1990 கள்லே , திரைப்பட காட்சிகளிலே ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாங்க.. படத்தின் டைட்டில் காட்சி ,அல்லது ஆரம்ப கதை பிளாஸ்பேக் காட்சிகள் இடம் பெற்றால் அதை கறுப்பு வெள்ளையில் காட்டுவாங்க.
இந்த டெக்னிக் உத்தியை எல்லாம் 1973 லேயே P.மாதவன் யூஸ் பண்ணியிருப்பார்.
ராஜபார்ட் ரங்கதுரை..
படத்தோட ஆரம்ப காட்சிகள் பிளாக் அண்ட் ஒயிட்லே ஓடும். டைட்டில் காட்சி வரும் பாருங்க.
'காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையேன்னு "டைட்டில் பாட்டு வரும்.இந்த காட்சிலே சின்ன வயசு சிவாஜி கேரக்டர்லே வர்ற பையன் ,ஸ்ரீதேவியோட பாடற மாதிரி காட்சி.பாட்டு ஒரு நாலு வரி போன பின்னாலே ,கறுப்பு வெள்ளையிலே ஓடிட்டு இருக்கற படம் அப்படியே கலருக்கு மாறும் .அந்த கேரக்டரோட தலையை காமிச்சு , காலை காமிச்சு கையை ,உடம்பை பார்ட் பார்ட்டா காமிச்சு டைட்டில் வரிசையா ஓடும். டைரக்சன் P.மாதவன்னு கார்டு வர்றப்போ ,தலையை காமிக்கற அந்த பிரேம் ,டைட்டில் முடியறப்போ , தலை அப்படியே திரும்பும் பாருங்க. தியேட்டரே திருவிழா கோலமா மாறிடும். விசில் சத்தம், கை தட்டல் சத்தம் காதை கிழிக்க அந்த இன்ட்ரோ காட்சியா ,சிவாஜியை காமிப்பாங்க.
இந்த கை கால் உடம்புன்னு பகுதி பகுதியா டைட்டில் காமிச்ச இன்னொரு படமும் இருக்கு. அது கறுப்பு வெள்ளை.பட்டிக்காடா பட்டணமா. அதுவும் மாதவன் டைரக்சன்தான்.
இந்த ராஜபார்ட் ரங்கதுரைலே என்ன ஸ்பெசல் ,என்ன மாஸ் ,என்ன நடிப்பு ,என்ன துடிப்பு ,என்ன கலக்கல் இருக்கு அப்படிங்கறதை இந்த பதிவுலே பாக்கலாம்.
"உன்னை கோடி ரூபாய்க்கு வெச்சிருக்கேன்யா ! எதுக்கு உன் நடிப்புக்கு"
சிவாஜிக்குன்னே எழுதுன வசனம்.தம்பி படிப்புக்காக ஆர்மோனியத்தை அடகு வெப்பார் சிவாஜி .அப்பத்தான் பணம் கொடுக்கறவர் சொல்வார் இந்த டயலாக்கை.
தியேட்டர்லே காது கிழியும் இந்த காட்சிக்கு..
சின்ன சின்ன வசனங்களை நல்லா கவனிச்சு பாத்தா தெரியும். எவ்வளவு ஷார்ப்பா வார்த்தைகள் விளையாண்டிருக்கும்.
தங்கச்சி கல்யாணத்தை சிவாஜி கிட்டே தரகர் பேசுவார்.பத்தாயிரம் வரதட்சணை பணப் பேச்சு வர்றப்போ ,அவ்வளவு பணத்துக்கு நான் இப்போ என்ன பண்ணுவேன்னு சிவாஜி சொல்லுவார். தரகரும் சிவாஜி நிலைமை தெரிஞ்சு அதுதான் எனக்கும் புரியலேம்பார்.
அப்போ சிவாஜி சொல்லுவார்.
உனக்கு புரியலே ..எனக்கு முடியலே. அந்த மாடுலேசன் ..அந்த பாவனை..சின்ன வார்த்தைகளா இருந்தாலும் செதுக்குன
மாதிரி இருக்கும்.அந்த அந்த இடங்கள்லே
சிவாஜியோட அந்த மாடுலேசன் அந்த பாவனைகள் ..அதுதான்
ராஜபார்ட் சிவாஜி.
சிவாஜி நாடக நடிகரா நடிச்சிருப்பார் இந்த படத்துலே. சிவாஜி வீட்டுலே சிவாஜி திரைபடங்கள்லே போட்ட வேஷங்களை போட்டோவா வரிசையா மாட்டி வெச்சிருப்பாங்க.
திருவிளையாடல் சிவன் ,நவராத்திரி சத்தியவான் சாவித்திரி தெருக்கூத்து ,கிருஷ்ணர் வேஷம்னு அந்த போட்டோக்கள் இருக்கும்.
நாடக நடிகர் கதைங்கறதாலே நிறைய நாடகங்கள் கதையிலே இருக்கும். எல்லாம் டிபரண்டா சின்ன சின்ன பார்ட்டா வெரைட்டியா ஸ்கிரீன்பிளே பண்ணியிருப்பாங்க.ஒண்ணு புராணம்னா ,ஒண்ணு சரித்திரம் ,ஒண்ணு தேசபக்தி,இப்படி பல நாடகங்கள். அல்லி அர்ஜுனன் ,வள்ளிகுமரன்,
ஷேக்ஸ்பியர் ஹாம்லெட்,பகத்சிங் ,திருப்பூர்குமரன்னு சிவாஜிக்கேத்த களமா இருக்கும்.
அய்யா ! நாக்கு இருக்கறது வாக்கை காப்பாத்துறதுக்காக.உயிரே போனாலும் சொன்ன சொல் மாற மாட்டான் இந்த ரங்கதுரைன்னு நம்பியார் கிட்டே பேசற மாதிரி ஒரு வசனம் வரும். நாக்கு - வாக்குன்னு சொல்லாடலா இருக்கும். ஒத்த வரியோ ,பத்து வரியோ ,வசனம் எல்லாம் கில்லி மாதிரி எழுதியிருப்பார்
வசனகர்த்தா பாலமுருகன் .
படத்துலே இன்னொரு குறிப்பிட வேண்டிய காட்சி .அது 7 நிமிசம் வரும்.ஸ்ரீகாந்த் சிவாஜியை பணக்கார சம்பந்தியா நடிக்க சொல்வார். அந்த 7 நிமிச காட்சி, ரெண்டு இடத்துலே வர்ற மாதிரி காட்சியமைப்பு. ஒரு இடம் நாடக கொட்டகை .
இன்னொன்னு ஸ்ரீகாந்த் மாமனார் வீடு .அதாவது TK.பகவதி வீடு.
இந்த காட்சிலே அந்த திரைக்கதை அமைப்பு ,வசனம் ,
சிவாஜியோட நடிப்பு ரொம்பவே உருக வெச்சிடும். அதே சமயம் அதிக ரசிப்போட..
''தம்பி நான் போடாத வேஷம் இது ஒண்ணுதான் அதையும் போட்டறேன்னு' ஸ்ரீகாந்த்கிட்ட சொல்ற அந்த காட்சியாகட்டும் ,பகவதிகிட்டே பேசற ,அய்யா பகலெல்லாம் பட்டினியா இருந்தாலும் ,ராத்திரி ஆனா ராஜா வேஷம் போடற சுகம் வேற எதிலயும் இல்லைன்னு சொல்லறதாகட்டும்,
அதோட தொடர்ச்சியா ,ஒருத்தன் பகல்லயே வாழ்க்கைலே நடிக்கிறான் ,இன்னொருத்தன் ராத்திரிலே வயித்து பொழைப்புக்காக நடிக்கறான்னு செல்லறதாகட்டும்,அத என்னான்னு சொல்றது? ஒரு உச்ச நடிகனோட மிச்சம் வைக்காத நடிப்புன்னுதான் சொல்லணும்.
சிவாஜி பேசற ஒரு வசனத்துக்கு வேற ஒருத்தர் சிவாஜிக்கு டப்பிங் பேசி இருக்கற விஷயமும் இந்த படத்துலே இருக்கு. "TO BE ,OR NOT TO BE "இந்த ஹாம்லெட் பேசற மாதிரியான வசனத்துக்கு சிவாஜிக்கு டப்பிங் பேசுனவர் புரொபசர் ராமு.
"சிவாஜி இந்த படத்தை பத்தி சொன்னது என்னான்னா ,இது என்னோட சொந்த வாழ்க்கை மாதிரித்தான்னு சொல்லியிருந்தார்.
நானுந்தான்டா மேடைலே ஆயிரம் பேரை காதலிக்கிறேன். அது பொழைப்புக்காகன்னு " ஒரு டயலாக் இருக்கும் சிவாஜிக்கு.இதுலே வயித்தை தட்டி காமிப்பாரு பாருங்க. அதுக்கு கூட 'டப்டப்பு' ன்னு ஒரு மியூசிக் போட்டிருப்பார் மெல்லிசை மன்னர். அந்த கால தியேட்டர் எபெக்ட்டுலேயே அதிர வைச்சது இந்த சீன்..
வயித்தை தட்டறதுலே அந்த நடிப்பு ..மியூசிக்லே ஒரு துடிப்பு..படத்துலே இது ஒரு வெடிப்பு..
காட்சிகள் மட்டுமில்லே.
ஷாட்டுகள் கூட பிரேம் பை பிரேமா பின்னி இருப்பாங்க. சசிகுமார் கல்யாண சீன் காட்சியை பாக்கணுமே. கல்யாண கோலத்துலே சசிகுமார் உக்காந்து இருப்பார்.சிவாஜி அவரையே பாத்துட்டு இருக்கற மாதிரி காட்சி. வசனம் இல்லே.சிவாஜி பார்வையே பல விஷயங்களை பேசற மாதிரி இருக்கும். ஒரு கட்டத்துலே சசிகுமாராலே அதை தாங்க முடியாது. ஓடி வந்து சிவாஜி கால்லே விழுந்துவாரு. பார்வையாலேயே அதிர வெப்பார் சிவாஜி..
ரொம்பவே உணர்ச்சி கரமான மூணு பாட்டை சொல்லணும்.
பபூன் வேஷ பாட்டு ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி பாட்டு .கண்ணதாசன் வார்த்தைகளை TMS உருக்கியிருப்பார்.பபூன் வேஷத்துலே வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க சிவாஜி நடிப்புலே அதெல்லாம் சொல்ல முடியாத உணர்ச்சிலே இருக்கும்.
இன்குலாம் ஜிந்தாபாத்.பகத்சிங் வேஷத்துலே பாடற பாட்டு. திரையே அதிரும் படி இருக்கும்.பாக்கற நம்ப நரம்பும் வெடிக்கற மாதிரி இருக்கும்.
அடுத்ததா..
அது பாசமன்றோ ..இது வேஷமன்றோ ..
ஸ்ரீகாந்த் போர்ஷனை ஒரு வரிலே முடிச்சிருப்பார் கண்ணதாசன் .சிவாஜி முக பாவனைலே நம்ம மனசுலே ஏத்திருவார்.
'கையில் வைத்து காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு..'
வரியை பாடி முடிக்க ட்ரம்ஸ் அதிர ஒரு வெடித்தனமா ஒரு மியூசிக் இந்த இடத்துலே வரும்.அந்த கண் , முக பாவத்துலே சொல்ல வேண்டியதை செஞ்சு காட்டியிருப்பார் சிவாஜி...
இந்த மாதிரி பாட்டுக எல்லாம் சிவாஜியை தவிர யாருக்கு வரும் ?
நம்பியார் வாங்குன பணத்தை திருப்பித்தர சொல்ற காட்சி. பணம் வரலே..உன்னை கம்பி எண்ண வெச்சிருவேன்னு சொல்வார். அதுக்கு சிவாஜி சொல்வார்.
"அய்யா எங்க பரம்பரையிலே பல பேரு கம்பி எண்ணியிருக்காங்க. பணத்துக்காக இல்லே.இந்த தேசத்துக்காக"
,அப்படிம்பார். இதுவும் சிவாஜிக்குன்னே சேத்த வசனம்தான்.இப்படி எல்லாம் யாருக்காக எழுத முடியும் ?யாருக்காக....
இதே போலத்தான் திருப்பூர் குமரன் நாடக காட்சிலயும். என்னோட நடிப்பை பாராட்டி பல பேர் எத்தனையோ பரிசுகள் கொடுத்திருக்காங்க. ஆனா முதல் தடவையா துப்பாக்கி குண்டுகளை பரிசா கொடுத்திருக்கிறார் ஒரு நண்பர்னு ,அந்த வசனம் இருக்கும்.
இப்படி படம் பூரா எத்தனையோ ..
இந்த ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜிக்குன்னே எழுதப்பட்ட கதை.சிவாஜியை மனசுலே வெச்சுட்டு எழுதப்பட்ட கதை.
இது சிவாஜியை தவிர மத்தவங்களுக்கு அவ்வளவு கச்சிதமா பொருந்தாத கதை.
எத்தனையோ படங்கள் ரசிகர்களுக்காகவும் ,இந்த கலைத்துறைக்காகவும் சிவாஜி செஞ்சிருப்பார். சிவாஜியே தனக்காக செஞ்ச படம்னா இந்த படத்தை சொல்லலாம்.
ஒரு ஊர்லே ஒரு நடிகன் இருந்தான். அவன் இப்படி வளந்தான் ,இப்படி இருந்தான் ,இப்படி பண்ணுனான்னு நாம ஒரு கதையை பெருமையா சொல்ல முடியும்ன்னா சிவாஜி கதை இருக்கு.அந்த கதைக்கு உதாரணம் தான் இந்த ராஜபார்ட் ரங்கதுரை.
மறைஞ்சு போயிட்டு இருக்கற நாடக கலையை,இப்ப இருக்கற ,இனிமேல் வரப்போற இளைய சமுதாயம் தெரிச்சுக்கவும் , நாடக கலைன்னா என்ன ?அந்த கால நாடக கலை எப்படி எல்லாம் இருந்துச்சு ,நாடக நடிகர்களோட அர்ப்பணிப்பு எப்படி இருந்துச்சு , அதே சமயம் அவங்களோட வாழ்வாதாரம் மற்றும் மத்த பிரச்சினைகளும் எப்படின்னு தெரிஞ்சுக்க்க ஒரு வரலாற்று ஆவணமா இருக்கற படம்னு கூட இதை சொல்லலாம்.
செந்தில்வேல் சிவராஜ்...
கருத்துகள்
கருத்துரையிடுக