு
இனி எதுவுமில்லை
என்று முற்றுமாகி விட்டதே!
விக்கிரமாதித்தனுக்கோ இரண்டாயிரம் ஆண்டுகள்
உனக்கு நாற்பத்தியேழு
இருந்தாலும்
அவன் சிம்மாசனம் போல்
உன் சிம்மாசனத்திற்கும் வேறொருவர் இல்லை
முன் நின்றால்,
வாலிக்கு முன் எவருமே பாதி
உன் முன்னே எதுவுமில்லை மீதி
கண்ணன், அர்ஜுனன்,அரவான்
மூவர் மட்டுமே முப்பத்தியிரண்டு
லட்சணங்கள் கொண்டவர்களாம்...
இது பாரதக் காவியத்தில்...
நடிப்புக்காவியத்தில் அறுபத்து நான்கு வகை பாவனைகளையும் காட்டியவன்
நீ ஒருவன் மட்டுமே!
படமென்று நடித்ததை காட்டியவரெல்லாம்
உன்
நடிப்பை பார்த்த பின்தானே அதை பாடமாக்கி கொண்டனர்
பெரு வெடிப்பால்
அண்டம் பிளந்து
பூமி தோன்றியது
பிரபஞ்ச வரலாறு!
உன்
அங்கங்களின் வெடிப்பில்
தோன்றியதுதானே
நடிப்புக்கலையின் வரலாறு!!
நிலை தாண்டி
நிலம் தாண்டி
கடல் தாண்டி
தமிழன்னைக்கு மகுடம்
சூட்டியவன் நீயன்றோ!
உன்
வேடங்கள் தானே
தமிழனின் நாடிகளில்
ரத்த நெருப்பை பாய்ச்சியது!
உன்
நடிப்பு தானே
தளர்ந்த நரம்புகளிலும்
வாலிபத்தை ஏற்றி வைத்தது!
ஏளனமாய் பார்க்கப்பட்ட
திரைக்கலைகள் எல்லாம்
உன்
நடிப்புக்கு பின்தானே
தங்கமாலையாய் மின்னியது!
கால்கடுக்க காத்திருந்தாலும்
சிலசமயம் தெய்வதரிசனம்
கூட கிடைப்பதில்லை
உன் தரிசனத்திற்கோ
எந்த ரசிகனும் வாடியதில்லை
கோலார் தங்கசுரங்கமும்
கோகினூர் வைரங்களும்
உன்
அரைநூற்றாண்டு புதையலுக்கு முன்
மங்கிப் போவதுவே!
மண்ணில் நீ தோன்றாது இருந்திருப்பின்
கலையெல்லாம் காடாய் போயிருக்கும்..
காலனது கணக்கில் ஒரு தவறு இருந்திருக்குமாயின்
அது -உன் வாழ்வில்
அவன் செய்ததானிருக்கும்
அதனால் தான்
"அந்தநாள்"
ஆண்டாண்டு தோறும்
எம்முள்ளே வெஞ்சினமாய் .....
🙏🙏🙏
செந்தில்வேல் சிவராஜ்.....
கருத்துகள்
கருத்துரையிடுக