சென்னை சாந்தி திரையரங்கமா ?சிவாஜி படங்களை தான் ஓட்டுவார்கள் என்று ஆரம்பத்தில் இருந்து ஒரு தரப்பில் இருந்து தவறான பரப்புரைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போதும் கூட அந்த பரப்புரைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன .
ஆனால் உண்மை என்ன என்பதை சொல்லத்தான் இந்த பதிவு.
சாந்தி தியேட்டர் 1961ம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
தியேட்டர் திறக்கப்பட்டு இரண்டு மாதம் கடந்து தான் சிவாஜி படமே திரையிடப்பட்டது .
இத்திரையரங்கில் 1961 மார்ச் மாதம் 16 ஆம் தேதி திரையிடப்பட்ட திரைப்படம்,
ஏ. பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடித்து வெளியான பாவ மன்னிப்பு ஆகும்.ஆக முதலில் திரையிடப்பட்ட படம் கூட சிவாஜி படம் இல்லை .
சிவாஜி புரொடொக்சன்சின் முதல் தயாரிப்பு ,பெருமைமிகு மற்றும் கலர் தயாரிப்பு படம் புதிய பறவை.
V.C. சண்முகம் மிகவும் சிரத்தை எடுத்து தயாரித்துக் கொண்டிருந்த படம் புதிய பறவை. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை கூட சாந்தி தியேட்டரில் திரையிடாமல் வேறு தியேட்டரில் தான் திரையிட்டார்கள்.
காரணம் அப்போது நன்றாக ஓடிக் கொண்டிருந்த ராஜ்கபூர் நடித்த இந்தி படம் சங்கம்.இந்த திரைப்படம் 10 7 1964 திரையரங்கில் வெளியானது. புதிய பறவை வெளியான தேதி
12 9 64. சங்கம் திரைப்படம் இரண்டு மாதம் ஓடிய நிலையில் அந்தப் படத்தை எடுத்து விட்டு புதிய பறவை திரைப்படத்தை திரையிட்டு இருக்கலாம் .ஆனால் சங்கம் திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் சிவாஜி புரொடக்சன்சின் கனவு படமாக இருந்தாலும் புதிய பறவையை வேறு தியேட்டரில் தான் ரிலீஸ் செய்தார்கள்.
அந்த 61 ஆம் வருட காலகட்டத்தில்
இரண்டு முக்கிய படங்கள் சிவாஜி நடித்த பாசமலர், கப்பலோட்டிய தமிழன். பாசமலர் எப்படிப்பட்ட படம் என்பது அனைவருக்கும் தெரியும்.அந்தப் படம் ராஜா மணி பிக்சர்ஸ் பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட படமும் கூட. அப்படி இருந்தும் இந்த இரண்டு படங்களும் சாந்தியில் வெளியாகவில்லை. நடிகர்திலகம் தன் சினிமா வாழ்க்கையில் தனக்கு பிடித்த பாத்திரமாக கூறிய படம் கப்பலோட்டிய தமிழன். அந்தப் படத்தையே சாந்தியில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலும் பழமும் நூறு நாட்களுக்கு மேல் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது.அது வெள்ளி விழாவை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஏவிஎம் செட்டியார் தன்னுடைய தயாரிப்பான பார்த்தால் பசி தீரும் படத்தை சாந்தியில் தான் வெளியிட வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க அதற்காக வெள்ளிவிழா ஓட வேண்டிய பாலும் படத்தை எடுத்து விட்டார்கள். பாலும் பழமும் படத்தை மட்டும் எடுக்காமல் இருந்தால் அந்த வருடத்தில் நடிகர் திலகம் மூன்று வெள்ளிவிழா படங்களை கொடுத்த நிகரற்ற சாதனை செய்தவராக இருப்பார் .இப்படிப்பட்ட அருமையான சாதனை வாய்ப்பு சுலபமாக கிடைக்கப்பெற்றும் சாந்தி நிர்வாகம் அதை செய்யவில்லை .
சாந்தி திரையரங்கில் இந்தி படம் வெள்ளி விழா ஓடிள்ளது .மலையாள படம் வெள்ளி விழா ஓடியுள்ளது.
சிவாஜி பிரபுவை தவிர மற்ற கதாநாயகர்கள் மோகன் பாண்டியராஜன் சத்யராஜ் விஜயகாந்த் ராதிகா டி ராஜேந்தர் சரத்குமார் விஜய் கார்த்திக் பிரசாந்த் அஜித் பார்த்திபன் என மற்ற கதாநாயகர்களின் படங்களும் கூட 100 நாள் தாண்டி ஓட்டப்பட்டுள்ளது.
சங்கம் வெள்ளி விழா படத்தை அடுத்து தர்மேந்திரா ஹேமமாலினி நடித்து
12 .11.76-ல் வெளியான மா என்ற இந்தி படமும் 100 நாள் ஓடியுள்ளது .இந்தப் படம் ஓடிய காலகட்டத்தில் ,சிவாஜியின் ரோஜாவின் ராஜா 25 .12. 76 லும்,
அவன் ஒரு சரித்திரம்
14 .1 .1977 லிலும் வெளியாகின. இந்தக் காலகட்டம் நடிகர்திலகத்துக்கு பல பிரச்சனைகளை கொண்டு வந்த காலகட்டம் என்பது எல்லோருக்கும் தெரியும் .காமராஜர் மறைவும் அதைத்தொடர்ந்து சிவாஜி அவர்கள் காங்கிரசில் சேர்ந்ததால் ஏற்பட்ட சினிமா பாதிப்புகள் ஆகும்.இப்படி நிலை இருக்க சிவாஜி நடித்த அந்தப் படங்களை சாந்தி திரையரங்கில் வெளியிட்டு அந்த படங்களை ஓட வைத்து தன் படங்களை நிலை நிறுத்தி இருக்கலாம். ஆனால் மா என்ற இந்தி படம் அப்போது நன்றாக ஓடிக் கொண்டிருந்ததால் அந்த காலகட்டத்தில் சிவாஜி படங்கள் வெளியாகவில்லை சாந்தி திரையரங்கில் .
1979 ஆம் ஆண்டு வெளியான சிவாஜியின் மகத்தான வசூல் சாதனை சரித்திர படம் திரிசூலம். எத்தனையோ சாதாரண படங்கள் கூட வருடக் கணக்கில் ஓடியுள்ளன தமிழகத்தில். ஆனால் திரிசூலத்தின் வசூல் மழை அப்போது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். 175 நாட்கள் ஓடிய பின்னும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டுதான் இருந்தது .சாந்தி தியேட்டர் நிர்வாகம் நினைத்திருந்தால் அந்தப் படத்தை ஒரு வருடம் கூட ஓட்டி இருக்கலாம். ஆனால் வெளிவந்து கொண்டு இருந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சாந்தி தியேட்டர் நிர்வாகம் அதை செய்யவில்லை.
23 ,7, 1982 ல் வெளியான மலையாளத் திரைப்படமான ஈநாடு 196 நாட்கள் ஓடியுள்ளது.
நாம் மிகவும் சாதாரணமாக நினைக்கும் மற்ற நடிகர்களின் படங்கள் கூட சாந்தி திரையரங்கில் 100 நாட்கள் ஓடி உள்ளன .
உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் ..
மோகன் நடித்த இளமை காலங்கள்
பாண்டியராஜன் நடித்த ஆண்பாவம்,
ஊரை தெரிஞ்சுகிட்டேன்
டி ராஜேந்திரின் என் தங்கை கல்யாணி
நீதிக்கு தண்டனை வசந்த ராகம் புரியாத புதிர் சேரன் பாண்டியன் லவ் டுடே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் நீ வருவாய் என பார்த்து ரசித்தேன் என்ற இந்தப் படங்கள் எல்லாம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடி உள்ளன .
இந்தப் படங்கள் சாந்தி திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய காலகட்டத்தில் நடிகர் திலகம் நடித்து பல படங்கள் வெளிவந்து கொண்டே தான் இருந்தன.
அவ்வளவு ஏன் ?
ஆறு திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய வெள்ளை ரோஜா படம் கூட சாந்தி திரையரங்கில் திரையிடவில்லை .
சாந்தி திரையரங்கில் சிவாஜியின் படங்கள் நன்றாக ஓடியதை விட மற்ற ஊர்களிலும் மற்ற திரையரங்குகளிலும் நன்றாகவே ஓடி உள்ளன.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் சில வெள்ளிவிழா படங்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
தியாகம் தீர்ப்பு நீதிபதி சந்திப்பு முதலிய படங்கள் சென்னை சாந்தி திரையரங்கை விட மதுரையில்தான் வெள்ளிவிழா ஓடிள்ளன.
வரிசையாக படங்கள் வந்து கொண்டிருந்ததாலும், ஒப்புக்கொண்ட Booking தேதிகளின் அடிப்படையிலும், ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் திருப்தியான வசூலை கொடுத்த பின்னும், என்று சரியான காரணங்கள் இருந்ததால் சாந்தி திரையரங்கில் எல்லா படங்களுக்கும் சரியான முன்னுரிமை கொடுத்து படங்கள் வெளியிடப்பட்டன.
மற்றபடி சிவாஜி பிரபு திரையரங்கு என்பதற்காக அவர்கள் நடித்த படங்கள் மட்டும் ஓட்டப்படவில்லை என்பதற்கு உதாரணம் தான் மேற்கூறிய செய்திகள்.
பிரபுவின் நூறாவது படமான ராஜகுமாரன் நாகர்கோவிலில் கூட நூறு நாள் ஓடியது.ஆனால் சிவாஜியின் சொந்த திரையரங்கான சாந்தியில் 65 நாட்கள் தான் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் இது போன்று பல நூறு உதாரணங்கள் உள்ளன.
சில முக்கியமான விவரங்களை மட்டும் இதில் சொல்லியுள்ளேன்.
செந்தில்வேல் சிவராஜ் ...
கருத்துகள்
கருத்துரையிடுக