எந்த ஒரு நடிகனின் ரசிகனுக்கும் கிடைக்காத ஒரு உல்லாச சொர்க்கபுரி சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே வாய்த்தது. சந்தோசமான மன நிலையில் அந்த ரசிகனை இருக்க வைத்த இடம் அது.அது சிவாஜியின் சாந்தி தியேட்டர்.தன் சொந்த திரையரங்காக ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் நினைக்க வைத்த இடம் சாந்தி தியேட்டர்.
அந்த சாந்தி தியேட்டருக்கு சிவாஜி வருவாரா ..
வந்திருக்கிறாரா..
சிவாஜியை சாந்தி தியேட்டரில் பார்த்தேன் என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை.
இந்த குறையை அவர் நடித்த படங்கள் போக்கியது.
வெளியூரிலிருந்து சென்னை வரும் ஒரு சிவாஜி ரசிகன் ,வந்த வேலை முடிந்ததும் அவன் பார்க்க விரும்புவது சாந்தி தியேட்டரைத்தான். சென்னையின் புகழ் பெற்ற இடங்கள் ,மெரீனா பீச்செல்லாம் அப்புறம் தான்.நேரம் இருந்தால் சாந்தியில் படம் பார்த்து விட்டு ஊர் போனதும் எல்லோரிடமும் சொல்லி பெருமை பட்டுக் கொள்வான். சாந்தியில் படம் பார்த்ததாக.
சாந்தி தியேட்டருக்கு பல சிறப்புகள் உண்டு .வரலாறு உண்டு.அதில் ஒன்றுதான் சிவாஜி சாந்தி தியேட்டரில் நடித்தது. எந்த சிவாஜி திரைப்படங்களில் சிவாஜி நடித்தார் ,சிவாஜியின் எந்த படங்கள் சாந்தி தியேட்டரில் எடுக்கப்பட்டது என்பதையும் இதில் பார்க்கலாம்.
சாந்தி தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டது 1961..முதலமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
சாந்தி தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கழித்து அதாவது 1965ல் வெளியான சிவாஜி படம் நீலவானம்.இந்த படத்தை இயக்கியவர் P.மாதவன்.கதாநாயகி தேவிகா ,ராஜஸ்ரீ . சாந்தி தியேட்டரில் படம் பிடிக்கப்பட்ட முதல் படம் நீலவானம் தான்.
இந்த திரைப்படத்தில் சாந்தி தியேட்டர் பல முறை காட்டப்படும்.இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் சாந்தி தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் ஒரு ஊழியராகவே நடிகர்திலகம் நடித்திருப்பார்.
நடிகை ராஜஸ்ரீயுடன் நடிகர்திலகம் நடித்த காட்சிகளும்,தேவிகாவுடன் சாந்தி தியேட்டர் வந்து படம் பார்ப்பது போலவும் காட்சிகள் இருக்கும்.தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பெரிய நடிகர் தான் சொந்தமாக கட்டிய தியேட்டரை திரைப்படத்தில் இடம் பெறச் செய்ததும் ,அந்த திரையரங்கிலேயே அவர் பணி புரிவதுமாக காட்சிகள் இடம் பெற்றது சிவாஜி நடித்த இந்த நீலவானம் படத்தில் தான்.
1969 ல் சிவாஜி சரோஜாதேவி நடித்த படம் அஞ்சல் பெட்டி 520.
சிவாஜி சரோஜாதேவி இருவரும் ஒரு காட்சியில் மவுண்ட் ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருப்பதாக படத்தில் ஒரு காட்சி வரும் .
பிண்ணனியில்
அழகான சாந்தி திரையரங்கமும் காண்பிக்கப்படும்.
இன்னொரு கோணத்தில் சாந்தி முகப்பில் தங்கச் சுரங்கம் படத்தின் முழு பேனரும், நடிகர்திலகம் தொப்பியணிந்து கண்ணில் கண்ணாடியுடன் இடது கையில் துப்பாக்கி பிடித்து நிற்கும் கட்-அவுட், வெகுநேரம் காட்சியில் இடம்பெறும்.
இன்னொரு பேனரில் நடிகர்திலகமும் பாரதியும் இருக்க,நடிகர்திலகத்துக்கு ரசிகர்கள் போட்ட மாலையுடன் பேனர் இருக்கும்.
1972 ல் வெளிவந்த படம் பட்டிக்காடா பட்டணமா .இதில் ஒரு காட்சியில் சிவாஜியை அடியாட்கள் காரில் கடத்தி செல்வார்கள். கார் மவுண்ட் ரோடு வழியாக வரும் போது ,சிவாஜியிடம் அடியாட்கள் சாந்தி தியேட்டரை காண்பித்து இது தான் சாந்தி தியேட்டர் தெரியுமா? என்று கேட்டு அடிப்பது போலே ஒரு காட்சி வரும்.அடியாட்களை சிவாஜி விளாசித் தள்ளும் போது ,சாந்தி தியேட்டரை பற்றி கேட்ட அடியாளை சிவாஜி அடிக்கும் போது ,சாந்தி தியேட்டரை பற்றி எங்கிட்டேயே கேக்கறயான்னு சிவாஜி ஒரு பன்ஞ் அடிப்பார். காது கிழிய விசில் சத்தம் பறக்கும் தியேட்டரில்.
பிரபலமாக பேசப்பட்ட காட்சி இது .
இதே 1972 ஆம் வருடம் வெளியான படம் தவப்புதல்வன்.இந்த படத்தில் கே ஆர் விஜயா சாந்தி தியேட்டரில் டிக்கட் வாங்கி வைத்துக் கொண்டு சிவாஜிக்காக காத்திருப்பது போலே காட்சி வரும்.சிவாஜி வர மாட்டார். அப்போது சாந்தி தியேட்டரில் பாபு படம் ஓடிக் கொண்டிருக்கும்.பாபு பட பேனர் கட் அவுட் எல்லாம் காட்டுவார்கள்.சாந்தி தியேட்டர் போட்டோ காலரியில் பாபு பட ஸ்டில்கள் வைக்கப்பட்டிருப்பதையும் படத்தில் காட்டுவார்கள்.
எமனுக்கு எமன் திரைப்படத்திலும் சாந்தி தியேட்டர் காண்பிக்கப்படும்.படத்தில் எமனாக வரும் சிவாஜியும் சித்ரகுப்தனாக வரும் தேங்காய் சீனிவாசனும் எமலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக காட்சியமைப்பு இருக்கும். மவுண்ட் ரோட்டில் அவர்கள் நடந்து வருவது போன்றும் சாந்தி தியேட்டர் வளாகத்தில் இருவரும் பேசிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.அப்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த நடிகர்திலகத்தின் 200 வது படமான திரிசூலம் திரைப்படம் சாந்தி தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் .திரிசூலம் பட பேனர்களை படத்தில் காட்டுவார்கள்.
அந்த காட்சியில் வசனகர்த்தா AL.நாராயணன் கூட வருவார்.
நெஞ்சங்கள் படமும் சாந்தி தியேட்டரில் படமாக்கப்பட்டிருக்கும்.
சிவாஜியுடன் YG.மகேந்திரனும் நடித்திருப்பார்.அப்போது சாந்தி தியேட்டரில் சிவாஜி நடித்த வா கண்ணா வா படம் ஓடிக்கொண்டிருக்கும். வா கண்ணா வா பட கட்அவுட் அந்த காட்சியில் காட்டப்படும்.
சிவாஜி புரொடொகௌசன் தயாரித்த மன்னன் திரைப்பட சூட்டிங்கும் சாந்திதியேட்டரில் எடுக்கப்பட்டது. பிரபு நடித்த சின்னத்தம்பி படத்தின் வெற்றிவிழா சாந்தி தியேட்டரில் நடைபெறுவதாக காட்சிகள் இருக்கும்.சின்னதம்பி வெற்றிவிழாவில் சாந்தி தியேட்டரில் முதல் டிக்கட் வாங்குபவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பால் ,முதல் டிக்கட் வாங்கி செல்பவராக ரஜினிகாந்த் நடித்திருப்பார்.அந்த காட்சியில் பரிசு கொடுக்கும் தொழிலதிராக நடிகை விஜயசாந்தி நடித்திருப்பார்.ரஜினிகாந்த் சாந்தி தியேட்டர் டிக்கட் கவுண்ட்டரில் முண்டியடித்து டிக்கட் வாங்குவதாக காட்சிகள் இருக்கும்.
சாந்தி தியேட்டர் சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தியை கொடுத்த இடம். ஒவ்வொரு சிவாஜி ரசிகரின் வாழ்விலும் ஒவ்வொரு மலரும் நினைவுகளை கொண்டது.
சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டபோது சாந்தியை தொலைத்த ரசிகர்கள் என்று ஒரு பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக