என்ன நடையப்பான்னு ?ரொம்ப வியந்து எந்த நடிகனோட நடையையும் சொல்ல முடியாது.ஒவ்வொரு நடிகனோட பெஸ்ட்டா பல படங்களை பல பேரு பல படத்தை சொல்லியிருக்கலாம்.
அவங்களோட நடிப்பையும் சொல்லியிருக்காங்க.ஆனா இந்த நடை விஷயத்துலே மட்டும் மத்த நடிகர்களோட நடை ஸ்டைலை விவரிச்சதை பாத்திருக்க முடியாது.நடையா ! பார்ரா ! சிவாஜியோட நடையை அப்பிடின்னு ஏகப்பட்ட படங்களை சொல்லலாம்.
அதுவும் சில படங்கள்லே சிவாஜியோட நடையை காட்டறதுக்காகவே காட்சிகளை எக்ஸ்ட்ராவா வெச்சிருப்பாங்க.ஒரு காட்சியிலே நடிச்சு முடிச்ச பின்னாலே அந்த காட்சியை அதோட முடிச்சிருக்கலாம்.ஆனா அதோட தொடர்ச்சியா சிவாஜியோட நடையை காமிச்சு சீனை முடிச்சிருப்பாங்க.உதாரணமா உத்தமன் படத்துலே மஞ்சுளாவோட வீட்டுலே வீகேஆரோட பேசிட்டு வர்ற காட்சி,எங்கள் தங்க ராஜா படத்துலே மஞ்சுளாகிட்ட காலேஜ்லே என்னை மறந்துடுன்னு சொல்லிட்டு நடந்து வர்ற காட்சின்னு பல படங்களை சொல்லலாம்.
அதை விட சிவாஜியோட நடையை காமிச்சே புல் டைட்டில் ஓடற படமும் இருக்குது. அவன் ஒரு சரித்திரம் படத்துலே புல் டைட்டிலும் சிவாஜியோட நடையை காமிச்சே முடிச்சிருப்பாங்க.
இதுதான்டா ராஜநடை இதுதான்டா சிங்க நடை
இதுதான்டா வீரநடை
இதுதான்டா அலட்சிய நடை
இதுதான்டா அழகுநடை
இதுதான்டா சோகநடைன்னு
நடையில கூட உணர்ச்சியை காமிச்சவர் சிவாஜி ..
ரெண்டு காலுல ஒரு நடையையே பார்த்த நமக்கு பல நூறு நடைய காட்டியவர் சிவாஜி .
கந்தன் கருணை படத்துலே வர்ற வீரபாகுத் தேவனோட நடையை பாத்து கை தட்டறதுக்காகவே ,அந்த காட்சி எப்படா வரும்னு அந்த காலத்துலே பாத்துக்கிட்டு இருப்பாங்க.பட்டியல் படத்துலே கூட இந்த சீனை காட்டி பரத்தும் ஆர்யாவும் அதைப் பாத்து நடக்கற மாதிரி காட்சியை வெச்சிருப்பார் டைரக்டர்.
போனால் போகட்டும் போடா பாட்டுக்கு நடையா நடந்து தள்ளியிருப்பார் சிவாஜி.கிலோமீட்டர் கணக்குல நடந்து தள்ளியிருப்பார்.ரெண்டே இடத்துல மட்டும் நின்னு பாடுவார்.மத்தபடி பாட்டு புல்லா நடைதான்.ஆத்தங்கரை,ரோடு ,மலை ,மேடு ,பள்ளம்னு பல இடங்கள்ல சிவாஜி நடையை காட்டியே புல் பாட்டும் இருக்கும்.
ரொம்ப பட்டிமன்றம்,மேடைப் பேச்சுலே ரொம்ப பேரு மயங்கி பேசன நடை திருவிளையாடல் பட மீனவன் நடை.உலகத்துலே இந்த மாதிரி நடையை நடக்க எந்த நடிகனாலேயும் முடியாதுன்னு பல பேரு சொன்ன நடை அது.
பத்மினி ரொம்ப அற்புதமா டான்ஸ் ஆடியிருப்பாங்க.அது பரதம் தெரிஞ்சவங்களுக்கே கொஞ்சம் கஷ்டமான டான்ஸ்தான்.பிரமாதமா பண்ணி இருப்பாங்க பத்மினி .ஆனா சிவாஜி ஒரு நடை நடந்து தியேட்டரையே அதிர வெச்சிருவாரு .மன்னவன் வந்தானடி பாட்டுலேதான்.
சிவாஜி நடந்து வர்றத பாத்து நெஞ்செல்லாம் அதிறும்.தேவனே என்னைப் பாருங்கள் பாட்டுலே.சுத்தியும் காடு .அதுல சிவாஜியோட சைடு வாக்கை படம் புடிச்சிருப்பாங்க.தாய் மடியிலே மழலைகள் ஊமையோன்னு வரி ஆரம்பிக்குமில்லே .அதுலே கிளப்புவாரு சிவாஜி நடையிலே .அந்த நடை மாதிரி எங்காச்சும் பாத்திருப்பீங்களா ?
கட்டபொம்மனை தூக்குல போடற காட்சி வரும் .அந்த சீனோட படம் முடியப்போகுது.
எப்பவும் க்ளைமாக்ஸ்னா ஒரு டாப் சீன் ,அருமையான ஷாட் ஏதாவது காட்டி படத்தை முடிப்பாங்க.மொத்த படத்தையும் அந்த கடைசி சீனோட டிராவல் பண்ண வைக்கணும்.பந்துலு வெச்சாரய்யா ஒரு சீனு .வெறும் நடைதான் .கட்டபொம்மன் நடந்து வர மக்களெல்லாம் கையெடுத்து கும்பிடுவாங்க.கால் தொட்டு கும்பிடுவாங்க. அந்த வெறுப்பை தன்னோட கால் நடையிலே வெளிப்படுத்தி நடப்பாரு பாருங்க.முகத்துலே வெறுப்பு வீரம் ரெண்டையும் கலந்த உணர்ச்சியை அந்த நடையிலே காட்டுவார் பாருங்க.கண்ணுலே தண்ணி வர வெச்சிடுவார்.
ஆறு மனமே ஆறு பாட்டு இருக்கே.அது ஒரு தனி சுகத்தை கொடுக்கும் .பாக்கறப்போ எல்லாம்.சாய்பாபா ,
விவேகானந்தர் ,பரமஹம்சர்னு மூணு பேரையும் சிவாஜி ஞாபகப்படுத்துவார் ஒவ்வொரு சரணத்துக்கும் .கோயில்ல யானை பின்னாலே வர்றப்போ முன்னாடி விவேகானந்தர் கெட்டப்புல வீரமா ஒரு நடையை காட்டற சிவாஜி கடைசியிலே கடலையை கொறிச்சிக்கிட்டே நடந்து வர்ற நடை அது வேற விதமா இருக்கும்.ஒரே பாட்டுல பல விதமான நடை நடந்திருப்பார்.
பாலூட்டி வளர்த்த கிளி பாட்டுலே மாடிப்படியிலே இறங்கி வர்ற சிவாஜி உடம்பை தளர்ந்த மாதிரி இறக்கி டக்குன்னு மறுபடியும் உடம்பை நிமிர்த்தி சடசடன்னு இறங்குவார் பாருங்க.மகன் போயிட்டான்கற சோகம் ஒரு பக்கம் ,கர்வமான தன்னம்பிக்கை இன்னொரு பக்கம்னு ,ஒரு பாட்டோட சிச்சுவேசனையே அந்த நடையில காட்டியிருப்பார்..
கம்பீரமான நடையை காட்ட மாங்கு மாங்குனு நடந்து நடிச்சவங்களுக்கு மத்தியில
இதுவல்லவோ கம்பீர நடை என்று சொல்ல வைச்சவர் சிவாஜி.
அரசவை தர்பார் அதிர புயல் மாதிரி வர்ற மனோகரன் நடைக்கு விசில் சத்தங்களும் கைதட்டல்களும் அந்த காலத்துலே கீற்றுக் கொட்டகையை கிழிக்காத குறைதான்.
அம்மாவின் அறிவுரையை அலட்சியப்படுத்தி நடக்கும் விக்ரமனின் அலட்சிய நடை ,
அயோத்திக்கு என்ன ஆனது, என தெரியாமல் அரண்மனை அதிர நடந்த பரதனின் நடை ,
கால்விலங்கு கை விலங்கு போடப்பட்டு இழுத்து வரப்படும் காத்தவராயனின் நடை ,
பாவமன்னிப்பு படத்தில் ரஹீமின் அன்பு நடை,
துப்பாக்கியெடுத்து ஆவேசமாய் வரும் பாசமலர் ராஜசேகரின் ஆவேச நடை ,
காலை இழுத்து இழுத்து நடக்கும் பார்த்தால் பசி தீரும் பட நடை,
காது குண்டலங்கள் கலகலவென காற்றில் ஆட,நெஞ்சு நிமிர்த்தி வரும்
கர்ணனின் வீரநடை,
நவராத்திரியில் டாக்டர் வேட கருணை நடை ,
தில்லானா மோகனாம்பாள் சண்முகசுந்தரம் என்ற கலைஞனின் கலைநடை ,
மீசையை முறுக்கி சபதம் போட்டு நடக்கும் சேதுபதியின்
மிரட்டும் நடை,
தெய்வமகன் விஜய்யின் சிங்கார நடை ,
சிவந்த மண் பாரத்தின் புல்லரிக்க வைக்கும் நடை,
திருவருட்செல்வர் திருநாவுக்கரசரின் பக்தி நடை ,
ஸ்டைலான ராஜாவின் அட்டகாச நடை,
மூக்கையா சேர்வையின் வீரம் கலந்த கிராமத்து நடை ,
வசந்த மாளிகை ஆனந்த்தின் ஜமீன் பரம்பரை நடை,
எங்கள் தங்க ராஜா பட்டாக்கத்தி பைரவனின் கர்வ நடை,
தங்கப் பதக்கம் எஸ்பி சௌத்ரீயின் கம்பீரமான கடமை நடை,
என்று சிவாஜியின் நடைகள் தொடர,நாமும் சொல்லிக் கொண்டு போகலாம் ..
தேவர்மகன் படத்தில் வேட்டியை தூக்கியபடி வரும் பெரியதேவரின் பாசாங்கில்லா நடை...
என்று சினிமாவில் சிவாஜி நடந்த நடைகளுக்கா பஞ்சம் ..
செந்தில்வேல் சிவராஜ் ...
கருத்துகள்
கருத்துரையிடுக