தமிழ் சினிமாவின் பொற்காலம்...
1000 கோடி என்ன? 5000கோடி என்ன ?எத்தனையோ கோடிகளில் எந்த சரித்திர படமானாலும் இனி எடுக்கலாம்.ஆனால் 100 வருடங்கள் ஆனாலும் ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்தான் முதலில் பேசப்படுவான்.
அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை
ஆன்ட்ராட்ய்டு காலத்தில் என்ன? அடுத்த நூற்றாண்டில் தேடினாலும் பாசமலர் தான்
முதலில் வரும்.
உனக்கேன் அக்கறை? என்று ஆயிரம் பேனா முனைகள் சமுக சாடல்களை எழுதியிருந்தாலும் ,இனி எழுதினாலும் அதைப் பேசிய குணசேகரன் கதாபாத்திரம் தான் மின்னலாய் தெரியும்.
ஒரு படத்தின் 90 வேடங்களாயினும், அதை ஒருவரே ஏற்று செய்தாலும், ஒன்பது வேட நவராத்திரி நடிப்புக்கு ஈடு செய்ய எவராலும் முடியாது.
அடுத்த நூற்றாண்டு அதி நவீன கணிணியும் , தெய்வமகனை ஆராய்ச்சி செய்தால் ,
அது கூட " ERROR " என்று தான் காட்டும்.
இப்போது பிறக்கும் ஒரு குழந்தை அதன் 100 வது வயதில் தேசபக்தி காவியங்களை
சொல்ல விரும்பினால் அப்போதும் நடிகர்திலகத்தின் படங்களைத்தான் அது
சொல்ல வேண்டியது வரும்.
எந்த வரிசையில் படங்கள் வந்தாலும் ஓர் வரிசையில் வந்த நடிகர்திலகத்தின் "பா "
வரிசை படங்கள் சொல்லிய பண்பு பண்பாடு பாசம் பந்தம் பரிவு பக்தி பாவம் பரோபகாரம் படிப்பினை பகுத்தறிவை எளிமையாக ,அழகாக எடுத்துச் சொல்ல எந்த டிஜிட்டலும் உத்திகளும் உதவாது.
மனிதக்குரலில் இடிமுழக்கம் என்று திரைக்கலையை ஆய்வு செய்தால் சிவாஜியின் படங்களே வரிசை கட்டி வரும்.
சிங்கமது பேசும் சக்தி பெற்று வீர கர்ஜனை செய்யும் போது அது கர்ணனின் குரலை கேட்டால் சப்தநாடியும் ஒடுங்கும்.
நூற்றாண்டு நிகழ்வுகளின் வளர்ச்சி நம்மை நிலாவுக்கு புலம் பெயர வைத்தாலும் "அந்தநாள் ஞாபகம் "
என்பதை தமிழன் நினைக்கும் போது உயர்ந்த மனிதனின் பாடலலைத்தான் நெஞ்சம் நினைக்கும்.
இன்னும் ஆயிரம் வருடங்கள் கழிந்து ,
ராஜ ராஜ சோழனின் 2000 வது பிறந்த நாள் கொண்டாடப்படும் போதும் நடிகர்திலகத்தின் திருமுகம் தான் நினைவுக்கு வரும்.
இந்தியாவின் 500 வது சுதந்திர தினவிழாவானாலும், 1000 வது சுதந்திர தின விழாவானாலும் தொலைக்காட்சிகள் தேசபக்தி பாடலாக "இந்திய நாடு என் வீடு" என்ற பாடலை தான் ஒளிபரப்பும்.
காலங்கள் கரைக்கும் காட்டு இரைச்சல் இசைகளினூடே, பட்டிக்காட்டு ராகங்களில் "கேட்டுக்கோடி உருமிமேளம் "பாடலுக்கு என்றும் தனி மதிப்பிருக்கும் .
வெஸ்டர்ன் காதலும்,வெட்கம் மறந்த காதலும் சமுகத்தின் கலாச்சாரமாய் மாறும் , இன்னும் சில காலங்களில்.
அப்போதும் வசந்த மாளிகையை பார்ப்பவன் வியப்பான்.
ரசிகனை உருவாக்கும் சக்தி எப்போதும்
வசந்தமாளிகைக்கு உண்டு.
அடுத்த நூற்றாண்டில் மட்டுமல்ல ,அனைத்து தலை முறையிலும் தலை சிறந்த கலைஞன் என்ற பட்டம் நடிகர்திலகம் சிவாஜிக்கு இருக்கும்.
60 வயது காதலை 20 வயதும் ரசிக்கும் படமாக ஒரே ஒரு படம்தான் எக்காலத்திலும் நினைக்கப்படும்.அது முதல் மரியாதை.
உலகின் பாதியை வியப்படைய வைத்த ஒரு பிராந்திய மொழி கலைஞன் என்ற கேள்வி வருமானால் அது சிவாஜி என்ற ஓரே ஒரு பெயரோடு முற்றுப் பெற்று விடும்.
இறக்கை கட்டிக் கொண்டு மனிதன் பறக்கும் விஞ்ஞான வளர்ச்சி தோன்றினாலும் ,திருவிழாக்களிலும் , கோவில் விழாக்களிலும் , திருவிளையாடல் ஒலிச்சித்திரம் தான்
ஒலிக்கும்.
BIG BANG எனப்படும் பெருவெடிப்பை தமிழ்சினிமாவில் எடுத்துக் கொள்ள வேண்டுமானால் 1952 ஆம் வருடத்தைதான் சொல்ல வேண்டும்.
சினிமாவே பார்க்காதவர்களையும் பார்க்க வைத்ததில் அதிக ஆற்றல் படைத்த கலைஞர்களின்புள்ளி விபரங்களை எடுத்தோமானால் அதில் நடிகர்திலகமே முதலில் இருப்பார்.
ட்ரெண்ட் செட்டிங் எனப்படும் இப்பொழுது வெளியாகும் ஒரு திரைப்பாடல் உதாரணமாக 100 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தாலும், இன்று பார்த்த நடிகர்திலகத்தின் திரைப்பாடல் 2099 வருடத்திலும் பார்க்கப்படும்.உண்மையான ட்ரெண்ட் செட்டிங் என்று இதை தான்கூற வேண்டும்.
ஒரு சரித்திரம் இதோடு முடிந்து விட்டது என்று தில்லானா மோகனாம்பாளை சொல்ல வேண்டியது வரும்.எந்த வகையிலே என்றால் தமிழனின் சிறந்த கலாச்சார படமாக இதை விட இனி எதுவும் எடுக்க முடியாது என்பதில்தான்.
காவல் துறைக்கு பெருமை சேர்த்த படங்களாக பலவற்றை சொல்வதுண்டு.ஆனால் ,காவல்துறையே
தங்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக தங்கப்பதக்கத்தை தான் சொல்லும்.
மேலும் ,காவல்துறை தன் கொள்கை விளக்க படமாக சொல்ல விரும்பினால் தங்கப்பதக்கத்தை சொல்வதில் தான் பெருமை கொள்ளும்.
காவல்துறை அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று பாடமெடுக்க விரும்பினால், S.P.சௌத்ரீயை முன்னுதாரணமாக காட்டி
பாடமெடுத்தால் காவல்துறையின் பாடச்சுமை குறையும்.
பாடல்களே இல்லாத படங்கள் புதிது புதிதாய் எந்த நாளும் வரலாம்.பாடல்களே படங்களாக வந்த காலத்தில் வந்த "அந்த நாளை"ப் போல் புதுமையாகுமா? .
ஆயிரக்கணக்கான கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு நூறு வருடங்கள் கடந்த பின்னும், இணையங்களில் தமிழ் கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் பற்றிய 'சர்வே ' எடுக்கப்படுமானால் அதிகமாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களே இருக்கும்.
தேசபக்தி சார்ந்த ஆவண திரைப்படங்களாக இந்தியநாடு பத்திரப்படுத்த விரும்பினால் நடிகர்திலகத்தின் பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் தான் அதற்கு கை கொடுக்கும்.
மேக்கப் கலை வளர்ச்சியை வைத்து ஒரு டாக்குமென்டரி தயாரிக்கும் போது, கடந்தகாலங்களில் மேக்கப் எப்படி செய்யப்பட்டது என்று ஆராயப்பட்டால்
40, 50 வருடங்களுக்கு முன்பு வந்த குழந்தைகள் கண்ட குடியரசு, நான் வணங்கும் தெய்வம், திருவருட்செல்வர் படங்களை பார்த்தால் ,இன்றைய வளர்ச்சி
கொடுத்த பிரமிப்பை விட அது அதிகமாகவே இருக்கும்.
டிஜிட்டல் தொழில் நுட்ப உத்திகளும், வளர்ச்சிகளும் அதிமாகிக் கொண்டே இருக்கலாம்.
எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் வளர்ந்து கொண்டிருந்தாலும்,
நடிப்பை தேட மட்டும் நடிகர்திலகமே பயன் தருவார்.
நன்றி..
கருத்துகள்
கருத்துரையிடுக