மேஜர் சுந்தரராஜன் நடித்த அதிரடி நாடகம் ஞானஒளி.
மேஜரே டைரக்சன் செய்த நாடகம் இது.கதை வசனம் வியட்நாம் வீடு சுந்தரம்.
நாடகத்தை பார்த்த சிவாஜி நாடகத்தின் அதிரடி அட்டகாசத்தை பார்த்து வியந்து போனார்.நாடகத்தை பார்க்க ,பார்க்கவே ஆண்டனியாகவும் அருணாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.பிறகென்ன ஞானஒளி திரைப்படமாக நம்மை மிரட்சி அடைய வைத்தது.திரைப்பட தயாரிப்பை ஜேயார் மூவீசார் எடுத்துக் கொண்டனர்.
திரைப்படத்தில் இடம் பெற்ற ஆண்டனியின் ஆரம்ப காதல் போர்ஷன் காட்சிகள் நாடகத்தில் இல்லை. திரைப்படத்துக்காக இணைக்கப்பட்ட காட்சிகள் அவை.
நாடகத்தில் ஆண்டனியின் மகள் கல்லூரி படிப்பு முடிந்து தேவாலயத்தில் வந்து பாதரை சந்திக்கும் காட்சியில் இருந்து தான் ஆரம்பிக்கும்.திரைப்படத்தில் வரும் ஸ்ரீகாந்த் சாரதா காதல் காட்சிகள் ,பெட்டி மாற்றம்,ஆண்டனி அணியும் பேன்ட் சட்டை காட்சிகள் நாடகத்தில் இல்லை.
திரைப்படத்தில் ஆண்டனி சவப்பெட்டி செய்யும் தொழிலாளியாக இருப்பார். நாடகத்தில் மேஜர் புதைகுழி தோண்டுபவர் ,ஊருக்கு சின்ன சின்ன வேலைகள் செய்து தருபவராக நடித்திருப்பார்.இதற்கான காட்சிகள் எல்லாம் நாடகத்தில் இல்லை.சில வசனங்கள் மூலமாக தெரிந்து கொள்வதாக இருக்கும்.
நாடகம் திரைப்படம்இரண்டிலும் ஆண்டனியின் முரட்டுகுணத்தில் மாற்றம் இருக்காது.
சர்ச் வேலைகள் முடிந்தபின் மாலைப் பொழுதானால் ஆண்டனியின் குடியிருப்பு கள்ளுக்கடை வாசல் தான்.அதிக குடி தினம் தினம் என்று நாடக பாத்திரம் இருக்கும்.திரைப்படத்தில் சிவாஜியின் பாத்திரத்தை அவ்வாறு காட்டியிருக்க மாட்டார்கள்.
கள்ளுக்கடைக்கு சென்று லாரன்ஸ் ஆன்டணிக்கு அறிவுரை சொல்வது போன்ற காட்சி நாடகத்தில் இருக்கும்.
காதலனுடன் மகளை பார்க்கும் ஆண்டனி ,கோபம் வந்து ஆண்டனி அருவாள் எடுத்து வெட்ட பாய்வது ,லாரன்ஸ் தடுப்பது ,பின் இருவருக்கும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து வைப்பது போன்ற காட்சிகள் எல்லாம் நாடகம் திரைப்படம் இரண்டிலும் ஒன்று போலத்தான்.ஞானஒளி திரைப்படத்தில் கோபத்துடன் வாழைமரங்களை வெட்டி சாய்ப்பது போலே காட்சியானது நாடகத்தில் கயிற்றுக் கட்டிலை வெட்டி எறிவது போலே இருக்கும்.
திரைப்படத்தில் இடம் பெற்ற இரட்டை காமெடியர்கள் MRR .வாசு ,ISR பாத்திரங்கள் நாடகத்தில் பிரதானமாக இருக்கும்.
ஞானஒளி திரைப்படத்தில் ஸ்ரீகாந்த்தை ஒரே அடியில் வீழ்த்தி தூக்கி கொண்டு வருவதாக கதையமைப்பு இருக்கும்.கொலை செய்வதாக இருக்காது.ஆனால் நாடகத்தில் கோபம் வந்து மேஜர் கழுத்தை நெறித்து தூக்கி கொண்டு வந்து சர்ச்சில் உடலை போடுவார்.நான் ஒரு பாம்பை அடிச்சுக் கொன்னுட்டேன் பாதர் என்று ஆத்திரத்துடன் பேசுவதாக காட்சி அமைப்பு இருக்கும்.
பாதர் இறக்கும் தருவாயில் ஆண்டனியை பார்க்க விருப்பப்படுவது,லாரன்ஸிடம் பரோலில் அழைத்து வர சொல்வது,ஆண்டனி பாதரின் நெகிழ்ச்சியான சந்திப்பு,பாதரின் மரணத்தை தொடர்ந்து சர்ச்மணி அடிப்பது ,பின் ஆண்டனி லாரன்ஸ் மோதல்கள் ,லாரன்ஸை அடித்து சாய்த்து விட்டு ஆண்டனி ஓடிப்போவது போன்ற காட்சிகள் எல்லாமே நாடகம் திரைப்படத்தில் மாற்றமிருக்காது. நாடகத்துக்காக எழுதப்பட்ட சில வசனங்கள் கூட திரைப்படத்தில்
உபயோகப்படுத்தபட்டிருக்கும் .
சாகப் போறோம்னு தெரிஞ்சா பூனை கூட புலியா மாறிடும்,வெத்து துப்பாக்கியை வெச்சுட்டு விளையாட்டு காட்டாதே போன்ற வசனங்கள்..
இருபது வருடம் கழித்து அதே ஊருக்கு மாற்றலாகி வரும் லாரன்ஸ்.ஆன்டணியை தப்பிக்க விட்டதால் புரோமேசன் கிடைக்காமல் அதே பதவியில் .நாடகத்தில் லாரன்ஸ் பேசுவதாக ஒரு வசனம் :என் பேருலேயே என் தலைவிதி இருக்கு. பிரிச்சு சொன்னால்...
(Law runs )லா ரன்ஸ்..சட்டம் குற்றவாளியை பின் தொடர்ந்து ஓடிட்டேதான் இருக்கு..நான் செத்துட்டாலும் நீ ஆண்டனியை கண்டு பிடிச்சே தீரணும்.
லாரன்சின் தோற்றம் நாடத்தில் வழுக்கைத் தலையுடன் இருக்கும்.
ஞானஒளி படத்தில் பல வருடம் கழித்து ஆண்டனியின் மகளை சர்ச்சில் பார்ப்பார் லாரன்ஸ்.
இதே காட்சி நாடகத்தில் லாரன்ஸிடம் டொனேசன் கேட்டுவரும் கான்வென்ட் டீச்சராக இருப்பார்.கூடஅப்போது மேரியின் மகளும் இருப்பார்.மேரியை பார்த்து அதிர்ந்து போகும் லாரன்ஸ் ,அவளுடைய இந்த நிலைமைக்கு தான் தானே காரணம் என்ற மன வருத்தத்தில் ,அதற்கு பிரதியுபகாரம் செய்ய நினைத்து ,மேரியின் மகளை தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைப்பதாக கூறுவார்.
ஞானஒளி திரைப்படத்தில் இந்த காட்சிகள் எல்லாம் திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.
நாடகத்தில் மேரி ,தன் மகளின் திருமணத்துக்காக கடன் கேட்டு ஆண்டனியான அருணிடம் வருவார்.அதுதான் அருண் மேரியின் சந்திப்பாக இருக்கும். ஆனால் திரைப்படத்தில் சர்ச்சில் கூட்டத்தோடு கூட்டமாக மேரியை அருண் பார்ப்பதாக காட்சி இருக்கும்.
லாரன்சுக்கு சாத்துக்குடி ஜூஸ் பிழிந்து தரும் காட்சியில் ,லாரன்ஸ் பேசும் வசனம்:உங்க இரும்புக் கையாலே இந்த பழம் படற பாட்டை பாத்தால் ,இதுவே யாருடைய கழுத்தாகவோ இருந்தால் அவங்க உயிர் பரலோகம் போயிருக்கும்..
நாடகத்தின் இந்த வசனமும் திரைப்படத்திலும்.
அருணின் கண் கண்ணாடியை கழட்டி பார்ப்பது ,இடது கை பழக்கத்தை சோதிப்பது ,என்று நாடக காட்சிகளின் சுவாராஸ்யமே திரைப்படத்திலும்.நாடகத்தில் சிவாஜி கேரக்டரை மேஜர் செய்திருப்பார்.
லாரன்ஸ் வந்து பரிசோதித்த டென்ஷனினில் அருண் புலம்பித் தள்ளும் நாடக காட்சி திரைப்படத்தில் தேவனே என்னை பாருங்கள் பாடலாக
இருக்கும்.
இடையில் மகளுடன் சேர்ந்து வீட்டில் கலயத்தில் சாப்பிடும் காட்சி ,மேரி வீட்டுக்கு செல்லும் காட்சிகள் ,என்று சில மாற்றங்களும் திரைப்படத்திற்காக செய்யப்பட்டிருக்கும்.
இறுதியில் திருமண நிகழ்வில் ,மேரி களங்கமானவள் என்று லாரன்ஸ் சொல்வதும் ,அருண் பாய்ந்து மெழுகுவர்த்தி ஸ்டாண்டால் லாரன்ஸை அடிக்க பாய்ந்து ,பின் சுதாரித்து ,லாரன்ஸிடம் உண்மையை ஒத்துக் கொள்வதுமான இறுதிக் கட்ட பர பரப்பு காட்சிகள்.
க்ளைமாக்ஸ் நாடகத்தில் வருவது போலவே திரைப்படத்திலும்.அருண் தன்னை பற்றிய உண்மையை ஒப்புக் கொள்ள வைப்பதற்காக லாரன்ஸ் நடத்தும் திருமண நாடகத்தில் நடைபெறும் சம்பவங்களுடன் ஞான ஒளி முடிவடையும்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக