நடிகர்திலகம் சிவாஜி தன் பிறந்தநாளை எப்போதிருந்து விமர்சையாக கொண்டாட ஆரம்பித்தார் ?ஏன் கொண்டாட ஆரம்பித்தார் ?என்பது பல சுவாராஸ்யமான விஷயங்களை கொண்டதாகும்.நடிகர் திலகம் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து அவர் திரைப்பட உலகில் மிகவும் பிசியாக இருந்து கொண்டே இருந்தார்.ஆரம்ப காலங்களில் தன் பிறந்த நாளை கொண்டாடுவதில் அதிக விருப்பம் இல்லாமல் தான் நடிகர் திலகம் இருந்தார்.
1967 இம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜர் தோல்வியடைந்தார். திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் காங்கிரஸ் கட்சியும் ஒரு பலவீனத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சியையும், காமராஜர் கரத்தையும் வலுப்படுத்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் முனைந்தார்.
காங்கிரஸ் கட்சியை வளரச்சிப்படுத்த சிவாஜி செய்த முயற்சிகளில் ஒன்று தான், சிவாஜிகணேசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
1970களில் ஆரம்பித்தது இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள். அதற்கு முன்பு வரை தன் வீட்டிலேயே எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த நடிகர் திலகம் அதற்குப் பின்பு தமிழகம் எங்கும் தன் ரசிகர் படையையும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும் ஒன்று கூட்டி தன் பிறந்த நாளை கொண்டாட ஆரம்பித்தார். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழகமெங்கும் உள்ள சிவாஜி ரசிகர்கள், மன்ற பிள்ளைகள் அன்னை இல்லத்துக்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு ஊரிலிருந்தும் வரும் ரசிகர்களை பார்ப்பதற்காகவே அன்னை இல்லத்தின் வாசலில் பல மணி நேரம் நடிகர்திலகம் இருப்பார்.
1972 ஆம் ஆண்டு நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.
அப்போது வசந்த மாளிகை வெளியாகி மிகுந்த வரவேற்புடன் ஓடிக் கொண்டிருந்தது. நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் இரண்டு ரீல்கள் கொண்ட ஒரு படமாக எடுக்கப்பட்டது. வசந்த மாளிகை 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும்போது 1972 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் அடங்கிய பிலிம் ரீல்கள் அப்போது வசந்த மாளிகை ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டது. வசந்த மாளிகை வெளியான நாளிதழ் விளம்பரங்களிலும் இது செய்தி அறிப்பாக விளம்பரம் செய்யப்பட்டது.
1970 ல் தொடங்கிய பிறந்தநாள் விழா 1971, 1972 என்று வரிசையாக மூன்று வருடங்கள் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. 1973 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படவில்லை.
1974 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நடிகர் திலகத்தை அன்னை இல்லத்தில் வந்து சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி வழங்கி சென்றார் காமராஜர் .
1975 ஆம் வருடத்திலும் காமராஜர் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம் சென்று நடிகர் திலகத்தை வாழ்த்தி அவருடன் சிறிது நேரம் பேசி சென்றார்.
1974 ஆம் வருட நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா சேலம் போஸ் மைதானத்தில் இரண்டு நாட்கள் மாநாடாக நடைபெற்றது. முதல் நாள் மாநாடு கலை உலக மாநாடு ஆகும் .இரண்டாவது நாள் மாநாடு அரசியல் மாநாடாகவும் நடைபெற்றது.சேலத்தில் நடைபெற்ற இந்த மிகப் பிரமாண்டமான மாநாட்டில் நடந்த மகா மெகா பேரணி சேலம் நகரையே அதிரச்செய்தது .
இந்த பிறந்த நாள் விழாவில் ஹிந்தி நடிகர் சஞ்சீவ் குமார் கூட கலந்து கொண்டார். தமிழ் திரையுலகை சேர்ந்த மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகள் எல்லாம் கலந்து கொண்டார்கள். இரண்டு நாள் மாநாடாக நடந்த இந்த விழாவுக்கு மாநாட்டு கட்டணமாக இரண்டு மூன்று ஐந்து பத்து என்று கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நன்கொடை கட்டணங்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு நடிகர்திலகம் கொடுத்து விட்டார் .இந்த மாநாடு சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது. மறைந்த நடிகர் சசிகுமார் நினைவு பந்தல் என்று பெயரிடப்பட்டு மாநாடு நடைபெற்றது .
1971 ஆம் வருடம் நடிகர் திலகம் 150 படங்களில் நடித்ததை ஒட்டி திருச்சியில் சவாலே சமாளி விழாவை மிகப் பிரமாண்டமாக கொண்டாடினார். சவாலே சமாளி திரைப்பட விழா இரண்டு நாட்கள் மாநாடாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் திலகம் 150 படங்களை நடித்து முடித்ததை குறிக்கும் வகையில் 150 புறாக்கள் பறக்க விடப்பட்டன. முதல் நாள் அன்று மிகப் பிரமாண்டமான பேரணி ஒன்று நடைபெற்றது. காலை எட்டு முப்பதுக்கு தொடங்கிய பேரணி பிற்பகல் 2:30 மணிக்குத்தான் முடிந்தது. தமிழகம் எங்கும் நடிகர் திலகத்தின் ரசிகர் மன்ற பிள்ளைகளும் காங்கிரஸ் மன்ற தோழர்களும் மிகப் பிரமாண்டமாக கூடினார்கள். அந்த விழாவில் ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. விழாவுக்கு கூடிய ரசிகர் கூட்டத்தையும் அவர்களின் உற்சாகத்தையும் பார்த்த நடிகர் திலகம், இது போன்ற ஒரு மாநாட்டை ,பொதுக்கூட்டத்தை வருடம் ஒருமுறை நடத்தினால் காங்கிரஸ் கட்சியை நன்றாக வலுப்படுத்த முடியும் என்று எண்ணினார். சினிமா பட விழாக்கள் என்னும்போது குறிப்பிட்ட சில படங்களுக்கு தான் இது போல விழா எடுக்க முடியும் .அதனால் தன் பிறந்தநாளை மையமாக வைத்து வருடம் தோறும் இது போன்ற விழாக்களை நடத்தலாம் என முடிவு செய்தார்.
1978 ல் நடிகர்திலகத்தின் 51 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படட்து.
யானைகள் ,குதிரைகள் எல்லாம் ஊர்வலத்தில் பவனி வந்தது. ரசிகர்கள் அணிவகுப்பும் நீண்ட ஊர்வலமாக நடந்தது.வட சென்னை தென்சென்னை ரசிகர்கள் கொண்டு வந்த கேக்கை சிவாஜி வெட்டினார்.அன்று இரவு 7 மணிக்கு பெரம்பூர் பட்டேல் ரோட்டில் சிவாஜி ரசிகர்மன்றம் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.அந்த கூட்டத்தில் தளபதி சண்முகம்,புரசை குமரன் ,நடிகர் பிரேம் ஆனந்த் உள்பட பங்குபெற்றார்கள்.
நடிகர்திலகத்தின் பிறந்த நாளுக்காக தினகரன் நாளிதழ் சிறப்பு மலர் வெளியிட்டது .
நடிகர்திலகத்தின் பிறந்தநாள் நடந்து முடிந்தபின் ஏராளமான நோட்டீஸ்கள்,காலணிகள்,
மாலைகள் ,பூக்கள் எல்லாம் அன்னை இல்ல வாசலில் நிறைந்து காணப்படும்.
அவற்றையெல்லாம் அடுத்த நாள் லாரியில் வந்து அள்ளிச் செல்வார்கள்.
1975 இல் நடிகர் திலகம் தன் 175 ஆவது படத்தை வெளியிட்டார். 175 ஆவது திரைப்பட விழாவை பெரிய அளவில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பட விழாவையும் ,அந்த வருட பிறந்த நாள் விழாவையும் ஒன்றாக மதுரையில் நடத்தலாம் என்று முடிவும் செய்யப்பட்டது.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட சிவாஜி மன்ற விழாக்கள் சேலம் திருச்சி கோவையில் நடத்தப்பட்டது .
1975 ஆம் வருட பிறந்த நாள் விழாவை மதுரையில் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அந்த வருடம் இப்படியான 175வது திரைப்பட விழாவையும் சேர்த்து மதுரையில் நடத்தலாம் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் அந்த வருட பிறந்த நாள் விழா மதுரையில் நடத்தப்படவில்லை.
மதுரையில் பிறந்த நாள் விழா நடத்த முடியாமல் போனது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது .மதுரையில் பிறந்த நாள் விழா கொண்டாட முடியாமல் போனாலும் நாலு வருடங்கள் கழித்து நடிகர் திலகத்தின் 200 வது படமான திரிசூலம் பட விழா மதுரையில் நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழா தான் இன்றுவரை தமிழ் சினிமாவின் மகா மெகா பிரமாண்டமான திரைப்பட விழாவாக உள்ளது.
இந்தத் திரைப்பட விழாவில் அன்று இருந்த மிக முக்கியமான பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் வருவதற்காக தனி விமானமே ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1980 களில் நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா எல்லாம் நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்திலேயே நடந்தது.
தமிழ்நாடு முழுதும் உள்ள சிவாஜி மன்ற ரசிகர்கள் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தைப் பார்க்க சென்னை அன்னை இல்லம் வருவதும்
நடிகர் திலகம் அன்னைஇல்லத்தின் வாசலில் அமர்ந்து அவர்களின் வாழ்த்துக்களை பெறுவதும் வாடிக்கையாக நடைபெற்று வந்தது.
அக்டோபர1980
சிவாஜி பிறந்ததின பாராட்டு விழா!
சிவாஜி பிறந்த நாளையொட்டி பெரியார் திடலில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது
விழா மேடையில் சிவாஜி முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார் .சிறிது நேரம் கழித்து திமுக தலைவர் கருணாநிதி மேடைக்கு வந்தார் .
மேடையில் கருணாநிதியை எழுந்து நின்று சிவாஜி வரவேற்றார் .அப்போது இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். பெரிய ரோஜாப்பூ மாலை ஒன்றை சிவாஜிக்கு கருணாநிதி அணிவித்தார். அப்போது கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது .
.அரங்கின் முகப்பில் தேர் மீது காங்கிரஸ் கொடி பறக்கும் படி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழாவில் ,திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:
கலை உலக நிரந்தர கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா எங்கே நடக்கிறது என்று எண்ணிப்பார்த்தால் தந்தை பெரியார் திடலில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதா நினைவு திடலில் நடந்து கொண்டு இருக்கிறது . நான் பேசுவதை கேட்க சிவாஜி விரும்புகிறார் என்று சொன்னார்கள். நான் எழுத சிவாஜி் பேச வேண்டுமென்று ஆசைப்படுவதாக தெரிவித்தார்கள்.
நான் உரையாடல் எழுதும்போது அது சினிமாவுக்கு என்றாலும் சரி ,நாடகத்துக்கு என்றாலும் சரி, அதை யார் பேசப் போகிறார் என்பதை பொறுத்து தான் அந்த உரையாடல் அமையும்.
பராசக்தியை எடுத்துக் கொண்டாலும் ,மனோகராவை எடுத்துக் கொண்டாலும் அவற்றுக்காக நான் எழுதிய வசனங்களை சிவாஜி பேசி நடிக்கப் போகிறார் என்று கேட்டால் என் பேனா ஆடுகின்ற நர்த்தனம் அலாதியானது .
எங்களுடைய புதிய படத்துக்கு நான் இப்பொழுதே விளம்பரம் தேடுகிறேன் என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது .
இருபத்தைந்து ஆண்டுகளாக 200 படங்களில் அதுவும் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் தமிழ் திரையுலகில் மட்டுமன்றி அகில இந்தியாவிலும் பார்த்தால் அது சிவாஜிகணேசன் மட்டுமே .அவருக்கு ஈடு இணை யாருமில்லை
உன்னை மிஞ்ச உலகில் வேறு எவரும் இல்லை என்று கருணாநிதி பேசினார்.
1986 ஆம் ஆண்டு நடந்த நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழா பொன்விழாவாக கொண்டாடப்பட்டது.நடிகர் திலகம் சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆனதால் அந்த வருட பிறந்தநாள் விழா பொன்விழாவாக திரையுலகத்தால் கொண்டாடப்பட்டது.
தமிழ்த் திரையுலகமே ஒன்று சேர்ந்து நடிகர் திலகத்திற்கு விழா எடுத்தது. அன்று நடக்க இருந்த படப்பிடிப்புகள் கூட நடிகர் திலகத்தின் பொன்விழாவுக்காக ரத்து செய்யப்பட்டது. அந்த விழாவில் 51 பவுன் தங்க மகரகண்டி அவர் கரங்களில் அணிவிக்கபட்டது.அதை பாரதிராஜா அணிவித்தார் .
சினிமா சங்கத்தின் சார்பில் மிக நீண்ட நெடிய பேரணி ஒன்று நடத்தப்பட்டது .அந்த ஊர்வலத்தில் சண்டைக் கலைஞர்களின் சண்டை ஷோக்கள் ,மயிலாட்டம் ஒயிலாட்டம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வெகு விமர்சையாக நடந்தது.
அந்த ஊர்வலம் 4 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணியளவில் நேரு விளையாட்டரங்கை வந்தடைந்தது.தமிழ் திரையுலகம் அந்த விழாவை சிறப்பாக நடத்தி முடித்தது.
1988 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடிகர் திலகத்தின் மணி விழாவாக கொண்டாடப்பட்டது.
ரசிகர்கள் அதிகாலையிலிருந்தே நீண்ட கியூ வரிசையில் நின்று காத்திருந்தனர். மேடைக்கு சிவாஜி வந்ததும் நடிகர் திலகம் சிவாஜி வாழ்க! கர்ணன் சிவாஜி வாழ்க! சிங்கத்தமிழன் சிவாஜி வாழ்க! உத்தமன் சிவாஜி வாழ்க! என்று கோஷம் போட்டனர்.
பிறகு வரிசையாக வந்து நடிகர்திலகம் சிவாஜிக்கு மாலை அணிவித்தனர். ஏராளமான ரசிகர்கள் நடிகர்திலகம் சிவாஜியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.
மணிவிழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது
மிக பிரமாண்டமான ஊர்வலம் நடந்தது.
60 பிறந்த நாள் பற்றி ஒரு சிறப்புச் செய்தி.அந்த சமயத்தில்
சிவாஜியவர்கள் அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிளைட்டில் வந்து கொண்டிருந்தார் .லாஸ் ஏஞ்சல்ஸில் பிளைட் ஏறியதும் விமான சிப்பந்திகள் சிவாஜியை வரவேற்பு உபசரிப்பு செய்த போது மனைவி கமலாம்மா நடிகர்திலகத்துக்கு 60 வயது ஆவதை விமான ஏர் ஹோஸ்டஸிடம் சொல்ல விமான ஊழியர்கள் அப்போதே ஒரு கேக்கை கொண்டு வந்து சிவாஜியை கேக் வெட்டச் சொல்லி ஹேப்பி பெர்த் டே சொல்லி வாழ்த்தினார்கள்.சிவாஜியின் 60 வது பிறந்தநாளை ஆகாயத்திலேயே கொண்டாடி விட்டார்.
1988 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார்.
காங்கிரசில் இருந்து சிவாஜி விலகிப் போயிருந்தாலும் அப்போதும் சிவாஜி ரசிகர்களிடம் ஒரு பெரிய எழுச்சியும் உற்சாகமும் இருந்தது.அதை அந்த வருடம் நடந்த நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழாவில் நன்றாக காண முடிந்தது.
ஆவேசமான ரசிகர் படை சிவாஜிடம் இருந்தது என்பதை அந்த நாள் நடந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் காட்டின.
சிவாஜியின் உண்மையான ரசிகர்கள் யார் என்பதை காட்டிய பிறந்தநாள் விழா அது.
1990 களுக்குப் பின் ,நடிகர் திலகம் தன் பிறந்தநாள் விழாவை அன்னை இல்லத்தில் எளிமையாக கொண்டாடினார்.
அப்போதும் தமிழகம் எங்கும் ரசிகர்கள் அவரைப் பார்க்க வந்தார்கள்.எப்போதும் போல பார்க்க வரும் ரசிகர்களை நடிகர் திலகம் அன்போடு பேசி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்படி...
வெளிப்படையாக பிறந்த நாளை கொண்டாடிய நடிகன்.வருடம் ஒரு முறையேனும் தன்னை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களுடன் பிணைப்பில் இருந்தார்.சென்னையில் வீட்டில் பிறந்தநாளன்று இருந்தால் ரசிகர்கள் சாதாரணமாக வந்து பார்த்துப் போக அன்னை இல்லத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் .
கட்சி வளர்ச்சிக்காக பிறந்த நாளை பெரிய அளவில் நடத்தினாலும்,அதை தன் சொந்த செலவில் செய்தவர் நடிகர்திலகம் ஒரே ஒருவரே!
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக