சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்

படம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி. இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது. நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது. அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது. இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது. 21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி  வாசிப்பு அறை. எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா. இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான். லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது ம...

பட்டிக்காடா பட்டணமா வெற்றிவிழா

பி மாதவனின் ஆஸ்தான கதை ஆசிரியரான பாலமுருகன் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியின் பண்பாட்டினை மையமாக வைத்து தமிழரின் நாகரீகத்தை ஆணித்தரமாக பாலமுருகன் பதிவு செய்திருந்த கதை பட்டிக்காடா பட்டணமா .

படப்பிடிப்பு தொடங்கிய நாளன்று பாலமுருகன் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று வந்தார். படப்பிடிப்பு தளத்துக்கு அவர் வந்த வேளையில், சிவாஜி முக்கையா சேர்வையாக ஒப்பனையில் இருந்தார் .
சிவாஜி தனது சொந்த கற்பனையில் அந்த ஒப்பனையை செய்திருந்தார். அவர் கற்பனையில் உதித்திருந்த சிகை அலங்காரம் மூக்கையா சேர்வையை கம்பீர இளைஞராக காட்டியது .

சிவாஜியின் ஒப்பனையை பார்த்துக் கொண்டிருந்த பாலமுருகன் மனதில் ஒரு சின்ன ஆலோசனை தோன்றியது.அதனை சிவாஜியிடம்  சொன்னால் ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகம் அவருக்கு.

பாலமுருகன் முகத்தை பார்த்த சிவாஜிக்கு எதையோ சொல்ல பாலமுருகன் முயற்சி செய்வதை அறிந்து கொண்டார். சிவாஜிக்கு எப்படி நினைவாற்றல் ஒரு வரப்பிரசாதமோ, அதுபோல ஒருத்தருடைய முகத்தைப் பார்த்து அவரின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் திறனையும் சிவாஜி பெற்றிருந்தார் .பாலமுருகன் பார்வையை வைத்து அவர் தன்னிடம் எதையோ சொல்ல துடிப்பதை அறிந்தார் .

அண்ணே கதைக்கு ஏற்றபடி உங்க ஒப்பனை நல்லா இருக்கு !ஆனா மூக்கு வாளி போட்டுவிட்டா, மூக்கையன் என்ற பெயருக்கு பொருத்தமாக இருக்கும் ,என ஒரு யோசனையை சொன்னார் பாலமுருகன் .

பாலமுருகனை பார்த்த சிவாஜி அவரது கருத்துக்கு உடன்பட்டு மூக்கு வாளியை கொண்டு வரச் செய்து அணிந்து கொண்டார் .

அந்தக் காலகட்டத்தில் திரைப்படம் தயாரிப்பதை ஒரு தவமாக செய்தார்கள். ஒரு சிறிய காட்சி என்றாலும் அதில் முழு கவனம் செலுத்தி நேர்த்தியான திரைக்கதையை உருவாக்கினார்கள். அது அன்றைய கலைஞர்களின் தொழில் பக்தி.

படித்த மக்களும் மேட்டுக்குடி மக்களும் விரும்பும் கதாபாத்திரங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருந்த சிவாஜியை குடிசைவாசிகளிடம் கொண்டு சென்றதில் பட்டிக்காடா பட்டணமா படத்திற்கு முதலிடம் உண்டு.

இந்தியாவின் இதயம் கிராமங்களில் தான் உயிர் வாழ்கின்றது என்ற காந்தியின் கருத்துக்கு இந்த படம் வலு சேர்த்தது. ஏர் பிடிக்கும் உழவனின் தன்மானத்தை ஆணித்தரமாக பதிவு செய்தது .

6 5 1972 அன்று சென்னை சாந்தி ,கிரவுன், புவனேஸ்வரி மற்றும் தமிழகம் எங்கும் பட்டிக்காடா பட்டணமா படம் திரைக்கு வந்தது. படம் வெளியான அனைத்து திரையரங்குகளும்  திருவிழா நடக்கும் கோயில்களை போல அலங்காரத்தில் இருந்தன.

படப்பெட்டியை வைத்து ஒவ்வொரு ஊர்களிலும் ரசிகர்கள் நடத்திய ஊர்வலங்கள் ராஜராஜசோழன் இலங்கையை வென்று நடத்திய வெற்றி ஊர்வலம் போல அமைந்திட சிவாஜி என்ற மூன்றெழுத்து தமிழகம் உச்சரிக்கும் தலைப்பு எழுத்தாய் மாறியது.

மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 182 நாட்களைக் கடந்த ஒரே திரைப்படம் என்ற பெருமையை பட்டிக்காடா பட்டணமா பெற்றது .இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாத வரலாறாக உள்ளது .கருப்பு வெள்ளை படத்தில் அதிக வசூல் செய்த கடைசி படமும் இதுதான் .

பரமக்குடி கிருஷ்ணா திரையரங்கில் 50 நாட்களைக் கடந்து ஓடிய ஒரே படம் என்ற பெருமையை பெற்றது.

படம் வெளியான  சில நாட்களில் கிராமங்களில் மூக்கையனின் முடி அலங்காரம் பிரபலமாக ,பல இளைஞர்கள் அந்த பாணியில் தங்கள்  
தலை அலங்காரங்களை வடிவமைத்துக் கொண்டனர் .

படம் பாராட்டுகளையும் வசூலையும் வாரி குவித்து கொண்டிருந்த வேளையில் தான் அந்த துயர நிகழ்வு நடந்தது.

சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மையார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாயார் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்த சிவாஜி தன் தாயாரின் அருகில் இருந்து அவரை கவனித்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஏற்கனவே கால்சீட் கொடுத்து இருந்த பட நிறுவனங்களின் படப்பிடிப்பை சிவாஜியால் தவிர்க்க முடியவில்லை .
தன்னால் எந்த தயாரிப்பாளரும் பாதிப்பு அடைந்து  விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் படப்பிடிப்புகளில்  கலந்து கொண்டார் சிவாஜி .

ராஜாமணி அம்மையாரின் உடல்நிலை கவலைக்குரிய நிலையை நெருங்கிக் கொண்டிருந்தது .சிவாஜி தனது தாயாரின் அருகில் இருந்து கவனிக்க தொடங்கினார் .

ஆகஸ்ட் 23ஆம் நாள் சௌகார் ஜானகி தனது மகளின் திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என சிவாஜிக்கு அன்பு கட்டளையிட்டு இருந்தார் .

தன் வீட்டு சோகத்தை மறைத்துக் கொண்டு சௌகாரின் மகள் திருமணத்தில் சிவாஜி கலந்து கொண்டார்.

மணமக்களை வாழ்த்திவிட்டு சௌகார் ஜானகியை  தனியாக அழைத்த சிவாஜி "அம்மா ரொம்ப சீரியஸா இருக்காங்க ஜானகி நான் கிளம்புகிறேன் "
என்று கூறிவிட்டு ஒரு கப் பாயாசத்தை அடையாளத்துக்காக வாங்கி குடித்துவிட்டு கிளம்பினார் .


சிவாஜி வீட்டுக்கு கிளம்பி வந்த சில மணிகளில் தனது இறுதி மூச்சை ராஜாமணி அம்மையார் நிறுத்திக் கொண்டார் .
சிவாஜியின் சகோதரர்கள் தங்கவேலு சண்முகம் தாயாரின் அருகில் இருந்தார்கள்.

இறப்புச் செய்தி கேட்டவுடன் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ,அன்பில் தர்மலிங்கம், அரங்கண்ணலுடன் சிவாஜியின் வீட்டுக்கு விரைந்து வந்தார். கருணாநிதியை கண்டவுடன் சிவாஜி வாய் விட்டு கதறி அழுதார். 
சிவாஜியை  கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார் கருணாநிதி .

சிவாஜியின் தாயார் மறைந்து விட்டார் என செய்தி கேட்டதும்  சிவாஜி மன்றங்கள் சிற்றூர் சிற்றுராக அஞ்சலி கூட்டங்களை நடத்தி சிவாஜி வீட்டில் நாங்களும் ஒரு அங்கம் என காட்டியது .

விழுப்புரம் மாவட்ட பேருந்து நிலையம் அருகில் ராஜாமணி அம்மையாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ராஜாமணி அம்மையாருக்காக இறுதி அஞ்சலி செலுத்த சிவாஜி வீட்டின் முன்பு பெரும் கூட்டம் கூடியது.

எதற்குமே நிலை குலையாத சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் 'ஆலமரம் சரிந்து விட்டது'
 என கதறி துடித்தார்.

ராஜாமணி அம்மையாரின் இறுதிச்சடங்குகள் முடிந்த பின்பு சிவாஜி கலந்து கொண்ட முதல் படப்பிடிப்பு மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன என்ற காதல் பாட்டு .
சோகத்தோடு சிவாஜி பங்கு கொண்ட அந்த பாடல் காட்சி சாகா வரம் பெற்ற பாடலாக இன்றும் வாழ்கின்றது.

பட்டிக்காடா பட்டணமா  வெள்ளிவிழாவை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் வசந்த மாளிகையும் ரிலீஸ் ஆகி மிகப் பிரமாண்ட வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது .

சென்னையில் வடகிழக்கு பருவமழை கொட்டி  தீர்த்துக் கொண்டிருந்தது .சென்னை ஆபஸ்டரி  மாளிகையை சுற்றி முழங்கால் அளவு வெள்ளம்.

திரையுலகப் பிரபலங்கள் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் உடைகள் நனைந்தாலும் கவலை இல்லை என ஆபஸ்டரி மாளிகைக்குள் சென்று கொண்டிருந்தார்கள் .சிவாஜி மன்ற தோழர்கள் திரண்டு வந்ததால் மாளிகை இருந்த பகுதி எங்கும் மக்கள் வெள்ளம் அலை மோதியது .

மாளிகைக்கு வந்த பிரபலங்களை பி. மாதவனும் அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் சின்ன அண்ணாமலையும்  வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் .

பட்டிக்காடா பட்டணமா படத்தின் வெள்ளி விழா காட்சிகள்  தான் இவை.

திரையுலகம் தொடர்புடையவர்களை அரசியல் தொடர்பாக கருதாமல் சற்று தள்ளி வைத்து அரசியல் செய்து கொண்டிருந்த காமராஜர் இந்த விழாவில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

டி எம் சௌந்தரராஜன் தனது கணீர் குரலில் அம்பிகையே ஈஸ்வரியே என்ற பாடலை இறை வணக்கப் பாடலாக பாட துவங்க அரங்கம் அதிர்ந்தது.

"மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி  இந்த மக்கள் எல்லாம் போற்ற வேண்டும் கோட்டையேறி"
 என்ற வரிகளை பாடும்போது காமராஜரை பார்த்து ,
T.Mசௌந்தரராஜன் கைகாட்ட ,
தலைவர் காமராஜர் வாழ்க !
 என சிவாஜி மன்ற தோழர்கள் உணர்ச்சியில் ஆர்ப்பரித்தார்கள்.

வரவேற்புரையாற்ற வந்த 
பி .மாதவன் தமிழகத்தின் கோட்டை வாசலில் மூவர்ணக் கொடி மீண்டும் பறக்கும் எனக்கூறி சிவாஜி ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்.

காமராஜர் நீண்ட உரை ஒன்று நிகழ்த்தினார். அதன் சுருக்கம் :
நான் அதிகம் திரைப்படம் பார்ப்பவன் அல்ல .அப்படி பார்த்த வரையில் எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன். சிவாஜிகணேசன் போல சிறந்த நடிகர் இந்தியாவிலேயே இல்லை.
'கருவிலேயே திரு உள்ளவன்'  என்ற பழமொழியில் ஒருவரை பாராட்டி சொல்வது உண்டு .
அப்படியே நமது கணேசன் கருவிலேயே அந்த பேரு பெற்றிருக்க வேண்டும் என்றால் மிகையாகாது .

நான் பார்த்த இந்த பட்டிக்காடா பட்டணமா படம் மேல்நாட்டு நாகரிகத்தை கண்டிக்கும் படமாக இருக்கிறது. இதில் எல்லோரும் திறமையாக நடித்திருக்கிறார்கள்.
என்று காமராஜர் பேசி முடித்த போது அரங்கம் அதிர்ந்தது.

திரைப்பட விழா ஒன்றில் காமராஜர் அதிக நேரம் பேசியது இந்த விழாவாக தான் இருக்கும் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பேசி வியப்பில் ஆழ்த்தினார் .

விழாவில் பேசிய ஏ.வி மெய்யப்ப செட்டியார் உலகிலேயே சிவாஜி கணேசனுக்கு நிகரான நடிகர் யாரும் இல்லை. இதை நான் 1955 முதல் நேஷனல் பிச்சர்ஸ் பெருமாள் முதலியார் நடத்திய விழா ஒன்றில் இருந்து கூறி வருகிறேன் .அதையே இந்த விழாவிலும் தெரிவிக்கிறேன் .

1933 ஆம் வருடம் முதல் அமெரிக்க படங்களை பார்க்கிறேன். பால் முனி நடித்த படங்களை பார்த்து இருக்கிறேன் .அவரையும் நடிகர் திலகம் மிஞ்சிவிட்டார் என்றார் செட்டியார் .

தலைமை உரை  ஆற்றிய காமராஜருக்கு  ஏர் ஒன்றை பரிசாக அளித்தார் சிவாஜி .வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட அந்த ஏரை காமராஜர் பெற்றுக் கொண்ட போது ,சிவாஜி ரசிகர்கள் உணர்ச்சி பூர்வமாக காட்டிய ஆரவாரம் காமராஜரின் அரசியல் வாரிசு சிவாஜி தான் என அடையாளம் காட்டியது .

காமராஜரும் மனதளவில் அதையே ஆமோதித்தார் என்பதை அவரின் முகம் காட்டியது.

நன்றியுரை  உரையாற்றிய சிவாஜி ,தனக்காக நடக்கும் விழாவில் காமராஜரை பற்றி பேசும் வகையில் விழாவை மாற்றி காமராஜரின் விசுவாச தொண்டராகவே சிவாஜி நின்றார் .

வெள்ளி விழா நடப்பதற்கு முன்னால் சிவாஜியும் ஜெயலலிதாவும் தமிழகத்தில் பல ஊர்களில் வெற்றி விழாவில் கலந்து கொண்டார்கள் .

29 10 1972 காலை 10 மணிக்கு திருச்சி பாலாஜி திரையரங்கத்திலும் ,
மாலை 4 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானத்திலும்,
 3 11 72 மாலையில் சேலத்திலும் ,
12 11 72 மாலை சென்னை சித்ரா திரையரங்கத்திலும் விழாக்கள் நடைபெற்றன .

சிவாஜியுடன் ஜெயலலிதா விகே ராமசாமி எம் ஆர் ஆர் வாசு மனோரமா சுகுமாரி சுபா மாதவன் பாலமுருகன் ஆகியோர் விழா நடந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டனர் .

மதுரையில் நடைபெற்ற வெற்றி விழா திரையரங்கில் நடைபெறாமல் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றதற்கு பின்னணியில் ஓர் அரசியல் காரணம் உண்டு.

1 10 1972 அன்று நெடுமாறன் காங்கிரஸ் கட்சி மாநாட்டை மதுரை குதிரை போட்டி மைதானத்தில் நடத்தினார்.

காமராஜர் கலந்து கொள்ளும் அந்த விழாவில் சிவாஜியும் கலந்து கொள்கிறார் என விளம்பரப்படுத்தப்பட்டது.

நவசக்தி போன்ற காங்கிரஸ் ஆதரவு இதழ்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்திவிட சிவாஜி மன்ற தோழர்கள் தேசிய விழாவில் கலந்து கொள்ள சாரை சாரையாக படை எடுத்தனர்.

சிவாஜியை காயப்படுத்த காங்கிரஸ் எப்போதும் தயங்கியதே இல்லை என்பதற்கு உதாரணமாக சிவாஜிக்கு விழாவை பற்றிய எந்த தகவலும் சென்றடையாத வண்ணம் இறுதிவரை பார்த்துக் கொண்ட விழா குழுவினர் சிவாஜி கலந்து கொள்கிறார் என பொய் தகவலை பரப்பி விழாவுக்கு கூட்டத்தை சேர்த்துக் கொண்டார்கள் .

சிவாஜிக்கு கொடுக்க வேண்டிய அழைப்பிதழையும் அனுப்பாமல் திட்டமிட்டு புறக்கணித்து சிவாஜியின் பின் நிற்கும் கூட்டம் மட்டும் போதும் என்று கணக்கிட்டு அதற்கான வேலையை செய்தார்கள் .

இந்த செய்தி தெரியாத சிவாஜி ரசிகர்கள் ஊர்வலத்தில் பெருவாரியாக கலந்து கொண்டனர் .அவர்கள் வந்த வாகனங்களில் காமராஜர் படமும் சிவாஜி படமும் பளிச்சிட்டன. தேசிய திருவிழாவில் சிவாஜி ரசிகர்களின் அணிவகுப்பே மிகப்பெரிய அலங்காரமானது .

ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் சிவாஜி ஓரம் கட்டப்பட்ட செய்தி சிவாஜி மன்ற தோழர்களிடம் பரவ பொதுக்கூட்டத்தை புறக்கணித்து வெளியேற ஆரம்பித்தார்கள் .

சிவாஜியை அவமானப்படுத்தி அதில் அரசியல் செய்த நெடுமாறனையும் ,அவருக்கு துணையாக நின்ற சில காங்கிரஸ் தலைவர்களையும் வெட்கப்பட வைக்க வேண்டும் என திட்டமிட்டு சிவாஜி ரசிகர்கள் பட்டிக்காடா பட்டணமா வெற்றி விழாவை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்தனர் .

தேசிய திருவிழாவுக்கு போட்டியாக பட்டிக்காடா பட்டணமா விழா மதுரையில் நடைபெற்றது.

சிவாஜியை  ஊர்வலமாக அழைத்து வந்து ரசிகர்கள் காட்டிய ஆரவாரம் காங்கிரசின் முகத்தின் முன் விரல் நீட்டி கேள்வி கேட்பது போல் அமைந்திட தமுக்கம் மைதானம் கண்டிருந்த அலங்காரம் சிவாஜி மன்றத்தை அரசியல்  இயக்கமாக அறிவித்தது.

சிவாஜியின் பட விழா என்று அழைக்கப்பட்டாலும் காங்கிரசின் மாநாடு போல இருந்தது .சிவாஜியை புறக்கணித்தோர் நாணிப் போகும் அளவில் சிவாஜி மன்றம் வேகப் பாய்ச்சல் எடுத்தது .

காமராஜர் மேல் உயிரை வைத்திருந்த சிவாஜியின் விஷயங்களில் சில நேரம் காமராஜர் ஈடுபாடு காட்டாமல் அமைதி காத்தது தேசிய திருவிழாவிலும் தொடர்ந்தது என்பது தான் வேதனை.

நெடுமாறனை  அழைத்து ,
சிவாஜிக்கு உரிய விதமாக அழைப்பிதழ் அனுப்புங்கள் என்று சொல்லி இருக்கலாம் .
ஆனால் சிவாஜிக்கு எதிராக நெடுமாறன் செயல்படட்டும் என காமராஜர் விரும்பியது போல இந்த நிகழ்வு அமைந்தது. ஆயினும் பட்டிக்காடா பட்டணமா வெற்றி விழாவில் காமராஜர் புகழை மட்டுமே சிவாஜி பாடினார் .

அதனால்தான் பட்டிக்காடா பட்டணமா வெற்றி விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் கொண்டாடப்பட்டது ...

இப்பதிவு திரு.இன்பா அவர்கள் எழுதியது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற