திரைப்படங்களில் நடிகர்கள் சவால் விட்டு நடிக்கும் திரைப்படங்கள் சுவாராஸ்யமானவை.சவாலில் கதாநாயகன் தான் பெரும்பாலும் ஜெயிப்பார் என்பது தமிழ் சினிமாக்களில் கண்கூடு.இருந்தாலும் எப்படி ஜெயிப்பார் என்பதை பார்ப்பதில் ஒரு ஆவல் உண்டு.விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
நடிகர்திலகம் சவால் விட்டு நடித்த திரைப்படங்களை இதில் ஒரு கண்ணோட்டமாக பார்க்கலாம்.எந்த படத்தை முதலில் சொல்வது?
திரைப்பட பெயரிலேயே சவாலை வைத்திருக்கும் சவாலே சமாளி படத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.
சவாலே சமாளி..
எலெக்ஷன் தர்பார்தான் இதில் ஹைலைட். கிராமசபை தலைவருக்கு போட்டியிடுவதில் ஆரம்பிக்கும் வேடிக்கை.சிவாஜி தோற்றால் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பகவதி தரப்பில் சொல்லப்பட ,பதிலுக்கு சிவாஜி கேட்கும் கேள்விதான் சவாலே சமாளி படத்தின் ஆணிவேர்.நாகேஷின் கைங்கர்யத்தால் ,
ஜெயலலிதாவை சிவாஜிக்கு திருமணம் செய்து தரவேண்டும் என்ற சவால்.
சவாலுக்கு உடன்படாத T.K.பகவதியை நாகேஷ் ப்ரெயின்வாஸ் செய்ய , பகவதியை அரைமனதுடன் சம்மதிக்க வைக்கிறது.
சவாலின் ரிசல்ட் என்ன? அதுதான் பகவதியின் தலையில் இடி.இந்த சவாலை மறக்க முடியுமா? ஜெயலலிதாவின் ஆணவம்,நம்பியாரின் திமிர் எல்லாம் க்ளைமாக்சில் உடைபட்டு சுபம் ஆவதுதான் சவாலே சமாளி.அதிரடி சவாலும் அதைச் சமாளித்த மாணிக்கத்தையும் மறக்க முடியுமா?
எங்க ஊர் ராஜா ..
வரதட்சணை பணம் கூட கொடுக்க முடியாத உனக்கெல்லாம் ஏனய்யா அங்கவஸ்திரம் ? என்று சிவலிங்கபுரம் ஜமீன் விஜயரகுநாத சேதுபதியை ,காளையார் கோவில் ராஜாங்கம் கேட்ட இந்த கேள்விதான் எங்க ஊர் ராஜாவின் சவால் மேட்டர்.
பாரம்பரியமான தன் ஜமீன் வீட்டையே ,தங்கையின் கல்யாணத்துக்காக விஜய ரகுநாத சேதுபதி அடமானம் வைத்து விடுகிறார். சொத்தை இழந்த சேதுபதியை ராஜாங்கம் கேட்ட அந்த கேள்வியில் ஆரம்பித்து அது சவாலில் விழுகிறது.நான் சம்பாதித்து அந்த வீட்டை மீட்பேன் ,உன் கையாலேயே அங்கவஸ்திரத்தை போட வைக்கிறேன் என சேதுபதி சவால் போட , இறுதியில் சேதுபதி நம்மையெல்லாம் வியக்க வைத்து சவாலில் சாதிப்பதுதான் எங்க ஊர் ராஜா .இது விஜயரகுநாத சேதுபதி போட்ட சவால்..
மனிதர்கள் மட்டும் தான் சவால் போடுவார்களா ?சாட்சாத் சிவபெருமானே போட்டிருக்கிறாரே சவால் .அதுவும் தன் மனைவியிடம்.அந்த சவாலை சொன்னது திருவிளையாடல் .
தகப்பன் தட்சன் நடத்தும் யாகத்துக்கு நான் போய்வருகிறேன் என்று தாட்சாயிணி சொல்ல
சிவனான சிவாஜி போய் வர அனுமதி மறுக்கிறார்.காரணம் சிவனை மதியாமல் ஆணவத்துடன் யாகம் செய்கிறான் தட்சன்.அவனுடைய ஆணவத்தை அடக்க தான் முடிவெடுத்ததால்.தாட்சாயிணி சென்றாலும் அவமானம் தான் மிஞ்சும் என்பதை அறிந்த சிவன் சொன்ன சொல் தான் வேண்டாம் என்றது.
சிவனை மீறி தாட்சாயிணி செல்ல ,சிவன் சொல்லே நிஜமாகிறது.பின்..
தாட்சாயிணிக்கும் சிவனுக்கும் மோதல் ஏற்பட ,சவாலும் மோதலுமாகி ,
நெற்றிக்கண்ணால் தாட்சாயிணி சாம்பல் ஆக...
உஷ்ணம் குளிர்ந்த சிவன் தாட்சாயிணியை மீட்டெடுக்கிறார்.
இப்படி கடவுளர்களும் போட்ட சவாலை காட்டியது திருவிளையாடல்.
சவால்களில் சீக்கிரம் முடிந்த சவால் இதுதான் ..
அம்பிகாபதி..
சிற்றின்பம் கலக்காத 100 பேரின்ப பாடல்களை பாடினால் அம்பிகாபதிக்கு அமராவதி பரிசு. தவறினால் உன் தலை மண்ணில் என்று மன்னர் நாகையா அம்பிகாபதியின் கவிப் புலமைக்கு சவால் விடுகிறார்.அம்பிகாபதி தான் பாடும் இறை வணக்கப் பாடலையும் நூறில் ஒன்றாக கணக்கு சேர்த்த படியால் சவால் தோற்றதாக மன்னர் சொல்லி விட ,விதி அம்பிகாபதிக்கு சதியாகிறது.சவால்களில் தோற்ற சவால் இது...
தில்லானா மோகனாம்பாள்.
நான் ஆடும் பரதத்துக்கு உங்களாலே நாதஸ்வரம் வாசிக்க முடியுமா? மோகனாவான பத்மினி இப்படி சவால் விடுவார் சிக்கல் சண்முகசுந்தரத்துக்கு.
சண்முகம் இந்த உலகத்தோட இயல்புத் தன்மை தெரியாத கொஞ்சம் வெகுளி குணம் கொண்ட மனுஷனா இருக்கலாம்.ஆனா நாதஸ்வரம் வாசிக்கிறதுலே சக்கரவர்த்தி.அந்த சக்கரவர்த்தி கிட்ட சவாலா? இந்த சவாலோட பைனல் ரிசல்ட்டை நல்ல படியா முடிச்சிருப்பார் கொத்தமங்கலம் சுப்பு.கலைகள் எதுவும் தோற்க கூடாதுன்னு ரெண்டு கலைகளும் ஒண்ணுக்கொண்ணு சளைத்ததில்லேன்னு முடிச்சிருப்பாரே அதுக்காக கொத்தமங்கலத்தை பாராட்டலாம்.நாதஸ்வரம் வாசிச்சா அந்த இசையை மட்டுமே நாம ரசிப்போம்.ஆனா அழகா பாக்க வெச்சது நடிகர்திலகம்.பத்மினியோட பரதமும் கூட.சவால்களில் இது திறமை சவால்.
சவால்களில் ரசிக்க வைத்த சவால் தில்லானா மோகனாம்பாள்.
காத்தவராயன் ..
மாந்தீரிகத்தை வைத்து மக்களை மிரட்டி பிழைப்பு நடத்தும் T.S.பாலையாவை பார்த்து காத்தவராயானான சிவாஜி தட்டிக் கேட்க,அது சவாலில் வந்து விழும்.ரொம்ப மிரட்டலான சவால் இது.பேய் பூதம் பூச்சாண்டி என்று சிவாஜிக்கு பயம் காட்டி மாந்தீரிக விளையாட்டு காட்டுவார் பாலையா.சிவாஜி கடவுளின் ஆசியால் அத்தனை விளையாட்டுக்களையும் தவிடு பொடியாக்குவார்.
அந்த காலத்தில் படத்தில் இந்த காட்சிகள் எல்லாம் மிகவும் மிரட்சியாகவே இருந்தன.
இது மிரட்டல் சவால்.
சரஸ்வதி சபதம் ..
முப்பெரும் தேவியர்களே சவால் போட்ட கதையை மறக்க முடியுமா?கல்வியா செல்வமா வீரமா ..இதில் எது பெரிது என்று நாம் தெரிந்து கொள்ள தேவிகள் போட்ட சவால் இது.இந்த படத்தில் சாவித்திரி பத்மினி தேவிகா ஆகிய முப்பெரும் தேவிகள் தான் சவால் இடுவார்கள்.இந்த சவாலை போட வைத்தற்கு பிள்ளையார் சுழி போடுபவர்
நாரதராக வரும் சிவாஜி தான் காரணம்.நல்ல சவால்கள்.நாம் ரசிக்க நல்ல காட்சிகள்.
கௌரவம்..
சரியாக வாதாடவே தெரியாது.இவனுக்கெல்லாம் ஜஸ்டீஸ் போஸ்டா ? என்ற குமுறலுடன் பாரிஸ்டர் ரஜினிகாந்த் போடும் சவால்..
என்னோட வாதத் திறமையாலே ஒவ்வொரு குற்றவாளியையும் நான் விடுதலை செய்ய வைப்பேன் என்னும் சவால்..மிரட்டியெடுத்த ஸ்டைல்களில் நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பை கொடுத்த கௌரவம் படம் ஒரு சட்டத்திற்கே சவால்.
ராஜபார்ட் ரங்கதுரை.
என்னை பகைச்சிக்கிட்டு இந்த ஊர்லே நீ எப்படி வாழப்போறேன்னு பாக்கப்போறேன்னு நம்பியார் கொக்கரிக்க,அதற்கு ராஜதுரை போடும் சவால் ,ஒரு நடிப்புச் சவால்.
தங்கப்பதக்கம்.
அப்பா போலீஸ்.மகன் திருடன்.ரெண்டு பேரும் சவால் போட்டா எப்படியிருக்கும்.
உங்களை தலை குனிய வைக்கப்போறேன்னு மகன்சொல்ல ,அதுக்கு சௌத்ரீ சொல்ற பதில்தான் ரொம்ப ஹைலைட்.
"முடிஞ்சா டிரை பண்ணு ".
S.P.சௌத்ரீ ,ஜெகன் ரெண்டு பேரோட சவால் நடிப்புலே அட்டகாசப்படுத்துன படம் தங்கப்பதக்கம்.
இது ஒரு கடமை சவால்.
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் சிறு சிறு காட்சிகளில்...
தெனாலிராமனின் கவிதைப்போட்டி சவால்,
பாசமலர் ராஜசேகரின் தொழிலாளர் உரிமை சவால்,
கர்ணனின் அர்ஜுனனுக்கு எதிரான வில் வித்தை போட்டி சவால் ,
சூரபத்மனை மிரட்டும் வீரபாகுவின் வீர சவால் ,
ஞானஒளியில் போலீஸ் அதிகாரி லாரன்சுக்கு எதிராக ஆண்டனி விடும் மறைமுக சவால் ,
பட்டிக்காடா பட்டணமாவில் மாமியாரை எதிர்க்கும் மூக்கையாவின் சவால்,
பாட்டும் பரதமும் படத்தில் பரத நாட்டிய சவால் ,
உத்தமன் படத்தில் உத்தமமான காதலனின் சவால்,
சித்ரா பௌர்ணமி படத்தில்
பழிவாங்கும் சவால்,
இப்படி பல சவால் விடும் திரைப்படங்களிலும் பல்வேறு வகையான சவால்களிலும் நடிகர்திலகம் ஒரு சவால் நாயகனாகவே தமிழ் திரைப்பட உலகில் மிளிர்கிறார்..
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக