சிவாஜியோட கர்ணன் படம் வந்த பின்னாலே பழைய படங்களுக்கு ஒரு வாழ்வு வந்துச்சு.ஏன்னா ரொம்ப புது படங்களுக்கே வழி இல்லாத நிலையிலே பழைய படங்கள் வெளியாகுதுன்னா அது பெரிய விஷயம்.தூசி தட்டி ,உருக்குலைஞ்சு போன பழைய பட பெட்டிகளை தேடி தேடி எடுக்கறதுக்கு ரொம்ப பேர்
முயற்சி எடுத்துக்கிட்டாங்க.நிறைய பழைய படங்கள் எல்லாம் மறுபடி ரிலிசாகறதுக்கு கர்ணன் பட வெளியீடும், அது ஓடுன ஓட்டமும் ,செஞ்ச வசூலும் முக்கிய காரணமா இருந்துச்சு.
நடிகர்திலகத்தோட பல படங்களே மறு வெளியீட்டுலே வெளியாகியிருக்கு. 100 நாள் ஓடறது குதிரை கொம்பா இருக்கற இந்த காலத்துலே ,இதுலயும்
பல நடிகர்திலகம் படங்கள் 100 நாள் ஓடி சாதனை செஞ்சிருக்கு.
வசந்த மாளிகை, ராஜபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன் ,முதல்மரியாதை படங்கள் 100 நாள் ஓடி திரைப்பட துறைக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துச்சுன்னு சொல்லலாம்.
இப்ப இந்த வரிசையிலே ராமன் எத்தனை ராமனடி படமும் டிஜிட்டலில் தயாராகி இருக்கு.இந்த படத்தை ரிலீஸ் செய்யறதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு.
எத்தனையோ சூப்பர் ஹிட்டான கலர் படங்கள் இருக்கறப்போ ராமன் எத்தனை ராமனடி படத்தை டிஜிட்டல் செய்யக் காரணமென்ன ?
ரொம்ப படங்கள்லே இல்லாத பல சிறப்பு விஷயங்கள் இதுலே இருக்கு.
நடிகர்திலகத்துக்கு சிவாஜிங்கற பட்டப்பெயர் கிடைக்கறதுக்கு காரணம் சிவாஜியா நாடகத்துலே நடிச்சசுதான்.சிவாஜிசார் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாலேயே நாடகத்துலே நடிச்சதாலே,அதுவும் 1940 களிலே ,அந்த வேஷ நடிப்பை அதுக்கு பின்னாலே வந்தவங்க யாரும் பாக்கறதுக்கு வாய்ப்பே இல்லாமே போச்சு.
சிவாஜி சாரை வீரசிவாஜியா சினிமாவுலே பாக்க முடியலையேன்னு எல்லாருக்கும் பெரிய ஏக்கமும் வருத்தமும் இருந்துட்டே இருந்தது.இந்த ஒரு விஷயத்துலே ஓரளவுக்காக மனத்திருப்தி தர்ற மாதிரி ராமன் எத்தனை ராமனடி படத்துலே ஒரு சின்ன நாடகமா வீர சிவாஜி வசனம் பேசற காட்சி வெச்சாங்க.
வீரசிவாஜியா நடிகர்திலகத்தை பார்க்கற வாய்ப்பு அது மூலமா நமக்கு கிடைச்சது.
நடிகர்திலகம் சினிமாவுலே நடிக்க வந்து 18 வருஷம் கழிச்சுத்தான் இப்படி ஒரு வாய்ப்பு அமைஞ்சது.இந்த படத்துக்கு பின்னாலேதான் பக்த துகாராரம் படத்துலே வீர சிவாஜியா நடிகர்திலகம் நடிச்சாரு.
அதனாலே ராமன் எத்தனை ராமனடி ஒரு ஸ்பெசலான சினிமான்னு சொல்லலாம்.
இன்னொரு சிறப்பான விஷயம்.நடிகர்திலகத்தோட 140 வது படம்தான் ராமன் எத்தனை ராமனடி.சிவாஜிசார் 300 படங்களுக்கு கிட்டத்தட்ட நடிச்சிருந்தாலும் நடிகர் அப்படிங்கற பாத்திரத்துலே நடிகர்திலகம் நடிச்சதில்லே.
இந்த ராமன் எத்தனை ராமனடி படத்துலேதான் அந்த வேஷத்தை செஞ்சிருக்காரு.
இதுவும் ஒரு சிறப்பான விஷயம்.
நடிகர்திலகம் நடிச்ச பல படங்களோட காட்சி அமைப்புக்களை முதன் முதலா சிவாஜி படத்துலே காமிச்சது இந்த படத்துலேதான்.அவர் நடிச்ச படங்களை காட்டி அந்த படம் ஓடுன நாட்களை டைட்டிலா காட்டுவாங்க.இதெல்லாம் ஒரு ஸ்பெசலான விஷயமா இந்த படத்துலே மட்டும்தான் இருக்கு.பாக்கறவங்களுக்கும் ஒரு பரவசமான உணர்ச்சிச்சியை வரவழைக்கற மாதிரியான காட்சி அமைப்புகள் இதெல்லாம்.
ராமன்எத்தனை ராமனடி படத்துலே இதுவும் ஒரு ஸ்பெசல்.
நடிகர்திலகம் தன்னோட இமேஜ் பத்தி கவலைப்படாமே நடிச்ச ஒரு கேரக்டர் சாப்பாட்டு ராமன் கேரக்டர் .இந்த மாதிரி கேரக்டர்லே நடிக்கறதுக்கே பல பெரிய ஹீரோக்கள் யோசிப்பாங்க.ஆனா நடிகர்திலகம் அந்த சாப்பாட்டு ராமன் கேரக்டரை ,ரொம்ப உசரத்துலே கொண்டு போய் வெச்சிருப்பார்.
இன்னொரு வடிவமா இந்த படத்துலே நடிகர் விஜயகுமார்னு ஒரு கேரக்டர் செஞ்சு அதுலயும் நடிகர்திலகமா நிற்பார்.இந்த கேரக்டர் எந்தளவுக்கு சிறப்பானது சொன்னா , சிவாஜி நடிச்ச இந்த விஜயகுமார் கேரக்டர் பெயரை ,புதுசா நடிக்க வந்த ஒரு நடிகனுக்கு விஜயகுமார் அப்பிடிங்கற பெயரையே வைக்கும் படி அமைஞ்சது.
அவர்தான் நடிகர் விஜயகுமார்.
நடிகர்திலகத்தோட பல படங்களில் இல்லாத சிறப்பம்சங்கள் இந்த படத்துல இருக்குது.நடிகர்திலகம் பாடற மாதிரி ஒரே பாட்டுத்தான் இந்த படத்துலே.ஆனா அந்த ஒரு பாட்டு எந்த படத்திலும் இல்லாத ரொம்ப சிறப்பா வித்தியாசமா அமைஞ்ச பாட்டு.
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு பாட்டுத்தான் அது.அரை டவுசர் போட்டுகிட்டு சின்ன சின்ன காமெடி நடிகர் பட்டாளத்தோட கூத்தடிக்கற மாதிரி நம்மள 'ஹே'ன்னு பார்க்க வெக்கற பாட்டு.இந்த பாட்டுலே அவர் நடிகர்திலகம் மாதிரியா தெரிகிறார்.இதே பாட்டு சோகமா இன்னொரு வெர்ஷன்லே ,அது வேற லெவலா இருக்கும்.
வீரசிவாஜியா நடிகர்திலகம் நடிச்ச காட்சி அண்ணா எழுதுன சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டது. காட்சி மட்டும் தான் அண்ணாவோட நாடகம் .இந்த படத்துலே வீரசிவாஜி வசனத்தை எழுதினவர் கண்ணதாசன்.பட டைட்டிலில் கூட,அண்ணா குடும்பத்துக்கு நன்றின்னு டைட்டில் போடுவாங்க.
நம்பியார் வில்லன் மாதிரி வந்து பாதி படத்துக்குள்ளேயே இல்லாமே போறது மாதிரியான
கதையமைப்பை கொண்ட சிவாஜி படம் இது ஒண்ணாத்தான் இருக்கும்.
அதே மாதிரி கே ஆர் விஜயாவுக்கு எந்த காதலனும் இல்லாமே சிவாஜியை விட்டுப் போற மாதிரி கதையமைப்பை கொண்ட ஒரே படமும் இதுதான்.
ஒரே ஒரு சின்ன ஷாட்டுலே சிவாஜி P.S.வீரப்பா மாதிரி பேசி நடிச்சு மிமிக்ரி பண்ணுன காட்சியும் இந்த படத்துலே இருக்கு.
படத்துல நிறைய இடத்துலே சின்ன சின்ன ஷாட்டுகளை கூட ரொம்ப ரசிக்கற மாதிரி எடுத்து இருப்பார் P.மாதவன்.
அதுல ரொம்ப முக்கியமா ..
சிவாஜி ஸ்டுடியோவிலே விதவிதமா நடிச்சு காட்டுற சீன்,
ஏவிஎம் ஸ்டுடியோவில் பத்மினி நடந்து வர்ற காட்சியிலே ,சிவாஜி ஹாய் பத்மினி அப்படின்னு துள்ளிக்கிட்டு ஓட ,பத்மினி கண்டுக்காம நடந்து போறது,
சிவாஜி பின்னால பெரிய நடிகரா வந்த பின்னாலே ,சிகரெட் பத்த வைக்கிறதுக்கு லைட்டரை தேட அப்ப சிவாஜியை சுத்தி இருக்கிற அத்தனை பேரும் சிகரெட் லைட்டர நீட்டறது , (இந்தக் காட்சியைத்தான் டூயட் படத்துல பிரகாஷ்ராஜுக்கு வச்சிருப்பாங்க ...)
இப்படி நிறைய சொல்லிவிட்டு போகலாம் ..
ஒரு நேர்கோட்டுலே போய்ட்டு இருக்கற இந்த படம் சிவாஜி நடிகர்திலகம் விஜயகுமாரா நம்பியார் வீட்டுக்கு வந்து போன பின்னாலே ,கே ஆர் விஜயாவை பாத்த பின்னாலே,அதிரடியா போன படம் அப்படியே ஒரு மென்மையான ஒரு உணர்ச்சி பாவனை சாப்டரா மாறும் பாருங்க.அது ஒரு கடினமான மன நிலைக்கு மாற வெச்சுடும்.
இந்த படத்துக்கு மொதல்லே வச்ச பேரு சாப்பாட்டுராமன்.
இந்த பேர்லே நடிகர்திலகத்தை பாக்கறதா அப்படிங்கற அந்த கண்ணோட்டம்தான் ராமன் எத்தனை ராமனடின்னு பேர் மாற காரணமாச்சு.ஆனா சாப்பாட்டு ராமன்னு டைட்டில் வெச்சா முதல் பாதி கதையைத்தான் சொல்லற மாதிரி இருக்கும். அந்த கேரக்டரோட பிற்பாதி தியாகம் ,குணத்தையும் சேத்து சொல்லத்தான் மொத்தமா "ராமன் எத்தனை ராமனடி ".
கறுப்பு வெள்ளையிலே வந்த ஒரு காவியம் அப்படின்னு இந்த படத்தை சொல்லணும்.
இப்படி பல பல சிறப்பு அம்சங்கள் நிறைஞ்ச இந்த படத்தை இப்போ டிஜிட்டல் படமா மாத்தி இருக்காங்க.இந்த படத்தை ரிலீஸ் செய்யறதுக்கு பல முயற்சிகள் நடந்துட்டு இருக்கு.கூடிய சீக்கிரம் தியேட்டர்களில் வெளியாகும்.
நடிகர்திலகம் சிவாஜியோட படங்கள் தான் அதிகமா டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியாகியிருக்கு.அந்த வரிசையிலே ராமன் எத்தனை ராமனடி படமும் இருக்குது...
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக