சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலம்
2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி.
இந்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்பாக தினகரன் பத்திரிக்கை தனது தலைப்புச்செய்திகள் விளம்பர வால் போஸ்டரில் இந்த செய்தியையும் போட்டிருந்தது.
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என்று அந்த தகவலை சொன்னது.
அந்த 90 கள் காலகட்டம் சிவாஜிக்கு உடல் நலக் குறைவை மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தது.சிவாஜி உடல் நல குறைவை பற்றி பல முறை பத்திரிக்கை செய்திகளாக வந்துள்ளது.
இப்போது வந்த அந்த செய்தியும் பின் வரும் காலகட்டம் மறக்க வைக்கும் என்று தான் அந்த செய்தியை அன்று பார்த்த போதும் நினைக்க வைத்தது.
21.07.2001.இரவு எட்டு மணி இருக்கும். சன் டிவியின் செய்தி வாசிப்பு அறை.
எப்படிப்பட்ட செய்தியாக , தகவலாக இருந்தாலும் அதை சகஜமாக எடுத்து கடந்து போகும் சன் டிவியின் செய்தி வாசிப்பு குழு அந்த நேரத்தில் வந்த அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்துதான் போனார்கள்.அப்போது சன் டிவியின் செய்தி எடிட்டராக இருந்தவர் ராஜா.
இன்றைக்கெல்லாம் நியூஸ் சேனல்கள் ஓடுவதே கீழே ஓடும் அந்த ஸ்கோரிலிங் செய்திகளால் தான்.
லேலே குறிப்பிட் அன்றைய கால கட்டத்தில் இது மிக மிக அரிதான ஒன்று. பிரேக்கிங் நியூஸ் என்றெல்லாம் போட மாட்டார்கள். மிக முக்கியமான செய்தி என்றால் மட்டுமே காட்டப்படும்.சன்டிவியில் காலை மதியம் இரவு என அரை மணி நேர செய்திகள் மட்டுமே.
அப்போது நியூஸ் சேனல்களும் கிடையாது.
சிவாஜி குடும்பத்தில் இருந்து அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது .சிவாஜிகணேசன் காலமாகி விட்டார் என்று.அப்போதே சன் டிவி செய்தி அறைக்கு போனது. அதிர்ந்துதான் போனார்கள். என்ன செய்யலாம் நிமிடத்தில் முடிவெடுத்து பிரேக்கிங் நியூஸ் ஆக வழக்கமான செய்தி நேரம் தொடங்குவதற்கு முன்பே சன் டிவியில் வழக்கமான நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்த போது ,ஸ்கோரிலிங் செய்தியாக ,சிவாஜிகணேசன் காலமானார் என்ற செய்தியை ஓட விட்டது.
அதிர்ந்தது தமிழகம்.நம்பவும் முடியாமல் ,நம்பாமல் இருக்கவும் முடியாமல் அந்த 8 மணி செய்திக்காக காத்திருந்தனர் செய்தியறிந்த மக்கள்.அந்த இரவு 8 மணி செய்தி அதை ஊர்ஜிதப்படுத்த அந்த இரவு இருட்டிலும் தமிழகம் மேலும் கறுப்பானது.
சிவாஜி மறைவு செய்தி வெளி வந்ததே 7 மணிக்குத்தான் .
கருணாநிதி கண்ணீரோடு நண்பரை பிரிந்த துயரத்தை அவர் சொல்ல அதை அப்படியே 8 மணி செய்திகளில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காட்டி விட்டார்கள் .அவ்வளவு ஸ்பீடு.செய்திகளில் வானிலை அறிவிப்பு எல்லாம் சொல்லி முடித்த பின் ,பின் மீண்டும் சொல்லப்படும் தலைப்பு செய்திகளில் கருணாநிதியின் துயரத்தை ஒளி பரப்பினார்கள் .
மறுநாள் காலை 8 மணி செய்திகளில் நடிகர்திலகத்தின் இழப்பை சிறப்பாக சொல்ல விரைவாக வேலை நடந்தது.
சிவாஜியின் சிறப்பான செய்தித் தொகுப்பு மாடக்கண்ணு என்பவரால் எழுதப்பட்டது. அவர் எழுதிய ஸ்கிரிப்ட் சன் டிவி குழுவால் வெகுவாக பாராட்டப்பட்டது.
கண்களில் காட்டிய சோகத்தை அதிக கண்ணீராக பார்க்க வைத்த செய்தித் தொகுப்பாக உருவாக்கப்பட்டது. தயாரிப்பாளர் ராஜ்குமாரால் வீடியோ க்ளிப்புகள் மிக சிறப்பாக தொகுக்கப்பட்டது.
இரவு முழுதும் சிரத்தையெடுத்து அந்தஉருவாக்கப்பட்டது. செய்தித் தொகுப்பு .
அடுத்த நாள் காலை 8 மணி செய்திகளில் வெளியானது அந்த செய்தி தொகுப்பு.
எப்படிப்பட்ட கலைஞனை இழந்துவிட்டோம் என தமிழக மக்களை சோகமாக்கிய செய்தி அது.
சிவாஜியின் இறுதி காட்சிகளை மக்களுக்கு காட்ட சன் டிவி முடிவெடுத்து சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி வாங்கி விட்டார்கள். இதெல்லாம் இரவோடு இரவாக படு வேகமாக நடந்த விஷயங்கள்.
22.01.2001 அன்று அன்னை இல்லத்தின் முன்பு மக்கள் கூட்டம் கூடுவதற்கு முன்பே சன் டிவி நெட்வொர்க் தன் சேட்டிலைட் வேனை அன்னை இல்லத்தின் முன்பு நிறுத்தி இருந்தது.
நடிகர்திலகத்தின் உடல் தாங்கிய பெட்டியை பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அன்னை இல்லத்தின் வாசலில் வைக்கப்பட்டது. அதை ஒரு கேமரா நேரலையில் காண்பித்துக் கொண்டிருந்தது.
அஞ்சலி செலுத்தி விட்டு வந்த
கலைஞர்களை தனியாக பேட்டி எடுத்து அதை நேரலையில் காண்பித்தார்கள். சிவாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வந்தவர்களை அதே ஸ்பாட்டில் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது ஒரு பக்கம் என்றால்,பிரபல கலைஞர்களை ஸ்டுடியோவில் வைத்து பேட்டி எடுத்து அதையும் இடையிடையே காண்பித்தும் ஒளி பரப்பினார்கள்.
நடிகர்திலகத்தின் அன்னை இல்ல துக்க அனுசரிப்பு காட்சிகள் நேரலையாக ஓடிக் கொண்டிருக்க ,இடை இடையே பிரபலங்கள் துக்க அனுசரிப்பு பேட்டிகள் வேறு ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது.
சன்டிவி ஸ்டுடியோவில் நாகேஷ் அளித்த கண்ணீர் பேட்டி பெரும் துயரம் கொண்டதாக இருந்தது. அவரால் பேசவே முடியவில்லை.
கே ஆர் விஜயா நா தழுக்க தழுக்க மிகுந்த உணர்ச்சியில் பேசினார்.
SS.ராஜேந்திரன் கவிஞர் வைரமுத்து கமலாதியேட்டர் சிதம்பரம் இயக்குனர்கள் மனோபாலா கஸ்தூரி ராஜா உள்பட சிவாஜியுடன் நடித்த பல நடிகர் நடிகைகள் ஸ்டுடியோவுக்கே சென்று அஞ்சலி பேட்டி கொடுத்தார்கள்.
சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் அதிகம் பேர் பேசினார்கள்.சிவாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்களை காண்பிப்பதும் இடையிடையே பிரபலங்களின் அஞ்சலிகளையும் மாற்றி மாற்றி ஒளிபரப்பு செய்தார்கள் சன் டிவி குழுமத்தார்.
நடிகர் சங்கத்தில் இருந்து எல்லா நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் நடந்து அன்னை இல்லம் வந்தார்கள்.
அதற்கு பின்பு ..
சிவாஜி உடல் அன்னை இல்லத்தில் இருந்து புறப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானம் சென்று அடையும் வரை படப்பிடிப்பு செய்து பெரிய சம்பவம் செய்தார்கள்.
நடிகர் நடிகைகள் எல்லாம் லாரிகள் டிராக்டர்களில் ஏறிக் கொண்டு ஊர்வலமாக வந்ததை இதுவரை தமிழகம் பார்த்ததில்லை. பல மணி நேரங்களாக நடந்த ஊர்வலத்தை நேரலையிலையே காண்பித்தார்கள்.
வழி நெடுக நடந்த பிரமாண்டமான இறுதி ஊர்வலத்தை சன் டிவி படம் எடுத்து ஒளிபரப்பியதும் ஒரு பிரமாண்டமாகவே இருந்தது.
சிவாஜியின் உடல் தாங்கிய லாரியில் அமர்ந்து வந்த முண்ணனி நடிகர்கள் , லாரிகளில் நின்று வந்து கொண்டிருந்த நடிகர்நடிகைகள்
நடையாய் வந்த மக்கள் கூட்டம் ,வழியெங்கும் பெரும் கட்டிடங்களில் இருந்து பார்த்த பொது மக்கள் என எல்லா காட்சிகளையும் படம் பிடித்து ஒளிபரப்பு செய்தது.
ஊர்வலத்தில் நடிகர்சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் நடந்தே வந்தார். அவருடன் மற்ற முண்ணனி நடிகர்களும் வந்தார்கள்.
அவ்வளவு பெரிய பிரமாண்ட ஊர்வலத்தில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது சிறப்பு.கட்டுக் கோப்பாக நடந்த ஊர்வலம் அது.
சிவாஜிக்காக அழுதவர்களின் கண்களில் வழிந்த கண்ணீர் துளிகளில் நிஜம் மட்டுமே தெரிந்தது என்று எழுத்தாளர் சுஜாதா சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிண்ணனியில் அந்த ஊர்வலத்தில் நடந்த நிகழ்வுகள் ,நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்,அவருடைய சிறப்புகளை சொல்லி நேரடி வர்ணனையுடன் ஒளி பரப்பியதை மறக்கத்தான் முடியுமா?
இறுதியாக நடிகர்திலகத்தின் பூதவுடல் மின் மயானத்தை அடைந்தது.அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.தகனம் செய்யப்பட்ட எரி மேடை வாசல் வரை கேமரா படம் பிடித்தது.
ஏராளமான நடிகர் பட்டாளம் ,பெரும் போலீஸ் படை ,திரண்ட மக்கள் கூட்டம் என்று அவ்வளவு கூட்ட நெரிசலிலும் கச்சிதமாக எல்லா நிகழ்வுகளையும் படம் பிடித்து காட்டியது சன் டிவி.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக