சினிமாவில் டாக்டர் வேடம் செய்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.துண்டு துக்கடா காட்சிகளில் இருந்து அதிகம் நாலைந்து காட்சிகள் மட்டுமே வந்து போகும் காட்சிகளாக படங்களில் டாக்டர் வேடங்கள் செய்திருப்பார்கள்.
ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரும்பாலான எல்லா பெரிய நடிகர்களும் டாக்டர் வேடத்தை செய்திருப்பார்கள்.
நடிகர் திலகம் ஒரு வேடத்தை செய்து விட்டால் அதற்குப் பிறகு அந்த வேடத்தில் சிறப்பாக செய்தவர்கள் யார் என்று நாம் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
நடிகர் திலகம் திரையில் மருத்துவராக தோன்றி நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் காலத்தால் அழியாதவை.
1) பாலும் பழமும்
2) நவராத்திரி
3) நிறைகுடம்
4) அண்ணன் ஒரு கோயில்
5) Dr . சிவா
6) மனிதரில் மாணிக்கம்
7) நல்லதொரு குடும்பம்
8) கீழ் வானம் சிவக்கும்
9) தாம்பத்தியம்
இந்த டாக்டர் வேடத்தை அதிக அளவு செய்த கதாநாயகன் என்ற வரிசையிலும் நடிகர்திலகமே முதலில் இருக்கிறார் .
நடிகர் திலகம் பல திரைப்படங்களில் வேறு சில நடிகர்களும் நடித்த டாக்டர் வேடங்களும் நல்ல பெயர் வாங்கித் தந்தவை.
உதாரணத்துக்கு சில ..
தெய்வமகன் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன்
உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன்
வசந்த மாளிகை படத்தில் எஸ் வி சகஸ்ரநாமம்
உத்தமன் படத்தில் பாலாஜி
இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம் ..
இப்படி டாக்டர் வேடத்துக்கு உதாரணம் சொல்லும் போது நடிகர் திலகத்தைத் தவிர மற்ற நடிகர்களை சொல்லும்போது கூட நடிகர்திலகம் நடித்த படங்களை தான் உதாரணம் சொல்ல வேண்டி உள்ளது ..
நடிகர்திலகம் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு தனித்தன்மையுடன் நடித்திருப்பார். இன்று பிரபலமாக மீடியாக்கள் மூலம் பேசப்படுகிற SALT & PEPPER லுக் , பாலும் பழமும் திரைப்படத்தில் அன்றே அறிமுகபடுத்தி இருப்பார் நடிகர் திலகம். மருத்துவர்கள் முக்கால்வாசிபேர் நடிகர் திலகம் போல தங்களுடைய கெட்-up மாற்ற முயன்றனர் அக்காலத்தில் .
பாலும் பழமும் படத்தில் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் டாக்டர் வேடத்தில் வெகு இயல்பாக பிரமாதப்படுத்தி இருப்பார்.டாக்டர் வேடத்திற்கு ஏற்ற கண்ணிய தோற்றத்தை உருவஅமைப்பில் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பார்.பாலும் பழமும் ரவி நடிகர்திலகத்தின் உன்னதங்களில் ஒன்று.
நவராத்திரி திரைப்படத்தில் வயதான மனோதத்துவ நிபுணர் : ஆஹா...ஆஹா...சாவித்திரியுடன் பேசும் அந்த பொறுமையான பாங்கு, பின்பு 10 அடி நடந்தபின்பு அந்த STETHOSCOPE மறந்து வைத்தது நினைவுக்கு வர திரும்பி வரும் அந்த நடை....அடடா...என்ன ஒரு நேர்த்தியான வெளிப்பாடு.பைத்தியமாக நடிக்கும் சாவித்திரியுடன் பேசி நடிக்கும் காட்சிகள் அலட்டல் இல்லாத நடிப்பு.சாவித்திரியை எடை போட்டதை சாவித்திரியிடமே விவரிக்கும் கண்ணியமான பாங்கில் நடிகர்திலகத்தின் டாக்டர் வேடமானது நிஜ டாக்டரையே உலவ விட்டது போல் இருக்கும்.
நிறைகுடம்.ஆரம்பத்தில் மருத்துவக் கல்லூரி மாணவராக நடிகர் திலகம் நடித்திருப்பார். பிற்பகுதி கண் மருத்துவராக ..
Dr SIVA - ஒரு மிகவும் ஸ்டைலான ஒரு தொழுநோய் டாக்டர். புகைக்கும் பைப்புடன் எப்போதும் ஒரு ஸ்டைல்.
புகைக்கும் காட்சிகள் டாக்டர் வேடத்திற்கு ஏற்புடையனவா என்று கருதினாலும் அந்த புகைக்கும் பைப் ஸ்டைல்களில் நடிகர்திலகம் ஸ்டைல்சக்கரவர்த்தியாகவே நினைக்க வைப்பார்.நடிகர்திலகம் தான் செய்த எந்த டாக்டர் வேடமும் ஒன்று போல் மற்றதை நினைக்கவே வைக்காது.எத்தனை எத்தனை வேறுபாடுகள் ஒவ்வொரு டாக்டர் வேடத்திற்கும்.
மனிதரில் மாணிக்கம் - ஒரு விதமான அசட்டுத்தனம் நிறைந்த பொதுநல மருத்துவர்.இதற்கு முன் வந்த படங்களில் அவர் செய்த டாக்டர் வேடங்களுக்கும் இந்த படத்தில் அவர் செய்த டாக்டர் வேடத்திற்கும் தான் எத்தனையெத்தனை வித்தியாசம்.
அதன் பிறகு அண்ணன் ஒரு கோயில் - இதை பற்றி சொல்லவே வேண்டாம்..அவ்வளவு ஒரு நளினம்.பாசமலர் போலவே இதுவும் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. நல்ல ஒரு சஸ்பென்ஸ் திரில்லராகவும் புனைக்கப்பட்ட கதை அமைப்பு. சூப்பர் ஹிட்டான திரைக்காவியம்.
நல்லதொரு குடும்பம் - ஒரு விளையாட்டு பிள்ளையாக இருந்து பின்பு பொறுப்புள்ள ஒரு மருத்துவராக மாறி அதனால் குடும்பத்தில் விரிசல் வந்து மனம் வேதனைப்படும் ஒரு நல்ல ஒரு பாத்திரம்.
கீழ்வானம் சிவக்கும் - ஒரு கண் டாக்டர் - சந்தேகம் கொண்ட மருமகள், மகனை பழிவாங்க வந்த ஒரு மனிதனிடம் கடமை .
அத்துடன் மகனை காப்பாற்ற வேண்டாமா என்ற பரிதவிப்பு...இப்படி பல பரிமாணங்கள்...!
அசல் கண் டாக்டராகவே வாழ்ந்து காட்டி இருப்பார் நடிகர் திலகம் ..
நடிகர் திலகத்தின் இந்த டாக்டர் வேடம் மறக்க முடியாத ஒன்று ..
தாம்பத்தியம். நடிகர் திலகம் கடைசியாக செய்த டாக்டர் வேட படம் தாம்பத்தியம்.
மேலே குறிப்பிட்ட படங்களில் நடிகர் திலகத்தின் வேடங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை வித்தியாசமானவை. சமூகத்தில் டாக்டர்கள் என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் என்று நடிகர் திலகத்தின் டாக்டர் வேடங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மருத்துவத்துறைக்கு நடிகர் திலகம் செய்த ஒரு அர்ப்பணிப்பு மிக்க செயல் என்று இதைக் கூறலாம்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக