கிருஷ்ணன் பஞ்சு ,பீம்சிங் ,
L.V.பிரசாத் ,பந்துலு ,
T.பிரகாஷ்ராவ் ,A.P.நாகராஜன்,
AC திருலோசந்தர் ,P.மாதவன், ஸ்ரீதர், CV.ராஜேந்திரன், தாதாமிராசி,
வியட்நாம் வீடு சுந்தரம் ,K.S.பிரகாஷ்ராவ்..
K.விஜயன், பாரதிராஜா ஆகிய இந்த டைரக்டர்கள் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கி இருந்தாலும் அந்தப் படங்களில் கோபுர கலசம் போல மின்னிய ஓரே ஒரு படத்தை இதில் பார்க்கலாம்.
நடிகர் திலகத்தை இயக்கிய முதல் இயக்குனரான கிருஷ்ணன் பஞ்சு பல சிவாஜி படங்களை இயக்கி இருந்தாலும் நன்றி மறவாத சிவாஜியின் மகத்தான படமாய்
பராசக்தியை சொல்லலாம்.கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய உயர்ந்தமனிதன் இல்லையா தெய்வப்பிறவி இல்லையா என பல இருந்தாலும் திரையுலகை திக்கு முக்காட வைத்த பராசக்தியை சொல்லலாம்.நாணயத்தின் இரு பக்கம் போலே குணசேரன் கேரக்டர்.ஒரு புறம் பைத்தியக்கார வேஷம் மறுபுறம் சமூக கொடுமைகளை சாடும் இளைஞன் என சிவாஜி இரண்டாக குணசேசரனுக்கு சாவா உயிரை கொடுத்த படம்.A சென்டரில் அடித்த ஹிட் B,C சென்டரிலும் புயலை கிளப்பிய படமாயிற்றே.சிவாஜியின் குரலை கேட்கவே தியேட்டர்கள் நிரம்பி வழிந்த படமாயிற்றே .
கடைசி வரை மாறாத இரட்டையர்களான கிருஷ்ணன் பஞ்சு தமிழ் சினிமாவை மாற்றி அமைத்த செயலை செய்தது இந்த பராசக்தி படத்தில் தானே!
பீம்சிங் சிவாஜியை வைத்து இயக்கியது 16 படங்கள் .பதினாறில் எதை சொல்வது ? வாடாத மலரென்று பாசமலரை சொல்லலாம்.சிவாஜியே சொன்னது போலே இது பாசத்தை வளர்த்த மலரல்லவா !பட்டப்பெயர்களிலியே திலகத்தை வைத்திருக்கும் நடிகர்திலகத்தையும் நடிகையர்திலகத்தையும் இனி ஜோடிகளாக பார்க்க கூடாது என்ற அளவுக்கு மக்களின் மனதில் பாசத்தை விளைவித்த
படமாயிற்றே .திரையுலகில் இது ஒரே முறை பூத்த குறிஞ்சி மலர்.
L.V.பிரசாத்.சிவாஜியின் பல படங்கள் இருந்தாலும் மனோகராவை சொல்ல வேண்டும்.சிவாஜிக்கு சமூக படங்கள் சரிப்பட்டுவரும் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கற்பனை சரித்திரக் கதையில் நடிக்க வைத்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.L.V.பிரசாத் இயக்கிய படங்களில் வசன ரிக்கார்டுகள் அதிகம் விற்பனை ஆனதும் மனோகரா படத்துக்குத்தான்.மூன்று மொழிகளில் வெளியான படம் இது.இன்னும் பல சிறப்புகளை கொண்ட படம் இது என்பதால் பிரசாத்துக்கு ஒரு மனோகரா எனலாம்.
பந்துலு..
பந்துலு பெயரை சொல்ல பல படங்கள் இருந்தாலும் ,படத்தின் சிறப்பு,வெளிநாட்டு விருதுகள்,தேசபக்திக்கு சொல்ல ஒரு படம் இவற்றுடன் வியாபார ரீதியாக தயாரிப்பாளர்க்கும் நல்ல வசூலை கொடுத்த படம் என்று இத்தனை வகையான கலவைகளுடன் சொல்ல வரும் போது வீரபாண்டிய கட்டபொம்னை தவிர வேறு சொல்ல முடியாது.ஒரு அம்சமா ?இல்லை இரண்டா ?எத்தனை அம்சங்கள் இந்த கட்டபொம்மன் பெற்றிருக்கிறார் .அதனால் பந்துலுவுக்கு கட்டபொம்மனே .
T.பிரகாஷ்ராவ்...
இவர் சிவாஜியை இயக்கிய உத்தமபுத்திரன் படம் போதும் இவர் பெயர் சொல்ல..இரண்டு வேஷமென்றால் மேக்கப் மாற்ற வேண்டும்,முக ,சிகை அலங்காரம் மாற்ற வேண்டும் என்றெல்லாம் கவலைப்படாமல் சிவாஜியை ஒரே மாதிரி தோற்றத்திலேயே காண்பித்து அதிசயம் என்று சொல்ல வைத்த படத்தின் இயக்குனர் என்று இவர் பெயரை சொல்ல இது போதாதா?
A.P.நாகராஜன்..இவர் இயக்கிய படங்களை சொல்ல வரும் போது சிறிது தடுமாற்றம் வரலாம்.அத்தனை போட்டி வரும் ஒரு படத்தை மட்டுமே குறிப்பிட வேண்டுமென்றால்.ஏனெனில் ஒவ்வொருவரும் தங்களுடைய ரசனையின் அடிப்படையில் தங்களுக்கு பிடித்த படங்களை சொல்வார்கள்.அப்படிப்பட்ட படங்களை கொடுத்திருக்கிறார் இவர்.தில்லானா மோகனாம்பாளுக்கும்,
திருவிளையாடலுக்கும் ரசனையாளர்கள் மாறுபட்டிருக்கலாம் அதிக அளவில்.வசூல் ஓட்டம் அதிகப்படியான உழைப்பு
ஒலிச்சித்திர ரிக்கார்ட் என்ற வகையில் திருவிளையாடல் A.P.நாகராஜனுக்கு எனலாம்.
A.C.திருலோகசந்தருக்கு ஒரு தெய்வமகன் என்று சொல்லி விடலாம்.ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட பெருமை எல்லாம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை.அதை விட பெரிய விருதாக இருந்தாலும் சங்கர் விஜய் கண்ணனுக்கு மாற்றுக் குறைந்த விருதாகத்தான் இருக்க முடியும்.தெய்வமகன் பட கதையை விட சிறப்பான கதைகளை உருவாக்க முடியும் .கதைகளும் இருக்கின்றன.ஆனால் தெய்வமகன்களைதான் யாராலும் உருவாக்க முடியாது.திருலோகசந்தருக்கு தெய்வமகன் ஒன்றே போதும் ..
P.மாதவனுக்கு தங்கப்பதக்கத்தை சொல்லலாம்.இந்திய அளவில் ரீச்சான படம்.தமிழ் சினிமாவில் வெளிவந்த பெரும்பாலான போலீஸ் பட காட்சிகளில் தங்கப் பதக்கத்தின் பாதிப்பு இருக்கும். காவல்துறைக்கு பெருமை சேர்த்தது என்று போலீஸ் துறையே நினைப்பது இந்த படத்தை தான் .பட்டிக்காடா பட்டணமா எங்க ஊர் ராஜா வியட்நாம் வீடு , மாதவன் இயக்கிய இன்னும் பல படங்கள் இருந்தாலும் பி மாதவனின் சிகரமான படம் தங்கப்பதக்கம் .
ஸ்ரீதர்..
சிவாஜி படமா ? குடும்பம் பாசம் சென்ட்டிமென்ட் ..இந்த ரீதியில் வெளி வந்த சிவாஜி பட வரிசையில் எல்லா ஆக்ஷன் படங்களுக்கும் மேலான ,சிறப்பான, பிரமிக்கத்தக்க வகையில் சிவாஜியை சூப்பர் ஆக்ஷன் ஹீரோவாக ஸ்ரீதர் எடுத்த படம் சிவந்தமண்.ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப் பரிசு, காதலிக்க நேரமில்லை பெரிய ஹிட் படங்கள் என்றாலும் வித்தியாசம் இல்லாத சராசரி கதை அமைப்பு படங்களே !ஸ்ரீதருக்கு கூட சோகப் படங்கள் எடுப்பவர் என்ற முத்திரை உண்டு .அதை மாற்றிக் காட்டிய படம் சிவந்தமண் ..அந்த வகையில் பிரமாண்டமான சிவந்தமண் ஸ்ரீதருக்கு ...
C.V.ராஜேந்திரன்.
ரொம்ப ஸ்டைலிசா ஒரு படம்.
ரொம்ப விறுவிறுப்பா ஒரு படம்.
பாட்டு சூப்பர்.
பைட் சூப்பர்.
மசாலா படம் என்றாலும் வசனம் ஷார்ப்.
காஸ்ட்யூம் கூட எல்லோருக்குமே சூப்பர்.
மியுசிக் சூப்பர் .
டோடட்டலா எல்லாமே சூப்பர் .
படத்தின் வசூலும் சூப்பர் .
இப்படி எல்லாவற்றையும் ஒரே படத்தில் கொடுத்த C.V..ராஜேந்திரனுக்கு ஒரு பெஸ்ட் ...ராஜா...
தாதா மிராசி.
இந்த இயக்குனரின் பெயர் பொது ஜனங்கள் அதிகம் பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் இவர் இயக்கிய இந்த படத்தின் பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாமல் போகாது.அந்த படத்துக்கு ரசிகனாக கூட இருப்பார்கள் .அப்படிப்பட்ட ஒரு படம் தான் புதிய பறவை.
வியட்நாம் வீடு சுந்தரம் ..
அபாரமான வசனம் எழுதும் ஆற்றல் பெற்று இருந்த சுந்தரம் நடிகர் திலகம் நடித்த படத்துக்கு கதை வசனம் எழுதியதன் மூலம் அந்தப் படத்தின் பெயரே அவருக்கு பட்டப் பெயராக அமைந்து விட்டது. அது வியட்நாம் வீடு. அவர் இயக்கிய திரைப்படம் தான் கௌரவம் .
நூறு படங்களை இயக்கிய இயக்குனர்கள் கூட இது போன்ற ஒரு படத்தை இயக்கி இருக்க மாட்டார்கள் .வியட்நாம்வீடு சுந்தரத்தின் பெயரைச் சொல்ல கௌரவம் திரைப்படம் ஒன்று போதும் .
K.S.பிரகாஷ் ராவ்.
1968இல் இவர் இயக்கிய திரைப்படம் சிவாஜி நடித்த அரிச்சந்திரா. அருமையான இந்த திரைப்படத்தை அதிக தமிழ் மக்கள் பார்க்க கொடுத்து வைக்கவில்லை .1972ல் இவர் இயக்கிய காதல் காவியம் தான் வசந்த மாளிகை. தமிழக மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட பார்க்கப்பட்ட காதல் காவியம் வசந்த மாளிகை. இவர் பெயரைச் சொல்ல ஒரு வசந்த மாளிகை.
K.விஜயன்...
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200 வது படம்,
என்ற சிறப்பு பெற்ற திரிசூலம் படத்தை இயக்கியவர் கே விஜயன் .
பாரதிராஜா..
இவர் இயக்கிய முதல் ஐந்து படங்களும் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படங்கள். பல வெள்ளிவிழா படங்களும் அடங்கும். அந்த எல்லா படங்களிலும் இளம் வயது கதாநாயகனே நடித்திருப்பார்கள் .56 வயதான சிவாஜியை, அதே வயது கதாநாயகனாக, சண்டை இல்லாத டூயட் இல்லாத ,கிராமத்து பெரிய மனிதராக நடிக்க வைத்து
பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை தான் எல்லோராலும் வியந்து பார்க்கப்படுகின்றது.
செந்தில்வேல் சிவராஜ் ..
கருத்துகள்
கருத்துரையிடுக