புனர் ஜென்மம்
இந்தப் படத்துக்கு முன் வெளியான நடிகர் திலகத்தின் படம் பாவமன்னிப்பு.
புனர் ஜென்மம் படத்தை அடுத்து நடிகர் திலகம் நடித்து வெளியான படம் பாசமலர் .
பாவமன்னிப்பு ,பாசமலர் இரண்டுக்கும் இடையில் வெளியான படம் தான் புனர்ஜென்மம்.
இந்தப் படம் வெளியான காலகட்டத்தில் உலகின் மகோன்னத நடிகராக இருந்தார் நடிகர்திலகம்.
உலகத்தின் பாதியைக் கொண்ட ஆசிய ஐரோப்பா கண்டங்களின் மிகச் சிறந்த விருதை பெற்றிருந்தார் அந்த உலக மகா நடிகன்.
இதற்கடுத்த காலகட்டங்களில் தான் நடிகர்திலகத்திடம் சொல்லப்பட்ட கதை புனர்ஜென்மம்.
எந்த தைரியத்தில் நடிகர் திலகத்திடம் கதை சொல்லி இருப்பார்கள்?
கதாசிரியர் நடிகர்திலகத்திடம் கதை சொன்ன விதத்தை சற்று ஊகித்து பார்க்கலாம் .
கதை விவாதம்:
நடிகர்திலகம், கதாசிரியர்
(புனர்ஜென்மம் குழு)
நடிகர்திலகம் :என்ன புதுசா ஒரு கதை இருக்குன்னீங்களே! கதையை சொல்லுங்க.
கதாசிரியர்:
படம் ஆரம்பிக்குது.மழை கொட்டி தள்ளுது.அப்ப ஒரு தெருவை காட்டறோம்.அந்த தெருவுல ,மழைத்தண்ணியில ஒரு உருவம் படுத்திருக்குது.அளவுக்கு அதிகமான. குடி .போதை.
எழுந்திருக்கவே முடியல.மழை வேற கொட்டித் தள்ளுது.அந்த மழையிலும் தெளியாத குடி போதை.அந்த இடம் கூட சுத்தமில்ல.ஒரே அசுத்தம். குப்பைத்தொட்டி பக்கத்துல தான் அந்த உருவம் படுத்துருக்குது.அந்த கேரக்டர்தான் படத்தோட ஹீரோ.
படத்தோட ஓபனிங் சீனே இது தான்.
நடிகர்திலகம் :(புருவம் ஏத்தி)
ஹீரோ..அதாவது நான்..
மேல சொல்லுங்க..
(இந்த காட்சியை கேட்ட பிறகும்
எந்த உச்ச நடிகனாவது அடுத்த காட்சியையோ கதையையோ கேட்பானா? அப்போதே கதாசிரியர் 'கெட் அவுட்தான் '..
அதுவும் நடிகர்திலகம் அப்போது இருந்த நிலை என்ன? புகழ் என்ன? யார் செய்வார்கள் இந்த பாத்திரத்தை? யாரும் செய்ய முடியாததை தானே செய்வார் நடிகர்திலகம்.
நடிகர்திலகத்தால் மட்டுமே துணிந்து செய்யப்பட்ட, அவரின் அதி அற்புத நடிப்பில்உருவானது தான் 'புனர் ஜென்மம்'.
மதுவுக்கு அடிமையான நாயகன் அதிலிருந்து மீண்டு காதலியை கரம் பிடிக்கும் ஒரு சாதாரண ஒரு வரிக் கதைதான் புனர்ஜென்மம்.
நடிகர்திலகத்தின் நடிப்பு ..நடிப்பு..நடிப்பு..
குடிகாரனாக மட்டும் எத்தனை படங்களில் நடித்துள்ளார் .இதுவா பெரிய விஷயம்.அல்ல ..அல்ல..
எத்தனை விதமான குடிகாரர்கள் நாட்டில் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை தன்னில் பிரதியெடுத்து நடிப்பென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் ,அது நடிப்பா ,அசலா என்று தோற்றம் காண்பித்த அந்த வகை நடிப்பு நம்மை மிரட்சி அடையச் செய்ததுதான் அற்புத விஷயம்..
உத்தமபுத்திரனின் போதை தந்த நடிப்பு ஒரு பாணி,நவராத்திரியில் ஆட்டம் போட்ட குடிகார வேடம் அது ஒரு பாணி, நீதியில் டிரைவரின் குடிகார பாணி,வசந்தமாளிகை ஜமீன்தார் குடிகார பாணி நடிப்பு என்று வெவ்வேறு வகை நடிப்பு வித்தியாசங்கள் தான் எத்தனையெத்தனை?
புனர் ஜென்மத்திலோ படு லோக்கல் குடிகார பாணி நடிப்பில் தெருவோர குடிகாரர்களையேஅசலாக காண்பித்திருப்பார்.அவர் செய்தது இருக்கட்டும்.உச்ச நடிகன் எவராவது செய்ய முயல்வார்களா?
ஈன்றாள் முகத்தேயும் ஒளியிழப்பர்
எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்.
பட துவக்கத்தில் காண்பிக்கப்படும் இந்த வரிகளும்,பின் தொடர்ந்து ஒலிக்கும் நடிகர்திலகத்தின் குரலும் படக் கதையை சுருக்கமாக சொல்லிவிடும். இலக்கிய நயம்பட அருமையாக காட்டப்படிருக்கும் இந்த காட்சி .
உலக மகா நடிகனை, கலையின் அரசனை, நடிப்பின் பீஷ்மரை குப்பை கூளங்களுக்கு மத்தியில் குடித்த நிலையில் மதி மயங்கி கிடக்கும் படியான அறிமுக காட்சியை வைக்க, காட்ட துணிவு வேண்டும்.
புனர் ஜென்மத்தில் பூர்த்தியானது அந்த விதி.செய்தவர் திலகமான அந்த நதி.
திரைப்படங்களில் காட்டப்பட்ட கதாநாயகனின் துணிச்சலான அறிமுக காட்சி என்றால் அது இதுவாகத்தானிருக்கும்.
படத்தின் முதல் பாடல்.பத்மினி ஆடுவார். பாடுவார்.நன்றாகத்தானிருக்கும்.கூட்டத்தோடு கூட்டமாக இருப்பார் நடிகர்திலகம்.அத்தனை லயிப்பும் அவரிடத்திலே போய்விடும்.பாருங்கள் அந்த காட்சியை.நடிகர்திலகத்தின் கோமாளி வேஷமும், அந்த குத்தாட்டமும் ,அடடா! நடிப்பு மகாராஜா போட்ட ஆட்டமா அது ..பின்னியிருப்பார் பின்னி.
அழகான சிலை படைப்பிற்கு விலை பேசுபவர்களிடம், ஒரு வரி சொல்வார்.
காசுக்காக கலையை விற்பதா? என்று! இந்த வசனத்தை நடிகர்திலகத்திற்காக எழுதியிருப்பார் வசனகர்த்தா. இப்படித்தான் பார்ப்பவர்களுக்கு எண்ணம் வரும்.அது தானே அவரின் நிலை...
சிலை விற்ற பணம் செல்லாது என்று தெரியவர ,அதைத் தொடர்ந்த காட்சிகளில் நடிகர்திலகத்தின் நடிப்பானது
குமுறும் எரிமலை
கொதிக்கும் சூரியன்
ஆர்ப்பரிக்கும் கடல்
என்பது போல்தான்.
அழகாக படம் பிடிக்கப்பட்ட காட்சிகள்.தரமான ஒளிப்பதிவு.
ரசிக்க வைக்கும் சின்ன சின்ன நேர்த்தியான ஷாட்கள்.கண் கவரும் பிண்ணனி காட்சிகள். இவையெல்லாம் நிறைந்த நிறைவு தான் 'என்றும் துன்பமில்லை 'பாடல் காட்சி.
களிமண்ணால் ஆன சிலை -அது
கற்பனையில் சுடர்விட்ட கலை
செல்லாத நோட்டு இதன் விலை
இது சீரழிந்த கலைஞனின் நிலை
நடிகர்திலகம் சிலைகளை பார்த்து ஏமாற்றத்தால் பேசப்படும் வசனம் இது.நடிகர்திலகம் பேசுவதும் , அந்த வசன உச்சரிப்பும் ,
போதையான நடிப்பும்...
நடிப்பு அவருடையது
போதை நமக்கு ...
குடிப்பதால் ஏற்படும் பாதங்களை சொல்லவும் ஒரு படம் வேண்டுமல்லவா .அது புனர் ஜென்மம் பார்த்தால் தெரியும்.
செச்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக