சிவாஜி படங்களில் திருஷ்டி பரிகாரங்களாய் அமைந்த பாடல்கள் ..
ரோடு நல்லா இருக்கும் .வண்டிகளில் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருப்போம்.ஒரு அலுங்கலில்லை .குலுங்கல் இல்லை.அப்படி போய்க் கொண்டிருக்கும் வண்டி ஸ்பீடு பிரேக்கர் வந்தால் சடாரென தடுமாறுமே ,அதே போல்தான் நன்றாக போய்க் கொண்டிருக்கும் திரைப்படத்தில் தேவையில்லாமல் ஒரு பாடல் வந்து அந்த திரைப்படத்தை நாம் ரசித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வெறுப்பேற்றும்.
பெரும்பாலும் சிவாஜி படங்களில் தேவையில்லாத ,சம்பந்தம் இல்லாத பாடல்கள் இருக்காது.
சில படங்களில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும் அந்தப் படத்துக்கு அது தேவையில்லாத பாடலாக கூட இருக்கும்.
அப்படி நடிகர் திலகத்தின் சில படங்களில் தேவையில்லாமலும், சில படங்களில் திருஷ்டி பரிகாரங்களாகவும் அமைந்த பாடல்கள் என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மனின்
வீரத்தையும் சாகசத்தையும்
நடிகர் திலகம் தன் நடிப்பால்
நமக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்
படம் முழுவதும்.வைத்த கண் வாங்காமல் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சீராக கதை சென்று கொண்டிருக்கின்றது .தடக் தடக் என்று ரயில் பெட்டிகள் நகர்வது போல ஒவ்வொரு காட்சியும் நம்முடைய மனம் அதிலேயே சென்று கொண்டு இருக்கிறது. படம் துவங்கியதில் இருந்து வெற்றி வடிவேலனே பாடலில் தொடங்கி, கள்ளர் கூட்டத்தை அடக்கி வந்து விசாரணை செய்தல், வானம் பொழிகின்றது பூமி விளைகின்றது வசனங்கள், மந்திரியிடம் குறுக்கு விசாரணை செய்தல் என்று ஒவ்வொரு காட்சிகளும் நம்மை கட்டிப்போட்டும் ,நாமும் அதில் கட்டுண்டும் படம் சீராக சென்று கொண்டிருக்கையிலே ,
வீரபாண்டியனின் வீர தீரத்தை சொல்லும் கதையிலே,
எதற்கு இந்த காமெடி நடிகர்களின் பாடல். பாடல் நன்றாக இருந்தாலும் அந்த கதைக்கு அது தேவைதானா ?
ஆத்துக்குள்ள ஊத்து வெட்டி ஆசையாக தண்ணீ மோண்டு நேத்து நீ சொன்ன சொல்லே ஆலேலங்குயிலே ,
என்ற இப் பாடலை
காமெடி நடிகர்கள்
ஏ. கருணாநிதி குலதெய்வம் ராஜகோபால் முத்துலட்சுமி ஆகியோர் பாடுவதாக படத்தில் வரும் இந்த பாடல் தேவையில்லாதது.
தினவு எடுத்த தோள்கள் வீரம் பேசிக் கொண்டிருக்க விகடமாக வரும் காமெடி பாடல் எதற்கு ?
அடுத்து தெய்வமகன்..
மூன்று சிவாஜிகளும் நீ பெருசா நான் பெருசா என்று மாறி மாறி நம்மை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு காட்சியாக. ராஜு நான் சொன்னதை செய் என்று மேஜரை மிரட்டி எடுப்பார் பெரிய சிவாஜி.
பாபா பாபா என்று உருகி தள்ளுவார் நாகையாவிடம் கண்ணன் சிவாஜி .
மம்மி மம்மி என்று பண்டரிபாயை கொஞ்சும் விஜய்யான சிவாஜி நம்மையும் கொஞ்ச வைப்பார். ஆஸ்காருக்கு தென்னகத்திலிருந்து அனுப்பப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற அந்தஸ்து வேறு. இப்படிப்பட்ட ஒரு படத்தில் கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ ?
என்ற பாடல் படத்துக்கு ஒரு திருஷ்டி பரிகாரம் என்றே சொல்லலாம்.
அடுத்து ராஜ ராஜ சோழன்..
ராஜராஜ சோழன் படத்தில்
எதிரி நாட்டு மன்னனாக வரும் ஆர் எஸ் மனோகர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில், சகுந்தலா ஆடிப் பாடும் மயக்கும் மன்னன் நீயன்றோ ,என்ற பாடல் சலிப்பைத் தந்த பாடல்.
படத்தின் எடிட்டிங்கிலேயே இந்த படத்தை கத்தரி போட்டு கட் செய்து இருக்கலாம் என்பதை விட, இந்தப் பாடலையே ரெக்கார்ட் செய்து இருக்கக் கூடாது என்பதுதான் சரி .
அடுத்து பாபு...
வரதப்பா வரதப்பா,
இதோ எந்தன் தெய்வம் ..
இந்தப் பாடல்களுக்கு மேல் வேறு என்ன வேண்டும் அந்த படத்துக்கு .ஒரு சாதாரண ரிக்சாக்காரனின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை எவ்வளவு அற்புதமாக திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்தப் பாதையில் சீரான வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் பாபுவின் திரைக்கதை ஓட்டத்தில், வெண்ணிற ஆடை நிர்மலா பாடும் அந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல் என்ற பாடலை தூக்கி இருக்கலாம். சில பேருக்கு இந்த பாடல் பிடித்து இருக்கலாம். பாபுவின் கண்ணியத்தையும் கடமையையும் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த படத்திலே அந்தப் பாடலை புகுத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதனால் அந்தப் படத்துக்கு அந்தப் பாடல் தேவைதானா?
சிவந்தமண்...
வெளிநாட்டில் இருந்து பாரத் வருகிறார். உயிர் நண்பனை இழக்கிறார். இவரே புரட்சியை கையில் எடுக்கிறார் .சர்வாதிகாரத்தை ஒழிக்க பாரத் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரிய விறுவிறுப்பு பரபரப்பு .சாதாரண கமர்சியல் திரைப்படங்களில் ஒரு காமெடி பாடல் வைப்பதைப் போல,
அவ்வளவு பிரமாண்டமான இந்த பெரிய படத்தில் முத்தமிடும் நேரமிப்போ என்ற பாடலை தவிர்த்து இருக்கலாம்.
ஒரு ராஜா ராணியிடம், பார்வை யுவராணி, பட்டத்து ராணி என்று பிரமாதமான மற்ற பாடல்கள் இருக்கையிலே இந்தப் பாடலை வைத்து தான் இதன் திரைக்கதையை நகர்த்த வேண்டும் என்று அவசியம் இல்லை.
அடுத்து எங்கிருந்தோ வந்தாள்.
இந்தப் படத்தின் கதையானது ஒரு கமர்சியல் கதை கிடையாது. படத்தில் திரைக்கதையும் காட்சிகளும்
சீரியஸாக சென்று கொண்டிருக்கும் உணர்வுப் பூர்வமான களத்தில் அமைந்தது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் நாகேஷ் பாடும் ஹலோ மை டார்லிங் என்ற காமெடி பாடல் தேவையில்லாத ஒரு இடைச்செருகலாக அமைந்திருக்கும் .
வியாபாரத்திற்காகவும் ,
ரிலாக்ஸ் ஆகவும் ரசிகர்கள் படத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்துவார்கள் ,
என்றாலும் சிவாஜி படங்களில் இது தேவையில்லாதது.
அடுத்து நாம் பிறந்த மண்..
படத்தின் ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்தும், சுதந்திரம் பெற்றபின் அதற்குப் பின் நிகழும் ஒரு தியாகியின் வாழ்க்கை சம்பவங்களை வைத்தும் எடுக்கப்பட்ட திரைப்படம் நாம் பிறந்த மண். சிவாஜியின் மகனாக வரும் கமலஹாசனின் கேரக்டரை சொல்வதற்காக கமலஹாசன் பாடுவதாக வரும் ஆசை போவது விண்ணிலே என்ற பாடலையும் தவிர்த்து இருக்கலாம்.
மேற் கூறிய இந்த பாடல்கள் எல்லாம் பாடல்கள் நன்றாக இல்லை என்று சொல்லவில்லை. இந்தப் பாடல்கள் அந்தப் படத்தின் கதை களங்களுக்கு தேவை தானா என்கிற அர்த்தத்தில் தான் சொல்லப்பட்டுள்ளது.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக