டி எம் எஸ் ,சிவாஜிக்காக கஷ்டப்பட்டு பாடிய பாடல்கள் ...
பராசக்தி படம் வந்ததிலிருந்து தூக்கு தூக்கி படம் வரைக்கும் சிவாஜிக்கு எத்தனையோ பேர் பாடி இருப்பார்கள்.. எல்லா பாடகர் குரலையும்
தன்னுடைய நடிப்பால் மேட்ச் செய்து இருப்பார் சிவாஜி .தூக்கு தூக்கி படத்துக்கு பின்னால் சிவாஜிக்கு ,சிவாஜியே பாடுவது மாதிரி ஒரு வாய்ஸ் கிடைத்தது.அதுதான் டி எம் எஸ் குரல்.
டிஎம்எஸ் இன் குரல் நல்ல கம்பீரமான குரல் என்றாலும்
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி பாடி இருப்பார் .
சிவாஜியை தவிர மற்ற நடிகர்களுக்கு பாடிய டிஎம்எஸ்ஸின் குரல் ஆனது அதிகம் கம்பீரத்தை காட்டாத ஒரு மிருது தன்மையுடன் இருக்கும். சிவாஜிக்கும் TMS எத்தனையோ மிருதுவான சாந்தமான பாடல்களை பாடி இருந்தார்.சிவாஜிக்கு பாடிய சில கடினமான பாடல்களை
அடிவயிற்றில் இருந்து காற்றை நெஞ்சுக்கு கொண்டு வந்து அடித்தொண்டையிலிருந்து கஷ்டப்பட்டு பாடி இருப்பார். அவ்வாறு சிவாஜிக்கு பாடிய சில கடினமான பாடல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வசந்த மாளிகை படத்தில் அவர் பாடிய" யாருக்காக இது யாருக்காக "என்ற பாடலை தியேட்டரில் பார்க்கும்போது தியேட்டரே அதிரும்படி இருக்கும் .இந்தப் பாடலில் நடித்த சிவாஜி அவர்கள் அதிகமான இருமல்களும் ,ரத்த வாந்தி எடுப்பது போல எல்லாம் நடித்திருப்பார். இந்த காட்சிகளுக்காக டி எம் எஸ் அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பாட வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட ஒரு சிரமம் வேறு எந்த நடிகருக்கும் டிஎம்எஸ் பட்டிருக்கமாட்டார் என்பதே உண்மை.
புதிய பறவை படத்தில் இடம்பெறும் எங்கே நிம்மதி என்ற பாடல். இந்தப் பாடல் வசந்த மாளிகை அளவுக்கு சிரமம் இல்லை என்றாலும் அந்த முதலில் வரும் 'எங்கே நிம்மதி' என்ற வரிகளை இழுப்பாரே, அதற்காக தன் தொண்டையிலிருந்து அதிக காற்றை வெளியேற்றி இருப்பார். இந்தப் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த இசைக்கருவிகளையும் மீறி டி எம் எஸ் தன் குரலை காட்ட வேண்டி இருந்தது. அதிகமான இசைக்கருவிகளை மீறி தன் குரலை தனித்து காட்டி இருப்பார் டி எம் எஸ். அதுவே ஒரு சாதனைதான். வேறு பாடகர்கள் இந்த பாடலை பாடி இருந்தால் இசைக்கருவிகளின் சத்தம் தான் நம் காதை கிழித்துக் கொண்டிருக்கும் .டிஎம்எஸ் சிரமப்பட்டு பாடிய மகத்தான பாடல்களில் ஒன்று இது.
உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே 'என்ற பாடல் அமைதியான சூழலில் தான் பாடுவது போல காட்சி அமைப்பு..இந்தப் பாடலில் சிரமம் என்னவென்றால் நடிகர்திலகம் வேகமாக நடந்து கொண்டும் ஓடிக் கொண்டும் இந்த பாடலை பாடுவது போல காட்சிகள் இருக்கும். அப்படி வேகமாக நடக்கும் போதும், ஓடும் போதும் வேகமான மூச்சின் ஓசையை வெளிப்படுத்த வேண்டும். பதிவு கூடத்தில் நின்று கொண்டு பாடும் போது இந்த எஃபெக்ட் கிடைக்காது. அதனால் பதிவு கூடத்தில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு மூச்சிரைத்து பாடி இருப்பார் டி எம் எஸ். இதுவும் ஒரு சவாலான பாடல்தான் டிஎம்எஸ் சுக்கு.
பலே பாண்டியா படத்தில் இடம்பெற்ற நடிகர் திலகம் எம் ஆர் ராதாவும் பாடும் 'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' பாடலை யாருமே மறக்க முடியாது. இந்தப் பாடலில் நிறைய ஆலாபனைகளும் ராகசங்கதிகளும் தெறிக்க தெறிக்க விழும் .எந்த இடத்திலும் பிசிறு தட்டாத வகையில் டிஎம்எஸ் பாடி இருப்பார். நான் ஸ்டாப் ஆலாபனைகளால் பாடல் பொங்கி வழியும் .டிஎம்எஸ் பாடகர் ,பாடிவிட்டார். அதற்கு நடிக்க வேண்டுமே. படத்தைப் பார்க்கும்போது நடிகர்திலகம் எப்படித் தான் இந்த பாடலில் தத்ரூபமாக நடித்தாரோ என்று வியக்கவே வைக்கும் .
பாடிய டிஎம்எஸ் க்கும் நடித்த சிவாஜிக்கும் இந்த பாடல் ஒரு பெரிய சவால். அந்த சவாலை சாதனையாக்கி இருப்பார்கள் இருவரும்.
தூக்குத்தூக்கி படத்தில் இடம்பெற்ற 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 'ஒரு வித்தியாசமான பாடலாகும்.இந்தப் பாடலில் நிறைய ராக ஆலாபனைகள் இருக்கும்.
கதாநாயகன் பைத்தியம் இல்லை ஆனால் பைத்தியம் மாதிரி நடிக்கிறான்.
இந்த இரண்டு குணத்தையும் கொண்ட ஒரு பாத்திரத்தை சிவாஜி செய்திருப்பார். பத்மினி ராகினி உடன் இணைந்து அந்த பாடலை சிவாஜி படத்தில் பாடுவார் .ஒரே பாத்திரத்தில் இரு வேறு குணங்களும் ஒன்றாக உள்ளடக்கி, இரண்டு குணங்களையும் அந்தப் பாடலில் காட்ட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சிரமமான பாடலை டிஎம்எஸ் அழகாக பாடியிருப்பார். நடிகர் திலகம் அட்டகாசப்படுத்தி இருப்பார்.
இப்படி சிவாஜிக்காக டிஎம்எஸ் பாடிய சில சிக்கலான கஷ்டப்பட்ட பாடல்கள் நிறைய உள்ளன.அவற்றில் சில பாடல்கள் மட்டும் இங்கே கூறுகிறேன்.
ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் இடம்பெற்ற இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பாடல்,
ஞான ஒளி படத்தில் இடம்பெற்ற தேவனே என்னை பாருங்கள் என்ற பாடல்,
பைலட் பிரேம்நாத் படத்தில் இடம்பெற்ற 'ஹூ இஸ் தி பிளாக் ஷீப் ' என்ற பாடல்,
கௌரவம் படத்தில் இடம்பெற்ற கண்ணா நீயும் நானுமா என்ற பாடல்,
தெய்வமகன் படத்தில் இடம்பெற்ற தெய்வமே தெய்வமே என்ற பாடல்,
மக்களைப் பெற்ற மகராசி படத்திலிருந்து 'மணப்பாறை மாடு கட்டி' பாடல் அதிகம் சிரமம் இல்லாத பாடல் என்றாலும் ஒரு வட்டார பாஷையான கொங்குத் தமிழில் இதனை பாடி இருப்பார்
டி எம் சௌந்தரராஜன் .பாகவதர் போல பாட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் என்று கூறிய டி எம் எஸ் அவர்களுக்கு, இந்த வட்டார பாஷை பாடல் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்திருக்கும். வட்டார பாஷை பேசுவதே கேலி கூத்தாக அமைவது உண்டு .அப்படி இருக்கும்போது பாடுவது என்பது ஒரு சவால் தான். ஆனால் டி எம் எஸ் இந்த பாடலை நன்றாகவே பாடி இருப்பார்.
இப்படி நிறைய பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
வேறு எந்த நடிகரும் பாடகரும் இணைந்து கொடுத்திராத இது போன்ற பாடல்களை கொடுத்த
கூட்டணி சிவாஜி டி எம் எஸ் கூட்டணி ...
நன்றி ..
வணக்கம் செந்தில் வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக