சிவாஜியோட இந்த
ஒரு படத்துக்கு காசு கொடுத்து டிக்கட் வாங்கிட்டு போயி படம் பாத்துட்டு வந்தா ஒன்பது படம் பாத்துட்டு வந்த மாதிரி இருக்கும்.
முதல் சிவாஜி வந்து கொஞ்ச நேரத்துலே அடுத்த சிவாஜி ,அப்புறமா சிவாஜி சிவாஜின்னு ஒன்பது சிவாஜியும் வந்து கடைசி காட்சியிலே எட்டு சிவாஜியும் வந்து உக்காந்த அந்த ஒரு சீனைப் பாத்து ஆடிப்போச்சு பாத்தவங்க மனசெல்லாம்.
ஆக்ஷன் இல்லாத இங்கிலீஸ் படத்துலே வர்ற இங்கிலீஸ் ஹீரோவை பாக்கற மாதிரி இருக்கும் அந்த முதல் சிவாஜி வர்ற அற்புதராஜ் கேரக்டரை பாக்கையிலே.அந்த படித்த மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்த அந்த நாகரீக சீமான் தன் பார்வையில் தன் நடையில் பேச்சில் தாஜ்மஹாலை முதன்முதலில் பார்த்த பரவசத்தை தந்தான்.'நளினா' இந்த பெயர் அவர் உதட்டில் நெளினா என்று வந்தது.ஒரு பிரிட்டீஸ் கனவானின் பேச்சு போலே..
தமிழ் சினிமாவில் யாரும் பார்த்தேயிராத ஒரு மேனரிசத்தை முதன்முதலாக பார்த்து அனுபவித்தான் அது வரை பார்க்காத தமிழன்.
சிவாஜியிடம் இருந்து இப்படி ஓர் நடிப்பை கண்டிப்பாக வாங்க முடியும் என்று நினைத்துத்தான் இயக்குனர் அந்த வேடத்துக்கு அற்புதராஜ் என்று பெயர் வைத்தாரோ என்னவோ?
உருண்டு வரும் மது பாட்டில் காட்சியின் ஆரம்பமே சொல்லி விட்டது , அடுத்த வேடம் என்னவென்று.நாம் கொடுத்த காசின் இரண்டாவது படம்.இரவினில் ஆட்டமாம்..பகலினில் தூக்கமாம்..
குடிப்பவன் ,கூடவே மோகம் கொண்டவனின் வாழ்க்கையை அந்த இரண்டு வரிகளில் சொல்லியிருப்பார் கவிஞர்.கவிஞரின் வார்த்தையை கண்களை காட்டியே நம்மை உணரச் செய்வார் நடிப்புத் திலகம்.மோகம் தீர்க்க வந்த கதையை சுய பச்சா தாபங்களால் சாவித்திரியிடம் சொல்லித் தீர்க்கும் அந்த குடிகார பாத்திரம் ...இப்படியா ரசிக்க வைக்கும்...
மகத்துவம் காட்டிய மருத்துவர்.டாக்டர் கருணாகரன்.Silent operation acting.மௌன மொழியில் உடல்மொழியும் முக மொழியும் ஓர் உலகார்ந்த நடிப்பு எப்படியிருக்கும் என்பதை ஓர் சாதாரண பார்வையாளனும் உணர்ந்து கொள்ள சிவாஜி சர்வசாதாரணமாக ,ஆனால் எவருமே செய்து காட்டாததை செய்து காட்டிய 'பிரம்மன்' என்ற சொல்லால் சொல்லிவிடலாம்.
சாவித்திரி உண்மை பைத்தியமா ,நடிப்பு பைத்தியமா என்பதை,
தான் அறிந்ததை நமக்கு ஒரு சிறு ஷாட்டில் உணர்த்தி விடுவார்.
அந்த கண் கண்ணாடியை தூக்கி பார்ப்பது ,சாவித்திரியை ஸ்கேன் செய்வது போன்ற உணர்வை ,அந்த ஷாட்டில் பார்வையாளனின் மனதில் புகுத்துவார்.நீ பைத்தியமா இல்லையான்னு தெரிஞ்சுக்க கூட முடியாத அளவுக்கு நான் இங்க டாக்டரா இருக்கேனா என்ற கேள்வியில் ,
தெரிந்தும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாத இயல்பு நிலை நடிப்பை அந்த கேரக்டரில் சிவாஜி செய்திருப்பார்.
கோபக்கார கொலைகாரன் கேரக்டர்.அச்சம் தரும் பாத்திர படைப்பு.நவராத்திரியில் ஒரே ஒரு பழி வாங்கும் படலம்.ஆயிரம் பார்த்திருக்கலாம் ,
பழி வாங்கல் சினிமாக்களை .
ஆனால் சிவாஜியிடம் மட்டுமே காண முடிந்த வீராவேச நடிப்பு.
இதற்கு முன் பார்த்த டாக்டர் கருணாகரனுக்கும் இந்த வீரப்பனுக்கும் மலையையொத்த விகிதாச்சார வித்தியாசங்கள்.இடி மாதிரி குரல்.கசாப்புக் கடைக்காரனே அசந்திருப்பானே.கைமா கொத்தற மாதிரி...பேச்சுக்கு...
சாவித்திரியிடம் ,போலீஸ் உன்னை தேடிட்டு வரலே....
என்னைத்தான் தேடி வந்துச்சு..
இன்னைக்கு காலையிலேதான்ஒரு கொலை பண்ணுனேன் ..என்பாரே..
அந்த உறுமல்..வெறி..எல்லாம் ஏக மிரட்டல் ..போலீஸ் காரெக்டருக்கு வைத்த பெயரான வீரப்பனை இந்த கேரக்டருக்கு வைத்திருக்கலாம்..
செல்வராஜ் என்னும் அந்த தொழுநோயாளி கேரக்டர் ஒரு பட கதைக்கு வேண்டியது.முகத்துக்கு மட்டும் தொழு நோய் மேக்கப் போட்டு வந்து செய்து விட்டு போய் விடவில்லை சிவாஜி.அந்த உணர்வு ,தொழுநோய் அறுவெறுப்பு,தொழு நோயுடன் வாழ்க்கை கொடுத்த மனக்கசப்புகள் ,என்று பரிதாபப் பார்வை பார்க்க வைத்த பாத்திர படைப்பு..கதாநாயகர்கள் அதிகமாக ஏற்று நடிக்காத வேடங்களில் இதுவும் ஒன்று..
ரத்தக் கண்ணீர் ராதா நையாண்டி..நவராத்திரி அசல் போல...
பாமர கிராமத்தான்..
ஒரு கம்பீரமான கதாநாயகன்,சிம்மக்குரல் கொண்ட நடிகன்,மிடுக்கான தோரணை கொண்டவன் அதையெல்லாம் மறைத்து
உடம்பு குறுக்கி ,முகம் மாற்றி குரலை ஒடுக்கி விவசாயியாக அடுத்ததாக வந்து நின்றதை பார்த்த போது ..என்ன சொல்ல..
இந்த படலத்தில் நாகேஷ் எப்போதும் போலே கலாய்க்க,எதிலும் இல்லாத சிவாஜி இதில்.ஆத்தா பணம் கொடுக்க சொல்லலையா ?மறந்த சிவாஜிக்கு நாகேஷ் நினைவூட்ட ,அப்பப்போதானே,என்று சிவாஜி அடிக்க...அதுவும் அதிரத்தான் வைத்தது....
நாடக நடிகன்..
அடடா! நவராத்திரியின் இந்த எபிசோட் ,ஒரு முழு திரைப்படமாக உருவெடுத்திருக்கலாமே என்ற எண்ணத்தை வரவழைத்தது.ரசிக்க ரசிக்க சிரிக்க சிரிக்க காட்சிகள்..பார்க்கலாம்.
பார்க்கலாம்.பார்த்துக் கொண்டே இருக்கலாம்.பாகவதர் கிராப்பும்,பளிச் முகமும்,சில்க்ஆடை போட்டு நடித்தவரை பார்த்த போது..இவ்வளவு அழகாக ,இதற்கு மேல் என்ன அழகாக...அது ஒரு பரவசமய்யா!
சாவித்திரி இந்த படத்துக்கு முன்பு கூத்தாட்டம் ஆடியதில்லையாம்.
நடிகர்திலகம்தான் சொல்லிக் கொடுத்தாராம்.சிவாஜி சாதாரணமாக செய்த அற்புதம் இந்த படலம்.
போலீஸ்..
ஒரு மனிதரால் இப்படிக் கூட சிரிக்க முடியுமா? அலற வைக்கிறாரே மனிதர்.மேஜை நிறைய அசைவங்கள்.வெறித்தனமான ஊண் வகைககள்.அதை சாப்பிடுவது போன்ற நடிப்பில் கூட இவ்வளவு ரசிக்க வைக்க முடியுமா?
மிரட்டியெடுக்கும் குரல்.சர்வ அலட்சியமான கம்பீரம்.சிவாஜியின் நடிப்பு பாணி அவருடடைய கவச குண்டலம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?
ஆனந்தன்.சாதாரண இளைஞன்.எட்டு சிவாஜிகளையும் காட்டாத ஆச்சர்யன்.சோகம்,வெறுப்பு,
விரக்தி எல்லாம் காட்டி கடைசியாக தன் ஆனந்தத்தை காட்டுவது எட்டிலும் இல்லாதது.
எவராலும் எட்ட முடியாதது.
செந்தில்வேல் சிவராஜ் ..
கருத்துகள்
கருத்துரையிடுக