எல்லா விசேஷங்களுக்கும் பாட்டு போடணுமா .சிவாஜி பாட்டு இருக்கு.எல்லா மதத்துக்கும் ஏத்த சிவாஜி பாட்டு இருக்கு.வாழ்க்கையோட எல்லா சூழ்நிலைக்கும் தகுந்த பாட்டுகளும் இருக்கு.ரொம்ப பேரோட சாய்ஸ் பழைய சிவாஜி பட பாட்டுகள் தான்..அதாவது 50 வயசுக்கு முன்னாலே பாடுன பாட்டுகள்.50 வயசுக்கு பின்னாலே சிவாஜி பாடி நடிச்ச ரொம்ப அருமையான பாட்டுகளும் இருக்கு.எல்லாத்தையும் 50 வயசுக்கு முன்னாலேயே செஞ்சுட்டாலும் அதுக்கு பின்னாலே வந்த பாட்டுகளை சொல்லறதுக்கு வாய்ப்பு இல்லாம போச்சு.எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பழைய பாட்டுக இருந்ததும் ஒரு காரணம்.இதுல நாம பாக்கப்போறது நடிகர்திலகம் தன்னோட 50 வயசுக்கு மேலே பாடி நடிச்ச சூப்பர் ஹிட்டான தனி பாடல்களை மட்டும் தான்.
நடிகர்திலகம் பிறந்து 50 வருஷம் ஆன வருஷம் 1978.
இதுக்கு அடுத்ததா 1979.
இந்த வருஷம் வந்த படம் திரிசூலம்.இந்த படத்துலே எல்லா பாட்டும் சூப்பர்ஹிட்டா அமைஞ்சிருந்தாலும் கூட இதை இதுலே சொல்லப் போறதில்லே.நாம இதுலே பாக்கப்போறது நடிகர்திலகத்தோட சோலோ பாட்டுக்களைத்தான்.
அடுத்த படமான கவரிமான்லே சூப்பர் ஹிட்டா அமைஞ்ச பாட்டு பூப்போலே உன் புன்னகையில்.இந்த பாட்டு படத்துலே ரெண்டு தடவை வரும்.இந்த பாட்டுக்கு இசை இளையராஜா.பாடுனவர் SP.பாலசுப்ரமணியம்.
51 வயசுலே சிவாஜியோட சோலோ சூப்பர்ஹிட்டா அமைஞ்ச முதல் பாட்டுன்னு இதை சொல்லலாம்.
எல்லா பாட்டுகளையுமேஇதுலே சொல்ல முடியா விட்டாலும் ரொம்ப சூப்பர்ஹிட்டா அமைஞ்ச பாட்டுகளை மட்டும் இதுலே பாக்கலாம்.
இமயம் படத்துலே கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வமொன்று அடுத்த சோலோ பாட்டா வெச்சுக்கலாம்.இந்த பாட்டுலே அந்த சின்னப் பையன் ஹம்மிங்குக்கு மட்டும் ஜானகி குரல் கொடுத்திருந்தாலும் இதை தனிப்பாட்டா எடுத்துக்கலாம்.
இசை M.S.விஸ்வநாதன்.
பாடுனவர் TMS.
நான் வாழவைப்பேன் படத்துலே செம ஹிட்டான பாட்டு. எந்தன் பொன்வண்ணமே.TMS பாடி இளையராஜா இசையமைச்ச பாட்டு.ரொம்ப வருஷம் ஆனாலும் ரொம்ப ரொம்ப கேக்க வெக்கிற பாட்டு.
பட்டாக்கத்தி பைரவன்லே வர்ற யாரோ நீயும் நானும் யாரோ அடுத்த சோலோ ஹிட் பாட்டு.இதுக்கும் இளையராஜா இசை.TMS பாடுனது.
50 வயசைப் பத்தி சொல்லறப்போ இந்த பாட்டை சொல்லாமா இருக்க முடியுமா ?பாட்டு வரியிலேயே 50 ன்னு வருதே.ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்.இதெல்லாம் வர்றது இந்த 50 வயசுலேதான்னு கவிஞரே சொல்லிட்டாரே.இந்த பாட்டு காதல் பாட்டா
இருந்தாலும் பாட்டை சிவாஜி மட்டும் பாடறதாலே இதையும் சொல்லலாம்.இதுக்கும் இளையராஜா மியூசிக்.பாடுனவர் TMS.
ரத்தபாசம் படத்துலே வர்ற மான்குட்டி இப்போது என் கையிலே ஒரு சோலோ ஹிட் பாட்டு.MS.விஸ்வநாதன் மியூசிக்லே TM.S.பாடுனது.தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன ..உன்னை தாலாட்ட நான் இல்லையா ..இப்படி பல வரிகள் இந்த பாட்டுல ரொம்ப அம்சமா இருக்கும்.
விஸ்வரூபம் படத்துல ஒரு அதிரடி பாட்டு இருக்கும். என்னை யாருன்னு நெனச்சே பண மூட்டையை விரிச்சேன்னு..ஏரைப் பிடிச்சேன் இந்த ஊரைப் பிடிச்சேன் ,
எடுத்ததையெல்லாம் நடத்தி முடிச்சேன் ,கையோடு கள்ளம் இல்லே ,இந்த வாயோடு பொய்யும் இல்லேன்னு பாட்டு அதிரடி அட்டகாசமா அமைஞ்ச பாட்டு. விஸ்வநாதன் டிஎம்எஸ் கூட்டணி பாட்டு.
மோகனப் புன்னகை சுமாரா போன படமா இருந்தாலும் படத்துல கேட்க கேட்க இனிமையா அமைஞ்ச ஒரு பாட்டு இருக்கு. அது கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் பாட்டு ..
இதுவும் MSV-TMS காம்போலே வந்த பாட்டு.
அதே மாதிரி அமரகாவியம் படத்துலே ரொம்ப மயங்க வைக்கிற பாட்டு ஒண்ணு இருக்கு.சிவாஜி ஸ்டேஜ்லே பாடற மாதிரி .செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன்னு பாட்டு.
MSVயோட கை வண்ணம்
TMSசோட குரல் வளம் ரெண்டும் சேந்து பாட்டை தெவிட்டாத கானமா கேக்க வைக்கும்.
வளர்த்தகடா முட்ட வந்தா வெச்சா செடி முள்ளானா ...சோகப் பாட்டுதான்.ஆனா உருக உருக வெக்கற பாட்டு.
TMS -MSV காம்போதான் இதுவும்.இது கல்தூண் படத்துலே.
லாரி டிரைவர் ராஜாக்கண்ணுலே ஒரு பாசப்பாட்டு.தங்கச்சிக்காக பாடுவார் சிவாஜி.
ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க
கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க
ஏட்டில் அது போல நூறு தெய்வம்
நூறில் இவனல்ல வேறு தெய்வம்
இப்படி இடையிலே அருமையான வரிகளா இருக்கும் SPBதான் பாடியிருப்பார்.பிரமாதமான பாட்டு.
பாட்டோட முதல் வரி இதான்..
என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளிஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம் ...
இந்த படத்துலே வர்ற இந்த பாட்டை சொல்லவே வேணாம்.அந்தளவுக்கு கல்யாண கச்சேரியிலே கட்டாயம் பாடிருவாங்க.
கடவுள் நினைத்தான் மணநாள் படைத்தான் வாழ்க்கை உண்டானதே..
கீழ்வானம் சிவக்கும் படத்துக்காக TMS பாடி மெல்லிசை மன்னர் இசையமைச்சது.
வா கண்ணா வா படத்துலே TMS பாடுன ஒரு சோலோ சூப்பர்ஹிட் பாட்டிருக்கு.அது ஒரு சோகப்பாட்டு.ஒரு காலத்திலே என்னை கட்டிப்போட ஒரு ராஜ்ஜியம் இருந்தது பாட்டு.கிருஷ்ண ஜெயந்திக்கு ஸ்பெசலான இன்னொரு பாட்டும் இருக்கு.ஆனா அது TMS சும் குழுவும் பாடற பாட்டு.எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டு தான் பாட்டு.
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே ..
கருடா சௌக்கியமா படத்துலே இந்த பாட்டு ...இந்த ஒரு பாட்டு போதுமே ..இந்த பாட்டெல்லாம் சிவாஜியோட நடிப்புக்கு மட்டும்தான் செட் ஆகும்.அதிர வெக்கற பாட்டு.
புது வருஷம் பொறந்தா போதும்.சும்மா டக டகன்னு இந்த பாட்டு ஸ்பீடா கட கடன்னு போகும்.மியூசிக்கெல்லாம் சொல்லவே வேணாம்.தட தடன்னு அதிரும்.
எல்லா சேனலும் ரேடியோவிலயும் மாத்தி மாத்தி போட்டுட்டே இருப்பாங்க.மெல்லிசை மன்னர் போட்ட அதிரடி இசைக்கு கண்ணதாசன் நல்ல வார்த்தைகளை சேத்திருப்பாரு.இலங்கை ரேடியோவுலே ரொம்ப காலம் நெம்பர் 1;இடத்துலே இருந்த பாட்டு இது.நல்லோர்கள் வாழ்வை காக்க நமக்காக நம்மை காக்க ..Happy new year...
சங்கிலி படத்துலே ரொம்ப ஸ்பெசலான பாட்டு இது.
வேட்டைக்காரன் கோட்டையிலே வெச்சதுதான் சட்டமடி
வேடிக்கையா வாடிக்கையா போட்டதுதான் திட்டமடி.
இந்த வரிகள் அன்னைக்கு இருந்த தமிழக அரசாங்காத்தை பத்தி எழுதுன வரிகள்.
இந்த படம் ரொம்ப பரபரப்பாகி ஓட விடாமே சதி செஞ்சாங்க.அதனாலே இந்த பாட்டு ரொம்ப பாப்புலர் ஆகலே.இருந்தாலும் பாட்டு அதிரடியா இருக்கும்.கேக்க கேக்க உற்சாகமா இருக்கும்.தியாகி படத்துலே ,ஆடுங்கடி பாடுங்கடி பாட்டு இது.
நீதிபதி படத்துலே ஒரு பாட்டு.ஆவேச பாட்டு.தந்தை நான் இங்கே நீதி தேவன் தான் அங்கேன்னு பாட்டு.பாட்டு இடையிலே கர்ணன் , ஹரிச்சந்திரான்னு சிவாஜி பட சீனுகளை காமிப்பாங்க.
கங்கை அமரன் மியூசிக்லே மலேசியா வாசுதேவன் சிவாஜிக்காக பாடுன படம் இமைகள்.இதுலே ரெண்டு பாட்டுக.
ஒண்ணு அதிரடியா இருக்கும்.இன்னொன்னு அமைதியா இருக்கும்.
எங்க ராஜ்யத்தில் ஜாதிஇல்லை போங்கடான்னு ஒண்ணு.மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோன்னு ஒரு பாட்டு.
தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே .வெள்ளை ரோஜா பட பாட்டு.இது எந்தளவு ஹிட் ஆன பாட்டுன்னு சொல்ல வேண்டியதில்லே.
இளையராஜா இசையமைச்சு மலேசியா வாசுதேவன் பாடுன பாட்டு.
திருப்பம் படத்துலே ஒரு மெலடி பாட்டு .மெலடின்னா அப்படியொரு மெலடி.மியூசிக் அப்படி கிறங்க வைக்கும்.இது ஒரு காதல் பாட்டுதான்.ஊஞ்சல் ஆடற மாதிரி ஒரு உணர்வை தர்ற பாட்டு.அமைதியா கேட்டுப் பாருங்க.எனை மறந்து பாடுவேன்...உனை நினைத்து வாடுவேன்...ரொம்ப சாந்தமான பாட்டு இது..
சிரஞ்சீவி படத்துலே ஒரு சூப்பரான பாட்டு இருக்கு.இந்த பாட்டுலே மியூசிக்போற போக்கு இருக்கே.அது ரொம்ப வித விதமா அட்டகாசமா இருக்கும்.சிவாஜிக்குன்னே எழுதுன பாட்டு அமைஞ்சிருக்கும்.அன்பெனும் ஒளியாக ஆலய மணியாக எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி. கேட்டுப் பாருங்க.. ஒரு பரவசத்தை உண்டாக்குதா இல்லையான்னு பாருங்க ..
தராசு படம்னா இந்தப் பாட்ட சொல்லாம இருக்க முடியாது. சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல பாட்டு.TMS பாடுனாலே அது ஒரு தனி சுகம்தான்.
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா ..
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா ..
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை ..
ஹிட்டுனா ஹிட்டு அப்படி ஒரு ஹிட்டு ..
இளையராஜா இசையில மயங்க வச்ச பாட்டு
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக ..
படிக்காதவன் படத்தில சிவாஜிக்கு கௌரவமா அமைந்த வேசத்துக்கு
காவியமாக அமைஞ்ச பாட்டு இது...
தாய்க்கு ஒரு தாலாட்டு படத்துல ஒரு சூப்பர் பாட்டு இருக்கு.
ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனது யாரோ
இளையராஜா இசையமைச்சு ஜேசுதாஸ் பாடுன பாட்டு ..
ஜாதி மல்லிகையே நெஞ்சுல சாஞ்சுன்னு ,மண்ணுக்குள் வைரம் படத்தில ஒரு பாட்டு. தேவேந்திரன் இசை அமைச்ச பாட்டு. நல்ல சுகமான மெலடி பாட்டு.
அதே மாதிரி ராஜமரியாதை படத்துல வர்ற சின்னஞ்சிறு அன்னம் ஒன்று பாட்டையும் சொல்லலாம் ..
அன்புள்ள அப்பா படத்துலே ரெண்டு அருமையான பாட்டுகள்.ரெண்டுமே ஜேசுதாஸ் பாடுனது.அன்புத்தாயே அன்புத்தாயே பாட்டொண்ணு,மரகதவல்லிக்கு மணக்கோலம்னு இன்னொரு பாட்டு.
ஐல்லிக்கட்டுலே ,ஏரியிலே ஒரு ஓடம்னு ஒரு அருமையான பாட்டு.இளையராஜா இசையில மலேசியா வாசுதேவன் பாடுனது .
கிரருஷ்ணன் வந்தான் படத்துலே ஒரு சோலோ பாட்டு.சோகப்பாட்டுதான்.நான் பாசமலரொன்று பார்த்து வளர்த்தேன் ஏழுமலையானேன்னு பாட்டு.மலேசியா பாடுனது.
என் தமிழ் என் மக்கள் படம்.கங்கை அமரன்தான் மியூசிக்.அதிரடியான அரசியல் பாட்டு இது. வாங்கிய சுதந்திரம் ஏழைகள் எங்களுக்கான்னு ஆரம்பிக்கும்.தீ மாதிரி வார்த்தைகள் இருக்கும்.
பொதுஜனங்களுக்கு அதிகம் தெரியாத பாட்டு இது.
ஞானப்பறவையிலே ,ஆணவம் கொள்ளாதே ஞானப்பெண்ணே அனைத்தும் உணர்ந்தவன் ஞானப்பெண்ணேன்னு ஒரு பாட்டு.ரொம்ப நாள் கழிச்சு TMS சிவாஜிக்கு பாடுன பாட்டு.சிவாஜிக்கு TMS பாடுன கடைசி பாட்டும் இதுதான்.
சின்ன மருமகள் படத்துலே ரெண்டு பாட்டு.ரெண்டுமே நல்ல பாட்டுக.ஒண்ணு மலேசியா பாடுனது.அப்பன் என்ன ஆத்தா என்னான்னுபாட்டு.
இன்னொன்னு ஜேசுதாஸ் பாடுனது.கண்மணி பொன்மணின்னு பாட்டு.
மேலே சொன்ன பாட்டுக எல்லாம் சிவாஜியோட 50 வயசுக்கு மேலே தனிப்பாட்டா அமைஞ்ச பாட்டுகள் .
இந்த மாதிரி டிராக்லே எந்த நடிகருக்குமே இது மாதிரி பாட்டுக அமையலேங்கறது சிறப்பான விஷயம்.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக