நடிகர்திலகம் சிவாஜியும் எம்ஜிஆரும் நடித்த படம் கூண்டுக்கிளி.இந்த படம் 1954 ஆம் ஆண்டு வெளி வந்தது.
இரு தரப்பு ரசிகர்களால் நடந்த சண்டை சச்சரவுகளால் மேற்கொண்டு இருவரும் இணைந்து நடிக்காமல் போனது.சரியான கதை அமைப்பு ,அதற்கான முயற்சிகள், வாய்ப்பும்.. அதற்கு பின்பு அமையாமல் போனதும் ஒரு காரணம்.இருந்தாலும் நடிகர்திலகமும் எம்ஜிஆரும் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் சில ரசிகர்களிடம் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டே நெடுங்காலமாக இருந்து வந்தது.
நடிகர்திலகம் நடிக்க வந்து இரண்டே வருடங்களில் கூண்டுக்கிளி படம் வந்து அதோடு அந்த இருவர் கூட்டணி நடைபெறாமல் போய் விட்டது.இது நடந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து
அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது.அதற்கான முயற்சியை மேற்கொண்டவர் தயாரிப்பாளர் K.பாலாஜி.இருவரையும் வைத்து பாலாஜி செய்ய நினைத்த படம் என்ன? அதற்கு பின் என்னநடந்தது?
1975 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியானஇந்தி படம் ஷோலே.தர்மேந்திரா அமிதாப்பச்சன் சஞ்சீவ்குமார் ஹேமாமாலினி ஜெயாபாதுரி
அம்ஜத்கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் இது.
ஷோலே இந்தி திரைப்படம் மிகப்பெரிய ஓட்டம் ஓடி பெரிய வசூல்சாதனை செய்த ரிக்கார்ட் படமாகும்.
அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனையை முறியடித்த திரைப்படம் ஷோலே.
ஷோலே படத்துக்காக சிறிய கதை ஒன்றை எழுதி வைத்திருந்தார் இந்தி திரைப்பட எழுத்தாளர் சலீம் ஜாவிட் .இந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் போய் சொன்னார். யாரும் அதை சட்டை கூட செய்யவில்லை.சலீம் ஜாவிட் அவமானத்துடன் திரும்பியது தான் மிச்சம்.இருந்தாலும் சோர்ந்து போகாமல் பிரபல இந்தி இயக்குனர் ரமேஷ் சிப்பியிடம் இந்த கதையை சொன்னார்.அவருக்கு கதை பிடித்து போனது.அந்த கதையை தன்னுடைய கற்பனை வளத்தில் சிறப்பாக செய்து தனது தந்தைஜி.பி. சிப்பி தயாரிப்பில் ஷோலே என்ற தலைப்பில் படத்தை உருவாக்கினார் ரமேஷ் சிப்பி.
1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கி சுமார் ஒன்றரை வருடங்கள் வரை நடைபெற்றது.இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகத்தில் உள்ள ராமநகரா என்ற இடத்தில் நடந்தது.ஏக் தோஸ்த் என்ற பாடல் படத்தில் ஐந்து நிமிடம் வரும்.பாடல் படமாக்க 21 நாட்கள் ஆனது.
போபாலில் வாழ்ந்த ஒரு மனிதரை நினைவில் கொண்டு கப்பர்சிங் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.இந்த வேடத்தில் நடித்து அதிக புகழ் பெற்றார் அம்ஜத்கான்.அம்ஜத்கான் திரைக்கு அறிமுகமான படம் இது.படத்தின் ஹீரோக்களை விட அம்ஜத்கான் பெயர் பெற்றார்.அவர் செய்தது வில்லன் கதாபாத்திரம்.
படம் தயாரித்து 1975 ஆகஸ்டு 15 அன்று வெளியானது.
சரமாரியான வசூலை அள்ளியது.தமிழ்நாட்டிலும் வெளியான .இப்படம் மிகப்பெரும் வசூலை அள்ளிக் குவித்ததது.
எப்போதும் ஹிட்டாகும் மற்ற மொழிப் படங்களில் கண் வைத்திருக்கும் K.பாலாஜிக்கு ஷோலேவின் வெற்றியும் கவனத்துக்கு வந்தது.
.இந்த திரைப்படத்தை தமிழில் தயாரிக்க முன் வந்தார்.
ஷோலே படத்தை தயாரிப்பது என்றாலும் இந்தியில் பெரிய ஹீரோக்கள் நடித்து பிரமாண்டமாக எடுக்கப்பட்டதை போலே தமிழில் தயாரிக்கப்பட வேண்டும் என்றால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டும்.அப்படி பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கும் போது பெரிய கதாநாயகர்கள் நடித்தால்தான் படம் எடுபடும் என்பது உண்மை.
சிவாஜியின் ஆஸ்தான தயாரிப்பாளர் பாலாஜி. சிவாஜியை ஒரு கதாநாயகனாக போடும்போது இன்னொரு பெரிய கதாநாயகனும் தேவை என்றொரு அவசியமும் இருந்தது.
பாலாஜி அந்த இன்னொரு கதாநாயகன் பாத்திரத்துக்கு யாரை போடலாம் என்று குழம்பிக் கொண்டிருந்த வேளையில் தான் அந்த எண்ணம் தோன்றியது.
நடிகர்திலகத்துடன் இணைந்து எம்ஜிஆரை நடிக்க வைத்து படத்தை எடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.
சிவாஜி பற்றி கவலையில்லை.யாராக இருந்தாலும் எந்த வேடம் என்றாலும் ஒன்றும் சொல்லமாட்டார்.இப்போது எம்ஜிஆரிடம் இது பற்றி பேச வேண்டும். அவர் என்ன சொல்வார் என்பதை வைத்தே பட வேலைகளை ஆரம்பிக்க முடியும் .பாலாஜி எம்ஜிஆரிடம் சென்று தான் ஷோலே தயாரிக்க போவதாகவும் அந்த படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
அந்த படத்தின் வெற்றியும் பிரம்மாண்டமும் அவர் அறியாத ஒன்றல்ல.
தமிழுக்கு ஒத்து வருமா என்ற அவருடைய கேள்விக்கு பாலாஜி கொடுத்த விளக்கம் அவரை திருப்தி செய்தது. மேலும் ,சிவாஜியை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை விருப்பமாக கொண்டவர்.
பாலாஜி அதுவரை தன்னை வைத்து படம் எடுத்ததில்லை.பாலாஜி ஒரு சிறந்த தயாரிப்பாளர். எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக செய்வார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.இப்படி பல விஷயங்களுக்கு தீர்வும் தெளிவும் கிடைத்த பின்னர் ஷோலே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்த விபரங்களை எல்லாம் சிவாஜிக்கு தெரிவித்த பாலாஜி படத்தை தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கினார்.
பாலாஜி ஷோலே பட வேலைகளை தொடங்கியது 1976ல்.1977 ல் தமிழக சட்டமன்றதேர்தல் நடைபெற இருந்ததால் எம்ஜிஆர் கட்சி வேலைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டி இருந்தது.அதனால் பட வேலைகள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. மேற்கொண்டு நடந்தஅரசியல் சூழ்நிலைகள் ஷோலே படத்தின் படப்பிடிப்பை தொடங்க கூட முடியாமல் செய்து விட்டது.
ஷோலே படம் தயாரிக்க முடிவு செய்து தொடங்கப்படாமலே நின்று போனது.
கருத்துகள்
கருத்துரையிடுக