சின்னையா மன்றாயருக்கு ஆறு பிள்ளைகள்.அவர்களில்
5 ஆண் பிள்ளைகள்.ஒரே மகள்.
சிவாஜி நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சிவாஜியின் அண்ணன்கள் இரண்டு பேர் இறந்து விட்டார்கள்.சிவாஜி குடும்பத்தில் ஒரே ஒரு பெண்பிள்ளை என்பதால் அவர் மேல் அளவற்ற பாசத்தை குடும்பத்தார் வைத்திருந்தார்கள்.
சிவாஜியின் திருமணம் பராசக்தி வருவதற்கு 5 மாதத்திற்கு முன்பே சுவாமிமலையில் நடைபெற்று விட்டது.
சிவாஜியின் ஒரே பாசத்தங்கையின் பெயர் பத்மாவதி.
தன்னுடைய திருமணத்தை வெகு எளிமையாக வெறும் 500 ரூபாயில் நடத்தி முடித்த சிவாஜி தன் தங்கையின் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்த நினைத்தார்.
சிவாஜி சினிமாவில் நடித்து புகழின் உச்சியில் இருந்தார் அப்போது.சிவாஜி அப்போது சென்னையில் அன்னைஇல்லத்தை வாங்கியிராத நேரம்.சிவாஜி வாழ்ந்த திருச்சி சங்கிலியாண்டபுரத்திலே தங்கையின் திருமணத்தை நடத்த எண்ணினார்.1955 ஆம் ஆண்டு சங்கிலியாண்டபுரத்திலே சிவாஜி வீட்டில் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டும்,வாழை மரங்களும் ,தோரணங்களுமாக அமர்க்களப் படுத்தி கொண்டிருந்தது.ஊரே வியக்கும் வண்ணம் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
சிவாஜியின் திரையுலகை சேர்ந்த நண்பர்கள்,நடிகர்கள் ,
கலைஞர்கள் என திரைப் பட்டாளமே குவிந்தன சங்கிலியாண்ட புரத்தில்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான கலைஞர்களும் வருகை புரிந்தனர்.சிவாஜிக்காக மன்றம் தொடங்கிய இளைஞர்கள் ஏதோ தங்கள் வீட்டு சிறப்பு நிகழ்ச்சி போலே சிவாஜியின் திருச்சி சங்கிலியாண்டபுர சிவாஜி வீட்டுக்கு உரிமையோடு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கும் அன்னை இல்லத்தின் சிறப்பே இதுதான்.
அன்னை இல்லத்துக்கு வருகை தரும் ரசிகர்களை வெறும் ரசிகர்களாக பார்க்காமல் உறவுகளாக பார்க்கும் ஒரே இடம் அன்னை இல்லம்தான்.
அங்கே மட்டும் தான் அன்னை இல்லத்தின் எந்த நிகழ்ச்சி ஆனாலும் ரசிகர்கள் உறவுகளாகாக பார்க்கப்பட்டார்கள்.
சிவாஜியின் வீடு தமிழனின் அடையாளமாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருக்கிறது.
ஐந்து ஆண்பிள்ளைகளை பெற்ற ராஜாமணி அம்மையார் தவமிருந்து பெற்ற பெண்பிள்ளை பத்மாவதி.ராஜாமணி அம்மையார் தன்ஒரே மகளின்திருமணத்தை நினைத்து ஆனந்தபரவசத்தில் இருந்தார்.
சிவாஜியின் ஒரே பாசத்தங்கையான பத்மாவதியின் திருமணம் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சிவாஜியின் பூர்வீக சொந்த வீட்டில் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்த திருமணத்திற்கு எழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் ,
தன் வீட்டுத் திருமணம் போலே அனைத்து காரியங்களையும் முன்னால் நின்று செய்து கொண்டிருந்தார்.சினிமாவில் பெரிய செல்வாக்கு பெற்ற பாகவதர் சிவாஜி வீட்டுத் திருமணத்தில் ஒரு சாதாரண மனிதரைப் போலே ஒடோடி வேலை செய்ததை பார்த்த மக்கள் வியந்து போனார்கள்.சிவாஜி பாகவதர் இணைந்து ஒரு படத்தில்கூட நடித்ததில்லை என்பதை நினைக்கும் போது அது இன்னும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
சிவாஜியின் அப்பா சின்னையா மன்றாயரும் திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்று உபசரிக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
திருமண வேலைகளை பிரபல கலைஞர்களே முன்னால் நின்று கவனித்துக் கொண்டதால் சிவாஜி எந்த வித டென்சனும் இல்லாமல் இருந்தார்.
திருமணம் நடைபெறுவதற்கு முதல்நாளே சகஸ்ரநாமம்,
எம் ஜி ஆர் மற்றும் பல பிரபல கலைஞர்கள் வந்து அவர்கள் தங்களுடைய தங்கையின் திருமணமாகவே நினைத்து உரிமையோடு திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.
திருமண முக்கிய ஆடல் பாடல் நிகழ்ச்சியாக நடிகை குசலகுமாரியின் பரத நாட்டியம் நடைபெற்று திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நல்ல கலை விருந்தாக அமைந்தது.
நடன நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து பத்மாவதியின் திருமணம் வெகு சிறப்பாக நடை பெற்றது.இந்த திருமணத்தில் ஓர் சிறப்பு அம்சமாக,மந்திரங்கள் தூய தமிழில் ஓதப்பட்டது.அக்மார்க் தமிழ் திருமணமாக சிவாஜியின் தங்கை திருமணம் நடந்தது.தாலி கட்டும் வைபவம் நடந்தபோது சிவாஜியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சிவாஜி இருந்தார்.சிவாஜியின் அண்ணன் தங்கவேலுவும்,தம்பி சண்முகமும் சிவாஜியை போலவே ஆனந்தத்தில் ,உணர்ச்சி வசப்பட்டு நின்றார்கள்.
சிவாஜியின் தங்கை பத்மாவதிக்கு அமைந்த மாப்பிள்ளை வேணுகோபால்.
இவர் பெங்களூரில் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.சிவாஜியின் மாமன் மகள் உறவு முறையில் வந்தவர் வேணுகோபால்.இந்த உறவுமுறையில் தான் பத்மாவதிக்கு வேணுகோபால் மாப்பிள்ளையாக மணம் செய்து வைக்கப்பட்டார்.
வேணுகோபால் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ,கர்நாடகாவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவிற்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி திரையுலக கலைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அந்த நிகழ்ச்சியில் சிவாஜியும் கலந்து கொண்டார்.
பராசக்தி படம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த நேரமது.சிவாஜியை பார்க்க பெங்களூரில் கூட்டம் அலை மோதியது.சிவாஜியை அங்குதான் முதன்முதலாக பார்க்கிறார் வேணுகோபால்.
அப்போது அவருக்கு தெரியாது.பின்னாளில் சிவாஜி வீட்டுக்கே மாப்பிள்ளையாகப் போகிறோம் என்று.
வேணுகோபால் தன்னுடைய திருமண நாள் அன்றுதான் பத்மாவதியை முதன் முதலாக பார்த்தார்.
1967 ஆம் ஆண்டில் இருந்து கடைசி வரை சென்னை சாந்தி திரையரங்கை மிகத் திறமையாக நிர்வாகம் செய்து வந்தவர் இவர்தான்.இவருடைய மகள் கண்ணம்மாவைத்தான் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் திருமணம் செய்துள்ளார்.
தன் திருமணத்தை எளிமையாக நடத்திய சிவாஜி ,தமிழ் முறைப்படி தன் தங்கையின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடித்தார்.சிவாஜியின் தங்கை பத்மாவதியின் திருமணம் பல ஆண்டுகளாக பேசப்பட்ட ஒரு திருமணமாக இருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக