நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அண்ணன் வி. சி. தங்கவேல் அவர்கள் பற்றியான தகவல்கள் :-
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூன்றாவது அண்ணனான வி. சி. தங்கவேல் அவர்கள் நாகப்பட்டிணத்தில் அவரது தந்தை சின்னையா மன்றாயர் ரயில்வே பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது விழுப்புரத்தில் பிறந்தார்.
சின்னையா மன்றாயர் ஆரம்பகாலத்தில் ரயில்வேயில் கேங்க் மேனாக இருந்த போது அதாவது ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு வேலையில் இருந்த போது முதலில் சீர்காழியில் பணிபுரிந்து வந்தார் அங்கு அவர்களின் முதல் மகனான திருஞானசம்பந்தமூர்த்தி பிறந்தார்.
அவருக்கு திருஞானசம்பந்தமூர்த்தி என்று பெயரிடுவதற்கு காரணம் 63 நாயன்மார்களில் முதன்மையான குழந்தை பாலகனான திருஞானசம்பந்தமூர்த்தியின் பிறந்த ஊரான சீர்காழி ஸ்தலம் என்பதால் அப்பெயர் இடப்பட்டது.
அதன் பிறகு சீர்காழி அடுத்த சிதம்பரத்தில் பணியிடை மாற்றம் சின்னையா மன்றாயருக்கு ஏற்பட்டதால் அங்கு பிரசிதி பெற்ற நடராஜர் திருபெயரில் ஆதி கருவறை பெயரான கனகசபைநாதர் என்பதை இரண்டாவது மகனுக்கு கனகசபைநாதன் என்று பெயரிட்டார்.
அதன் பிறகு இரண்டு பிள்ளைகளுடன் ராஜாமணி இருந்த நிலையில் சின்னையா மன்றாயர் பதவி மாற்றம் பெற்று நாகப்பட்டினத்தில் ரயில்வே பணியில் வேலை மாற்றம் பெற்று போக ராஜாமணி அம்மாள் அவரது தந்தை சின்னசாமி காளிங்கராயர் விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் ரயில்வே அலுவலக வேலையில் பணியாற்றி வந்தார்.
அப்போது ராஜாமணி அம்மாள் பிரசவ நிலையில் மூன்றாவது குழந்தையுடன் தனது தந்தை சின்னசாமி காளிங்கராயர் பாதுகாப்பில் தாய் வீட்டிற்கு பேறு காலத்தில் வந்தார்.
அப்போது மூன்றாவது குழந்தை பிறக்க விழுப்புரத்தில் உள்ள பிரசிதி பெற்ற முருகன் கோவிலான மயிலம் முருகன் திருபெயரில் ஒன்றான தங்கவேல் என்றே அவரது பெற்றோர்கள் பெயரிட்டனர்.
பின்பு அதை தொடர்ந்து சின்னையா மன்றாயர் சிறிது காலம் விழுப்புரம் ரயில்வே சரகத்திலேயே கேங்க் மேனாக பணிபுரிந்து வந்த காலத்தில் தான் தங்கவேலை தொடர்ந்து நமது ஆதர்ச நாயகன் கணேசமூர்த்தி பிறந்தார் அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தார்.
இவருக்கு கணேசமூர்த்தி என்று பெயரிட காரணம் சின்னையா மன்றாயர் அடுத்ததாக திருச்சிராப்பள்ளிக்கு பணிமாற்றம் ஏற்பட்டதால் திருச்சியின் மைய கடவுளான மலைக்கோட்டை மாணிக்க விநாயகரின் திருப்பெயரான கணேசமூர்த்தி என்ற பெயரை நேர்த்தி கடனாக தனது 4வது மகனுக்கு வைத்தார்.
ஆனால் அப்போது தான் சின்னையா மன்றாயர் காங்கிரஸ் போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெள்ளைய ஆதிக்கத்தை எதிர்த்தார்.
ஆனால் அப்போது தீவிரமாக சின்னையா மன்றாயர் ஆங்கிலேயர் எதிர்ப்பில் சமரசம் இல்லாமல் சீறி பாயும் சிங்கமாக செயல்பட்டார்.
அதை கண்டு மிரண்டு போன ஆங்கிலேயர்கள் சின்னையா மன்றாயரை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தி அவரை காவல் அதிகாரிகள் லத்தியில் அடித்து தாக்கியபோது தான் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்தது பெரும் சோகம் .சின்னையா மன்றாயர் சிறை சென்ற அதிர்ச்சிகரமான செய்தியை கேட்டு அவரது மனைவி ராஜாமணியின் தந்தை சின்னசாமி காளிங்கராயர் மனமுடைந்து இறந்து போனார்.
அதன் பிறகு நான்கு பிள்ளைகளுடன் நிர்க்கதியாக நிறுத்தப்பட்ட ராஜாமணி அம்மாள் வேறு வழியில்லாமல் விழுப்புரத்தில் இருந்து திருச்சியில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் குடி பெயர்ந்தார்.
அப்போது தனது கணவருக்கு திருச்சியில் இருந்து வேலூர் சிறைசாலைக்கு கடிதம் எழுதி தனது குடும்ப நிலையை கூறிவந்தார்.
மேலும் அப்போது ராஜாமணி அம்மாள் தனது குடும்ப வறுமை போக்க இரண்டு கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து அங்கு 4 பிள்ளைகளையும் படிக்க வைத்தார்.
அப்போது சின்னையா மன்ராயர் சிறையில் நன்னடத்தை காரணமாக விரைவாக விடுதலை பெற அவர் தனது மனைவி ராஜாமணி மற்றும் பிள்ளைகளை காண திருச்சி சங்கிலியாண்டபுரத்திற்கு வந்தார்.
அப்போது தான் தனது 4வது பிள்ளையான கணேசனை கண்டு உச்சி முகர்ந்து பாராட்டி மகிழ்ந்தார்.
மேலும் அப்போதும் குடும்ப வறுமை தீர்ந்ததாக இல்லை.
அதன் பிறகு தனது முதல் மகனான திருஞானசம்பந்தமூர்த்தி, கனகசபைநாதன் இருவரும் அப்போது பரவிய விஷ காய்ச்சலில் ஒருவர் பின் ஒருவர் இருந்து போக வி. சி. தங்கவேல் மற்றும் அப்போது நாடக மோகத்தில் தந்தை தாயை பிரிந்து சென்ற நமது நடிகர் திலகம் குட்டி கணேசனையும் காப்பாற்ற வேண்டும் என்று சமயபுரம் மாரியம்மன், திருச்சி வயலூர் முருகன், திருப்பதி ஏழுமலையான் வரை கடுமையான பிராத்தனை வேண்டுதலை சின்னையாவும், ராஜாமணியும் வேண்டி கொண்டனர்.
அதன் பிறகு இருவரும் இறைவனது கருணையால் பிழைத்து கொள்ள, குடும்பத்தின் மூத்த பிள்ளைகள் இறந்த சோகம், கவலையும் தாண்டி தங்கவேல் மேல் படிப்பை தொடர முடியாமல் போக தந்தை தாயையும் குடும்பத்தை முன்னேற்றும் சூழல் அவர் கையில் வீழ்ந்தது.
அதன் பிறகு தனது இரண்டு பிள்ளைகளும் அந்த மரண கண்டத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் இறைவனுக்கு அளித்த வேண்டுதல் படியே தனது 5 வது ஆண் குழந்தைக்கு திருச்சி வயலூர் முருகன் திருபெயரில் ஒன்றான சண்முகம் என்றும் அதன் பிறகு 6 வதாக பிறக்கும் குழந்தைக்கு திருப்பதி ஏழுமலையான் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஆண் குழந்தை பிறந்தால் பாலாஜி, வேங்கடநம்பி என்றும் பெண் குழந்தையாக பிறந்தால் தாயார் பத்மாவதி என்றும் பெயரிடுவதாக கூறிய பிறகு பெண் குழந்தையாக பிறக்க தாயார் பெயரான பத்மாவதி என்று பெயரிடப்பட்டது.
அதன் பிறகு தங்கவேல் ஆரம்ப காலத்தில் திருச்சியில் ஒரு பஸ் கம்பெனியில் மெக்கானிக்காகவும், டிரைவராகவும் பணிபுரிந்து வந்தார்.
அதன் பிறகு கணேசன் அவர்கள் கொஞ்சம் நாடகத்தில் இருந்து ஒதுங்கிய காலத்தில் அவரது தாயார் ராஜாமணி அம்மாள் இனி நீ நாடகத்திலும் திரை கூத்திலும் நடிக்க கூடாது என்று சத்யம் வாங்கி கொண்டார் என்பது ஒரு செய்தி அதன் பிறகு தங்கவேல் உடன் அவரது பஸ் கம்பெனியில் மெக்கானிக்காக கணேசன் சேர்ந்தார்.
திருச்சியில் பேருந்து பணிமனையில் நமது கணேசன் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் தான் மீண்டும் அவரது நாடக குழு சகாக்கள் மூலம் மீண்டும் நடிப்பதற்கு சென்றுவிட்டார்.
பின்பு அயராத உழைப்பில் இருந்த தங்கவேல் தனது பெற்றோர் மற்றும் தம்பி சண்முகம், பத்மாவதி ஆகியோரை தனது பாதுகாப்பில் அரவணைத்து வந்தார்.
அதன் பிறகு நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகில் நிலையான நடிகராக மாறி போன பிறகு தஞ்சாவூர் சூரக்கோட்டை அரண்மனை பண்ணை வீடு தோட்டம் ஆகியவற்றை பராமரிக்கும் பொறுப்பு அண்ணன் தங்கவேலிடமே வந்தது.
சிவாஜி கணேசன் திரையில் நடித்து கொண்டிருக்கும் போது தான் அவர் மனதில் ஒரு பெரிய மன கவலையும் சோகமும் முள்ளாக தைய்த்து கொண்டிருந்தது.
அதுதான் தனக்கும் தனது குடும்பத்திற்கும் வெளிச்சம் பெறும் கல்வியறிவும், மேம்பட்ட ஞானமும் .அதற்காக ,தான் கல்வி பயில முடியாமல் போனாலும் தனது தம்பி சண்முகத்தை இரவும் பகலுமாக அவரது கல்வி வளர்ச்சியை சிவாஜி கணேசனே பார்த்து கொண்டார்.
மேலும் தம்பி சண்முகத்தை வெளிநாடான லண்டனிற்கு அனுப்பி 3 வருட காலம் மேல் கல்வியை பயில வைத்தார்.
மேலும் சண்முகம் அந்த கல்வியை பயின்றுவிட்டு வந்த போது சிவாஜி கணேசன் எங்கள் குடும்பத்திலேயே அதிகம் படித்த முதல் பட்டதாரி என்று தனது தம்பி சண்முகத்தை கூறுவாராம்.
பின்பு சண்முகம் லண்டனுக்கு அந்த சிறுவயதில் கல்வி பயில சென்ற போது பெற்றோர்களான சின்னையா ராஜாமணி இருவரும் ஆனந்த கண்ணீர் வடித்த படியே அனுப்பி வைத்தனர். அதற்கு ஒரே காரணம் சண்முகம் குடும்பத்தில் கடைகுட்டி செல்லபிள்ளை என்பதே காரணமாகும்.
ஆனால் சிவாஜி கணேசன் அவர்கள் இப்போது அவன் உங்கள் மகன் இல்லை எனது மகன் நீங்கள் பெற்ற பாசத்தை காட்டி அவன் மனதை கோழை ஆக்கி விடாதீர்கள் என்று ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது தாயார் ராஜாமணி அம்மாள் வெளிநாடுகளில் பெண்கள் மோகம் அதிகம் என்பதால் அப்போது சண்முகத்திடம் அங்கு யாரிடமும் காதல் வசப்பட்டு திருமணம் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என சத்தியம் வாங்கி கொண்டு அனுப்பினார்.
அதே போல் அன்னையின் ஆணையையும், அண்ணனின் விருப்பத்தையும் நிறைவேற்றிவிட்டு சண்முகம் நாடு திரும்பினார்.
மேலும் அதன் பிறகு அண்ணன் தங்கவேல் குடும்ப சொத்தையும், தம்பி சண்முகம் என்னையும் எங்கள் குடும்பத்தையும் கவனித்து கொள்வான் என்று பெருமிதமாக சிவாஜி கணேசன் எங்கும் கூறிகொள்வார்.
அதன் பிறகு தம்பி சண்முகம் சிவாஜி கணேசன் நடிப்பையும், கால்ஷீட்டையும், சம்பளத்தையும் எந்த வித சமரசம் இல்லாமல் கெடுபிடியான ஆளாக சண்முகம் செயல்பட்டு வந்தார்.
மேலும் நிலபுலன்கள் சொத்துக்கள் வாங்கும் போது அண்ணன் தங்கவேல் மற்றும் சண்முகமுமே பார்த்து கொண்டனர்.
மேலும் தியேட்டர் நிர்வாகங்களை அவரது மைத்துனர் பத்மாவதி கணவர் வேணுகோபால் அவர்கள் பார்த்து கொண்டனர்.
மேலும் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு உறுதுணையாக இருந்த அவரது தம்பி சண்முகம் அவரது அரசியலிலும் ஒரு வேளை உறுதுணையாக இருந்திருந்தால் சிவாஜி கணேசன் அரசியல் புகழும் மறைக்கபடாமல் இருந்திருக்கும்.
அந்த அளவிற்கு வி. சி. சண்முகம் அரசியலிலும் கண்டிப்பான பேர்வழி . அதை ஒரு முறை சிவாஜி கணேசன் இடம் கேட்ட போது உங்கள் அண்ணன் தங்கவேல் மற்றும் தம்பி சண்முகத்தையும் அரசியலில் ஈடுபடத்தலாமே என்று சிவாஜி கணேசன் இடம் கேட்ட போது அரசியல் எனது சுய விருப்பம். அதில் உடன் பிறந்தவர்கள் மற்றவர்களை உள்புகுத்த மாட்டேன் என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
மேலும் குடும்பத்திலேயே மிகவும் கோபகாரனாக இருந்ததே நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே .அதனாலே அவரது 4 பிள்ளைகளையும் பாசத்துடன் அரவணைத்து தங்கவேல் மற்றும் சண்முகம் வளர்த்து வந்தனர்.
தந்தையின் கோபத்திற்கு ஆளாகிவிட கூடாது என்பதற்காகவே தனது பிள்ளைகளையும் பெங்களூரில் ராணுவ பட்டாளத்தில் வேலையில் இருந்த தனது தங்கை பத்மாவதி கணவர் வேணுகோபால் கவனிப்பில் விட்டனர்.
1980 களில் சண்முகம் பிரபுவை தனது சுய விருப்பதால் நடிக்க வைத்தார்.
ஆனால் இது நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கொஞ்சம் கூட எண்ணமில்லை.
சிவாஜி ஆசையே பிரபுவை ஒரு உயர் காவல் அதிகாரியாக ஆக்குவது தான். ஆனால் அதுவெல்லாம் குடும்பத்துக்கு செயல்பட்டு வராது என்பதே தம்பி சண்முகத்தின் நிதர்சனமானவாதம் .இதனால் ஒரு முறை சிவாஜிக்கும் சண்முகத்திற்கும் வாக்குவாதம் வந்துவிட்டது. நம்ம குடும்பத்தில் உங்களுக்கு பிறந்துவிட்டு அரசாங்க அதிகாரியாக நாலு பேர் முன்னாடி கைகட்டி வாய் பொத்தி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் நிலை நம்ம பிரபுவுக்கு வந்துவிட்டதா என்று சண்முகம் வினவ அப்பாடா இனி உன் இஷ்டம் அவனை போலீஸ் வேலை கூட வேண்டாம் நம்ம அண்ணனுடன் தோட்டம் தொறவு பண்ணை சொத்துக்களை பார்த்து கொள்ள சொல்லி அவரை தஞ்சாவூர் பக்கம் பேக் பண்ணு என கூற, அதுவெல்லாம் எனக்கு தெரியும் என்று சிவாஜியை அதிர்ந்து பேசாத சண்முகம் பிரபுவை நடிகனாக்குவதே என் வேலை என்று கூறி கொண்டு சங்கிலி படத்தில் நடிக்க வைத்தார்.
அதற்கு சிவாஜி கணேசன் கூறிய நடிப்பு அரசியல் எல்லாம் என்னோட போகட்டும் வேறுயாரும் என் குடும்பத்தில் வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து ஆனால் நான் வளர்த்த ஒரு பயலும் (சண்முகம்) எனக்கு பிறந்த ஒரு பயலும் (பிரபு) சேர்ந்து கொண்டு அப்பனுக்கு எதிராக மகனை போட்டிக்கு வளர்க்கிறான் மடையன் என்று சண்முகத்தை கிண்டல் அடித்தார் சிவாஜி கணேசன் அவர்கள்.
அவரது அண்ணன் தங்கவேல் மகன் மனோகர் தங்கபதக்கம், அண்ணன் ஒரு கோயில் போன்ற திரைப்படங்களில் தயாரிப்பில் தனது பங்கை விதைத்தார்.
சிவாஜிகணேசன் அவர்களும்,சண்முகமும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தவர்கள்.கமலா அம்மாளின் தங்கையைத்தான் சண்முகம் திருமணம் செய்து கொண்டார்.தங்கவேல் அவர்கள் வேறு குடும்பத்தில் திருமணம் செய்தவர்.
முறுக்கு மீசை சகிதமாக பார்ப்பதற்கு ஒரு போலீஸ் அதிகாரி போல் இருப்பார்.ஆனால் குணத்தில் அவர் மிகவும் எளிமையானவர்.
அண்ணன் தங்கவேல் அவர்கள் சில காலங்களாக நெஞ்சு வலியில் அவதியுற்ற வந்த நேரத்தில் எதற்கும் சரியான மருத்துவம் எடுத்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் அவரது தம்பி சண்முகம் திடிரென்று மரணத்தை தழுவிய 1986 ஆம் ஆண்டு மனமுடைந்து அழுதார்.
அதன் 1989 ஆம் ஆண்டு 3 வது நெஞ்சு வலியில் தங்கவேல் எதிர்பாராத மரணத்தை தழுவினார்.
இந்த இரண்டு உடன் பிறந்த சகோதரர்களின் மரணத்தை பற்றி சிவாஜி கணேசன் கூறும் போது எனது இரண்டு கைகளையும் இழந்தேன் என்று மன குமறலுடன் கூறினார்.
செந்தில்வேல் சிவராஜ்.
தகவல் உதவி:பாலகிருஷ்ணன்
கருத்துகள்
கருத்துரையிடுக