திருவிளையாடல் படம் பத்தி பேச ஆரம்பிச்சாலே சிவன் நக்கீரன் தருமி காட்சிகள் தான் எல்லோருடைய நினைவுக்கும் வரும்.எப்படி எடுத்திருக்காங்க. இந்த காட்சியை, அப்பிடீன்னு ஒரு வியப்பு யாருக்கும் வராம போகாது.அந்த காட்சியோட வசனங்களை சொல்லாத ஆளுகளும் இருக்க முடியாது.திருவிளையாடல் படத்துல சிவனாக சிவாஜியும் தருமியாக நாகேசும் அதை ஒரு பகுதியாக செஞ்சிருப்பாங்க.அந்த காட்சியோட அடுத்த பகுதியா நக்கீரனாக ஏபி நாகராஜனும் சிவனா சிவாஜியும் செஞ்சு இருப்பாங்க .இந்த காட்சியில் வரும் ஒவ்வொரு வசனமும் தமிழ் மக்களுக்கு மனசுல பதிஞ்சு இருக்கும்.
இந்த காட்சி இப்படி சிறப்பாக அமைஞ்சதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.இந்த காட்சி ஏற்கனவே நான் பெற்ற செல்வம் படத்துலே காட்சிகளாக எடுத்திருப்பாங்க .இந்த நக்கீரன் சிவன் தருமி காட்சிகள் எல்லாம் ஏற்கனவே ஒரு படத்துல வந்திருக்கா அப்படிங்கறது பல பேருக்கு தெரியாது. நான் பெற்ற செல்வம் படத்துல இந்தக் காட்சிகளை அப்படியே அமைச்சு இருப்பார் ஏபி நாகராஜன் .அந்தப் படத்துல வர்ற சில வசனங்கள கொஞ்சம் மாத்தி, இன்னும் கொஞ்சம் அற்புதமான வார்த்தைகளை போட்டு திருவிளையாடல் படத்தில் எடுத்திருப்பார். திருவிளையாடல் படத்தில் சிவனாக நடிச்சிருப்பார் சிவாஜி .ஆனா நான் பெற்ற செல்வம் படத்துல நக்கீரன் ,சிவன் அப்படின்னு ரெண்டு வேஷத்தையும் பண்ணி இருப்பார் சிவாஜி .திருவிளையாடல் படத்துல நக்கீரனா நடிச்சிருப்பார் ஏ பி நாகராஜன் .ஏ பி நாகராஜன் அப்படி அற்புதமா நடிச்சதுக்கு நான் பெற்ற செல்வம் படத்துல சிவாஜி செஞ்ச அந்த நக்கீரர் கேரக்டர் தான் இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கு. நான் பெற்ற செல்வம் படத்தில் அந்த காட்சியை பாருங்க. அதுல நக்கீரனா நடிச்ச சிவாஜி எப்படி அட்டகாசமா பண்ணி இருப்பார் .அந்த பாடி லாங்குவேஜ் ,வசன உச்சரிப்பு , நிறுத்தி நிதானமா பேசற அந்த பாணி எல்லாம் சிவாஜி செஞ்ச நடிப்புல இருந்துதா வந்து இருக்கு. ஆனா நான் பெற்ற செல்வம் படத்துல தருமி புலம்பி தள்ளுகிற சீனுகெல்லாம் இல்ல .அது திருவிளையாடல் படத்தில் கூடுதலா சேர்த்து கிட்ட ஒண்ணு.
நான் பெற்ற செல்வம் படத்துல தருமி அரசவைக்கு வந்து அந்தக் கவிதையை பத்தி சொல்லி, அப்புறம் அரசர் கிட்ட அவர் பரிசு கேக்குற மாதிரி காட்சிகள் இருக்கும். தருமி சொல்ற பாட்ட கேட்டு நக்கீரரா நடிச்ச சிவாஜி
அந்தப் பாட்டுல பிழை இருக்கிறதா தருமி கிட்ட சொல்லி அரசன் கொடுக்க வந்த அந்த பரிசை தடுத்து விடுவது மாதிரி காட்சி இருக்கும். இதெல்லாம் திருவிளையாடல் படத்தில் இருப்பதுதான்.
நான் பெற்ற செல்வம் படத்துல புலவருக்கு அரசன் பரிசு கொடுக்க முற்படும்போது, நக்கீரனாக நடிச்ச சிவாஜி, தருமியிடம், அய்யா , இந்த பாட்டில் பிழை இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் பிழை இல்லை என்று நீங்கள் கருதினால் அதற்கு உண்டான விளக்கம் சொல்லி பரிசுப் பொருளை வாங்கிச் செல்லலாம் என்று நக்கீரன்னான சிவாஜி கூறுவார் .இந்த காட்சியில் தருமியாக வருபவர் நல்ல தமிழில் தான் பேசுவதாக காட்சிகள் இருக்கும். ஆனால் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சாதாரண பேச்சுத் தமிழில் பேசுவதாக காட்சிகளை வைத்திருப்பார் ஏபி நாகராஜன். நான் பெற்ற செல்வம் படத்தில் தருமியாகயாக வருபவரின் காட்சிகள் அதிகம் இருக்காது. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் இது என் பாட்டு நானே எழுதியது என்று கொண்டு வந்து கொடுப்பார். ஆனால் நான் பெற்ற செல்வம் படத்தில் இது வேறு ஒருவர் எழுதிக் கொடுத்த பாட்டு அதை நான் கொண்டு வந்தேன் என்று கூறுவார். நான் பெற்ற செல்வம் படத்தில் இடம்பெறும் இந்த காட்சிகளை ஓர் ஓரங்க நாடகமாக வடிவமைத்து இருப்பார்
ஏபி. நாகராஜன். இந்த காட்சிகளையே சற்று மெருகூட்டி ,மாற்றி ,வசனங்களில் மாற்றங்களை செய்து திருவிளையாடல் படத்தில் புகுத்தி இருப்பார்.
நான் பெற்ற செல்வம் படத்துல இதுக்கு அடுத்த காட்சியா சிவனா வர்ற சிவாஜி தருமியை கூட்டிக்கொண்டு அரசவைக்கு வருவார் .
நாகேஷை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வருவது போலவே நான் பெற்ற செல்வம் படத்திலும் சிவனாக நடித்த சிவாஜி தருமியை கூட்டிக்கொண்டு அரசவைக்கு வருவார்.
அரசவைக்குள் நுழைந்ததும் இப்புலவர் கொண்டு வந்த பாட்டில் குற்றம் கூறியது யார் என்று சிவாஜி கேட்பார் ?
ஆனால் திருவிளையாடல் படத்தில் சிவாஜி , இப்பாட்டை குற்றம் கூறியவன் எவன்? என்று ஏக வசனத்தில் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டிருக்கும் ..
இந்த வசனத்தை நான் பெற்ற செல்வம் படத்திலயும் திருவிளையாடல் படத்துலயும் நாம பார்க்கும்போது நாம ரொம்ப பிரமிச்சு போயிடணும்.ஏன்னா அந்த அளவுக்கு சிவாஜி அந்தப் படத்துக்கும் இந்த படத்துக்கும் பேசி இருப்பார் பாருங்க.
நான் பெற்ற செல்வம் படம் வந்தது 1956 லே.திருவிளையாடல் படம் வந்தது 1965 லே.
இடையில வித்தியாசம் ஒன்பது வருஷம். வசனங்களை பேசி பேசி சிவாஜியோட குரல் எந்த அளவுக்கு சிம்ம குரலா மாறி இருக்கு அப்படின்னு நம்ம பார்க்கணும் .
நான் பெற்ற செல்வம் படத்துல சிவாஜி பேசியது சாந்தமான ஆர்ப்பாட்டம் இல்லாத என அமைதியான ஒரு வசன உச்சரிப்பு பாணி .சிவாஜியோட முதல் படமான பராசக்தி படத்திலிருந்து அவருடைய குரலிலே ஒரு வசீகரம் இருக்கும் .நாளாக ஆக சிவாஜியோட குரல் படிப்படியாக ரொம்ப கம்பீரத்துக்கு மாறிகிட்டே வந்துருக்கும்.இந்த ரெண்டு பட காட்சிய பாத்தாலே நமக்கு நல்லா தெரியும்.
திருவிளையாடல் படத்துல நக்கீரானா நடிச்ச ஏ பி நாகராஜனோட வசனம் பேசற பாணியையும், நடிப்பையும்...
நான் பெற்ற செல்வம் படத்துல நக்கீரனா நடிச்ச சிவாஜியோட நடிப்பையும் வசன பாணியையும் நல்லா பாருங்க.சிவாஜி நடிச்ச அந்த நக்கீர வேஷ நடிப்பு நாகராஜனுக்கு எந்தளவுக்கு கை கொடுத்திருக்கு அப்பிடீன்னு நாம தெரிஞ்சிக்கலாம்.
ரெண்டு படத்துலயும் சிவனா நடிச்சது சிவாஜி தான் .
என்ன குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருள் சுவையிலா? என்று சிவன் கேட்பது போல காட்சி இருக்கும். இந்தக் கவிதைக்கு பொருள் சொல்லும் காட்சி தான் இரண்டு படத்திலும் வேறு மாதிரி இருக்கும் .நான் பெற்ற செல்வம் படத்தில் நக்கீரனாக வரும் சிவாஜி இதற்கு பொருளை கூறுவார். திருவிளையாடல் படத்தில் சிவனாக நடித்த சிவாஜியே இதற்கு பொருள் கூறுவது போல இருக்கும் .' கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி '
என்னும் அந்த கவிதையை இரண்டு படத்திலும் சிவாஜி எப்படி பேசியிருக்கிறார் என்பதை பார்க்கும் போது நாம ரொம்ப ஆச்சர்யப் படாம இருக்க முடியாது!
அந்தக் கவிதைக்கு பொருள் சொல்லும் நான் பெற்ற செல்வம் படத்தில் சிவாஜி நடித்த அந்த வசன பாணியும் ,திருவிளையாடல் படத்தில் அந்த வசனபாணியும்
முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். நான் பெற்ற செல்வத்தில் நக்கீரர் பேசுவதாக இருப்பதால் அமைதியாக சாந்தமாக இருக்கும்.ஆனால் திருவிளையாடல் படத்தில் எரிமலை போல் வெடிப்பார் ..
ஒரே வசனமாக இருந்தாலும் அதை எப்படி விதவிதமா பேச முடியும்ணு செஞ்சு காட்டி இருப்பார் சிவாஜி. நான் பெற்ற செல்வம் சிவன்... திருவிளையாடல் சிவன் ...காட்சிகளை பாத்தாலே சாதாரண ரசிகனும் தெரிஞ்சுக்குவான்.
நான் பெற்ற செல்வம் படத்துல நக்கீரனை அதே சபையிலே மன்னிச்சு விடற மாதிரி காட்சி முடிஞ்சிரும்.திருவிளையாடல் படத்துலே காட்சியை பொற்றாமரை குளத்துல சிவன் தன் விஸ்வரூபத்தை காண்பிக்கற மாதிரி அந்த காட்சியை வெச்சிருப்பாரு நாகராஜன்.சிவாஜியோட நடிப்பும் எந்தளவுக்கு விஸ்வரூபமா வளந்திருக்கு அப்படீங்கறத சொல்லாம சொல்லற காட்சியா அது இருக்கும்.
இந்த சிவன் நக்கீரர் காட்சி நான் பெற்ற செல்வம் படத்துலேயே ரொம்ப பிரமாதமா இருக்கும்.ஆனா அது ஏன் ரொம்ப பிரபலமா இல்லேன்னும்,ரொம்ப பேருக்கு தெரியலேன்னும் நினைச்சா ஆச்சர்யமாத்தான் இருக்கு.
படத்துலே இது ஸ்டேஜ் டிராமாவா காட்டி இருப்பாங்க. ரொம்ப சிம்பிளாகத்தான் எடுத்திருப்பாங்க! ஆனா சிவாஜி தன் நடிப்பாலே மட்டும் அதை அதிசயமா மாத்தி இருப்பாரு.
ரெண்டு பட காட்சிகளும் ஒண்ணுதான் அப்பிடீன்னாலும் ரெண்டையும் பாக்கறப்போ வேற வேற மாதிரி உணர்வுகளை காட்டும்.
செந்தில்வேல் சிவராஜ்..
கருத்துகள்
கருத்துரையிடுக