நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படம் தயாரித்த நடிகர் நடிகையர்கள் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர்கள் ..
ஸ்ரீதருக்கு ஓர் அமரதீபம்....
ஸ்ரீதர் திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முன்பு திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த காலம்.கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு சிவாஜியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது.கையிலோ காசு இல்லை. அந்த சமயத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கதையை சிவாஜிக்கு சொன்னார். அந்தக் கதையை சிவாஜிக்குசொன்ன ஸ்ரீதர் உங்களை வைத்து நான் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று தன் ஆசையை சொன்னார். ஆனால் உங்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு கூட என்னிடம் பணம் இல்லை என்று சிவாஜியிடம் கூறினார். நீங்கள் சம்மதம் கொடுத்தால் நீங்கள் நடிப்பதாக ஒரு விளம்பரம் பத்திரிக்கையில் செய்து விடுகிறேன். விநியோகஸ்தர்கள் தரும் பணத்தை வைத்து படத்தை முடித்து விடுகிறேன் என்று சிவாஜியிடம் கூறினார் .சிவாஜியும் அவருக்கும் ஒரு வாழ்வளிக்கலாமே என்று தன் சம்மதத்தை கூறிவிட்டார்.
அப்படி சிவாஜி அட்வான்ஸ் எதுவும் வாங்காமல் ஸ்ரீதர் தயாரிக்க சம்மதம் கொடுத்த படம் அமரதீபம்.
ஸ்ரீதர் அமரதீபம் படத்தை வீனஸ் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து தயாரித்தார்.
ஸ்ரீதரும் அந்த படத்திற்கான விளம்பரத்தை பத்திரிகைகளில் செய்து கிடைத்த பணத்தைக் கொண்டு படத்தை முடித்து விட்டார்.படமும் நன்றாக ஓடியது. ஸ்ரீதருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்ததுடன் ஸ்ரீதர் அடுத்து முன்னேற ஒரு அடித்தளமாக அமைந்தது அமர தீபம். இந்த அமர தீபத்தை தான் சிவாஜி பிலிம்ஸ் ஹிந்தியில் தயாரித்தது .இப்படி ஸ்ரீதருக்கு தயாரிப்பாளராக முதலில் வாய்ப்பு வழங்கியவர் சிவாஜி
சுப்பையாவுக்கு ஒரு காவல் தெய்வம்..
ஜெயகாந்தனின் கைவிலங்கு நாவலை படித்த சுப்பையாவுக்கு அதை படமாக்கும் ஆசை ஏற்பட்டது.
படத்தின் முக்கிய பாத்திரமான சாமுண்டி என்ற கதாபாத்திரத்தில் சிவாஜியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும், படத்தையும் வியாபாரம் செய்துவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த நேரத்தில் சிவாஜிக்கும் சுப்பையாவுக்கும் பரஸ்பர உறவு இல்லை. தான் நடிக்க அழைத்தால் சிவாஜி மறுத்து விடுவாரோ என்று ஏவிஎம் சரவணனிடம் இதைப் பற்றி சுப்பையா சொல்ல, சரவணன் சிவாஜியை பார்த்து பேச, அவருக்காக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிவாஜி. படத்தில் நடிக்க சுப்பையா தனக்கு பணம் ஏதும் தர வேண்டாம் என்று சொல்லி இருந்தார் சிவாஜி. ஆனால் சுப்பையா டிபன் பாக்ஸில் சிறிதளவு பணத்தை வைத்து சிவாஜி சாப்பிடப் போகும் நேரத்தில் மேஜையில் வைத்து விட்டார். இதைப் பார்த்து கோபமடைந்த சிவாஜி அந்த பணத்தை வாங்கவில்லை.
சிவாஜிக்கு வருத்தம் தந்த நிகழ்ச்சி ஆகும் இது.
இந்த படத்தில் சிவாஜி முக்கிய வேடத்தில் நடித்ததால் படமும் வியாபாரம் ஆயிற்று. இப்படி சுப்பையாவுக்கு சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் சிவாஜி.
அந்தப் படம் தான் காவல் தெய்வம்.
விகே ராமசாமிக்கு ஒரு செல்வம்.
செல்வம் படத்திற்கு முன்பே சிவாஜி மக்களைப் பெற்ற மகராசி படத்தை
வி.கே .ராமசாமிக்காக நடித்துக் கொடுத்தார். வடிவுக்கு வளைகாப்பு என்ற திரைப்படமும் வி.கே. ராமசாமி
A.P. பி நாகராஜன் உடன் கூட்டு சேர்ந்து தயாரித்த திரைப்படம் தான் .அதற்குப் பின்பு பல வருடங்கள் கழித்து செல்வம் படத்திலும் நடித்துக் கொடுத்தார் சிவாஜி.
கே ஆர் விஜயாவுக்கு ஓர் நான் வாழவைப்பேன் ..
ஒரு இந்தி படத்தின் ரீமேக் தான் நான் வாழ வைப்பேன்.
இந்தத் திரைப்படத்தை கே ஆர் விஜயா தயாரிக்க முன் வந்த போது, அந்தப் படத்தில் இடம் பெற்ற கௌரவ வேடமான ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புவதாக சிவாஜி சொன்னார். ஆனால் சிவாஜி படம் முழுவதும் வரும் கதாநாயக வேடத்தில் தான் நடிக்க வேண்டும் என்று K.R.விஜயா விருப்பப்பட்டார். அப்படி கே ஆர் விஜயா தயாரித்த திரைப்படம் நான் வாழவைப்பேன்.
ஏவிஎம் ராஜனுக்கு ஓர் லாரி டிரைவர் ராஜாக்கண்ணு..
ஏவிஎம் ராஜனுக்கு சிவாஜி நடித்துக் கொடுத்த படம் லாரி டிரைவர் ராஜாக்கண்ணு.
தயாரிப்பு புஷ்பாராஜன் என்ற பெயரில் படத்தை தயாரித்தார் ஏ.வி.எம்.ராஜன்.தன் மனைவியான புஷ்பலதா மற்றும் தன் பெயரான ராஜன் என்பதையும் இணைத்து இந்தபடத்தை தயாரித்தார்.இப்படி ஏவிஎம் ராஜனுக்கு சிவாஜி நடித்துக் கொடுத்த படம் இந்த படம்.
எம் எஸ் விஸ்வநாதனுக்கு ஓர் அமர காவியம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து எம் எஸ் விஸ்வநாதன் தயாரித்த ஒரே படம் அமர காவியம் .அந்தக் காலத்தில் பெரும்பாலும் எந்த இசையமைப்பாளரும் படத் தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை.
எம் எஸ்.விஸ்வநாதனே பல காலம் கழித்து தான் சிவாஜி வைத்து ஒரு படமாவது தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த படத்தை தயாரித்தார்.
இப்படி சிவாஜியை வைத்து திரைப்படம் தயாரித்த ஒரே இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் தான் .
சாவித்திரிக்கு ஓர் பிராப்தம் .
இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி நன்றாக வெற்றியடைந்த மோக மனசுலு என்ற திரைப்படத்தின் கதையாகும்.ப்ராப்தம் படத்தை சாவித்திரி தயாரித்தது மட்டுமல்லாமல் படத்தை இயக்கியும் இருந்தார். தமிழ் ரசனையாளர்கள் இந்த படத்தை ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் திலகம் சிவாஜி சாவித்திரிக்கு அறிவுரை செய்தும் சாவித்திரி பிடிவாதமாக தயாரித்து இயக்கிய படம் பிராப்தம். இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் இனிமையானவை.
நடிகர் விஜயகுமாருக்கு ஓர் நெஞ்சங்கள். நடிகர் விஜய் குமார் நடிகர்திலகத்தை வைத்து தயாரித்த ஒரே ஒரு படம் நெஞ்சங்கள் .
தேங்காய் சீனிவாசனுக்கு ஓர் கிருஷ்ணன் வந்தான் .
தேங்காய் சீனிவாசன் சிவாஜி வைத்து தயாரித்த படம் கிருஷ்ணன் வந்தான்.
தேங்காய் சீனிவாசனுக்கு சிவாஜி பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்த படம் கிருஷ்ணன் வந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக