என்னா? TMS ஸ்டுடியோவுக்குள்ளே அங்கயும் இங்கயும் ஓடிட்டு இருக்காரு.ஒண்ணு பாடணும் ..
இல்லேன்னா ரிகர்சல் பார்க்கணும்.இது வேற விதமா இருக்கே? ஒண்ணும் புரியலையே? இப்படித்தான் பாக்கற எல்லாரையும் யோசிக்க வெச்சிருக்கும் ,அந்த பாட்டு ரெக்கார்ட்டிங்கை பாத்திருந்தா.
என்ன தான் விஷயம்.உயர்ந்த மனிதன் படத்துலே வர்ற அந்த நாள் ஞாபகம் பாட்டுக்காகத்தான் TMS இப்படி பண்ணிட்டிருக்கார்.
பாடத்தானே செய்யணும்.இதென்ன புதுசா.அது அப்படியில்லே..இது சாதாரண பாட்டா இருந்தா பரவாயில்லே.அதுவும் சிவாஜிக்கு பாடற பாட்டாச்சே.
பாட்டு ஆரம்பிக்கறப்போ சிவாஜி ஓடி வந்து மூச்சிறைக்க நின்னு,அந்த மூச்சு சத்தத்தோட பாட்டு ஆரம்பிக்கும்.அந்த மூச்சிறைப்பை நிஜமா கொண்டு வரத்தான் TMS இப்படி பண்ணிட்டு இருக்கார்.
அடடா! என்ன அர்ப்பணிப்பய்யா இது.இதனாலேதானே எல்லாம் அவங்க கூட்டு பாட்டுங்க நம்மளை அந்த வாங்கு வாங்குது.
ரெக்கார்டிங் தியேட்டர்லே TMS அதிர வெச்சா ,தியேட்டர் பிரசன்ஸ்லே சிவாஜி கிழிச்சுடுவார் இல்லே.நெஞ்செல்லாம் தகதிமி தகதிமி ஆடுதுன்னா சும்மாவா?
பக்தி எல்லாம் தோத்துடனும்.அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு.
பாட்டை பாக்கையிலேயே மனசுக்குள்ளே ரயில் ஓட ஆரம்பிச்சுடும்.தடக் தடக்னு கடைசி வரைக்கும் மனுசனை பர பரக்க வெச்சுடும்.அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பேன்னு ...TMS ஒரு இழு இழுத்தா ஸ்கிரீன்லே பாக்கறப்போ சிவாஜி கொன்னுடுவார் கொன்னு..
இது மட்டுமா?
நான் யாருக்காகன்னு பாடுன்னா ,தியேட்டர்லே பாக்கறவங்களுக்கு அது அதிர வெக்கணும்.ரெக்கார்டிங் தியேட்டர்லே ரொம்ப எக்கோ வையுங்க அப்படின்னார் தயாரிப்பாளர்கிட்ட TMS.வசந்த மாளிகை பட பாட்டுக்காக இது.TMS சொல்லறதை கேட்டா செலவு அதிகமாகுதேன்னு யோசிச்சார் தயாரிப்பாளர்.அதனாலே வேண்டாம்னு சொன்னார்.நானும் பாடலேன்னு சொல்லிட்டார் TMS.என்ன பண்றது ..அந்த பாட்டை பாட அவரை விட்டா ஆளில்லே ..எக்கோவை வெச்சாங்க..வேற வழி இல்லேன்னு..
சுருதியும் குறையாம ,ராகமும் தப்பாமே யாருக்காகன்னு அலறுனாறே T.M.S...
.தியேட்டர்லே பாத்தீங்களே எப்படி இருந்துச்சு .அடி வயிறு கலங்கி ,நெஞ்செல்லாம் திம் திம்முனு பண்ணுச்சே..மரணமென்னும் தூது வந்தது..
அது மங்கையென்னும் வடிவில் வந்தது..
கண்ணு சிவந்து ,முகத்துலே தசையெல்லாம் துடிச்சு ,சிவாஜியோட அந்த உதட்டு உச்சரிப்பிலே ...சாகாத குறைதான்..அந்தளவுக்கு உணர்ச்சியை கெளப்பிருச்சில்லே...
தியேட்டர் என்ன ஆடுதாடா சாமின்னு கதி கலங்க வெச்சதில்லே...
சிவாஜி நடிப்பு..
TMS பாட்டு..
கண்ணா ...இந்த ஒரே வார்த்தைதான்.
பாட்டு ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே.எந்தளவுக்கு ஹை பிட்ச்சிலே பாடியிருப்பாரோ TMS.டெசிபல்லே காது கிழியாத குறைதான்.பத்து பாட்டை சாதாரணமா பாடிட்டு போயிரலாம்.
மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே
மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே..
வார்த்தைகளை பாருங்க.இதுக்கு மேலே வார்த்தைகளை போல்டா போட முடியுமா?
டைட்டில்லே கூட கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் போட்டிருப்பாங்க.
இவர் பாட்டுலே சக்கரவர்த்தின்னா விஸ்நாதன் இசையிலே மன்னர்.
பாடுன TMS கந்தர்வ குரலோன்.
நடிச்ச சிவாஜி சிம்மக்குரலோன்.
எப்படி பட்டப்பெயர்கள் அமைஞ்சிருக்கு பாருங்க..
இன்னொரு பாட்டுலே...
நீதிக்கே துணிந்து நின்றேன்..
நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்..
அட சாமி! என்ன கம்பீரமப்பா..
செல்லம்மான்னு அடுத்ததா உருகறதுலே நாமெல்லாம் ஆடிப் போயிடணும்.சிவாஜி பண்ணுன நடிப்புலே பண்டரிபாய் அசந்து நிப்பாங்க.ஒரு பிரேம்லே சிவாஜி பண்டரிபாய் பாக்கையிலே சிவாஜி சைட் பிரேம் ஒரு வெறித்தனமா இருந்ததுன்னா , பண்டரிபாய் பிரேம் அமைதியோட அதிர்ச்சியா நிக்கறதும் ..அடங்கப்பா! பாக்கறவங்க ஹார்ட் பீட்டெல்லாம் எகிறித் தள்ளும்..
சரவெடியை கொளுத்திப்போட்டா அது வெடிச்சு முடியற வரைக்கும் ஒண்ணும் பண்ண முடியாம பாத்துத்தான் தீரணும்.இந்த நாலு பேர் கூட்டணி சேந்த பாட்டுக்களை பாத்தா அப்படித்தான் இருக்கும்....
ஒரு கிறக்கத்துலேயே இருக்க வெச்சுடும்.
இத்தனை வருசம் ஆனாலும் ஒரு தடவையாவது சலிப்பை உண்டு பண்ணுதா?
ரசியோ ரசியோன்னு ரசிக்க வெச்சுட்டுத்தானே இருக்கு..
.ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.. அறுபதை 20 வெல்லுமா உலகிலே ..
மொத்த கதையையும் இதுல சொல்லியாச்சு ..எல்லாரும் படிச்ச அதே தமிழ் தான் ..கவிஞருக்கு மட்டும் எப்படி கிடைக்குது இந்த வார்த்தைகள் ..
TMS தவிர யாரையாச்சும் சொல்ல வைக்குதா ?
ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து ததிங்கின தோம் தாளம் போடுதையா..
அய்யா ! இந்தபாட்டை நான் பாடறேன்.புடிச்சா வெச்சுங்கங்க..
இல்லேன்னே நடையை கட்டறேன்னு ,சொல்லி வந்தவர்தானே TMS..தூக்குத்தூக்கி படம் எடுக்கறதுக்கு முன்னாலே நடந்த சம்பவம் தானே இது.
சாதாரணமா நடந்த ஒரு பேச்சு சம்பவம் சரித்திரமா மாறிப் போகுமுன்னு யார் நெனச்சிருப்பாங்க .
சுந்தரி சௌந்தரி நிரந்தரியேன்னு தூக்கி அடிச்சாரிலே TMS.
அரண்டு போச்சே தமிழ் சினிமா...சிவாஜிங்கற இந்த சிங்கத்துக்கு ,சிம்ம குரலோனுக்கு மேட்ச் ஆகற மாதிரி பாட்டுப் பாடற ஒரு கம்பீர குரல் அப்போ பஞ்சமா இருந்தப்போ ,TMS ஆட்டோமேடிக்கா வந்து செட் ஆனாரு பாருங்க.திறமை மட்டுமில்லே ,ராஜயோகமா அமைஞ்ச விதின்னுதான் சொல்லணும்...
ஹை டெசிபல்தான் TMS ஆ ?
மெலடியிலேயும் அசர வைப்பார்.
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலேன்னு..கவிஞர் தென்றல்காத்தை எப்படிப்பட்ட வார்த்தைகளா கண்டு பிடிச்சு கவிதையா சொல்லியிருக்கார்.
TMS அதை பாடுனத கேக்கறப்போ அந்த தென்றல் காத்து மனசுக்குள்ளே நுழைஞ்சு போன பீலிங் வராம இருந்துச்சா .பாட்டு முடிஞ்சாலும் காதுக்குள்ளே சுத்தி சுத்தி வந்துட்டுதானே இருந்துச்சு..
மெல்லப் பாடுனாலும் ,
கனத்து பாடுனாலும் சுகம் சுகமா மனசுக்குள்ளே நிறஞ்சது.
சிவாஜியோட கன்னத்து தசைகள்,முக பாவனைகளை நல்லா கவனிங்க..அது அந்தந்த போக்குக்கு தகுந்தபடி அசைய வெச்சிருவார்.
நாலு நிமிஷம் அஞ்சு நிமிஷ பாட்டுக்கு அவங்க செஞ்ச விஷயம் இந்த ஜென்மம் பூரா நெனக்க ,பேச வெச்சுட்டே இருக்குது.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி பாட்டுக்கு ஏகப்பட்ட நிறைய இன்ட்ரூமென்ட்டை வெச்சு சும்மா கிழி கிழின்னு கிழிச்சுருப்பார் மெல்லிசை மன்னர்.இவரா மெல்லிசை மன்னர்.கூடவே அதிரடி மன்னர்னும் சொல்லலாம்.இவ்வளவு இன்ஸ்ரூமென்டும் காதை கிழிய வெச்சா பாட்டு பாடுன சத்தத்தை கேக்க முடியுமா ? ஆனா TMS என்ன பண்ணியிருந்தார் .மியூசிக் சத்தத்தையும் மீறி அட்டகாசம் பண்ணி இருந்தாரே..என்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே ..
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே!
சூறைக்காத்து வீசறமாதிரி ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா எகிற வெச்சு ,வெடிச்ச பின்னாலே ஒரு அமைதியா ..
கடைசியிலே தாலாட்டா முடிச்சிருப்பாங்க.எப்படி ஆரம்பிச்சு எப்படி முடிஞ்சிருக்கும்.
மத்தவங்களுக்கு பாடறது ஒரு மாதிரினா சிவாஜிக்கு பாடறது அது வேற மாதிரி.வந்தமா பாடுனோமான்னு போயிர முடியாது.அடி வயித்துலே இருந்து நெஞ்ச தாண்டி குரலுலே காட்டுனாத்தான் சிவாஜியோட சிம்மக்குரலுக்கு மேட்ச் ஆகும்.அதை செஞ்சு காட்டுனவர் TMS.
TMS பாடுன பாட்டுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு சிவாஜிக்கு யாரும் சொல்ல வேண்டியது இல்லே.ஷுட்டிங் ஸ்பாட்டுலே மியூசிக் டேப்பே இல்லாமே எல்லாம் சிவாஜி நடிச்சிருக்கிற சங்கதி எல்லாம் இருக்கு.அவன்தான் மனிதன் படத்துல வர்ற மனிதன் நினைப்பதுண்டு பாட்டு சிங்கப்பூர்லே எடுத்தது.ஷுட்டிங் நடக்கறப்போ அந்த பாட்டோட மியூசிக் டேப்பை கொண்டு போக மறந்துட்டாங்க.அந்த பாட்டோட ரெக்கார்டிங் நடந்ததை சிவாஜி பாத்திருக்கார் .TMS பாடுனத நல்லா நினைவுல வெச்சிருந்தார்.அதை மனசுலே வெச்சுட்டு மியூசிக் சத்தமே இல்லாமே வாயசைச்சு கனகச்சிதமா பாடி நடிச்சவர் சிவாஜி.இதையெல்லாம் வேற யாராச்சும் நினச்சுப் பாக்க முடியுமா?
ஒரு சமயம் சிவாஜி TMS கிட்டே ,இதோ பாருங்க ..TMS ..பாட்டுலே எங்கயாவது வசனம் பேசறமாதிரி இருந்தா,அதை நீங்களே பேசிடுங்க.நீங்க பேசினாலும் எனக்கு மேட்ச் ஆகுதுன்னு சொல்லிட்டார் சிவாஜி.
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதைக்கு போய்விட்டன
இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே
ஞான ஒளியிலே இந்த வசனம்
எவ்வளவு பேமஸ்.சிவாஜி பேசற மாதிரியேஇருந்துச்சு இல்லே...
இந்த வசனம் முடிஞ்சு தாய் மடியினில் மழலைகள் ஊமையோன்னு ஆரம்பிப்பார் பாருங்க...சும்மா பட்டாஸ் மாதிரி வெடிச்சுத் தள்ளியிருப்பார்
TMS.அதுலே பாட்டு போற வேகம் இருக்ககே..எக்ஸ்பிரஸ் டிரெயின் மாதிரி.. அந்த மாதிரி வேகம்..
போற வேகம் டக்குன்னு சடன்பிரேக் போட்டது மாதிரி நின்னு ,மான்களும் சொந்தம் தேடுமேன்னு ..மெல்லமா மாறியிருக்கும்..சும்மா பிச்சிருப்பாங்க பாட்டை..இந்த நாலு பேர் கூட்டணி பொளந்து கட்டுன பாட்டுகள்லே இதுவும் ஒண்ணு...
இவங்க நாலு பேர் கூட்டணிலே முதல் போட்டி மெல்லிசை மன்னர்கிட்ட இருந்து ஆரம்பிக்கும்.கவிஞர் எழுதறதுக்காக ட்யூன்களா அள்ளிக் கொட்டுவார்.மெல்லிசை மன்னர் ட்யூன் எடுத்து வீசினா கவிஞர் தன் பங்குக்கு ஜால ஜாலமா வார்த்தைகளை கொட்டுவார்.இந்த ரெண்டும் முடிஞ்ச பின்னாலே ,வந்து நிப்பார் TMS.ரிகர்சல் முடிஞ்சதும் ஆரம்பிப்பார்.கிளப்போ கிளப்போன்னு கிளப்புவார்.
இதை பாத்துட்டு இருப்பார்,இல்லேன்னா கேட்டுட்டு வருவார் சிவாஜி.அடிச்சு பிரிச்சு மேஞ்சிடுவார்.மியூசிக் பண்ணுன விஸ்வநாதனுக்கு,
பாட்டெழுதுன கண்ணதாசனுக்கு,பாடுன TMS க்கும் ,அவங்க உழைச்ச உழைப்புக்கு சிவாஜி தன்னோட நடிப்பாலே ஒரு கௌரவம் செஞ்சிருப்பார்.
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக