நடிகர் திலகம்.
இது என்ன சாதாரண பெயரா?
ஒரு பெயர் தான் .ஆனால் ஓராயிரம் முகங்களை தன்னுள் அடக்கிய பெயர் .
தமிழ் சினிமாவுக்கு தங்க ராஜ கிரீடமாக அமைந்த பெயர்.
ஆங்கிலேயர்களை ஐரோப்பியனை இன்னும் பிற அயலானை வியக்க வைத்த பெயர்.
உலகத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை எல்லோராலும் போற்றப்பட்ட பெயர்.
இப்படிப்பட்ட ஒரு பெயரை ஒரு மசாலா படத்துக்கு சூட்டலாமா.?
மலையாளத்தில் தயாரித்து கொண்டிருக்கும் ஒரு மசாலா படத்துக்கு நடிகர் திலகம் என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்
அதுவும் ஒரு நகைச்சுவை படத்துக்கு நடிகர் திலகம் என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள்.
அது இங்கு அல்ல கேரளத்தில். மலையாள திரைப்படம் ஒன்றுக்கு நடிகர் திலகம் என்ற பெயரை சூட்டி இருக்கிறார்கள்.
அரசியலுக்கு வர விரும்பும் ஒரு கதாநாயகனை பற்றி சுற்றிச்சூழலும் கதையாக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது .அரசியல் என்றாலே பல ஏமாற்றுத் தனமான வேடங்களை போட வேண்டியது வரும். அதனாலேயே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
நடிகர் திலகம் என்ற பெயரை எந்தப் படமாக இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணமே எல்லா ரசிகர்களுக்கும் இருந்து வரும் நிலையில் ,ஒரு சாதாரண மசாலா நகைச்சுவை படத்துக்கு இந்த டைட்டில் வைத்தால் எல்லோருக்கும் கோபத்தை வரவழைக்கவே செய்யும்.
இந்தப் படத்துக்கு இந்த டைட்டிலை தேர்வு செய்யும் எண்ணம் முதலில் எப்படி வந்தது என்பதே ஒரு கேள்வி ஆகின்றது.
பாரிஸ்டர் ரஜினிகாந்த் கோர்ட் காட்சியில் ஏண்டா அபிஷ்டு இது என்ன சாதாரண விஷயமா என்று கேட்பாரே ,அதைப் போலத் தான் கேட்கத்தான் தோணுகிறது நமக்கும்.
நடிகர் திலகம் என்ற இந்த மலையாள படத்தை இயக்குபவர்
நடிகர் லாலின் மகன். தற்போது பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் மலையாள திரைப்படமாம் இது. டொவினோதாமஸ் என்பவர் தான் கதாநாயகனாக நடிக்கிறார் .
நம்முடைய பதில் என்னவென்றால்,
நீங்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் படத்தை தயாரியுங்கள் ,யாரை வைத்து வேண்டுமானாலும் படத்தை இயக்குங்கள் ,எவ்வளவு கோடியில் வேண்டுமானாலும் படத்தை எடுங்கள் .
அதைப்பற்றி சிவாஜி ரசிகர்களுக்கு கவலை இல்லை.
நீங்கள் நடிகர் திலகம் என்ற டைட்டிலை உங்கள் படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளீர்கள்.
சிவாஜி ரசிகர்களின் கேள்வி என்னவென்றால் நீங்கள் அந்தப் பெயரை வைக்க வேண்டும் என்ற யோசனையே உங்களுக்கு வந்திருக்கக் கூடாது என்பது தான்.
இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு பெரிய ஸ்டார் நடிகர் சிவாஜிக்கு நடிகர் திலகம் பெயர் கிடைக்கிறதுக்கு காரணமே நாலஞ்சு டைரக்டர் படங்களில் நடிச்சதுதான் காரணம்னு புதுசா ஒரு விளக்கம் கொடுத்தாரு.அந்த புதுமையான விளக்கம் கொடுத்த சர்ச்சையே இங்கே இன்னும் தீர்ந்த பாடு இல்லே.இப்ப நீங்க புதுசா நடிகர் திலகம்னு பேர் வச்சு கிளம்பி இருக்கீங்க.
ஏற்கனவே பல வருஷத்துக்கு முன்னால சிவாஜின்னு பெயர் வச்சு ஒரு படம் எடுத்தாரு இயக்குனர் சங்கர் .அது ஒரு மசாலா படம். கூகுள்ல நாம சிவாஜின்னு சர்ச் பண்ணுனா
அது அந்தப் படத்தை தான் காட்டுது. நாங்க எங்க சிவாஜியை தேடுனா கூகுள்ல அந்த படம் தான் வருது .அதப் பாத்தா எரிச்சல்தான் வருது.
இப்ப உங்களோட மசாலா படத்துக்கு நடிகர் திலகம் பேர் வச்சிருக்கீங்க. இப்ப நாங்க நடிகர் திலகம்னு கூகுள்ல சர்ச் பண்ணுனா அது உங்க படத்தை தான் காட்டும். இப்பவே அப்படித்தான்.
நடிகர் திலகம்னு பேருக்கு பின்னால 300 உருவம் இருக்கு. அந்த 300 உருவத்தையும் மறைக்கிற ஒரு முயற்சியாக இது இருக்கு.
உலகத்திலேயே ஒரு சிறந்த நடிகனோட பெருமைகளை சீர்குலைக்கும் முயற்சியா இது இருக்கு.
நாங்க மறுபடியும் சொல்லறது என்னான்னா நீங்க பேர் வெச்சதே தப்புங்கறத விட அந்த பேரையே
நீங்க யோசனை பண்ணி இருக்க கூடாது அப்படிங்கிறது தான்.
ஆரம்பத்தில் பிரபு நடிக்க வந்தப்ப எல்லோரும் சிவாஜி பிரபு அப்படின்னு கூப்பிட்டாங்க. அதுக்கு பிரபு என்ன சொன்னார் தெரியுமா. சிவாஜிங்கிறது அப்பா உழைச்சி சம்பாதிச்சு வாங்குன பேரு.அதனால என்ன அப்படி கூப்பிட வேண்டாம் அப்படின்னு சொல்லி இருக்காரு.
நடிகர் திலகம் 300 படத்துல நடிச்சு சம்பாதிச்சு வாங்குன பேரு புகழை நீங்க ஒரே ஒரு படத்துக்கு பயன்படுத்திக்கிறது என்ன நியாயம் ?
ஒருத்தரோட சம்மதம் இல்லாம
அவங்களோட பேர நீங்க எப்படி வைக்கலாம்? நடிகர் திலகம்னு பேர கொடுத்தது ஒரு ரசிகர்.அது அங்கீகரித்தது பேசும் படம் பத்திரிக்கை. ஏன்னா பேசும் படம் பத்திரிக்கயில தான் அந்த ரசிகர் சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் கொடுக்கலாமா அப்படீன்னு கேள்வியா கேட்டிருந்தார் .அப்ப இருந்துதான் சிவாஜிக்கு நடிகர் திலகம்ன்னு பட்டம் போட ஆரம்பிச்சாங்க. அதனால நடிகர்திலகம்கற பட்டம் சிவாஜிக்கு சொந்தமாச்சு .
இப்போ உங்க படத்துக்கு நீங்க அந்த தலைப்பை வைக்கணும்னு விருப்பம் இருந்தா அந்த ரசிகர், பேசும் படம் பத்திரிக்கை ,சிவாஜி இவங்க மூணு பேரு கிட்டயும் சம்மதம் வாங்கணும்.இது நடக்கிற காரியமா ?
இப்ப நீங்க செய்யற ஒரே ஒரு விஷயம் என்னான்னா உடனடியா அந்த தலைப்பை மாத்துங்க. அப்படி நீங்க மாத்துனீங்கன்னா தான் இதுக்கு பின்னால வர்றவங்க இது மாதிரி ஒரு தப்பு செய்ய மாட்டாங்க! அப்படி அவங்க தப்பு செய்யறதுக்கும் நீங்க இடம் கொடுக்க வேண்டாம்.
உங்க ஊரு நடிகர் திலகன் எல்லாம் இப்போ உயிரோட இருந்திருந்தா உங்கள கண்டபடி திட்டி இருப்பாரு.
உங்க ஊரு பெரிய நடிகர்களே இத ஒத்துக்க மாட்டாங்க.
பின்னால எதிர்மறையான விமர்சனம் ரொம்ப வரும்.
வீணான எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் ..
செந்தில்வேல் சிவராஜ் ...
கருத்துகள்
கருத்துரையிடுக