நடிகர்திலகம் சிவாஜியே ஒரு பெரிய டெக்னாலாஜி மனுசனா தான் இருந்திருக்கார்.நடிப்புலே எத்தனையோ புது விதமான நடிப்பை செஞ்சிருக்கார்.அவர்தான் அப்படின்னா அவரோட பல படங்கள்லயும் ஒவ்வொரு புதுமைகள் நடந்துட்டுதான் வந்திருக்கு.
அந்த மாதிரி ஒரு புது முயற்சியா ஒரே ஷாட்டுலே ஒரு நாலரை நிமிஷ பாட்டை சிவாஜி நடிச்ச படத்துலே எடுத்திருக்காங்க.
இந்த புதுமை நடந்தது 1974 லே.அதுக்கு முன்னாலே இந்த மாதிரி எதுவும் நடக்கலே.
இந்த ஒரே ஷாட் விஷயத்தை பேசறதுக்கு முன்னாலே அதுக்கு முன்னாலேயே நடந்த இது மாதிரி நடந்த வேற ஒரு விஷயத்தையும் நினைச்சு பாக்கணும்.அது என்னான்னா ஒரே ஷாட்டுலே எடுத்த ஒரு வசனக் காட்சி .அதுவும் சிவாஜி படம் தான்.சுமார் 8 நிமிஷ வசன காட்சி .ராஜா ராணி படத்துலே வர்ற சேரன் செங்குட்டுவன் நாடக வசன காட்சிதான் அது .கலைஞர் எழுதுனது.கஷ்டமான இலக்கிய வார்த்தைகள் அமைஞ்ச வசனகாட்சி அது.
இப்படி ஒரே ஷாட்டுலே எடுத்த வசன காட்சியாகட்டும்,ஒரே ஷாட்டுலே எடுத்த பாடல் காட்சியாகட்டும் சிவாஜி நடிச்ச படத்துலேதான் ரிஸ்க் எடுத்து பண்ணியிருக்காங்க.
சிவாஜியை வெச்சு எந்த ரிஸ்க்கும் எடுக்கலாம்னு டைரக்டர்கள் வெச்ச நம்பிக்கை தான் காரணம்.
ஒரே ஷாட்டுலே எடுத்த பாடல் காட்சி எதுன்னா சிவகாமியின் செல்வன் படத்துலே வர்ற எத்தனை அழகு கொட்டிகிடக்குது பாடல்தான் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் பாடலாகும்.
இந்தியாவிலேயே இது முதல் முயற்சின்னு சொல்ல முடியாது. ஏன்னா இந்த படம் ஆராதனா இந்தி படத்தோட ரீமேக் படம்தான். ஆராதனா படத்துலேயும் இந்த பாட்டு ஒரே ஷாட்டுலே தான் எடுத்திருந்தாங்க. அதனாலே தமிழ்லேயும் அப்படியே எடுத்தாங்க.
வெளியிடத்துலே எல்லாம் சூட் பண்ணலே. ஒரே வீடு. ஒரே ரூம்தான்.ரூம்னு சொல்லறத விட பெரிய ஹால்னு சொல்லலாம்.ஒரே ஹால்ல எடுத்திருந்தாலும் ரிஸ்க் இல்லாமே இல்ல. காமிரா மூவ்மெண்ட்டுலே நகந்துட்டே இருக்கும்.ஹாலை சுத்தி சுத்தி வரும். சிவாஜி மட்டுமில்லாமே வாணிஸ்ரீயும் நடிச்சிருப்பாங்க. ரெண்டு பேரும் ஒரே பிரேமுலே வரணும். காமிரா ஜெர்க் ஆகாமே படம் புடிக்கணும்.டிராலி ஷாட்டும் கிடையாது. ரெண்டு பேரும் நகந்து நகந்து போய்ட்டே இருப்பாங்க.ரெண்டு பேரையும் ஒரே பிரேமுலே கவர் பண்ணிட்டே காமிரா நகந்துட்டே இருக்கும்.என்ன ஒண்ணு பாட்டு வாய்ஸ் மட்டும் பேக்ரவுண்ட்லே ஓடும்.பாடி நடிச்சிருங்க மாட்டாங்க. ஆராதனா பட பாட்டு 3.45 நிமிஷம் ஓடும். சிவகாமியின் செல்வன்லே பாட்டு 4.15 நிமிஷம் ரன்னிங் டைம்.
காதலன் காதலி தனியா இருக்கற காட்சி. அந்த சூழ்நிலை அவங்களுக்குள்ளே ஒரு மோக உணர்வை தூண்டி அந்த உணர்ச்சிலே அவங்களோட உணர்வுகளை வெளிப்படுத்தற மாதிரியான சிச்சுவேஷன்.
இது ஒரு மோக உணர்வை தூண்டற மெலடி டைப் பாட்டுங்கறதாலே சிவாஜிக்கு SPB பாடியிருப்பார். தமிழ் சினிமாலே ஒரு புது வித முயற்சிதான் இந்த பாட்டு. இதுக்கு ஆராதனாதான் அடிப்படைன்னு சொல்லலாம் .
இந்த பாட்டை பாக்கறப்போ வசந்தமாளிகை பட காட்சி நினைவுக்கு வரும். அதுவும் இது மாதிரி சிச்சுவேசன்தான். அதே சிவாஜி வாணிஸ்ரீ ஜோடிதான்.சிவகாமியின் செல்வன் பாட்டோட மொத்த பீலிங்கையும் வசந்தமாளிகைலே ஆப்பிள் கடிக்கற அந்த ஒரு ஷாட்டுலேயே சிவாஜி காட்டியிருப்பார்.
ஒரே ஷாட்டுலே எடுத்த முதல் தமிழ்பாட்டு சிவகாமியின் செல்வன் பட பாட்டுதான்.
இந்த மாதிரி பல வித்தியாசமான தொழில் நுட்ப சங்கதிகள் ரொம்ப சிவாஜி படத்துலே தான் கையாண்டு இருக்காங்க.
முதல் ஸ்லோமோசன் காட்சின்னா சிவாஜியோட கண்கள் படத்தை சொல்லலாம்.
ஜூம் லென்ஸ் வெச்சு எடுத்த முதல் படம்னு உத்தமபுத்திரன் இருக்குது.
முதல் சினிமாஸ்கோப் படம் ராஜ ராஜ சோழன்.
இது இல்லாமே வேற சில முதல் முதல் விஷயங்களும் சிவாஜி படத்துக்கு இருக்கு.
டிரெய்லர் வெளியிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் திரும்பிப்பார்.
பாட்டே இல்லாமே வந்த முதல் படம் அந்தநாள்.
தாஜ்மகால்லே எடுத்த முதல் படம் பாவை விளக்கு.
லண்டன்லே போயி கலர் பிரிண்ட் போட்ட முதல் படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
80 அடி கட்அவுட் வெச்ச முதல் படம் வணங்காமுடி
.
இது எல்லாம் உதாரணத்துக்குத்தான்.இப்படி ரொம்ப விஷயம் இருக்கு.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக