ராமாவரம் தோட்டத்துக்கு எதிராக ஒரு சிறிய கிராமம் போலே நடிகர்திலகம் சிவாஜிக்கு ஒரு தோட்டம் உண்டு.நஞ்சையும் புஞ்சையும் பச்சை பசேல் என செழிப்புடன்
இருக்கும் அந்த தோட்டம். பல திரைப்படங்களின் டைட்டில் காட்சிகளில் பார்த்திருக்கலாம். சிவாஜி கார்டன் என்று டைட்டில் வரும்.
நடிகர்திலகம் சிவாஜி தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து விட்டு ஓய்வு கிடைக்கும் போது சற்று இளைப்பாற அந்த தோட்டத்துக்கு வருவார்.
பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த தோட்டம் தான் சிவாஜி கார்டன்.
சிவாஜிக்கு தன் தாயார் ராஜாமணி அம்மையார் மீது மிகுந்த பாசம் உண்டு.வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றாலும் தினமும் ஒருமுறையாவது தொலைபேசியில் பேசிவிடுவது சிவாஜியின் வழக்கம்.
1972 ல் வசந்தமாளிகை படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சிவாஜியின் தாயார் இறந்து விட்டார்.சிவாஜியால் அந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை.தனிமையில் இருக்கும் போதெல்லாம் தாயாரை நினைத்து வருந்துவார். சிவாஜிக்கு ஆறுதல் சொல்லி சிவாஜியின் மனதை தேற்றி ஆறுதல் படுத்துவார் கமலாம்மா.
வீட்டில் இருந்தால் அம்மாவின் நினைவு அவரை மேலும் துன்புறுத்தவே ,தாயார் மரணம் அடைந்து 16 நாட்கள் கூட ஆகாத நிலையில் வசந்த மாளிகை படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் ஆரம்பிக்கச்
சொன்னார்.ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது.
அப்போது எடுக்கப்பட்டது ஒரு பாடல்காட்சி. அதுதான் மயக்கமென்ன இந்த மௌமென்ன பாடல் காட்சி.
அன்னை ராஜாமணி அம்மையார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காமராஜர் இரங்கல் கட்டுரை ஒன்று வெளியிட்டார்.
அது சிவாஜி மன்ற இதழான சிவாஜி ரசிகன் புத்தகத்தில் வெளியானது .சிவாஜி அவர்கள் 'எங்கள் தாய் ,என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் அதில் இடம் பெற்றது.சின்ன அண்ணாமலை ராஜாமணி அம்மையாரின் மறைவு புகைப்படங்களை எடுத்து அந்த புத்தகத்தில் வெளியிட்டார்.
இந்தி நடிகர் ராஜேஷ்கன்னா,கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட பிரபலங்கள் பெரும்பாலோனார் சிவாஜிக்கு நேரில் ஆறுதல் கூறினார்கள்.
தன் தாயாரின் நினைவாக அவருடைய திருவுருவ சிலையை சிவாஜி தன் தோட்டத்தில் நிறுவ விரும்பினார்.சிவாஜியின் மன நிலை அறிந்து செயல்படும் அவருடைய தம்பி சண்முகம் தாயாரின் சிலையை நிறுவுவதற்கான
ஏற்பாடுகளை செய்தார்.
ராஜாமணி அம்மையாரின் மார்பளவு சிலை கல்லில் செதுக்கப்பட்டது.மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருந்தது சிலை.
தோட்டத்தில் சிலை வைக்கப்பட்டது.தாயாரின் சிலையை யாரை வைத்து திறக்கலாம் என்று சிவாஜி யோசித்த போது அப்போது நினைவுக்கு வந்தவர் எம்ஜிஆர்.
இந்த செய்தியை எம்ஜிஆரிடம் சொன்னார் சிவாஜி.
அப்போது எம்ஜிஆர் ,திறக்கப் போவது உன் தாயாரின் சிலை மட்டும் அல்ல. அவர் எனக்கும் தாயார் தான்.அவர் கையால் எத்தனை முறை சாப்பிட்டு இருக்கிறேன்.சாப்பிடும் போது உன்னை விட என்னைத்தான் பாசமாக உபசரித்தார்.
இந்த சிலை திறப்பு விழாவுக்கு கண்டிப்பாக நான் வருவேன் என்றார் எம்.ஜி. ஆர்.
எந்த ஒரு ஆடம்பர விழாவை போலும் இல்லாமல் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.எம்ஜிஆர் தனது மனைவி ஜானகியுடன் சிலை திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்.ராஜாமணி அம்மையாரின் சிலையை சிவாஜியின் முன்னிலையில் எம்ஜிஆர் திறந்து வைத்தார்.
சிவாஜி மகிழ்ந்து ரசித்த தோட்டம் காலச் சூழலில் L.F.என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வளாகமாக மாறிப் போனது.சிவாஜி தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜாமணி அம்மையாரின் திருவுருவ சிலை அன்னை இல்லத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நடிகர்திலகம் ஆரம்ப காலங்களில் நடிக்க ஆரம்பித்த போது தன் தாயாரின் ஆலோசனைகளின் படி செய்வார்.பட முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் படி கூறுவார்.
தானாக இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்க வேண்டாம் என்பது போன்ற அறிவுரைகள் சொல்வார்.
சிவாஜி அவர்கள் தன் அன்னையாரிடம் விளையாடிய சுவையான சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஒரு படத்துக்காக மிக வயதான முதிர்ந்த பழுத்த கிழம் போன்ற வேடம் போட்டு நடித்தார்.படப்பிடிப்பு முடிந்தது.ஆனால் நடிகர்திலகம் மேக்அப்பை கலைக்கவில்லை. அப்படியே வீட்டுக்கு கிளம்புகிறார்.தன் வீட்டு வாசலுக்கு போகிறார்.குரலை மாற்றி "அம்மா தாயே "என்று குரல் கொடுக்கிறார்.வெளியே வருகிறார் ராஜாமணி அம்மாள். நான் ஒரு சிவபக்தன். கைலாய மலைக்கு போய்க்கொண்டு இருக்கிறேன்.வழியில் கிடைப்பதை சாப்பிடுவேன்.ஒரு வாய் சோறு கிடைக்குமா? என்கிறார். பரவசத்தில் ராஜாமணி அம்மாள் வந்திருப்பவர் தன் மகன் என்பதை அறியாமல் உள்ளே அழைத்துச் சென்று உணவு இட்டு வணங்குகிறார். சாமியார் சாப்பிடும் விதத்தை பார்த்து, நம்ம கணேசன் சாப்பிடுவது போல இருக்கிறதே என்று ராஜாமணி அம்மாளும் யோசித்திருப்பார் போலும். எத்தனை முக பாவங்களை காட்டுபவர்.அம்மாவின் முக மாறுதலை கண்டு பெருஞ்சிரிப்பில் இல்லத்தை அதிர வைக்கிறார்.அந்த சிரிப்பில் சாப்பிடுவது தன் மகன்தான் என்பதை உணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மாள். பெற்றவளின் கண்களையே ஏமாற்றியெல்லாம் விளையாடி இருக்கிறார்..
தன் அன்னையின் மேல் வைத்த பாசம் காரணமாகத்தான் நடிகர்திலகம் தான் வசித்த வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக