சிவாஜிகணேசன் நடித்த ஆண்டவன் கட்டளை படத்தில் அமைதியான நதியினிலே ஓடம் என்று ஒரு இனிமையான பாடல் வரும். இந்தப்பாடலில் சிவாஜியும், தேவிகாவும் நடித்து இருந்தனர். 1964ல் வெளியானது இந்தப் படம். இந்தப் பாடல் காட்சியில் உள்ள அந்த இடமே நமக்கு ஒரு அலாதியான அமைதியைத் தரும். அந்த இடம் எங்குள்ளது என்று தெரியுமா?
இந்த இடம் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெய்யாற்றங்கரை ஆகும்.
அங்குள்ள ஒரு ரயில்வே ஆற்றுப் பாலத்தின் கீழ் தான் இந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் பழனிக்கு அருகில் உள்ள கோதைமங்கலம் ஊரில் எடுக்கப்பட்டதாக வேறு ஒரு இணையதளத்தில் பதிவாகி உள்ளது .ஆனால் அது சரியான செய்தி அல்ல.
ஆண்டவன் கட்டளை படத்தின் இயக்குனர் கே.சங்கர். இந்தப் படத்தின் மையக்கருவே இந்தப் பாடல் காட்சி தான். அதை வித்தியாசமாக படமாக்க நினைத்தாராம் இயக்குனர். அதனால் சிவாஜி, தேவிகா படகில் பயணம் செய்வது போல எடுத்தனர். அந்தப் படகு ஆற்றில் செல்லும்போது பாலத்தின் மேல் ரயில் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாராம் இயக்குனர். அதனால் திருவனந்தபுரத்தில் இருந்து நெய்யாற்ங்கரைக்கு வரும் ரயிலின் நேரத்தை அறிந்து கொண்டு, அந்த நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பாகவே படக்குழு தயாரானது. படகில் சிவாஜியும், தேவிகாவும் தயாராக இருந்தனர்.
ஆற்றின் கிழக்கு கரையில் கேமரா தயார்நிலையில் இருந்தது. அதற்குள் இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவ, சிவாஜியைப் பார்க்க கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துவிட்டது. ரயிலை படமாக்கப் போகிறார்கள் என்று தகவல் தெரிந்து விட்டது. இதற்காகவே பலரும் அந்த இடத்துக்கு சென்று, அங்கிருந்து காலை புறப்படும் ரயிலில் ஏறிச் சென்றார்களாம்.
இப்படியும் அந்த இணையத்தில் செய்தி உள்ளது.இதுவும் சரியானதா என்பது தெரியவில்லை.ஆனால் பாடல் படம் பிடிக்கப்பட்ட இடம் கேரளா,நெய்யாற்றங்கரைதான் இந்த பாடலில் ஆற்றின் நடுவில் ஒரு மொட்டை மரம் இருக்கும் .அந்த மரத்தில் நின்றுகொண்டு சிவாஜி பாடுவது மாதிரி காட்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சங்கர் விரும்பினார்.ஒரு படகில் சிவாஜி சென்று அந்த மொட்டை மரத்தில் தாவி ஏற முயற்சி செய்தபோது பிடி நழுவி தண்ணீரில் விழுந்து விட்டார்.தயாரிப்பாளர் வீரப்பாநீரில் பாய்ந்து செல்ல முயற்சித்தார்.சிவாஜி தனக்கு நீச்சல் தெரியும்,அதனால் உதவிக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
பின்பு சுதாரித்து அந்த மொட்டை மரத்தில் ஏறி விட்டார்.
தண்ணீருக்குள் குதித்த வீரப்பாவின் சட்டை பைக்குள் இருந்த ரூபாய் நோட்டுகள் எல்லாம் தண்ணீரில் நனைந்து விட்டன.வீரப்பா ரூபாய் நோட்டுகளை வெயில் காய வைத்ததை பார்த்த சிவாஜி ,
பணத்தை தண்ணீரா செலவழிக்கிறார்னு சொல்லுவாங்களே ,நீங்க என்ன வெயில்லே காய வெக்கறீங்களேன்னு கமெண்ட் அடிச்சத பாத்து வீரப்பா உள்பட எல்லோரும் சிரித்தனர்.
இது உண்மைசெய்தியாகும்.
இதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடலான அருகே அழகே வா பாடல் படப்பிடிப்பு சமயத்திலும் ஒரு அசம்பாவித சம்பவம் ஏற்பட்டு தேவிகா உயிர் பிழைத்தார்.
அழகே வா அருகே வா பாடலை கோவளம் கடற்கரை பாறைப்பகுதியில் படமாக்கினார்கள்.
அலைகள் அலைமோத சீற்றமாய் வரும்போது அந்த இடத்தில் பாறை மேல் படுத்துக்கொண்டு தேவிகா பாட வேண்டிய காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.திடிரென ஒரு பெரிய அலை வந்து தேவிகாவை கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது.15 அடி ஆழமிருக்கும் இடத்தில் தேவிகா மூழ்கிப்போனார்.
படக்குழுவினர் பதறிப் போனார்கள்.உதவி இயக்குனர் பாலுவும் தயாரிப்பாளர் PS.வீரப்பாவும் கடலுக்குள் குதித்து தேவிகாவை தேடினார்கள்.
சிறிது நேரம் கழித்து அலைகளுக்கு இடையில் தேவிகா மிதந்து வர இருவரும் சென்று தேவிகாவை தூக்கி வந்து பாறையில் படுக்க வைத்தார்கள்.சிறிது நேரம் கழித்து தேவிகா விழித்ததை பார்த்த பின்புதான் படப்பிடிப்புக் குழுவுக்கு நிம்மதி ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் தேவிகா அந்த காட்சியில் தொடர்ந்து நடிக்காமல் போய் விடுவார் என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தார்கள்.ஆனால் தேவிகா தொடர்ந்து நடித்து அந்த பாடல் காட்சியில் நடித்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
இந்த சம்பவங்களை பேசும்படம் சினிமா இதழ் நேரில் பார்த்து ஆண்டவன் கட்டளை படப்பிடிப்பு என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையாக வெளியிட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக